Monday, August 06, 2007

ஒரு புத்தகம்-shogun

பொதுவாக நான் ஒரு பரந்த வாசிப்பனுபவம் கொண்டவன் கிடையாது. ஆனாலும் அவ்வப்போது என் கண்களில் சில சுவாரசியமான புத்தகங்கள் படத்தான் செய்கின்றன. தேர்ந்த உண்மையான உள்ளொளியுடன் எழுதப் படுகின்ற புத்தகங்கள், நமக்கு பல நாள் வாழ்ந்த அனுபவங்களை கொடுப்பதில் தவறுவதில்லை. இவ்வகையில் நான் சீரிய புத்தகங்களை சான்றோர்களாக கருதுகின்றேன். கல்வெட்டுகள், சுவடிகள், செவி வழி ஞானம் என்று பல வகைகளில் நமக்கு அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்று புதினங்கள் சில நம்மில் பலருக்கு அறிமுகமானவைகளே. இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால், 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' என்ற இந்த இரு புத்தகங்களையும் சொல்லலாம். இவை தவிர 'வால்காவிலிருந்து கங்கை வரை' சமுக நிகழ்வுகளுக்கு பின் புலமாக இருந்த சில காரணிகளை தோலுரிப்பதால் இந்நூலை அவ்வகை புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்று எனக் கொள்கின்றேன். இந்த பதிவில் வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புதினத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தலைப் படுகின்றேன்.

புத்தகத்தின் தலைப்பு: ஷோகன்
வெளியான ஆண்டு: 1975
ஆசிரியர் : ஜேம்ஸ் க்ளெவல்
வெளியீடு :Atheneum, NewYork

இந்தப் புதினம், 1600-க்கு மேற்பட்ட ஆண்டுகளில் ஜப்பான் எவ்வாறு இருந்தது என்பதை நமக்கு காட்டுகின்றது. அங்கு நிலவிய அரசியல், சமூக,மத சூழ்நிலைகளை நமக்கு ஒரு ஐரோப்பிய மாலுமியின் மூலம் அறிமுகப் படுத்துகின்றார், திரு. ஜேம்ஸ் க்ளெவல். இந் நூலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் 1560-1600 வரையான காலகட்டத்தில் ஐரோப்பாவின் அரசியல் நிலை பற்றிய சிறு குறிப்பை க்ளெவலின் கண்கள் மூலம் பார்ப்போம்.
கத்தோலிக்க ஸ்பெயினுடன் நாற்பது வருடத்திற்கும் மேலாக போர்முறை எதிர்ப்பை காட்டி வருகின்றது புரொட்டஸ்டன்ட் நெதர்லாந்து. நெதர்லாந்து சட்டரீதியாக ஸ்பெயின் பேரரசின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. இங்கிலாந்து ரோமன் கிறித்துவ சம்பிரதாயங்களில் இருந்து ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் விடுபட்ட முதல் நாடு என்பதால், இருபது வருடங்களாக ஸ்பெயினுடன் அறிவிக்கப்பட்ட போரில் ஈடுபட்டுள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் கடைசி பத்தாண்டுகளாக இங்கிலாந்து, நெதர்லாந்துடன் இணைந்து செயல்படுகின்றது.
மேலும் போப் கிளிமண்ட் VII 'ஸாராகோசா ஒப்பந்தத்தில்' (1529) கையெழுத்திட்டு, உலகின் கிழக்கு பாகாங்களை போர்த்துகீசியருக்கும், மேலை பாகங்களை ஸ்பானியர்களுக்கும் பிரித்து விடுகின்றார். போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் ரோமன் கத்தோலிக்க சர்ச்-சை ஏற்றுக் கொண்டவர்கள்.

இந்த நிலையில் கதை துவங்குகின்றது.

ஒரு இங்கிலாந்து மாலுமி, நெதர்லாந்து கப்பலை செலுத்தி கொண்டு தென் அமெரிக்கா அடைவதும் அங்கிருந்து அவர் ஜப்பானுக்கு செல்வதும் ஒரு அற்புத தன்னம்பிக்கை முயற்சி. இதில் மாலுமி எவ்வாறு திடசித்தனாக இருப்பதும், தனது குழுவினருக்காக போராடுவது நன்றாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த மாலுமியின் பெயர், Blackthrone. இவர், ஜப்பானிய வாழ்க்கை முறைகளை பின்பற்றி அதில் உள்ள சிறப்பம்சங்களை உள்வாங்குவது, பல மன அதிர்வுக்குள் நிகழ்கின்றது. இந்த மாலுமிக்கு அன்ஜின்-சான் என்ற பெயர் ஜப்பானியர்களால் இடப்படுகின்றது. இதற்கு கேப்டன்
என்று பொருள். இவர் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பே, அங்கு போர்த்துகீசர்களால் ரோமன் கத்தோலிக் சர்ச் நிறுவப்பட்டிருக்கின்றது. இதன் பாதிரியாக அல்விட்டோ என்பவர் உள்ளார். இவர் ஜப்பானில் சர்ச்களை வளர்ப்பதில் பேரார்வம் கொண்டு அங்குள்ள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக்க கடுமையாக முயல்கின்றார்.

ஜப்பான் அக்கால கட்டத்தில் பல மாகாணங்களாக பிரிந்து இருக்கின்றது. 1542 களில் டைக்கோ என்பவர், தனது போர்திறம் மூலம், அனைத்து மாகாணங்களையும் இணைத்து ஒரு அவையை உண்டாக்குகிறார். அந்த அவைக்கு கவுன்சில் ஓஃப் ரீஜென்ட்ஸ் என்று பெயரிடப்படுகின்றது.டைக்கோ அதன் தலைவராக பிரகடனப்படுத்தி கொள்கிறார். டைக்கோ-விற்கு வாரிசாக ஒரு சிறுவன் இருக்கும் தருவாயில் அவர் மரணமுறுகின்றார். அச்சிறுவன் வளர்ந்து பொறுப்பேற்கும் வரை, டோரோனாகா -வை தலைவனாக அந்த கவுன்சில் அரசியல் மற்றும் அதிகாரத்தின் காரணமாக ஏற்றுக் கொள்கின்றது. டோரோனாக டைக்கோவின் வட்டத்திலேயே என்றும் இருந்தவர் என்பதும் ஒரு காரணம். ஆனாலும் மாகாணங்களின் தலைவர்களுக்கு கவுன்சிலின் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றது.

இச்சூழலில் தான் பிளாக்த்ரோன் ஜப்பானுக்குள் நுழைகின்றார். அவரது கலம் புயலில் சிக்கி கரையைத் தட்டுகின்றது. பின்பு டோரோனாகா -வை சந்திக்கின்றார். இவரை பயன்படுத்தி, தனது இராஜ தந்திரம் மூலம் டோரோனாகா எவ்வாறு காயை நகர்த்துகின்றார் என்பது சுவாரசியமானது.

சில மாகாண தலைவர்கள் ரோமன் சர்ச்சி-ற்கு ஆதரவாக உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு சர்ச்-சை விட அதன் மூலம் கிடைக்கும் கறுப்புக் கப்பல் வணிகத்தின் மீது அதிக நாட்டம்.

இவ்வாறு ஒரு பெரிய அளவில் அரசியல் நிகழ்வுகளும், அதில் உள்ள சிக்கல்களும், அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் முறைகளும் மிகவும் திடுக்கிட வைக்கும்.

இப்புதினத்தில் எனக்கு மிகுந்த சுவாரசியமான சில விசயங்களை உங்களுக்கு தருகின்றேன்.

1. Rutters: இது ஒரு மாலுமியின் உயிர் மூச்சு. இது ஒரு சிறு புத்தகம். இதில் ஒரு மாலுமி தான் புதிதாக பயணம் மேற்கொள்ளும் வழிகளில் காணும் நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். துறைமுகங்களுக்கும், முனைகளுக்கும் உண்டான காந்த முள்ளின் அளவைகள் இருக்கும். மேலும், அவர்கள் காணும் கடலின் நிறமும், ஒலியும், கடற்படுகைகளும் குறிக்கப்பட்டு இருக்கும். காற்றின் போக்கும் அவைகளின் திசைகளும் இருக்கும். மேலும் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதான் செய்திகளும் உண்டு. ஒரு பாதுகாப்பான கடற்பயணத்திற்கு தேவையான அனைத்து குறிப்பும் எனக் கொள்ளலாம்.
இதை கைபற்ற பல வழிகளில் பல முயற்சிகள் நிகழும். இதில் போலிகளும் உண்டு. ஒரு தேர்ந்த மாலுமியால் மட்டுமே போலியையும், உண்மையையும் பிரித்து அறிய முடியும். இதை எவ்வாறு பிளாக்த்ரோன் பயன்படுத்துகிறார் என்பது சுவாரசியம்.

2. டைக்கோவின் இறப்புக் கவிதை:
" நான் ஒரு பனித்துளி யென பிறந்தேன்
பனித்துளியாக மறைகின்றேன்
ஓசாகா கோட்டையும் மேலும் யான் புரிந்த மற்றவைகளும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவே"

இதை படித்தவுடன், பாரதி சொன்ன பாடல் நினைவுக்கு வந்தது.

"உலகெ லாமொர் பெருங்கன வஃதுள்ளே
..........................................
........................
மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங்கன வாகும்." (சுயசரிதை : முன்னுரை: பாடல் 3)

இதை பற்றி மேல் விவரங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்

3. ஜப்பானியர்களின் ஜாதீய முறைகள், அவர்களுக்கு இருக்கும் "கர்மா" (விதி என்ற பொருளில்) நம்பிக்கை அவர்களது சமூகத்தை ஆதிக்க சமூகமாக பார்க்கத் தூண்டுகின்றது. மேலும் அவர்கள் பெண்களுக்கு இட்டிருக்கும் நியதிகள் இக்கூற்றை உறுதி செய்கின்றது.

இவற்றையெல்லாம் மீறி, இப்புத்தகம் படிக்க சுவாரசியமானது என்பது நிஜம்.

No comments: