Monday, July 18, 2016

பியூஷ் மனுஷ்

பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது சுற்றுப்புற சூழல் தொடர்பான பணிகள் குறித்து நண்பர் தங்கமணி பல செய்திகளை தெரிவித்திருந்தார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் பியூஷ் மனுஷ் பற்றிய தகவல்கள் அறிய உதவும்.

https://www.facebook.com/thangamani.nithyanantham/posts/10206662997029353
https://www.facebook.com/hashtag/standwithpiyush
https://www.facebook.com/piyush.manush
நண்பர் தங்கமணியின் முகநூல் பக்கத்திலிருந்து அவரது மொழியில்......
நான் சேலம் ஜெயின் பவனில் நுழைந்த போது மாலை 4:00 மணி. பங்கேற்பாளர்களின் உரைகள், விவாதங்கள் எல்லாம் முடிந்து, முடிவான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றைச் செய்ய கூட்டம் தயாராகிக்கொண்டிருந்தது. மூத்த குற்றவியல் வழக்குறிஞர் பாப்பாமோகன் பேசுகையில் சுற்றுச்சூழல் போராளியும், மனித உரிமைப் போராட்டவாதியுமான பியூஸின் மீதான கொலைவெறித் தாக்குதல் மிக்க திட்டமிடப்பட்ட ஒன்று. மிகவும் முன்தயாரிப்புகளுடனேயே காவல்துறை அவரை வளைத்து, அரசு அதிகாரியை அவரது வேலையைச் செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிணையில் வரமுடியாதவாறு சிறைப்படுத்தி பின்னர் அவர் மீது இந்திய அரசியல் சட்டத்துக்கும், மனிதஉரிமைகளுக்கும், ஐநா மனித உரிமைபோராளிகளுக்கு வழங்கியிருக்கும் பாதுகாப்புகளுக்கும் எதிராக (இந்த ஐநா ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது) அவர் மீது தனது வன்முறைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இது மேற்குறிப்பிட்ட அனைத்து வகை சட்ட முறைமைகளுக்கும் எதிரானது. எனவே வழக்குரைஞர்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்தாலும், பியூஸ் மானுஸ் வழக்கில் பார் கவுன்ஸிலில் தனியாக இதற்காக அனுமதி வாங்கி செவ்வாய் கிழமை (19/7/2016) வழகாடப்போவதாகச் சொன்னார். பியூஸின் சூழலியல், மனித உரிமை செயல்பாடுகள் அனைத்தையும் அறிய நேரும் எந்த நீதிபதியும் கொலைமிரட்டல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது பிணையை மறுக்கமாட்டார் என்று நம்புவதாக குறிப்பிட்டார். இதற்கு முன்பே பியுஸின் மீதான ஒரு கைது நடவடிக்கையின் போது வழக்கறிஞர் பாப்பாமோகன் அவருக்காக வாதாடியுள்ளதையும் குறிப்பிட்டார். வந்திருந்த மனித உரிமைபோராளிகள், சூழலியல் போராளிகள், செயல்பாட்டாளர்கள் இதனால் நம்பிக்கை அடைந்தனர். வந்திருந்தவர்களில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களை மட்டும் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சென்னை, திருப்பூர், திருச்சி, கோவை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர். முதல் நாள் முகப்புத்தகம் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தநாள் பலரும் பல பகுதியில் இருந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, பியூஸ் விரும்பியபடியே அனைவரும் மூக்கனேரி சென்று மரக்கன்றுகளை நட்டு அவரது விடுதலைக்கான செயல்பாடுகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டு மூக்கனேரி சென்றோம். மூக்கனேரிக்கு சற்று முன்பாக திரண்ட மக்கள் கூட்டம் ஒரு ஊர்வலமாகத் திரண்டு மூக்கனேரியை அடைந்தது. அங்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அவை நடப்பட்டன. அவ்வேளையில் மூக்கனேரியில் பல குழந்தைகள் அங்கு கட்டப்பட்டிருந்த சறுக்குகளில் விளையாடிக்கொண்டும் பல பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டவாறும் இருந்தனர். சேலம் நகரின் குப்பைகொட்டுமிடமாக மாறிப்போன ஒரு மீன்பிடி ஏரியாக இருந்த மூக்கனேரியை இப்படி மரக்கூட்டங்களுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட திட்டுகள் அடங்கிய பயன்தரு ஏரியாக மாற்றியது பியூஸ் பங்கேற்ற சேலம் மக்கள் குழுவின் சாதனைகளில் முக்கியமான ஒன்று. அங்கு மரக்கன்றுகளை நட்டு அவரது பிணைக்கான முயற்சியைத் தொடங்கியது நமது அரசு, அதிகாரம் இவைகளின் அவலமான, கோர முகத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது. வழக்கறிஞர் பாப்பா மோகன், கொளத்தூர் மணி அவர்கள் போன்றோருடன், பியூஸின் அப்பா, பியூஸின் மனைவி மற்றும் உறவினர்களும் நண்பர்களும் மரக்கன்றுகளை நட்டோம். பின் அங்கு அமைக்கப்பட்ட அரைவட்ட அரங்கில் மிகசிறிய ஒன்றுக்கூடலுக்கு பின் அனைவரும் பிரிந்து சென்றார்கள்.
***
பியூஸ் மானுஸை நான் சமீபத்தில் தான் முதன்முறையாகச் சந்தித்தேன். சரியாகச்சொன்னால் ஜூன் 4 ஆம் தேதி நாங்கள் அவரது தர்மபுரிக்கு அருகில் உள்ள கூட்டுறவு வனத்தில் அவரைச் சந்தித்தோம். நண்பர் சந்தோஷ் இதை ஒருங்கு செய்தார். அங்கு அப்போது இரண்டு லயோலா கல்லூரி பயிற்சி மாணவர்கள் இருந்தார்கள். மாணவர்கள் எங்களுக்கு அந்த வனத்தின் சில பகுதிகளைச் சுற்றிக்காட்டினார்கள். குறிப்பாக 1 இலட்சம் குழிகளுக்கு மேல் மலைப்பகுதி எங்கும் நீர்பிடிப்புப் குழிகளைத் தோண்டி மழைநீரை மலைப்பகுதிகளில் அறுவடை செய்யும் அவரது முயற்சியால் அங்கிருந்த ஓடையில் தூயநீர் ஓடிக்கொண்டிருந்தது. என் இளைமையில் பொது நீர்நிலைகளில் கட்டற்று நீராடி மகிழ்ந்தவன் நான். எனது கல்லூரிக்காலங்களில் கன்யாகுமரி கடலில் தனியனாக நள்ளிரவில் மணிக்கணக்காக திளைத்து இருக்குமளவுக்கு எனக்கு நீச்சலிலும் நீர்விளையாட்டிலும் வெறியே உண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த நீர்நிலையிலும் அது காவேரி ஆனாலும் சரி கடலானாலும் சரி எங்கும் என்னால் மனத்தடையின்றி இறங்க முடிந்ததே இல்லை. எனக்கே வயதானதால் தான் இந்த தயக்கமோ என்ற எண்ணம் கூட ஏற்பட்டு விட்டது. ஆனால் பியூஸின் இந்த வனத்தில் இருந்த மீன் வளர்க்கும் குட்டை ஒன்றைப் பார்த்த மாத்திரத்தில் முன்போலவே நான் மாறிவிட்டேன். 15 அடி ஆழம் கொண்ட குட்டையில் மனத்தடையின்றி நீந்திக் களித்தேன். இதை என் 8 வயது மகனின் முன் செய்தேன். இதுதான் பியூஸ் எனக்கும் என் மகனுக்கும் அளித்த மிகுந்த அற்புதமான பரிசு. குளோரின் கலக்கப்பட்ட, டைல்கள் பதிக்கப்பட்ட, விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட குளங்களில் அவன் இனி நீராடலாம்; விளையாடலாம். ஆனால் ஒரு வனத்தின் மடியில் சுரந்த தூயநீரின் குளிர்ச்சியில், அருகில் ஒரு நன்னீர் நண்டோடு, தனது விளையாட்டுத்தோழியோடு தனது அன்புக்குரியவர்கள் உடனிருக்க அவன் செய்த சாகசங்கள் அவனுக்கு அளித்த மகிழ்ச்சியை அவன் மறக்கமாட்டான். அதுதான் இனி நீர்விளையாட்டிற்கான அவனது standard.

என் மகனும், சந்தோஷின் 6 வயது மகளும் ஆழமற்ற அந்த ஓடையில் நீராடிக்கொண்டிருந்தனர். பியூஸ் அவர்கள் அருகில் தண்ணீரில் அமைதியாக நீராடிக்கொண்டிருந்தார்.
நன்னீர். இந்த உலகத்தின் அரிய பொருட்க்களில் ஒன்றாக மாறிப்போனது கடந்த 15 ஆண்டுகளாகத்தான். அதற்குக் காரணம் நமது வளர்ச்சியைப் பற்றிய புரிதல்தான்.
இரவு உணவு அங்கு குத்தி சமைக்கப்பட்ட கம்பங்கூழ்தான். அப்பொழுது மிகச்சிறு பொழுதே அவரோடு பேசிக்கொண்டிருந்தோம். ஆர்கானிக் விவசாயம், இயற்கை வாழ்வியல் இவையெல்லாம் நன்னீர் இல்லாதபொழுது எப்படி சாத்தியம்? தண்ணீர் மாசுபடுவதைத் தடுப்பது எப்படி- மாசுபடுத்துவதை நிறுத்துதல் ஒன்றே வழி என்று அவர் பேசிக்கொண்டிருந்தார். ஒரு கல், ஒரு மரம், ஒரு ஆறு மட்டும் புனிதமல்ல எல்லாம் மலைகளும், எல்லா வனங்களும், எல்லா ஆறுகளும், கடல்களும், புனிதமானவை, நமது கண்மூடித்தனமான துய்ப்பில் இருந்து காப்பாற்றப்படவேண்டியவை என்று சொல்லிக்கொண்டுவந்தவர், கண்முடித்தனமான துய்ப்பு என்பது இன்றைய பிரச்சனை மட்டுமல்ல, 2000 ஆண்டுகளுக்கு முன்னேயே மிகுபொருள் கொள்ளாமையை சமணம் தன் 10 ஒழுக்கங்களில் ஒன்றாகச் சொல்லியிருப்பதைக் குறிப்பிட்டார். இன்றிருக்கும் மக்கள் தொகையும் கருவிகளும் நமக்கு மேலதிகமான பொறுப்பும், கவனமும் இருக்கவேண்டுமென்பதைச் சொல்லுகின்றன என்று முடித்தார். அவர் அன்றிரவே அங்கிருந்து சேலத்துக்கு புறப்பட்டுவிட்டார். நாங்கள் அந்த இரவை அந்த வனத்தில் கழித்தோம். அடுத்த நாள் முக்கனேரியை சேர்ந்து பார்க்க அழைத்திருந்தார். அது வேறுகாரணங்களால் நடைபெறாமல் போனது. அதனால்தான் நான் மூக்கனேரியை இப்போது வந்து பார்த்தேன்; பலா மரக்கன்று ஒன்றை நட்டேன்.
நன்றி பியூஸ்.
இந்த நிகழ்வுகளுக்கு சம்பந்தமில்லாமல் அந்த ஏரியின் கரையில் ஒரு தந்தையும் மகளும் நின்றிருந்து நீர்வெளியைப் பார்த்திருந்தனர். பறவைகள் அவர்களது தலைக்குமேல் பறந்துகொண்டிருந்தன. அரசும் அதிகாரமும், கண்மூடித்தனமான முதலாளித்துவமும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள விழைவது அந்த ஏரியையும் நீரையும், பறவைகளையும் மட்டுமல்ல; அவர்களது அந்தப் பார்வையும் அது தரும் அந்த மகிழ்வையும் தான். அதற்குப்பதில் அவர்களது சட்டைப்பையில் இருந்து எடுத்துக்கொண்ட பணத்துக்கு அவர்கள் வழங்கவிரும்புவது அணுசக்தியால் தயாரிக்கப்பட்ட மின்சக்தியால் இயங்கும் செயற்கை நீரூற்றையும், வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட குளோரின் கலக்கப்பட்ட நீர்த்தாரையையும் தான்.
‪#‎Standwithpiyush‬