Monday, August 06, 2007

பாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்!! -2

மிக மிக அமைதியான குரலில், தோழமையுடன் பேசும் பத்மா, இன்று நம்மிடையே, தனது ஆராய்ச்சி காலங்களில் உலகத்தின் பெரும் கவனம் பெற்ற மனித மரபணு திட்டத்தை பற்றி பகிர்ந்து கொள்கின்றார். கார்னலில் இரு வருடங்கள் உதவி பேராசிரியாராக பணி புரிந்து, பின்பு அதில் வளர்ச்சிக்கு இருந்த தடைகளாலும், மற்ற காரணங்களாலும், அப்பணியை உதறிவிட்டு மீண்டும் பல்கலைகழகம் சென்று MBA பட்டம் பெற்றார். அதன் பின் மைக்ரோசாஃப்ட் உட்பட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு அது தனது எண்ணத்திற்கு நிறைவை தரவில்லை என்று உணர்ந்தார். ஆகையால் அவர் மீண்டும் பல்கலைகழகம் சென்று பொது சுகாதாரத்தில் பட்டம் பெற்றார். தனக்கு முன்பே அனுவபமிருக்கும் மருத்துவ அறிவியற் துறையும், தனது "கட்டென்பதறியோம்" என்ற உளப்பாங்கினால் கற்ற மேலாண்மை கல்வியையும் amalgam செய்து தனது சிறு வயது எண்ணமான ” இது போல கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவாவது மருத்துவராக வேண்டும்” என்ற பொறியை இன்று தன்னளவில் பூர்த்தி செய்யும் விதமாக மருத்துவ திட்ட இயக்குநராக இருக்கின்றார். தான் பெற்ற இந்த தகுதிகள் இன்று அவரை ஒரு முழுமை ஆக்கி உள்ளதாக நினைக்கின்றார். மேலே குறிப்பிட்டது உங்களுக்கு அவரை பற்றிய ஒரு பின் புலத்திற்காகவே. "உண்மை சுதந்திரம் வேண்டி நின்றார் வேறேதும் கொள்வாரோ " என்ற வரியின் நினைவு எனக்கு தவிர்க்க முடியவில்லை.


இனி அவருடன்.....

6. ஒரு இந்திய கிராமத்து பெண் அறிவியல் துறையில் பிரகாசிக்க இப்போதைய சூழலில் இயலுமா?

"நிச்சயமாக முடியும். திடமான மனமும், முயற்சியும் இருந்தால். அசைவறு மதி வேண்டும் !! "


7. சிறிது நாட்களுக்கு முன் ஹார்வேட் பல்கலைகழகத்தில் ஒரு பேராசிரியர் தனது எண்ணத்திற்கு அறிவியலை துணைக்கு அழைத்து கடும் கண்டனத்திற்கு ஆளானார். இது குறித்து ரவி ஸ்ரீரிநிவாஸ் ஒரு பதிவு இட்டார். அப்பேராசிரியரின் கூற்றை நீங்களும் உங்கள் பதிவில் சுட்டி இருந்தீர்கள். இத்தகைய சூழலில், ஒரு பெண் அறிவியலாளராக புகழ்பெற்ற கார்னல் பல்கலைகழகத்தில் பணியாற்றிய நீங்கள், அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள்? ஒரு பெண் அறிவியலாளரை இந்த சமூகம் எப்படி பார்க்கின்றது?

கார்னெலில் பெண் விஞ்ஞானிகளுக்கு பாலியல் தொந்திரவுகளும் உண்டு, சிறப்பான ஆராய்சி project களும் கிடப்பதில்லை. ஒரே நேரத்தில் இரு மாணவரிடையே ஒரே project தந்து போட்டியை வளர்ப்பது உண்டு. பெண்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற கருத்தும் உண்டு. ஆனால், என் துறை தலைவர் என்னை வேறு படுத்தியதில்லை. ஆனால் எனக்கு திருமணம் என்று சொல்லி விடுப்பு அனுமதி கேட்க எண்ணியபோது, நான் திருமணம் செய்து கொண்டு ஆய்வகத்தை விட்டு விடமாட்டேன் தானே என்று எனக்கு முன்னதாக பேசியதை கேட்டவுடன், இப்போதைக்கு திருமணமாவதை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து ஊருக்கு சென்றேன். திருமணம் ஆனதும் 6 மாதம் வரை யாருக்கும் எனக்கு திருமணமானதே தெரியாது. அர்விந்தும் அப்போது கலிபோர்னியாவில் இருந்ததால் பிரச்சினை இல்லை. circadian variation of HLA gene பிரச்சினையில் வேலை பார்த்த போது, இரவு பகல் பாராது ஆய்வகத்தில் இருக்கும் போது, சக ஆராய்சியாளர்கள் இரவில் நான் என்னுடைய அறைக்கு வரும் போது, எனக்கு துணையாக வருவதும் உண்டு. கார்னெலின் தற்போதைய dean தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை என்னிடம் சொல்லியிருக்கிறார். அவரே பெண் ஆராய்ச்சி மாணவிகளுக்காக ஒரு கழகமும் ஏற்படுத்தியிருந்தார்.

ஆராய்ச்சி செய்கிற பெண்கள் நல்ல மனைவியாக இருக்க முடியாது என்ற நம்பிக்கை இருக்கிறது என்று எண்ணுகிறேன். எனக்கு திருமணம் செய்ய எண்ணி என் பெற்றோர்கள் சிலரிடம் பேசிய போது, படித்த சில ஆண்களே, இரவில் வெகு நேரம் கழித்து வரும் பெண்ணின் நடத்தையில் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும் என்று கேட்டிருக்கிறார்கள். என் சகோதரிக்கு திருமணம் ஆவதும் தடங்கி கொண்டே இருந்தது. வெளிப்படையாகவே சிலர் என் சகோதரியிடம் உனக்கோ திருமணம் ஆக போவதில்லை நீ ஏன் 50 வயதுள்ளவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள கூடாது என்றும் சொன்னதுண்டு. ஆராய்சி செய்யும் பெண்களின் குழந்தைகளைக்கூட ஒரு பூத கண்ணாடி கொண்டு குறைகளை தேடி, அதிகம் படித்த பெண் குடும்பத்தை கவனிப்பதில்லை என்றும் குறை கூறுகிறார்கள். கணவனின் ஒத்துழிப்பு இல்லாமல் திண்டாடும் பெண்களில் எனக்கு தெரிந்தே 3 பேர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளார்கள். கலந்துரையாடும் கூட்டங்களுக்கு சில முறை செல்ல முடிவதில்லை, மேலும் grant கிடைத்துவிட்டாலோ இவள் யாருடனுன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருப்பாள் என்றும் நாகூசாமல் பேசுவாரும் உண்டு.

can you adjust என்று கேட்பவரும், இதனால் என்ன தவறு? என்று சொல்பவரும் அதிகம். பொதுவாகவே வேலை பார்க்கும் பெண்களுக்கு பிரச்சினைகள் உண்டு என்றாலும், இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பவர்களுக்கு இவை அதிகம். ஒரு கார்த்திகை அன்று நான் புதிதாக க்ளோன் செய்த ஜீனை சரிபார்க்க வேலை செய்ய வேண்டி விடியற்காலமே கிளம்பி போய்விட, வீட்டில் இருந்த என் கணவரின் பெற்றோரிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அமெரிக்காவில் மத சம்பந்தமாக விடுப்பு எடுக்க முடியும் என்றும், நான் வேண்டுமென்றே வேலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதும் ஒரு கதை. பெரும்பாலோருக்கு ஆராய்ச்சியின் காலமும், அதன் முடிவுகளும் நம் கையில் இல்லை என்பது புரிவதில்லை. இது கணினியில் வேலை பார்பது போல சட்டென்று சேமித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப முடியாது. அதுவும் ஒரு ஜீன் க்ளோன் செய்தால், அதை வளர்த்து அதன் தன்மையை அறிந்து, அதை சரிபார்த்து என பலவும் தொடர் நிகழ்வுகளாகும்.


8. ஹ்யூமன் ஜீனோம் ப்ரோஜக்ட் பற்றி சற்று விவரமாக கூற இயலுமா? குறிப்பாக இந்த திட்டத்தின் நோக்கம், அதன் நன்மைகள், தீமைகள் மற்றும் கடைசியாக அதனால் தோன்றிய உலக அரசியல் நிலைப்பாடுகள் பற்றி கூற இயலுமா?


பதின்மூன்று வருடங்களாக நடந்து 2003இல் நிறைவு பெற்ற மனித ஜீனோம் முயற்சி, தற்போது தீவிரவாதத்தை தடுக்க பண் உதவி பெறுவது போல நிறைய பொருட்செலவு செய்து நடத்தப் பட்ட ஒரு ஆராய்ச்சி. இதில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன். இந்த முயற்சிக்கு காரணம்

1.25000 ஜீன்களை க்ளோன் செய்து அதன் மில்லியன் DNA வடிவை காண்பதும், அதன் மூலம் ஒருவரின் மூலக கூற்றை(genetic make up) அறிவதும் அதன் மூலம் பிறப்பின் மூலம் வரும் நோய்களை தடுக்க முடியுமா என்பன போன்ற ஆய்வுகளை செய்ய திட்டம்

2. இதன் மூலம் கிடைக்கும் செய்தியை தனியார் நிறுவனத்திடம் தந்துவிடல் போன்றவை காரணம்.
இதனால் அடிப்படையிலேயே நோய்களை கண்டறிய முடியும், தடுக்க முடியும் ஒருவருக்கு நோய் வர சாத்தியக்கூறு உண்டா என்பது போல பல நன்மைகள் உண்டு.

இந்த போட்டியில் நான் முந்தி நீ முந்தி என்று வேலை செய்ய அதன் பளுவும் அதனுடன் சேர்ந்த சில தில்லுமுல்லுகளும், அதன் பின் தொடர் ஆராய்ச்சிக்கு பண உதவி தருவதில் பாரபட்சமும் இருந்தது ஒரு பக்கம் என்றால் சில நேரடி அபாயங்களும் உள்ளன என்பது தெரிய வந்தது.

அவை கீழே:

அ. ஒருவருக்கு நோய் வரக்கூடிய சாத்தியக்கூறு இருப்பது தெரிய வந்தால் அவரின் காப்பீடு உரிமை, உடல் நல காப்பீட்டி மாத கட்டணம் உயரும் சாத்தியம், இராணுவம் பள்ளி, விளையாட்டு துறை இவற்றில் பலவித உரிமை பிரச்சினைகள் வரக்கூடும்

ஆ. ஆசியா, சீனா போன்ற இடங்களிலிருந்து வருபவருக்கு இன வாத உரிமை மீறல்கள், ஆப்பிரிக்க இனத்தவருக்கான உரிமை பாதிப்புக்கள் வரலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில இனத்தை சேர்ந்தவர்களை அவர்களின் மூலக் கூற்றின் அடிப்படையில் கொடுமை படுத்தவும் வாய்ப்பு உண்டு. இன்னார் இந்த துறையில் தான் பிரகாசிக முடியும் என்பது வரை பாகுபாடு வரக்கூடும்.

இ. திருமணத்தின் போது மூலக்கூறு அடிப்படை மூலம் பிரச்சினைகள் வரக்கூடும்
பெர்றோர்களின் மூலக் கூறு செய்தி பிள்ளைகளின் மனநலத்தை பாதிப்பது முதல், கருவில் உள்ள குழந்தையை பரிசோதிப்பதன் அபாயத்தை சரியாக மருத்துவர் எடுத்து சொல்வார்களா, பெண்களுக்கு இதி முடிவெடுக்க உரிமை உண்டா என்பது போல மனநிலை பிரச்சினைகளும் வரும்.

ஈ. அப்படியே நோய்களை தீர்க்க முடிந்தாலும் எத்தனை மக்களுக்கு இது பொருளாதார வகையில் முடியும் என்பதும் கேள்விக்குறி

உ. இதை உரிமை கொண்டாடுபவர் யார்? (ownership of DNA database), காப்புரிமை பிரச்சினைகள்...
இதுபோன்ற முயற்சிகள், வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை அதிகமாக்கிவிடுமா

ஊ. மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதை தவறாக தங்கள் சொந்த இலாபம் கருதி உப்யோகிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் .

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(இதில் இவர் சொன்னதின் நேர்மறையான செய்திகள் வெளிப்படை. ஆனாலும் அது எவ்வாறு திரிக்கப் படும் என்ற அபாயத்தையும் முன் வைக்கின்றார் - பாரி)

9.நீங்கள் கூறிய படி, இப்போது திருப்தி தரும் வகையிலான பணியை செய்து வருகின்றீர்கள். மக்களோடு இணைந்து மக்களுக்காக திட்டங்கள் இடும் இப்பணியில் உங்களின் மருத்துவ அறிவியல் அனுபவமும் உங்களுக்கு நன்கு கைகொடுக்கும். இதை குறித்து நீங்கள் பதிவில் குறிப்பிடாத சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?

வட கரோலினா மாநிலத்திலிருந்து ஒரு ஆராய்ச்சி மாணவி எங்கள் துறைக்கு வந்திருந்தார். இவருக்கு இந்திய பெண்கள் சிலருடன் அவர்களின் உடல் நலம் பற்றி பேச வேண்டும் என்றும் ஒருவருக்கு 30$ சன்மானமும் தருவதாக சொல்லியிருந்தார். நானும் எங்களிடம் சிகிச்சைக்காக வந்த சில பெண்களை தொடர்பு கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றோம். எல்லா பெண்களும் தங்கள் பிள்ளைகளின் வீட்டில் தங்கியிருப்பவர்கள். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள். சிலர் மார்பக புற்று நோயிலிருந்து குணமானவர்கள். ஆனலும் நான் இவர்களை சந்தித்தது அவர்கள் வேலை செய்யும் வீட்டில். வயதான இந்த பெண்கள் மணிக்கு 2.50$ க்கு குழந்தைகளை பார்த்து கொள்வதிலிருந்து சமைப்பது வரை பல வேலைகளை செய்கிறார்கள். எத்தனை கொடுமை! ஆணுக்கு கிடைக்கும் வேலை ஓய்வு போல இந்த பெண்களுக்கு ஏன் இல்லை? அதிலும் ஒரு (எசமானப்) பெண்ணும் அவர் கணவனும் இந்த பேட்டிக்கு எத்தனை நேரமாகும் என வினவ நான் ஒரு மணி ஆகும் என்று கூற, அவர்கள் அந்த பெண்ணிடம் மாலை பணம் தரும்போது அந்த ஒரு மனிக்கான $2.50 குறைத்து கொண்டு தருவதாக கூறியதை என்ன என்று சொல்வது?

இன்னொரு பெண் வீட்டில் காலையில் சமைத்து பேரக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, நிறைய திருமணமாகாத ஆண்களுக்கு சப்பாத்தி இட்டு தரும் பணியை செய்கிறார். 10 சப்பாத்திக்கு இவருக்கு கிடைக்கும் ஊதியம்1:50$. இதன் பின் மாலையில் தன்னுடைய பேரக்குழந்தைகளோடு இன்னும் சில குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இந்த ஊதியத்தை இவர் கையில் கொடுப்பது கூட இல்லை. இலவச மருந்துகளும் சிகிச்சைகளும் பெற்று வாழும் இவர்களை தன்னை சார்ந்திருப்பதாக சொல்லி வரி சலுகை பெற இந்த பிள்ளைகள் தயங்குவதில்லை. பரிசு காசோலையாக சன்மானம் வந்தால் அதை மாற்றி தன்னிடம் தரமாட்டர்கள் என்று சொல்லி அதை பணமாக தருமாறு சொல்லி என்னிடம் கேட்ட வயதான கணவனையும் தன் மனைவிக்கு தேவையான ஓய்வை தர கூட வேலை செய்யும் கணவனையும் பார்த்த போது முதுமை இவ்வளவு கொடுமையானதா என்று தோன்றியது.

மத்திய அரசு நடத்திய ஒரு கலந்துரைடாலில் முதலில் எனக்கு எதுவும் தெரியாது என்று அதிகம் பேசாத சிலர், கூட்டம் ஆரம்பித்தபின் என்னுடைய திட்டங்களை பாராட்டியதும், அதன் தொடர்பாக மகளிர், தாய் சேய் நல திடக்குழு, குழந்தைகள் நல குழு ஆகியவற்றில் நியுஜெர்ஸியில் என்னை சேர்த்துகொண்டது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியான அங்கீகாரம் (Nj State minimum standard commitee). திறமைக்கான இந்த மரியாதை இந்தியாவில் எனக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. (இது திறமை மற்றும் மனிதத்திற்கான அங்கீகாரம். வாழ்த்துக்கள் :) -பாரி)

10. இத்தகைய திட்டங்கள் இந்தியாவில் நடைபெற இயலுமா?. அவ்வாறு செய்ய இந்தியாவில் அரசு சாரா நிறுவனங்கள் பல முயன்று வருகின்றன. அவர்களுக்கு உங்களால் உதவ இயலுமா? அதாவது திட்டங்கள் வகுப்பது என்ற நிலையில் மட்டும்.

அரசியல் கலப்பில்லாவிடில் முடியும். திட்டங்கள் வகுக்க உதவி செய்யவும் முடியும் அது சரியாக பயன்படுத்தப்படும் வரை.

No comments: