Sunday, October 10, 2004

மூளை சுமப்பவர்களின் பயணம்!!

மூளையை அதன் இடத்தில் இருந்து விலக்கி, அமிக்டாலாவை ஊதி பெரிதாக நிரப்பி மூளை இருந்த இடத்தில் அதை மறு ஈடு செய்த நபர்கள் இவர்கள். இவர்களின் பாதை அனைத்தும் அவர்களது உணர்வால் நிரப்பப் பட்டிருந்தது. அவர்கள் சந்தோஷத்தையும் கொண்டாடினார்கள். துக்கத்தையும் கொண்டாடினார்கள். இவர்களும் பல இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி உணர்வால் மட்டுமே உந்தப்பட்டு சென்று கொண்டிருந்தனர்


ஒரு சமவெளியில் மாடுகளின் மேய்ச்சல் நிலத்தின் அங்கமாக இருந்த அச்சிறுவனின் கையில் ஒரு புல்லாங்குழல். சுற்றி இருந்த அந்த இடத்தின் வெற்றிடத்தை நிறைத்தது அவனது இலக்கணங்களுக்குள் வராத மன ஓசை. நுரையீரலில் தோன்றி அமிக்டாலாவின் அற்புதத்தில் கலந்து புல்லாங்குழலின் துளை வழியே வந்த இசை மாடுகளையும் மரங்களையும் அவன்பாற் வசப்படுத்தியது. இசை நன்று. இலக்கணங்கள் கட்டுமானம். புது இசை அவனது உணர்வு. கட்டுமானங்கள் உடைபட்டன. அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆடிக்கொண்டு வந்த அவளையும் அவன் இசை கவர்ந்தது. அவள் நின்றாள். அவள் மயங்கினாள். அவள் குதூகலித்தாள். அச்சிறுவனிடம் " கண்ணனின் விந்தை நான் கண்டேன். சிறுவ என் பயணத்தில் இணைந்து கொள். நோக்கம் பயணத்தின் பாதையில் நாம் காண்போம். என்னில் இருந்த உணர்வின் பிரதிபலிப்பை உன் குழலின் வழியே அந்த பசுக்களை அடையக் காண்கின்றேன். அவைகள் நன்றிக்குரியன. நாம் செல்வோம்" என்றவாறே முந்தானையில் முடிந்த மூளையின் வெளிப்புற சாயலை அவனிடம் காட்டினாள். அவனும், குதித்து எழுந்து புதரில் நரிக்காக வைத்துவிட்ட அந்த மூளையை எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச மொழிக்கு ஊடாக அப்பாதையில் நடக்க துவங்கினான்.

சற்று தொலைவில் இவர்களைப் போல் பலர் எந்தவித கட்டுபாடுமற்று தங்கள் நிலையில் ஆழ்ந்த களிப்பும், பேருவகையும், நிகரற்ற சோகமும் தனதாக்கி கொண்டு இவர்கள் சென்ற திசையிலேயெ சென்று கொண்டிருந்தனர். ஓவென்று அழுது கொண்டும், ஹா... ஹா.... என்று சிரித்து கழித்தும்.

-தொடரும்

-பாரி

Saturday, September 11, 2004

அமிக்டாலா மூளையர்கள்!!

இதயம் சுமப்போர் போல் அல்லாது, தலையில் கபாலம் பிரித்து உள்ளிருக்கும் அமிக்டாலா பகுதியை மறு ஈடு செய்து, முன்,பின் மூளையை களைந்து அதை கையிலெடுத்து, ஈட்டி போன்ற அமைப்பின் முன் செருகிக் கொண்டு அவன் "ததிங்கிணத்தோம், தத்தரிகிடதித்தோம், தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிடதித்தோம்... தட்டாவது வீச்சாவது... அனைத்தும் வெறும் பேச்சு..என் நடை என் உள்ளப்பாடு ஐயா!!" என எதிரே உள்ளவன் உணரும் வகையில் குதித்து களித்தும், களித்து குதித்தும் சென்றான். மரங்கள் அசைந்தன. மலர்கள் சிரித்தன. ஒரே ஆரவார எக்காளம் அவனுக்கு... "ஹே.... " என்று கூக்குரலிட்டவாறே ஓடித்திரிந்தான். அவனும் பாதையில் முன்னேறியவாறே இருந்தான்.

மலைகள் நிறைந்த பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒருவித கிறக்கம் தரும் தேனை நீங்கள் பருகியதுண்டா?. அதன் சுவை இனிப்பு. ஆனால் அதன் நறுமணம் தன்னைச் சுரந்த மலர்களின் நினைவினை பொதித்துக் கொண்டிருக்கும். (NT,Jens,balu,srika Thanks guys!!)

இதன் கிறக்கத்தையும் உள்வாங்கி "ஆடினா நான் ஆடினா அது ஆட்டம் மக்கா" என்று கைகொண்ட வாத்தியத்தை தனது சீராக மற்றவருக்கு மாறாக முழங்கி கொண்டே அவளும் இறங்கினாள். வந்தான் என் காதலன், வாழ்வில் அவனில்லை எனில் சாதலின் என ஒலித்தவாறே வந்தாள் அவளும் ஒய்யாரமாக. அவளது வழியில் காட்டு மலர்களும், கானக்குயில்களும் அவளுடன் அன்பு மொழி பேசின; ஓயாமல் அவளும் அவைகளிடம்.

இதை நன்றாக உணர்ந்து, எந்த ஒரு திட்டமும் இன்றி, போகும் வழியில் இறைந்த மலர்களை சுமந்தவாறே அந்த ஓடையும் அவள் துணையாக சென்றது.

-தொடரும்

பாரி
(குறிப்பு: அமிக்டாலா- உணர்வுகள் உருவாக காரணமாக இருக்கும் மூளையின் ஒரு பகுதி)

Sunday, September 05, 2004

இதயச் சுமையாளிகளின் சந்திப்பு



அப்பள்ளத்தாக்கில் இருந்த ஒரு மரத்தின் மீதமர்திருந்த சிறுவனின் கையில் ஒரு பொட்டலம். அதில் அவனது இதயம். அவன் தொணாத்திக் கொண்டு இருந்தான். அப்போது அம்மரத்தின் அருகிலே நின்று கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன், ஒரு சிறிய பென்சிலை கொண்டு பல எண்களை எழுதி அழித்துக் கொண்டே,அச்சிறுவனின் தொணத்தலை கேட்டான். சிறுவன் " நான் ஆசையுடன் சென்றேன் பல விசயங்களை கற்றுக் கொள்ள வகுப்பிற்கு. எனது மாமா பயிற்றுவித்த படிக்கும் முறைகளால், நான் மேலும் படித்த விசயங்களை மற்றவர்களிடம் குறிப்பாக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டபோது கிடைத்தவை பிரம்படிகள். அதுவும் உள்பாதத்தில். இதயம் நொறுங்கியது. ஆசை அழிந்தது. இதோ! என் கையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள என் இதயம்." கவனமாக தனது இதயத்தை கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன் எக்காளமாக கூறினான் "போ! போ!! இனி உன் அகராதியில் ஆசையும் இல்லை! இதயமும் இல்லை!!" பின்பு அலுத்துக் கொண்டு மேலும் மெதுவாக " என்னிடமும்தான்" எனக் கூறிக் கொண்டே, எண்களை கூட்டிக் கழித்து பெருக்கி தனது வாழ்க்கையை வாழ தன்னை தயாரித்துக் கொண்டான்.

அங்கே ஒரு பாறையின் மீதமர்ந்த மற்றொருவன், தன் துணையுடன் புணர்ந்த கொண்டிருந்த சமயத்தில் எவ்வாறு தன் துணை, படைகளின் குண்டுகளுக்கு பலியானாள் என்றும், இனி எப்போதுமே நிரப்பப்பட இயலாத ஒரு வெற்றிடத்தில் தன் ஸ்கலிதம் பாதியில் முடிந்து போனதை கூறி தன் இதயத்தை அவனது பொதியில் இருந்து வெளியில் காட்டினான். அதைக் கேட்ட அருகிலிருந்தவன், "சரி இப்போ என்ன?. என் விறைத்த குறியை சிதறச் செய்யவும் அவர்களால் ஆனது. இனி நம் குறிகள் நம் தலையில் தான்", என கூறிவிட்டு அமைதிகாத்தான் சற்றே படபடத்த தன் கையில் இருந்த இதயத்தை தாலாட்டிக் கொண்டே.

சிறிதும் கவலையின்றி, தனக்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டதையும், மற்றவர்கள் சூழ்ந்து தன்னையே அவர்கள் மறக்கடித்ததையும், இவைகளையே சித்தாந்தங்களாக கொண்டு அவர்கள் வாழ்ந்ததையும் அவள் கூறினாலும் பள்ளத்தாக்கை அடைய மேற்கொண்ட பெருமுயற்சிகள் வியர்வையை தந்து அவளது நிலையைக் காட்டியது. அவள் தான் சுமந்த இதயத்தின் சுமையை பொருட்படுத்தவில்லை.

இத்தகைய நிலையில் தங்கள் இதயத்தின் கைப்பிடியில் இருந்து விலகி வாழ்வது வாழ்க்கை என்று அவர்கள் நம்பச் செய்யப்பட்டார்கள். அத்தகையோர் அங்கே குழுமி இருந்தனர். அவர்கள் குழுமியதன் நோக்கம் என்னவென்று அவர்கள் அப்போது உணரவில்லை. அது ஓர் கூட்டம் என்று மட்டுமே உணர்ந்தனர்.

இருள்கறுப்புக் குதிரையில், தனது முடி அலை போல பரவ, காற்றை போல் அப்பள்ளத்தாக்கை அவள் அடைந்தாள். அவள் நம்மைப் போன்ற சாதாரன மனுசி. இதயத்தை தன் உடலின் ஒரு பாகமாக கொண்டவள். அங்கே அவள் கண்ட கூட்டம் அவளை நிலை குலையச் செய்தது. அவளுக்கு இதயத்தை சுமந்தபடி மக்கள் வாழ இயலுமா? என்ற கேள்வியும், அவர்கள் பேச்சை கேட்டு இவர்கள் அதைச் சுமந்தால் வாழ இயலாது என்பதையும் அறிந்து, தன்னில் ஓர் பிளவாக அவள் அங்கிருந்து சென்றாள். ஆனாலும் அவள் பட்ட அதிர்ச்சி அவளது உயிர் நிலை ஆட்டி வைத்தது.

அவள் தனது பாதையில் செல்ல யத்தனிக்கும் போது ஒரு பேரிரைச்சல் சில காத தூரங்களுக்கு அப்பாலிருந்து வருவதை கேட்டாள்.

-தொடரும்.

Monday, August 30, 2004

இதயத்தை சுமக்கின்றவர்கள்!!!


இது மற்றொரு ஜீவன். தன் இதயத்தை ஒரு கூடையில் சுமந்து கொண்டு அதை இடுப்பில் இட்டு காக்கை, கழுகுகளிடமிருந்து காப்பாற்ற ஒரு மெல்லிய துணியால் மூடி ஒரு ஒற்றையடி பாதையின் வழியாக முக்கிய வீதியை அடைந்தது.

அஜ்ஜீவனின் நடையிலும் தீவிரம். முகத்தில் ஒரு நிராசை. என்ன இது என்று சொல்ல இயலா ஒரு குறிப்பில்லாத முகத்தோற்றம்.

அந்த ஜீவனின் நடை முன்னோக்கியே இருந்தது. பையில் இதயத்தை சுமப்பவர், அந்த ஜீவனை சந்திக்க ஆவலானார். தனது துரித நடையில் நம்பிக்கை வைத்து, அடிகளை எட்டிப் போட்டார். அந்த ஜீவனின் கவனத்தை கவர தன்னால ஆன அனைத்தையும் செய்தார். ஒரு வழியாக அவரை எட்டினார். கூடையில் இதயம் சுமப்பவரை சற்று கடந்ததும், தலையை மட்டும் திருப்பி, எங்கே என்று கண்களால் வினவினார். ஆனாலும் இருவரின் நடையிலும் சற்றும் வேக குறைச்சல் இல்லை.

கூடையில் இதயம் சுமப்பவரோ, 'பாதைகள் பலவானாலும் போகும் இடம் ஒன்று' என்று கூற, கைப்பைக்காரர் அமைதியுற்றார்.


கூடையில் இதயம் சுமப்பவர் தான் கடந்து வந்த பாதைகளை நினைக்கும் பொழுது, சிறிது துணுக்குற்றார். தனது குழந்தை பருகிய அமிர்தம் சுரந்த முலைகளில் ரத்தம் சுரக்க துவங்கும் கணம் தனது இதயத்தை பிடுங்கி கூடையிலிட்டது நினைவுக்கு வர அவருக்கு வியர்வை பெருக்கெடுத்தது, இதயம் கூடையில் இருந்தாலும்.

பதின்ம வயதில் இருக்கும் தனது வாரிசை கிளம்பிய இடத்திலே மட்டும் விட்டு விட்டு, தனது இதயத்தை பிய்த்து கையில் வைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்த உடன் தன் பாச உணர்வுகள் மறக்கடிக்கப்பட்டது உறைத்தது. ஆனாலும் அது எந்த ஒரு வலியையும் தோற்றுவிக்கவில்லை. எதேச்சையாக கைகள் நிரடும் போது, காய்ந்த போன ரத்த துளிகள் மட்டும் மூளைக்கு செய்தியாகச் சென்றது.


அவர்கள் நடந்த போது உண்டான சரக் சரக் சப்தம் மட்டுமே அவர்களுக்கு ஒலித் துணையாக இருந்தது.


அவர்கள் சென்ற பாதை சில மலைகளுக்கு நடுவில் ஒரு பள்ளத்தாக்கை அடைந்தது. அப்பள்ளத்தாக்கு அவர்கள் வந்தது போன்ற பல பாதைகளின் சங்கமமாக இருந்தது. அப்போதுதான் கைப்பைக்காரர் அங்கே பல மனிதர்கள் பரவி இருந்ததைக் கண்டார். மரத்தின் நிழல்களில், பெரிய பாறைகளின் அடியில், சிறிய குகைகளில், இவ்வாறு பல இடங்களில். அனைவரிடத்திலும் ஒரு கைப்பையோ அல்லது கூடையோ அல்லது பாலிதீன் பைகளோ அல்லது கனச்துர, செவ்வக வடிவ டப்பாக்களோ இருந்த்தது.


மனத்தின் சார்புகளை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்தார்களா? அல்லது முடிவு செய்ய வைக்கப்பட்டார்களா?.

-தொடரும்


பாரி

Friday, August 27, 2004

இதயத்தை சுமக்கும் கணங்கள்...

குருதி வடிந்து கொண்டே இருக்கும் தனது இதயத்தை முதலில் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்கத் துவங்குகையில் அதன் ஆர்ப்பரிப்பு ஒரு இம்சையை கொடுத்தது. ஆகையால் அதனை ஒரு பையில் இட்டு, அதன் கைப்பிடி உதவியுடன் வசதியாக தூக்கி சென்றால் என்ன? என்ற எண்ணம் மேலிட, அவ்வெண்ணம் செயல் வடிவம் பெற்றது. அந்த இதயத்தின் ஆர்ப்பாரிப்புகள் தற்காலிகமாக அடக்கப்பட்டது.

பல கண்கவரும் வண்ணங்களை காட்டி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி அந்த கைப்பையில் இருக்கும் கருஞ்சிவப்பு இரத்தம் தோய்ந்த இதயத்தை காண்கின்றாள். உடனே தனக்கு கூறப்பட்ட ஆப்பிள் பழம் அவள் நினைவில் வர, " கைப்பையில் ஆப்பிள்! கைப்பையில் ஆப்பிள்" என்று உற்சாக குரல் எழுப்பினாள்.

தன் இதயம் வெளியில் பளபளப்பான கருஞ்சிவப்புடன் இருந்தாலும் அதை அறுத்துப் பார்த்தால் அதனுள்ளே எங்கும் வெண்மை படர்ந்து இருக்கும் என்ற எண்ணம் சட்டென்று தோன்றி மறைகின்றது. ஆனாலும் தனது நடையில் சற்றும் தளர்வில்லை.

ஒரு பூனையை ஒரு பையில் வைத்துக் கொண்டு சற்று தூரம் நடந்துள்ளீர்களா? அதுவும் ஒரு சுறுசுறுப்பான பூனையுடன்?. அப்பூனையை விட மென்மையான அதைவிட சுறுசுறுப்பான தனது இதயத்தை அப்பையில் சுமந்து செல்வது சற்று வேடிக்கையாகவே இருந்தது. ஆனாலும் ஆர்பாரித்த இதயம் பூனை போல் அல்லது அதைவிட சமர்த்தாக இருந்ததால் நடையை சற்று நிதானமாக்க நினைத்தாலும், நடையின் நோக்கம் நடையை தளரச் செய்யவில்லை.

அந்த கைப்பையில் இருந்த இதயம், ஒரு குழந்தை ஓவென்று அழுது பின் சமாதானமடைந்து, மறுபடியும் அழ ஆரம்பிப்பது போல மீண்டும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. தனது கைகளால் அதனை வருடி சமாதனமடையச் செய்த முயற்சி பலனற்றுப் போனது. குருதி ஊறும் இதயத்தின் ரத்தம் மட்டுமே உள்ளங்கையில் மிச்சம். ஆனாலும் தனது நடையில் தளர்வில்லை.

சந்தியா காலங்களில் மலர்ந்த சிறிய ஆரஞ்சு நிற தண்டுகள் கொண்ட அழகிய வெண்மையான இதழ்களுடன் அமைந்த பவளமல்லி மலர்களிலிருந்து கிளம்பிய நறுமணம் நாசியை வருடி சிலிர்க்கச் செய்தது. ஆனாலும் இதயத்திற்கு இதமோ இம்மணம் என தோன்றும் பொழுதே, இதயம் தனியாக தனது கைப்பையில் இருக்கின்றது என்ற நினைவு ஒரு வறண்ட புன்னகையாக வெளிப்பட்டது.

-தொடரும்.

(இது ஒரு தொடர் முயற்சி. இதன் முதல் அத்தியாயம் இப்போது நீங்கள் படித்தது. ஒவ்வொர் அத்தியாத்தின் தலைப்பு அப்பதிவின் தலைப்பாக அமையும். கடைசியில் இதை தொகுத்து ஓர் நாமகரணம் செய்வோம். -அன்புடன் -பாரி )

Thursday, August 12, 2004

அறிவார்ந்த அடிமைகள்

இப்போதெல்லாம் எனக்கு தோன்றுகின்ற சில விசயங்களை நான் பகிர்ந்து கொள்கின்றேன். இது எதற்கும் களிம்பல்ல.

ஒரு விசயம் நடக்கின்றது. அந்த விசயத்தை நீ பார் என்றால், அவர்கள் தங்களை அந்த விசயங்களோடு இணைத்து கொள்கின்றனர். தாங்களே அவ்விஷயம் என பாவித்து கொள்கின்றனர். இது எந்த வகை மனோபாவம் என்றால், ஆங்கிலேயனுக்கு கணக்கு எழுதி அதனால் தங்களுக்கு ஓர் பெருமையும், அடிவருடியதால் கிடைத்த எச்சில் பொட்டலங்களை அலுவுலகத்தை விட்டு வெளிவந்த பின் "பார்! என் கையில் பொட்டலம். நான் உங்களினும் மேலானவன்!!" என்று பாமர சனங்களை பயமுறுத்திய பச்சோந்தி மனோபாவம்.

இவர்களுக்கு போராட்டம் என்பது, பள்ளியில் டப்பா அடித்து மதிப்பெண் பெறுவது மட்டும்தான். தன்னைவிட பலம் வாய்ந்த தெரிந்தே தவறு செய்யும் அமைப்பை எதிர்ப்பதை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. தன்னை அடிமையாய் வைத்துள்ள ஓர் அமைப்பு எதை எதிர்க்கின்றதோ அதை அவர்களும் எதிர்ப்பர். ஏனென்றால் அதுதான் அவர்களது உளவியலுக்கும் இருப்புக்கும் பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். இவர்கள் அந்த அமைப்பினால் செய்யப்படும் சுரண்டல்களயும் துரோகத்தையும் இனி வருங்காலங்களில் வருந்தாமல் பாரம் சுமப்பர். அவ்வளவுதான் இவர்கள்.

இந்த இடத்தில்தான், நான் மேலும் சில விசயங்களை கூற விரும்புகின்றேன்.

1. இவர்களால் அழ முடியுமே தவிர அடித்தவரை நேர்கண் கொண்டு பார்க்க முடியாது.

2. அடித்தவர் ஏன் அவ்வாறு என்று சொல்லாமல், ஓர் மிட்டாய் அல்லது ஓப்பியம் கொடுத்து அடியை மறக்கச் செய்வார்.

3. இவர்களும் எப்படி எங்கள் தலைவர்கள் என்று அவர்களை பாராட்டி ஓப்பிய பயன்பாட்டை எதிர்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக அதை உட்கொள்வர்.

4. இவர்களும் விடுதலை பற்றி பேசுவர். அவர்கள்தான் உலகில் (நாட்டில்) உள்ளனர் என்றும் மற்றவர்கள் முன்னிருந்தவாறே இருக்க (தங்கள் அடிமையாய் இருக்க) வேண்டும் என்றும் கூறுவர்.

5. இந்த விசயங்களை போற்றி பாதுகாக்க பலரின் அருளாசிகளும் உண்டு.

இவர்கள் பேசுவதில் உள்ள ஆதிக்க மனப்பான்மை எதிராளியை மருளச் செய்யும். இவர்களில் எவரேனும் ஈராக் சம்பவத்தை எழுதிய அதே வேகத்துடன் மணிப்பூர் சம்பவத்தை பற்றி எழுதுகின்றனரா?. இவர்களுக்கு முக்கியம் சொந்த நலன்கள். இவர்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதிலும், ஆடம்பர பேச்சுகள் மூலமும், கோஷ்டியாய் வந்து தாக்குவதன் மூலமும் தங்கள் அமைப்புக்கு அடிவருடி தங்களை இழந்து கொண்டே தங்களின் போலித்தனத்தை சற்றும் வெட்கமின்றி தொடர்வார்கள்.

அடிப்படையான நேர்மைத்திறனும், உண்மையான மனிதப் பண்பும் பார்த்து இவர்களிடம் பேசினால் சேற்றை வாரி இறைப்பர் ஏனென்றால் அவர்கள் உழல்வது அதிலேதான்.

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....


அன்புடன்
பாலாஜி-பாரி

Thursday, July 08, 2004

நான் யார்?

"நீ வந்த இடம் கால்"
"அதை மட்டுமே நீ பார்"
ஆதிக்க வார்த்தைகள் கேட்டு,
ஆண்டுகளின் கணக்கறியா,
எமது மதங்கள் சுமத்திய
மாய சுமையறிந்தே கூனிய
முதுகு உன் தலையை
நிமிராது அழுத்தி பிடித்தது
எம் பெரியவர்கள் மூலம்.
ஆம் சிகிச்சையில்லா மூலம் தான் - அவர்கள்
மானிடத்திற்கு.

சுமந்தது என் இடது தோள்
இதுகாறும் முப்புரிநூல் மட்டும் அன்று
அதனூடாக ஈராயிரத்தின் கழிவுகளை.
எண்ணிச் சுமையென உணர்தல் கண்டேன்
எண்ணியபடி தீயில் சுட்டெரித்தேன்.
தீயே நீதான் என்னில் இறங்கு-காட்டு
நான் யாரேன எனக்கும்,
தான் யாரேன அவர்களுக்கும்.

பாலாஜி-பாரி

Wednesday, June 23, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு- கிடையாது!! - 2

இத்திரைப் படம் "அண்ணாச்சியின்" குற்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்கின்றேன். முந்தைய பதிவில் கூறியபடி, எப்பொழுதும் அவர் முகத்தில் தனது பணி நிமித்த சோகம் இழையாக ஓடும்.

இப்படம் பல மனித உணர்வுகளை சிக்கல் இல்லாமல் காட்டுகின்றது.
"அண்ணாச்சியின்" கடைக்குட்டி மல்லிகா பருவம் அடைவது, அதற்கான விழா எடுப்பது, அவ்விழா முடிவில், மூத்த மகளின் கணவன் சொல்லிக் கொண்டு செல்லும் போது, மல்லிகாவை ஒரு கணம் பார்ப்பது, அந்த நிகழ்வை மல்லிகாவின் பெற்றோர் கவனித்து விடுவது இவை அனைத்தும் ஓர் சரம் போல் தொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாச்சியின் மகன், சுதந்திரத்திற்காக பாடுபடுவதை ஓரிரு வசனங்கள் மூலமும், ராட்டையில் நூல் நூற்பதன் மூலமும் காட்டுகின்றார் இயக்குநர். அண்ணாச்சியின் மகன், தூக்கிலிடுவதை எதிர்த்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்வதையும் கள்ளுக்கடை காரர் மூலம் காட்டுகின்றார்.

அண்ணாச்சியிடம் நிறைய நோயாளிகள் வருவதை அறிந்து, மூத்த மகள் நிலம் வாங்க பணம் கேட்டு வருவதும், அது தொடர்பான வசனங்களும், அவள் மீது அண்ணாச்சியின் பரிவை காட்டுகின்றது.

அண்ணாச்சியின் உடல் நலம் குன்றி, அவரால் "ஆரச்சார்" தொழிலை தொடர முயலாத நிலையில், திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வரும் டவாலி, அவரது மகனை உதவிக்கு வைத்து கொள்ளுமாறு பணிக்கிறார். தந்தையின் உடல் நலம் கருதி தானும் அவருடன் செல்கிறார் மகன், கொள்கையை சற்றே ஓரமாக வைத்துவிட்டு.

அங்கு சென்ற பின், தூக்கின் திறனை சோதித்து, ஓர் வீட்டில் உட்காருகின்றனர். தூக்கிலிடுபவர், அன்றைய இரவு உறங்காமல் இருக்க வேண்டும். அதற்காக, அங்கு அவருடன் இருக்கும் மூன்று காவலர்கள் அவருக்கு கதை சொல்ல முயல்கின்றனர். முதலில் ஒருவர், அவருக்கு நந்தனார் கதையை கூறுகின்றார். பின்பு மற்றொருவர், அரிச்சந்திரன் கதையை கூற முற்படும் போது, அக்கதையில் நாட்டம் இன்றி தூக்கம் வருவதாக கூறுகின்றார் அண்ணாச்சி. உடனே, மூன்றாவது நபர் சுவாரசியமான ஓர் கதையை கூறுகின்றார்.

அந்தக் கதை:
ஓர் சிறுமி. 13 வயது. ஆடு மேய்க்க செல்லும் போது புல்லாங்குழல் வாசிப்பவனிடம் பழக்கம் ஏற்படுகின்றது.
அவள் தனது காதலனின் புல்லாங்குழலின் இசையில் மயங்குகிறாள். ஒரு நாள், அவனிடம் அவள் புல்லாங்குழல் வாசிக்க கற்று தரும் படி கேட்க, அவனும் கற்று தருகின்றான். அவள் ஆடு மேய்த்து கொண்டே அவனது புல்லாங்குழலை வாசிக்கின்றாள். அச்சிறுமியின் அக்காள் கணவன், அப்போது அங்கு வந்து அச்சிறுமியை கெடுத்து கொன்று விடுகின்றான். ஆனால், அச்சமயம் அங்கு வரும் அவள் காதலன் மீது பழியாகி தூக்கு தண்டனை பெறுகின்றான்.

இக்கதை அண்ணாச்சியின் மனக் கண்ணில் எவ்வாறு விரிகின்றது என்பது இப்படத்தின் திருப்பம், முடிவு. அவர் அச்சிறுமியை மல்லிகாவாக எண்ணிக்கொள்கின்றார். தனது மாப்பிள்ளையை அவளது அக்காவின் கணவனாக பாவித்து அதனால் அவர் மிக துயருற்று, கதையை நிறுத்தும் படி சொல்கின்றார். அப்போது, கதையாளி, "அண்ணாச்சி, எப்படி கதைய நிறுத்தறது? நீங்க தூக்கில போடப்போவது அந்தப் பையனதான" என்கின்றார். அதற்கு அவர் "நான் மாட்டேன், நான் மாட்டேன்" என்றபடியே சரிகின்றார். மாரடைப்பால் இறந்து விடுகின்றார். இச்சம்பவம் மூலம் இயக்குநர், பார்வையாளர்களின் எண்ணத்தை கவ்வுகின்றார்.

இச்சூழ்நிலையில், தண்டனையை நிறைவேற்ற சட்ட சிக்கல் வந்து விடுகின்றது. அப்போது அவரது மகன் பற்றிய எண்ணம் அவர்களுக்கு வருகின்றது. அவனை அப்பணி செய்ய அழைத்து செல்கின்றனர். கடைசிக் காட்சி நிழலாக காண்பிக்க படுகின்றது.

இப்போது பார்வையாளர் மனதில் ஓர் பாரம்.

இப்படத்தின் இசை இளையராஜா. படத்தில் பல இடங்களில் அவரது மேன்மை தெரிகின்றது. இசையே இல்லாத இடங்களிலும், படத்தினுள் இருக்கும் அக் குட்டிக் கதை துவங்கும் போதும், புல்லாங்குழல் இசையிலும் நம்மை கவர்ந்து விடுகின்றார். சில இடங்களில் அவரது இசை ஓர் அமானுஷ்ய தன்மையை கொடுக்கின்றது. இவரும் படத்தின் முதுகெலும்பு.

நன்றாக இருந்தது இப்படத்தின் ஒளிப்பதிவு. காடுகளும், தாமரைக் குளங்களும், மலைகளும், கண்ணுக்கு குளுமை.

சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கட்டாயம் பாருங்கள்.


Tuesday, June 22, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு-கிடையாது!! -1

இன்னைக்கு அபிலாஷ் கூப்பிட்டதால் இந்த படத்தை பார்த்தேன். இன்ஸ்டிட்டுயுட் ஜிம்கானாவில் திரையிட்டனர். அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படம்.
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. குற்றவாளியை தூக்கில போடற பணியை செய்யும் ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் சொல்றாங்க.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் குற்றவாளிகளை தண்டிக்க உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை தருவார்கள். இதை நிறைவேற்றும் பணியை செய்பவர் "அரச்சார்" என்றழைக்கப்படுவர். இது பரம்பரையாக வரும் பணி.

இப்படத்தின் நாயகன் சுமார் ஐம்பது-அறுபது வயதான "அண்ணாச்சி" (கொடுவில் உன்னிக்கிருஷ்ணன்). அவருடைய மனைவி, சுகுமாரி. அவர்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவள் திருமணமாகி, எட்டு வயது பெண் குழந்தைக்கு தாய். அவள் கணவன் (முரளி). அடுத்தவன் சுதந்திர போராட்ட வீரன். சத்தியாகிரகி. கடைக்குட்டி, பதிமூன்று வயதான மல்லிகா.

இப்படம், ஒரு கள்ளுக்கடையில் அண்ணாச்சி குடித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்கும். தான் தூக்கிலிட்ட ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தும் தூக்கிலிட்ட வருத்தத்தை குடித்துவிட்டு புலம்புவார்.

கதையின் ஓர் முக்கிய அம்சம் சமஸ்தானத்தில் நடக்கும் ஓர் பழக்கம். தூக்கிலிடுவதற்கான கயிறை சிறையில் கைதிகள் தயாரிப்பர். அக்கயிற்றுக்கான நோக்கம் நிறைவேறியவுடன், அண்ணாச்சி அதை தன் வீட்டின் பூசை அறையில் வைப்பார். அக்கயிற்றை பஸ்பம் செய்து நோய் கண்டவர்களுக்கு வீபூதியாக கொடுப்பார். அதனால் நோய் தீர்ந்துவிடும் என்று நம்பி பலர் அவரிடம் வருவார்கள். (ஒருகட்டத்தில், நீண்ட நாட்களுக்கு தூக்கில் யாரையும் போடாததால், அண்ணாச்சியின் பவர் குறைந்து விட்டது என்று ஊர்மக்கள் பேசுவர்:-)).

தூக்கிலிடும் பணியை மேற்கொள்ளும் அவருக்கு சொல்லொண்ணா சோகம். தனக்கு தெரியாத ஒருவன் எப்படி தன் எதிரியாக முடியும்?. அவனைக் கொல்கின்றோமே என்ற எண்ணம் அவர் முகத்தில் எப்பொழுதும் தெரியும். தனக்கு உடம்பு சரியில்லை என்றெல்லாம் சொல்வார். ஆனாலும் அவரை அழைத்து சென்றுவிடுவர். தீவிர காளி பக்தர். தன் குற்ற உணர்வை குறைக்க, தன் மீது காளி வந்து இக்காரியம் செய்கின்றாள் என நினைத்து கொள்வார்.

-தொடரும்

Thursday, June 17, 2004

வன்முறை

இந்த பதிவிற்கு திரு. JR அவர்களின் கவிதைதான் காரணம்( அவர் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இட்டது ).
எனது உள்ளில் இருக்கும் மூர்க்கம் சார்ந்த வன்முறையை வெளிக்கொணர அவர் தூண்டுகோலாகிவிட்டார்.

நான் சிறுவயதில் இருந்து செய்த, எனக்கு நினைவில் இருக்கும், வன்முறை என நான் கருதிய செயல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

UKG படிக்கும் சமயம் என் அம்மாவிடம் அடி வாங்கிய போது நடந்தது....
நான் அழுதபடி எங்கள் வீட்டில் இருந்த பலகையில் (சின்ன பலகை) உட்கார்ந்து கொண்டிருந்தேன். செய்த தவறை நான் உணர வேண்டும் என்பதற்காக சினஞ் சொற்கள் கூறிக் கொண்டிருந்தார் என் அம்மா. அது என் கோபத்தை வலுப்படுத்தியது. அவரை எதிர்க்க நான் அப்பொழுது கூறியது," போடி...".

இரண்டாவது வகுப்பு படிக்கும் போது என் நண்பன் முருகானந்தத்திடம் சண்டை இட்டேன். அப்பொழுது எழுந்த வன்சீறலில், என் கைகளின் நகங்களை வைத்து அவன் தொடையை கிள்ளி விட்டேன், இரத்தம் கசியும் அளவிற்க்கு. அவன் தனது போலீஸ் அண்ணனண அழைத்து வருதாக மிரட்டி, என்னை இரு தினங்கள் மிரள வைத்தான்.

எனது தங்கையை நான் கடித்து விட்டதால் பல் பதிந்து இரத்தம் வந்து, அந்த வடு இன்றும் இருக்கின்றது. அவள் கைகளில் மட்டும் அல்ல, எனது நெஞ்சிலும்.

ஐந்தாவது படிக்கும் போது பள்ளிவிட்டு செல்லும்போது ஓர் சண்டையை வைத்து, சக்திவேலும் நானும் மோதினோம். திட்டமிட்ட ஒரு ஒற்றைகொற்றை சண்டை.

தொட்டு விளையாட்டின் போது, எனது தங்கை என்னை முந்திய தருணத்தில் அவளது பொட்டு சிதறி விழ, அதை வன்மத்துடன் எடுத்து பிய்த்து போட்டேன். பாவம் அவள் தப்பினாள்.

ஏழாவது படிக்கும்போது, துடுக்கான முதல் வீட்டுப் பையனின் பட்ட பெயரை அவனது வீட்டின் முன் எழுதி அவனை தாழ செய்தேன்.

என்னை விட வயதில் மூத்த என் ஒன்றுவிட்ட அண்ணனை, குரூரமாக வார்த்தைகளால் தாக்கியது.

இன்னும் பலப்பல உள்ளன....

என் செய்வது, இதை அறிய முயலும் போதும் வேறொரு தவறை செய்து விடுகின்றேன்.

குற்ற உணர்வின் காரணமாக இப்பதிவு எழுத்ப்படவில்லை என்பதையும் வரிகளுக்கு இடையே படியுங்கள்.

Thursday, June 03, 2004

பௌர்ணமி !!

(சூழலுக்கும் எனக்கும் ஒரு மௌனமான உரையாடல்)

சூழல்: ஒரு மெல்லிசான மேகப் படலத்துக்கு பின்னால பளீர்னு நிலா ஒளி வீசிட்டு இருக்கு.
அத சுத்தி ஒரு பளீர் சாம்பல் நிறத்தில இருந்து துவங்கி விளிம்புல கரும் சாம்பல் நிறம் கொண்ட வானம் பரந்து இருக்கு.

நான்: என்ன ஒரு அற்புதம். நிலவொளி பாயுது, வெளியில் மட்டுமல்ல என்னுளும். என்னை அப்படியே இழுத்து மயக்குது. இந்த இனிமை சொர்க்கம்.

சூழல்: நிலா கிழக்கில எழுந்து மேலெ போய்ட்டு இருக்கு. மேற்கு திசைல இருந்து குளிர் காத்து அடிக்குது. சுத்தி இருக்கிற எல்லா இடத்துலேயும் அதோட வெளிச்சம்.

நான்: வெண்ணிலா தக்க தருணத்தில் தனது அழகை முழுமையா காட்ட தயங்குவது இல்லை. தனது முக வடுக்களை கூட முழுதாய்தான் காண்பிக்கின்றது. அப்பொழுது கூட அதன் ஒளி குறைவதில்லை. சரியாக சொன்னால் அப்பொழுதுதான் அது மிக அழகாகவும், பூரிப்பாகவும் உள்ளது.

சூழல்: நகரத்தின் ஒளியும் அங்கே, இங்கே தென்படுது. சோடியம் ஒளி விளக்குனால ஒரு செம்மஞ்சள் ஒளி தூரத்துல இருக்கு. மரங்கள் ரொம்ப கருப்பா இருக்கு.

நான்: "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே...

சூழல்: இந்த மாதிரிதான் நேத்தும் நான் இருந்தேன். மேகம் கோட்டையெல்லாம் கூட கட்டி இருந்தது. ஆனா இன்னிக்கு ரொம்பச் சின்ன ஒரு கோட்டை நிலாவ சுத்தி.

நான்: நிலவை சுற்றி அந்த வட்டமான கசிந்து இருக்கின்ற ஒளி போதி மரத்தையும் புத்தரையும் மனக்கண்ணில் கொண்டு வருகின்றது. இந்த எல்லையற்ற பெருவெளியில் தொலைந்து போகவேண்டும் என் அடையாளங்கள். நானும். காலத்தில் கரைந்து காற்றிலே மிதந்து செல்லும் ஓர் படிமமாகவாவது நான் உணர வேண்டும்.

சூழல்: அந்த வட்டம் சில நிறங்கள காட்டுது...

நான்: வர்ண ஜாலங்கள்....இத துரத்திட்டு போற செயல்.. அந்த ஆக்க சக்தி நான் வேண்டி நிற்கின்றேன். என் எல்லைகள் எனக்கு அரண்கள். உடைக்க முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தத்தளிகின்றேன்

சூழல்: நிலா இன்னும் கொஞ்சம் மேலே போய்கிட்டிருக்கு. வெளிச்சம் எல்லா இடத்திலேயும் இருக்கு. இப்பவும் மேற்குல இருந்து குளிர் காத்து வீசுது. சின்னதா ஒரு கோட்டை இப்பவும் இருக்கு சில நிறங்களோட.




Tuesday, June 01, 2004

ஒரு சிறுகதை..

இந்த கதை தினமனி கதிரில் வெளியாகியுள்ளது. கதையின் கரு ஒரு ஆழமான விஷயத்தை எடுத்துரைகின்றது. நம்பிக்கை ஊட்டும் விதத்திலும் அமைந்துள்ளது. படித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அன்புடன்
பாரி

Sunday, May 30, 2004

குடி நீர் திட்டம்!!

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை நடுவண் அரசு செயல் படுத்த போவதாகவும், அது முதலில் தமிழ் நாட்டில் துவக்கப்படும் என்ற செய்தி விகடன் தளத்தில் வந்துள்ளது.
மற்ற விவரங்கள் அறிந்தவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Wednesday, May 12, 2004

தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

As I could not find a place which hosts 38 MB file, this post remains incomplete. I regret it.
(This post is corrected and republished with above info on 20May04 at 2:45 AM IST)



தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஹோஸூரில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவை தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்தியது.அவ்விழாவில் ஒரு பட்டிமன்றமும், திரு. புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி அவர்களின் பாட்டுக் கச்சேரியும் நடந்தது.
நண்பர் திரு. ராஜா அவர்களின் அன்பான அழைப்பினால் இந்நிகழ்ச்சியை நாங்கள் (தங்கமணி,யென்ஸ்,பாலாஜி) கண்டுகளிக்கச் சென்றோம். இந்த விழியத்தை நம் அனைவருக்கும் பதிவு செய்து வழங்கியது திரு. யென்ஸ். அவர் ஜெர்மனியை சேர்ந்தவர். இங்கு பின்முனைவராக () பணியாற்ற வந்துள்ளார். அவருக்கு இசையில் ஈடுபாடு அதிகம். அன்றைய நிகழ்ச்சியை அவர் வெகுவாக ரசித்தார். இதை இங்கு இட ஆலோசனைகள் வழங்கிய நண்பர் ரமணீதரன், சத்தியராஜ்குமார்,சுந்தர் ஆகியோருக்கு நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் தேவையான ஜாவா ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுத்தமைக்கு அவருக்கு உங்கள் சார்பில் ஒரு பெரிய "ஓ".


அன்புடன்
பாரி

Tuesday, May 11, 2004

பயணம்

முகமறியா பலர் அமைத்த பாதை.

ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.

புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....

இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.

சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...

கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.

சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.

வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.



அன்புடன்
-பாரி

Monday, May 10, 2004

நண்பர் சித்ரன்

இன்று நண்பர் சித்ரனின் வலைப்பக்கத்தை காண நேர்ந்தது. மரத்தடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதற் பரிசை வென்றவர். கல்கியில் பல நல்ல கதைகள் உள்ளார். அவரது வரவு நம் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Sunday, May 09, 2004

uthavi! uthavi!!

ஒரு மூவி க்ளிப்பிங்க் இருக்கு!! அதை எப்படி இடுவது என்பதை யாரேனும் கூற இயலுமா??

இன்னொன்னு....




இந்த புலி பதிவு முடிச்சுட்டு ரூம்முக்கு போனா, நண்பன் பாபு, "மால்குடிக்கு ஒரு புலி"(ஆங்கிலம்) ங்கிற புத்தகம் வைத்திருந்தான். ஒரே புலிகள் மயமா இருக்கேன்னு நினைச்சேன். அப்போ "இந்த ஒரு படம் மட்டும் சரிப்படாது. இன்னொன்னு போடுன்னு" புலி சொல்றாப்ல இருந்துச்சா. இன்னொரு படமும் புகைப்படமும் போட்டாச்சு.

பாலாஜி-பாரி

Saturday, May 08, 2004

புலி பாருங்கோ! புலி பாருங்கோ!!


புலி பாருங்கோ!! புலி பாருங்கோ!!!
பெங்களூரு புலி பாருங்கோ!!!!
'புலி' ந்னு சொன்னா பயப்படாதீங்கோ!!
தேசியம் சம்பந்தப் பட்டதுங்கோ!!!
அதாவது இந்திய தேசிய விலங்குங்கோவ் :) !!!
(நாங்கள் வன உலா சென்ற போது, இந்த புலியை நண்பர் 'யென்ஸ்' படம் பிடித்தார்!!)

"என் ஜாய் மாடி!!"
-பாரி

Tuesday, May 04, 2004

துருவலாய் மழை பொழியும் ஓர் காலை நேரத்தில்.....

முன்னிரவில் ஓய்வின்றி பொழிந்த மழை
மந்தமான வெளிச்சத்தை
பாரிலே பரப்பிவிட்டு
தன் ஓய்வை அறிவிக்க முயல்கிறது!!
நீர்க்குச்சிகள் துருவலாய் மாறி
தான் உதிர்த்த பல வண்ண மலர்களின் இதழ்களுக்கு
இதமாக இதழ் கொடுக்கின்றது!!
மந்தகாசம் மனதை நிறைத்த காலை
சிறு சோம்பலுடன் அலுவலகம் அடைந்து
இருக்கையின் பின்னிருக்கும்
ஜன்னலை திறந்தேன்.
மழைத் துருவலில் சிலிர்த்து
கம்பிகள் ஊடே அறையில் நுழைந்து சிலிர்க்கச் செய்தது
நட்சத்திரங்கள் கொண்ட பெயர் தெரியா அச்சிகப்பு மலர்!!


அன்புடன்
பாரி

Thursday, April 29, 2004

மார்ச் வரிகள்....

அந்த மார்ச் மாத இறுதி நாட்கள், அழகான பல இயற்கை நிகழ்வுகளோடு, நிகழ்வுகளின் மணத்தை நினைவுகளாகவும் பொதித்து கொண்டிருந்தன.

பூக்கள் மட்டுமே நிறைந்த மரங்களுக்கு கீழே இருந்த தேநீர் மேசைக்கு மேல் சந்தோஷங்களாக விரவி கிடந்தன ஊதா நிற மலர்கள். மண்ணில் உதிர்த்த மரத்தின் மேல் அவை கொண்ட பிணக்கு, மேசைக்கு அருகில் உட்கார்ந்து தங்களை நோக்கிய அச்சிறுமியின் புன்னகை கண்டு பூரிப்பாக மாற்றம் கொண்டது. அந்த காட்சி எனக்கு உவகை அளித்தது.

மாலை நேரம். சூரியன் தன்னை ஒளித்துக் கொள்ள இரு மணிதியாலங்கள் இருந்தது. கோடையின் வெப்பம் சற்று தணிய ஆரம்பித்தது. சட்டென்று, விண்ணில் கொண்டல்கள் தோன்றின. எங்கிருந்தோ திசையில்லாமல் குளிர்ந்தக் காற்று வீசியது.

அன்றைய பணியின் நிறைவை நினைத்துக் கொண்டே இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே அந்த சாலையில் நடந்து செல்கின்றேன். சூழலின் குளிர்ச்சி உள்ளத்தை நனைக்கின்றது. என்னை போலவே களிப்புற்று மஞ்சள் பூக்கள் நிறைந்த மரங்கள் அங்கு இங்கும் அசைந்து பூ மாரிப் பொழிந்தன. காதலி தன் கையால் காதலன் முகத்தில் நீரை சிதறச் செய்யும் போது அவன் சிணுங்குவதைப் போல் சிணுங்கச் செய்தன என்னை அம்மலர்கள், என் முகத்தில் படும் போது.

இப்போது எங்கோ இடி முழக்கம். கோடையின் சிறப்பு அதன் மழை. முரணாக இருந்தாலும் அழகுணர்ச்சிக்கு அது அரண். சட்..சட்....பெரிய பெரிய முத்துக்களாய் ஆரம்ப மழைத்துளிகள். கற்பிக்கப்பட்ட மனம் மழையிலிருந்து ஒதுங்க எண்ண, புதிர் காணும் மனம் நீர்க் குச்சிக்கு கீழே நிற்க அழைப்பு வைத்தது. ஏற்றேன். மண் வாசனை என் நினைவுகளை, பல கோடை மழைகளோடு பொருத்திப் பார்க்கின்றது.

நான் அம்மழையில் நடக்க, வசந்தத்தை உலகுக்கு அறிவித்த அந்த மஞ்சள் மலர்கள் தற்காலிக சிற்றோடைகளில் என்னைக் கடந்து சென்றன, புன்சிரிப்புடனே!! இத்தருணத்தில் இயற்கை தன்னை குதூகலமாக வைத்துக்கொண்டதாகப் பட்டது எனக்கு.

மின்னல் கீற்றுக்கள் மேகங்களை பிளக்க, மேகங்கள் உரத்த குரலோடு மழையினை உகுக்க, நிலைமை தீவிரம் அடைந்தது. புள்ளினத்தின் கூடுகள் அதிர மரங்கள் பேயாட்டத்துடன் ஓலம் இடுகின்றது. சூழலில் சற்றே இருள் கவிகின்றது. மரங்களிலிருந்து, சுள்ளிகள் கிளைகளின் மோதல்களில் பாதையில் வீழ்கின்றன. மேலும் பல அடிகள் நடந்தேன். இதற்குள் ஓடையில் நீர் பிரவாகம் அதிகரிக்க புரண்டு ஓடும் பூக்கள் என்னைக் காப்பாற்று எனக் கை நீட்ட, முகத்தில் வேகத்துடன் அறையும் மழை என் கண்களை மூடச் செய்தது. மூடனானேன் - செய்வதறியா.

தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் நீரை வடித்துவிட்டு பின்பு கண்களை திறக்கும் போது மழையின் வேகம் குறைந்ததாக தோன்றியது. மேகங்களின் அடர்த்தி ஒரு சில இடங்களில் குறைந்து அதனுள் விரவிய கதிரவனின் ஒளி சிதறி, ஒரு புதிய ஒளியைத் தந்தது அச்சூழலுக்கு. இப்போது பாதை ஓரம் ஒதுங்கிய மலர்கள், மீண்டும் என்னுடன் நட்புறவாடியது. அதைக் கண்டு நான் வெட்டகமுற்றாலும், ஆசுவாசமானேன். மழை நின்றது.

பாதையை கடக்க, பாலம் ஏறி இறங்கினால் அங்கு மலரும் காலத்திற்கு முன்பே மலர்ந்துவிட்ட குல்மோகர் பூவின் இதழ்கள் சிவப்புத் தீயாய் சிதறி கிடந்தன. இயற்கை இப்போதும் தன்னை குதூகலமாகவே வைத்துக் கொண்டுள்ளது.

மழையில் நடப்போம். மலர்கள் அப்போதும் நமக்கு ஏதாவது சொல்லும்.
நன்றிகளுடன்
-பாரி



புதுமைப் பெண்கள் - 1 - கோமதி டீச்சர்

கி.பி.1950-களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
அந்த கல்வி பயிற்சியினூடே, ஹிந்தி கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அவர் ஹிந்தி ஆசிரியை ஆகின்றார். பழனியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நெய்க்காரப்பட்டி பள்ளியில் அவருக்கு பணி. அவரது கணவர், சிற்றுண்டிகள் செய்யும் வேலை செய்து வந்தார். அக்காலத்தில் குழந்தை பிறப்பு என்பது தாய்க்கும் சேய்க்கும் ஒரு வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகவே இருந்துள்ளது. இந்த போராட்டத்தில் அவருடைய சில வெற்றிகளாக இருப்பது, (எங்களது [மாணவர்களது] அன்பிற்கும் உரிய) இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும்தான். பிரசவித்த வேளையிலேயே இறந்து போன குழந்தைகள் அந்த இளம் ஆசிரியயை மிகவும் வாட்டியது. அவர் சில சமயம் கூறும் ஒரு சம்பவம்.
அவர் பள்ளிக்கு பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதையில்தான் சண்முகநதியும் இருக்கின்றது. அதன் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இடுகாடு அமைந்திருந்தது. அந்நதியை கடக்க உதவும் பாலத்தின் மேல் இருந்து பார்த்தால் அது நன்றாக கண்களுக்கு தெரியும். ஒரு சமயம் பிரசவம் ஆகி பின்னர் சில நாட்களில் பிறந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அக்குழந்தையின் ஈமக்கிரியையிலிருந்து நான்காம் நாள், அவர் பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. பள்ளிக்கு செல்லும் வழியில் பாலத்தை கடக்கும்போது ஏதோ ஒரு சிறு மண் மேட்டின் மீது அரைகுறையாக காய்ந்த மலர் மாலைகளை காண நேர்ந்தது. அப்போது, அங்கே புதைக்கப்பட்டு இருக்கும் அவரது குழந்தையின் நினைவு அவரை ஆட்கொண்டு, ஆறுதல் அளிக்க யாரும் இன்றி, தனியாக அங்கேயே உடைந்தார். கண்ணீர் ஆர்ப்பரிக்கும் வேளையில் துணை இல்லாத கொடுமையும், பிரிவின் சோகமும் அவரை கரைத்தது அப்போது. தன்நிலை மறந்து அவர் கரைந்த சம்பவம், ஒரு பெண் தாய்மை உணர்வை எவ்வளவு குரூரமாக எதிர் கொள்ள நேர்ந்தது என்பதை காட்டியது எனக்கு.
அவருக்கு அத்தகைய இழப்புகள் இருந்தாலும், அவரது மனம் தனது மூன்று குழந்தைகளின் நல்வாழ்விற்கும், தான் கற்றுக் கொடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கும் உழைக்க முனைந்தது. காலம் ஒரு ஓடை நீராக வழிந்தோடியது. இதனிடையே தனது ஆர்வத்தின் மூலமாக, ஹிந்தியில் பல நூல்களைப் பயின்றார். தக்ஷிண பாரத் கிந்தி ப்ரசார் சபாவின் பிரச்சாகராகவும் செயல்பட்டார். மாலை வேளைகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்க தனி வகுப்புகள் நடத்தினார். தாயைப் போல பிள்ளைகளும், ஹிந்தி கற்றனர் அன்னையிடமிருந்து. இதனிடையே அரசின் நிலைப்பாடுகளால் பள்ளியில் ஹிந்தி ஆசிரியை பணியை தொடர இயலாமல் போய்விட்டது. அச்சமயம் அவருக்கு உண்டான மன அழுத்தம், ஒரு வைராக்கியத்தையும் அவருள் உண்டாக்கியது.

1970களில் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஆங்கில வழி சிறுவர் பள்ளிகன் இருந்தன. ஆனால் அத்தகைய ஒரு பள்ளி பழனியில் இல்லாததை அவர் உணர்ந்தார். அத்தகைய பள்ளியை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் வலுப்பெற்றது. பள்ளிக்கு தேவையான இடத்திற்க்காக தனது வீட்டை சற்று மாற்றி அமைத்தார். பின்பு அவர் தனது அருமைத்தம்பி திரு. நாகராஜன் அவர்களின் உதவியோடு சிறுவர்கள் பள்ளியை ஆரம்பித்தார். வெறும் பள்ளி இறுதி வரை மட்டும் பயின்று விட்டு, கட்டுப்பட்டியான சமுதாயத்தில் ஓர் ஆசிரியப் பணி ஏற்று, பின்னர் அதுவும் பறிக்கப்பட்ட நிலையில், சற்றும் துவண்டு விடாமல், முன்னேற்ற பாதையில் சிந்தித்து வீறு நடைப் போட்டார். "பால முருகன் ஆங்கிலப் பள்ளி" ஆரம்பம் ஆனது. இதுதான் பழனி நகரின் முதல் ஆங்கில வழிப் பள்ளி. முதல் வருடம் மக்களுக்கு தயக்கங்கள் இருந்தாலும், மறு வருடம் முதல்நிறைய மாணக்கர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இவரது உழைப்பிற்கு நல்ல பலன் இருந்தது. இவரை தமிழ்நாடு சிறுவர் பள்ளிகள் நடத்துவோர் சங்கத்தில் முக்கிய உறுப்பினர் ஆக்குகின்றனர். இவர் கூச்சமும் பெருமிதமும் ஒரு சேர அந்த உறுப்பினர் நிலையை ஏற்கிறார்.( சில வருடங்களுக்கு முன்பாக அவரது சேவையை பாராட்டி அவருக்கு சிறந்த நிர்வாகிக்கான பரிசும், கௌரவமும் அச்சங்கத்திடமிருந்து கிடைத்தது). தனது கூரிய அறிவுத்திறன் மூலமும், தணியாத ஆர்வம் காரணமாகவும், அப்பள்ளி இன்று வரை வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

அப்பள்ளியை பற்றி சில வரிகள்: அப்பள்ளியில் நன்கொடை கிடையாது. கீழ் நடுத்தர மக்களும் பயில வாய்ப்பு தரும் வகையில் கட்டண அமைப்பு. நல்ல அன்பான, தகுதி வாய்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியைகள் நியமிப்பு. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பள்ளியை நடத்தி வந்தாலும், அவரின் இல்லம் ஓர் நடுத்தர வர்க்கத்தாரின் வீடு போல்தான் இருக்கும். அப்பள்ளியை நடத்த அவருக்கு பல சிக்கல்கள். ஆனால் அவரது நம்பிக்கையும் நேர்மையும் மட்டுமே அனைத்திலிருந்தும் அவரை காத்துள்ளது. இப்பொழுது அவரது பள்ளி ஓர் புதிய இடத்தில் அமைந்துள்ளது. அதை நிர்வகிக்க அவரின் மகனும், மருமகளும் அவருக்கு உதவுகின்றனர்.

இதை தவிர மாலை வகுப்புகளில் ஹிந்தி கற்கும் மாணவ மாணவியரின் கூட்டம். நான் அவரிடம்தான் ஹிந்தி கற்றேன். இது எனக்கு பின்னாட்களில் நல்ல பயன் தருகிறது. TIFR பயிற்சி பள்ளியின் போதும், ஆய்வுப் பணி நிமித்தமாக வட இந்தியா செல்லும் போதும், நான் கற்ற ஹிந்தி எனக்கு பல நட்புகளை பெற்றுத் தந்தது. அவரிடம் ஹிந்தி கற்ற பலர் இன்று ஹிந்தி ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

அவரிடம் எனக்கு பிடித்த பல விஷயங்களில் சில: 1. எப்போதும் சிரித்த முகமாக இருப்பது. 2. மற்றவரிடம் பேசும் போது எதிராளி சொல்வதில் முழு கவனம் செலுத்துவது. 3. நம்பிக்கை உண்டாக்குவது. எனக்கு அவர் வாழ்வில் ஓர் முன்மாதிரி. அவருக்கு என் நன்றிகள்.

-அன்புடன்
பாலாஜி-பாரி
(நான் நீண்ட இடைவெளி விட்டதற்கு மன்னிக்கவும்: தொடர்ச்சிக்காக அனைத்தையும் தொகுத்து இட்டுள்ளேன்)

Friday, April 02, 2004

கோடை மழை

நேற்று கனத்த கோடை மழை. அத்தருணத்தில் சாலையின் இரு புறங்களில் இருக்கும் செம்மண்ணுடன் எனது இதயமும் கரைந்தது. அப்போது தோன்றிய மிகச்சிறிய தற்காலிக ஓடைகளில், வசந்த காலத்தை அறிவித்த மலர்கள் பயணித்து கொண்டிருந்தன, சில இலைகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு. இக்காட்சியை இயற்கை அவ்வப்போது படம் பிடித்து கொண்டிருந்தது வெட்டும் மின்னலின் துணை கொண்டு. மழையின் நீண்ட கால்கள் வீசிய திசை சார்பற்ற குளிர்ந்த காற்றுக்கு ஏற்றவாறு அழகிய நடனம் புரிந்தது.


அன்புடன்
பாரி

Friday, March 26, 2004

ஓர் நட்சத்திரம் பிறந்தது

ஆயிரத்து ஐநூறு ஒளி ஆண்டுகளுக்கப்பால் ஒர் நட்சத்திரம் பிறந்துள்ளது. இதை ஜே மெக்நெய்ல் என்ற ஓர் அமெச்சூர் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். அவர் தனது எளிமையான 3 இன்ச் தொலை நோக்கியை கொண்டு, தனது வீட்டின் கொல்லையில் இருந்து ஆகாயத்தை அலசியுள்ளார். அப்போது வேட்டைக்காரன் என்ற நட்சத்திர கூட்டத்தில் புதிய ஒளி தெரிவதை பதிவு செய்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக, ஓர் ஒளி தெரிவதை சரியாக அடையாளம் கண்டு இணையத்தின் மூலம் புரஃபோஷனல்ஸை தொடர்பு கொண்டு இச்செய்தியை தெரிவித்துள்ளார்.

அதன் பின் உலகின் தலைசிறந்த வானவியல் மையங்கள் அவரது கண்டுபிடிப்பை பாராட்டி உள்ளன. அந்த நட்சத்திரத்திற்கு, மெக்னேய்ல் நெபுலா என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு சுட்டவும்

Tuesday, March 23, 2004

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்: கோமதி டீச்சர் - 1

கி.பி.1940-50 களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
(-தொடரும்)

Monday, March 08, 2004

பெண்கள் தின வாழ்த்துக்கள்!!!

இன்று பெண்கள் தினம். இந்த தினத்தை ஒட்டி என்னைக் கவர்ந்த பெண்கள் என்ற தொடர் எழுத முடிவு செய்துள்ளேன். ஆணாதிக்க சமுதாயத்திலும் திறம் பட சாதனைகள் பல செய்த நான் சந்தித்த பெண்மணிகள் பற்றி இங்கே எழுத உள்ளேன். முதலில் நமக்கு அறிமுகமாவது, எனக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்த கோமதி டீச்சர் அவர்கள்.

இத்தொடர் சற்று கால இடைவெளியுடன் வரும்...... பணி அழுத்தம் காரணம்.

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!!

அன்புடன்
-பாரி

Wednesday, March 03, 2004

தமிழ் பற்றி UNESCO அறிக்கை

திரு சுரேஷ் அவர்கள் மரத்தடியில் இட்டுள்ள அறிக்கையின் சுட்டி.
யுனஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்த திரு. மணவை முஸ்தாபா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி சுட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் பற்றி UN என்ன கூறி உள்ளது என்ற விபரம் உள்ளது.

Saturday, February 28, 2004

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்....-2)

அவர் ஒரு நிதானத்துடன் ஒரு மரத்தை அண்ணாந்து பார்ப்பார். பின்பு ஒரு கையை அதன் மேல் வைத்து, அழகான லாவகத்துடன் தனது கால்களில் நாரால் ஆன பெல்ட்டை மாட்டி கொள்வார். அதன் பின் அவர் வலது கையை மரத்தை அணைத்தவாறு பிடித்துக் கொண்டு, இடது கையை மரத்தில் அழுத்தி, நாரால் ஆன பிணைப்பின் உதவியோடு கால்களால் மரத்தை கவ்விக் கொண்டு ஏறுவார். அது ஓர் பெரிய நேர்த்தியான செயல். அவர் அதை அனாயசமாக செய்வார். மர உச்சியை அடைந்தவுடன், கைகளால் காய்ந்த மட்டைகளை பிய்த்து போடுவார். வீட்டில் இருக்கும் தட்டி வழியாக அண்ணாந்து பார்க்க அவ்வளவு பரபரப்பாக இருக்கும். அதன் பின், தேங்காய வெட்டி மேலே இருந்து போடுவார். அப்ப கீழே நிற்கும் அவரது மகனோ அல்லது மனைவியோ அந்த வழி செல்பவர்களை உஷார் செய்வர். இவ்வாறு கவனித்து செய்யும் பொழுது கூட எங்களது காம்பௌண்ட் அருகில் உள்ள (ஜெயந்தி அக்கா) வீட்டில் தேங்காய் விழுந்து அவரது தாயாரின் மலையாளம் கலந்த தமிழ் வசை சொற்கள் அசரீரியாக வரும். இதனிடையே, கொஞ்சம் பச்சை மட்டைகளையும் மேலேயிருந்து தள்ளுவார். இவ்வாறு அனைத்து மரங்களையும் ஒரு ரவுண்ட் வந்த பிறகு பறித்த தேங்காய்களை மூட்டையிலிட்டு எடுத்து செல்வார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில், மேலேயிருந்து சிதறி இருக்கும் தென்னங் குரும்பைகள், தென்னம் மட்டைகள் ஆகியன வாண்டுகளின் உற்சாகத்தை கூட்டும். தென்னங்குரும்பைகளை நாங்கள் குரும்பைக்காய் என்போம். அது பல சமயங்களில் எங்களுக்கு Ball -ஆக மாறி கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் குரும்பைக்காயை கொண்டு கிலுகிலுப்பை செய்யலாம். குரும்பக்காயின் தொப்பி பகுதியை நீக்கி மென்மையான முன் பகுதியை தரையில் தேய்த்து தட்டை ஆக்கி கொள்ள வேண்டும். ஈர்க்குச்சி ஒன்று எடுத்து அதை வளைத்து தட்டை பகுதியில் U வடிவத்தில் அமைத்து செருகி கொள்ள வேண்டும். மேலும் ஓர்க் குச்சியை மையத்தில் செருகிக் கொள்ள வேண்டும். இப்போது அது நாமம் மாதிரி தோன்றும். அதற்கு செங்குத்தாக இரு குச்சிகளை செருகி சுழற்றும் போது, நடுவில் இருக்கும் குச்சி முன்னும் பின்னும் அசைந்து கடக், கடக் என்று சீராய் ஒலி எழுப்பும். கிலுகிலுப்பை தயார். தென்னம் மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி, சிறிது செதுக்கி Bat-ஆக மாற்றும் ஓர் கலையும் நாங்கள் கற்றோம். மட்டையின் மேல் இருவர் உட்கார மேலும் இருவர் அதை இழுத்து செல்லும் வண்டி விளையாட்டும் மிக்க களிப்பை தரும். பச்சை தென்னம் மட்டைகளிலிருந்து ஓலைகளை பறித்து அதில் குச்சிக்கு அருகில் நுனியில் இருந்து அடி வரை கீறி விட்டு கடைசியில் தொங்குமாறு செய்து, அதை பின்னி ஒரு பாம்பு போல் செய்வோம். தென்னை ஓலைகளில் இருந்து ஊது குழல் செய்வதும் எளிது. ராக்கெட் மாதிரி அந்த ஓலைகளை பறக்க விடவும் செய்யலாம். எங்களுக்குள் இருக்கும் குரங்கு விழித்து எழுந்து விட்டால், தென்னை மரத்தில் ஒரு கால் பங்கு உயரம் ஏறுவோம்.

இவ்வாறு தென்னை மரத்தின் பயன்கள் பல. (தென்னை மரத்தின் பயன்கள் என்ன? என்ற பரிட்சை கேள்விக்கு நியாயமான பதில் இதுதான் என்பது அடியேனின் அக்கால எண்ணம்).

காம்பௌண்டை பிரித்து விற்க வேண்டிய ஓர் சூழ்நிலையில், அம்மரத்துக்காரர் வந்தார். அவருடன் மேலும் சில நபர்கள் வந்தனர். அவர் ஒரு சில மரங்களை கைகாட்டி அவர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் பார்த்தது அம்மரங்களின் வீழ்ச்சியை. நான்கு மரங்களும் ஓரிரு நாட்களில் சாய்ந்தன. அப்போது நான் ஒரு துயரமும் இன்றி அதை வேடிக்கை பார்க்க அசாத்திய தைரியம் அடைந்தவனானேன். அந்த தென்னை மரத்துக்காரரும் அவ்வாறே எண்ணியிருக்க கூடும்.
(தென்னை மரத்துக்காரர் - முற்றும்)

- பாரி

Thursday, February 26, 2004

என் வேதனைக் கால குறிப்புகள் - 2

முகில்கள் தோற்குமோ
கவின் மிகு பிம்பங்களில்....

மலைகள் தோற்குமோ
அழுத்தமான இருப்புகளில்...

மலர்கள் தோற்குமோ
பரவச ரசனைகளில்....

ஒளிகற்றை தோற்குமோ
தேடல்களின் ஆழத்தில்...

உணர்வுகள் தோற்குமோ
உயிர் துடிக்கும் பிரிவின் அக்கணத்தில்...

(காற்றிலே கலந்து இருந்தது
பெண்டத்தால் வாசனை குளிர்ச்சியாய்)


- பாரி

Thursday, February 19, 2004

அறிவுக் களஞ்சியம் www.thamizham.net

இன்று ஒரு இணைய தளத்தை நண்பர் தங்கமணி சுட்டிக்காட்ட நான் பார்த்தேன். அதில் ஓர் ஆசிரியரின் சீரிய பணியை கண்டு வியந்தேன். இவர் தற்கால தமிழ் இலக்கியத்தின் ஓர் கருவூலம். இவரை பற்றி நம் வலைபதிவர்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. ஆகையால் இந்த உடனடி செய்தி.
திரு. நடேசன் அவர்கள், பொள்ளாச்சியில் இருந்து கொண்டு இந்த அருமையான தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது நூலகத்தில் இருக்கும் சிற்றிதழ்-களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மேலும் போற்றத் தக்கது. அவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஓர் தீவிரம். அனைவரையும் நாம் போற்றுவோமாக.
இவர்களின் பணி ஓர் கூட்டு முயற்சியாய் நடை பெறுகின்றது. பல அரிய புத்தகங்களும், தமிழ் சார்ந்த பல தகவல்களும் சுவாரசியம் கொள்ள செய்கின்றன. இவர்கள் இதை மின் ஊடகத்தில் மாற்றவும் முயற்சி செய்கின்றனர். இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அன்புடன்
-பாரி

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்துக்காரர்)

கடந்த பல வாரங்களாக மற்ற விஷயங்களில் சென்ற கவனம், இன்று தான் இந்த தொடருக்கு திரும்பியது.

எங்க காம்பௌண்ட்ல பதினோரு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையிலோ என்னவோ, பதினொரு தென்னை மரங்கள் இருந்தன. ஒரு அடர்த்தியில்லா தென்னந்தோப்பு. இதை தவிர ஒரு பெரிய அடுக்கு - செம்பருத்தி செடி (புதர்?), அழகிய மஞ்சள் பூக்கள் தரும் மந்தாரைச் செடி, குட்டியா ஒரு செம்பருத்தி செடி, கிணற்றடி அருகிலே வசந்தி அக்காவின் முயற்சியில் தோன்றிய சில வாழை மரங்கள், என்று கலகலப்பாக இருக்கும். நான் மூன்றாவது படிக்கும் போது, எனது பெரியம்மாவின் கடைசி மகன் (என்னையும் சேர்த்துக் கொண்டு), சோமு என்ற நண்பரின் வீட்டில் இருந்து, ஜீன்யா செடியை கொண்டு வந்தான். இந்த பூக்கள் பல வண்ணங்களில் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நான் இதுவரை பல பூக்களை (பெயர் தெரியாவிட்டாலும்) கண்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் ஜீன்யா பூ எனக்கு சொல்ல முடியாத அளவு பெரு மகிழ்ச்சி தரும். இப்போது பார்த்தாலும்.... (JNC-விடுதிக்கு அருகில் இதை நான் காலையில் தினமும் பார்க்கின்றேன்). இதை தவிர, சேனைக் கிழங்கு எனது தந்தையின் முயற்சியால் அவ்வப்போது இடப்படும். (சேனைக் கிழங்கு செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்: வெளிர் பச்சையில் ...)

சரி. விசயத்திற்கு வருவோம். இந்த தென்னை மரங்களில், இரண்டு "செவ்வெளநீ" தரும். இந்த இரண்டில் ஒன்று பாலா மாமியின் வீட்டினுள் வளர்ந்து கூரை வழியாக வெளி வரும். கூரை சீமை ஓடால் வேயப்பட்டிருக்கும். அந்த மரத்தில் தென்னம் மட்டைகள் காய்ந்து போனால், பாலா மாமிக்கு டென்ஷன் அதிகமாகிவிடும். "இப்படியே இருந்தாக்க, காத்தடிச்சு மட்டை விழுந்து ஓடுகள பொறுக்கணும். இந்த விஷயத்தை ராஜாமணி காதில போட்டுடணும்" என்பார். (ராஜாமணி என்பவர், எங்க house ownerin ரின் மூத்த புதல்வர்). இவரை தவிர மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் எப்போதாவது அகஸ்மத்தாக விழும் ஒரு தென்னம் மட்டை, ஒரு தேங்காய் இவைகள் வாண்டுகளுக்கு ஒரு களிப்பை உண்டாக்கும். விழும் தேங்காய்களை கைப்பற்ற ஒரு பெரிய கலாட்டாவே நடக்கும். இவ்வாறு நடக்கும் கலாட்டாவில் பெற்ற சில வெற்றிகள் எனக்கு, "தேங்காய்" என்ற ஓர் சிறப்பு பட்டத்தை (!) எனது வீட்டாரிடம் பெற்று தந்தது.

பாலாமாமியின் வார்த்தைகள் சிறிது நாட்களில் வேலை செய்யும். நாரால் (என்ன நார்?) ஆன ஒரு V-பெல்-டை தோளில் எடுத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு அரிவாளை செருகி, திறந்த மேலுடம்புடன் அவர் வருவார். அதாங்க நம்ம தென்ன மரத்துக்காரர். எப்பயாவது விழும் தென்னை மட்டைக்கே குதியாட்டம் போடும் நாங்க, அவரக் கண்டதும் பயங்கர ஜாலி ஆயிடுவோம். ஆனா வழக்கம் போல பெரியவங்க பிரச்சனை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க! அவன் போனப்புறமா வந்து விளையாடலாம்".
(தென்னை மரத்துக்காரர் - தொடரும்)

Wednesday, February 18, 2004

கல்லுக்குள் ஈரம்

ஐந்து நாரைகள்....
புற்களின் மேல் குட்டி குட்டி
வெண் மேகங்களாய்.......
உள்ளங்கைகளின் செந்நிறத்தில்
அதன் அலகுகள் மின்ன....
ஒடிந்து விடுமோ அதன் கால்கள்
என அஞ்ச வைத்து
ஒய்யாரமாய் அது நகர்வதென்ன...
வட்ட விழி கிட்டே பார்த்து
வான் வழி அவை பறக்க,
சுட்டதென்னவோ அவந்தான்.
ஆனாலும் மகிழ்ச்சி அவனுள்
நம்மால் நான்கு தப்பியதே......

-பாரி

Friday, February 13, 2004

என் வேதனைக் கால குறிப்புகள்...

என் நண்பா!!
நமக்கு மிகுந்த துக்கம்
தரக்கூடிய
ஓர் செய்தியை அறிவிக்கிறேன்.
தெளிவோடும்,
முரட்டு தைரியத்தோடும்.

"நம்மால் இனி அன்றைய
+2 மாணாக்கர்களாய்
மாறவே இயலாது".


அறிவின் தெளிவை நோக்கி
உள்ளொளியுடன் எரியும் சக்தியுடன்
வானத்தின் கீழ் அனைத்தும்
புதிதாய் புத்துணர்ச்சியாய்
இருந்தகாலம் இனி
இறந்த காலம்....

புகுத்தப்பட்ட கல்வியால்,
அறிந்த மற்றவைகளால்,
இது இப்படித்தான் என
பாழாய்ப்போன பயனற்ற "அறிவு"
நமக்கு உறுத்தி....
புதிர் காணும் சக்தியென்னும்
ஆக்கையை தொலைவில் நிறுத்தி
நம்மை அண்டத்தின்
அணைப்பில் அண்டவிடாமல்......

அறிவே நீயும் அழிவுதான்.......

-பாரி

Saturday, February 07, 2004

பிளாட் ஃபாரம்

"அங்கனே பாரு புள்ள....
மெயின் ரோட்டுக்கு மத்தியில...
வரிசையா நட்ட மரம் அழகு தாம்லே?"
அப்பா சொல்ல
அதை பார்த்தாள் அச்சிறுமி.
"அட..இதா...ரோட்ல இறங்காத புள்ள..
பிளாட்ஃபாரம்லயே நட..."
"அதெனங்கையா பிளாட்ஃபாரம்?"
"நாம நடக்குதோம் இல்ல? அத்யான்"
"மக்கா... நடக்க என்னாமா
கட்டிருக்காக! பட்டணம்னா சும்மாவா?"
அடிச்ச மழையில் பிஞ்ச கூரை
ஒதுக்கியிருந்தது வேறு சிலரை
பிளாட்ஃபார பாலித்தீன் கூடாரத்தில்.
அதையும் கண்டாள் அச்சிறுமி!
அகலமான கண்கள் மேலும் அகல கேட்டாள்
"அய்யா! இவுகளை யாரு இங்கே நட்டது?"

-பாரி

Saturday, January 31, 2004

No Sound Horn

மைய நூலகத்தின் முன்னமைந்த சாலை
இரு மருங்கிலும் பறவைகளும் அடர்ந்த மரங்கள்
படித்த விஷயத்தை சுமந்தபடி சாலையில் நான்
கீ.ய்...கீச்..கீச்ச்....கீக்கீ..கீய்....கீச்....
ஒரே நேரத்தில் பறவைகளின் ஒலி
எண்ணத்தின் -inertia விலிருந்து என்னை மீட்டது
சற்றே நிமிர்ந்த என் கண்களில் பட்டது
No Sound Horn அறிவிப்பு பலகை

-பாரி

(பின் குறிப்பு: -inertia என்ற பதத்திற்கு தமிழ் வார்த்தை சொல்லி உதவுங்கள்)

நான், திரு மற்றும் ஓர் சிறுமி

" அங்கிள்! நீவு left Right!" அன்புக் கட்டளை ஒன்று. "அங்கிள் 'மார்ச் ஆன்' கேளி!" சிறிதும் தாமதிக்காமல் இன்னொரு உத்தரவு. அதன் பின் "...ட்விங்கிள்..ட்விங்கிள்..." என்று ஓர் ரைம். நான் அதை சொல்ல முயலும் போதே " a d f e g k s y....." என்று Random-ஆக எழுத்துக்களை மழலையிட்டாள்.

எப்படி துரித கதி ஓட்டம் செல்ல வேண்டும் என்று திரு எனக்கு டெமோ செய்து காட்டிக் கொண்டிருந்தார். நாங்கள் இருந்த இடம் ஓர் பரந்த மைதானம். அச்சமயம் எனக்கு முன் அந்த சிறுமி ஓடி வந்து நின்றாள். அவளது அலை போன்ற ஆர்வம் எனது கவனத்தை அவள் பால் ஈர்த்தது. அவளிடம் இருந்த மலர்ச்சியான சக்தி எங்களது பயிற்சியை நிறுத்த செய்து அவளது விளையாட்டில் பங்கேற்க செய்தது. ஓர் நிறைவுடன் நாங்கள் அவளது சொற்களுக்கு கட்டுபடத் தொடங்கினோம்.

அவளது மொழி non-linear ஆக இருந்தது. லா. சா. ரா-வின் எழுத்து உள்ளுக்குள் உண்டாக்கும் சுழற்சியை உண்டாக்கியது அவள் மொழி. பழகிய தளத்தின் ஒரு தரிசனம் அவரது எழுத்து. ஆனால் அச்சிறுமியோ அவளது எண்ண வடிவமைப்பிற்கு முழு குறியீடாக இருந்தாள். சாரு-வின் "Zero-degree"(முற்பகுதி) முற்றிலும் தளம் இழக்கச் செய்யும் தன்மை உடையது. ஆனால் அவளோ எனக்கு தெரியாத ஓர் தளத்தை அறிமுகம் செய்தாள்.

எனது "நான்" அவளது தளத்தை புரிந்து கொள்வது எளிது என்றே வலுவாக கூறி அழுத்தியது. அவளது "அஜ்ஜி" தொலைவில் சென்று அமர்ந்து விட அங்கு செல்வது இக்குழந்தையின் நோக்கமாக இருக்கும் என்று என் "நான்" கூற, "அஜ்ஜி-யாந்த்ர கோகன்ன பா", என்று கூறி, அஜ்ஜி-(அதாவது பாட்டி) இருந்த இடத்தை நோக்கி அழைத்தேன். வலது கையின் கட்டை விரலை தாடையின் கீழ் வைத்து என்னுடன் காய் விட்டது. அச்சிறுமி என்னை நிராகரித்தது. எப்பொழுதும் போல் எனது "நான்"-க்கு ஓர் குத்து விழுந்தது. அக்கணத்தில் என்னுள் நிறைந்து இருந்தது அச்சிறுமியின் இனிமையான நினைவு மட்டும். எதை அறிய நான் எங்கு செல்வேன்?.

-பாரி

Wednesday, January 21, 2004

சருகுகள்

யாரும் கவலை படாத, காற்றிலே மிதந்து செல்லும், உச்சி மரக்கிளையில் இருந்து உதிர்ந்த காய்ந்த சருகை போல் உணர்கிறேன்.
சுதந்திரம்....
புவியின் ஈர்ப்பு மட்டும் இல்லையேல், உடைத்தெறிந்து பறக்கும் உயிர் பறவை உடலை விட்டு.
நீரினுள் கலந்த உப்பாக பிரபஞ்ச கடலினில் கலக்க நினைக்கிறேன். கரையாத கல்லாய் புவியின் ஈர்ப்பினால் உள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றேன். தரை தட்டுவேனோ, அதை பிளப்பேனோ....
நிகழும் இந்த லீலைகள், நாளைய காவியத்தின், முன்னுரைகள்............

அன்புடன்
பாரி

Monday, January 19, 2004

பேர்ல என்ன இருக்கு ??

இப்படி யாராவது சொன்னா... தயவு செஞ்சு இதை படிங்க.....


பாலாஜி. இது வெறும் மூணெழுத்து வார்த்தை. இந்த வார்த்தை படற பாடு... படுத்தற பாடு.... இருக்கே..... சொல்லி மாளாது....ஆனால் சொல்லாமயும் இருக்க முடியல.......

B-ல ஆரம்பிக்குதா.... ஸ்கூல் அட்டெண்டென்ஸ்ல எப்படியும் மூணு நாலு பெயருக்குள்ள வந்து விடும். ஜன்னல் ஓரத்துல உக்காந்துட்டு சீனியர் மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை வகுப்பறையிலிருந்து (match ன்னா கேட்கவே வேணாம்!! உடல் மட்டும் வகுப்பறையில்...) வேடிக்கை பார்க்கும் போது, ரெண்டு அல்லது மூணு பாலாஜி-ல என் பெயர (S.Balaji) கூப்பிடறதுக்கு முன்னாடியோ அல்லது அப்புறமோ "ப்ரெசண்ட் மிஸ்"ன்னு சொல்லி, "என்ன எரும? வெளில என்ன ஆடுது?" ன்னு சரோஜினி மிஸ்-கிட்ட திட்டு வாங்கி இருக்கேன்.

SRIMHSS-ல் +2 படிக்கும் போது, ரெண்டு பாலாஜி. இன்னொரு பாலாஜி Computer science. நான் Biology. எங்களுக்கு இந்த வித்தியாசம் இருந்த போதும், பயாலஜி பாலாஜி-ன்னு கூப்பிட கஷ்ட்டப்பட்டுகிட்டு எங்களுக்கு புது அடை மொழி கொடுத்தாங்க. நான் பழனியில் இருந்து வந்ததால பழனி பாலாஜி -யாகவும், அவங்க அப்பா மிட்டாய் கடை வைச்சு இருந்ததால இன்னொரு பாலாஜி, மிட்டாய் பாலாஜி -யாகவும், ஆகிவிட்டோம். ( "நண்பா! மிட்டாய் பாலாஜி! அந்த கணக்கு டுயூசன் சம்பவம் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. இதை படித்த பின்பும் நீ தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்!!")

APAC -ல ஃபிசிக்ஸ் படிக்கும் போதும் ரெண்டு பாலாஜி. இங்கே ஒரு சின்ன ஆறுதல். இன்னொரு பாலாஜி பேரு பாலாஜி விஸ்வநாதன். இங்கே குழப்பம் கம்மின்னு நினைச்சேன். ஆனா, ஒரு தடவை எங்கிட்ட வந்து "ஆமா!! ஏண்டா இப்படி லொள்ளு பண்ற? physics lab -la யாரும் இல்லாத போது physics பூதம் டான்ஸ் ஆடுதுன்னு சொன்னியாம்"ன்னாங்க பசங்க. அப்போதான் தெரிஞ்சுது " B. vishwanathan" மிகுந்த நகைச்சுவை உடையவர் என்று.

நல்ல வேளை... AC-ல 94php-ல ஒரே ஒரு பாலாஜிதான் :))

சரி ஐயா! IISc யில எங்க dept-ல ஒரு பாலாஜிதான்னு சந்தோஷப்படும் போது, registrar office-ல இருந்து phone வருது. என்ன விஷயம்ன்னு கேட்டா, "உங்கள gymkhaana treasurer-ஆ select பண்ணி இருக்காங்க" அப்படீங்கறாங்க. என்னாடா இது புதுக் குழப்பம்ன்னு "உங்களுக்கு யார் வேணும்?"-னு பணிவா கேட்டேன் (வேற என்ன பண்ண??). " நீங்க student் தானே?"ன்னாங்க. "ஆமாம்!!" னேன். "உங்க பேரு "S.Balaji" தானே?". இதுக்கும் "ஆமாம்" னேன். "அப்ப உங்களத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க"ன்னாங்க. உடனே நான் "அட நான் எலெக்ஷன்னுக்கு நாமினேட் பண்ணவே இல்லீங்க" னு சொன்னேன். "இல்லையே Instrumentation னு போட்டு இருக்கே" அப்படீன்னு சொல்றாங்க. நான் "சே!! இங்கேயும் இப்படியான்னு" நினைச்சுகிட்டு, "சார்! வேற dept-ல என்கொயர் பண்ணுங்க. அப்புறமா நான் உங்க office-க்கு வரேன்னு சொல்லி phone-ஐ வைத்தேன். பிற்பாடு Metullargy-ல ஒரு "S.Balaji", இருந்தது, அவரும் நானும் ஒரே பிளாக்கில் (PD-Block) இருந்தபடியால் நண்பர்களானது ஒரு பின் கதை.
இங்கேயும் குழப்பம் இல்லாமல் இல்லை. ஏன்னா, அவரோட ரூம் நம்பர் "137". என்னோட ரூம் நம்பர் "37". எல்லாரும் செக்யூரிட்டி கிட்ட தபால் ஏதேனும் வந்தான்னு விசாரிச்சுகிட்டா, நாங்க மட்டும் பரஸ்பரமா-வும் letter வந்ததுருக்கான்னு கேட்டுப்போம். :)

இங்கே வட மாநில பசங்களுக்கு "ஜி" ங்கறது மரியாதை விகுதியாம். அதனால என்னை "பாலா" ன்னு-தான் கூப்பிடுவாங்க.

இப்போ நெட்-ல எழுத ஆரம்பிச்ச பின்னரும், இதே கதை தொடருது. சரி ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்வோம்னு "பாரி" னு வைச்சுக்கிட்டேன். பார்த்தா, blogspot-ல பரிமேள்ஸ் "பரி"ன்னு ரொம்ப நாளா எழுதறார். திண்ணையில் பாரி பக்கத்தில் " பாரி பூபாலன்" னு ஒருத்தர் எழுதறார்.

அதானால இனிமே "PAARI" (பாரி) ங்கற நாம கரணத்தை மட்டும் தரித்துக் கொள்றேன். இனி நெட்-ல பாலாஜி-க்கு கோவிந்தா!!!! :)))

அன்புடன்
பாரி

Wednesday, January 14, 2004

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

நம் உயிர் வாழ்தலுக்கு அடிப்படையாக விளங்கும் உழவுத் தொழிலை மேற்கொள்ளும் அந்த உழவர் நண்பர்களுக்கும் நம் நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்!!

பருவ மழை தப்பாமல், அவர்களது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவும், அவர்கள் வாழ்வில் வளங்கள் பொங்கவும், பிரார்த்திப்போம்!!!

இப்பொங்கல் விழா சந்தர்ப்பத்தில், உழவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!

அன்புடன்
பாலு மற்றும் பாலாஜி

Saturday, January 03, 2004

புதிர்

அந்த புதிர் மிகவும் அழகானது. நேர் கோட்டில் செல்லும் மத்தாப்பு கம்பி சட்டென்று சகல திசைகளிலும் பூ வாரி இறைப்பதை போல அழகானது. மாலை நேர உலாவில் பூந்தோட்டம் வழியே செல்லும் போது, அவ்வேளை ஆட்கொள்ளும் நறுமணம் போன்றது. சின்னக் குழந்தையை கண்கள் அகல விரியச் செய்யும் கவின்மிகு வியப்பை போன்றது.

புதிர் பிரிக்க வருபவருக்கு ஆக்க சக்தியும், அளவற்ற நம்பிக்கையும் கொடுக்க வல்லது அப்புதிர்.

அறியும் வரைதான் புதிர் அழகு என்பர். ஆனால், அப்புதிர் அறிந்த பின் மேன்மேலும் அகண்ட பல தளங்களில் பல அரிய புதிர்களை மட்டும் காட்டுவது அப்புதிரின் பண்பு. அறிய முயலும் பாதையில் களைப்பை உண்டாக்கும். எண்ணக் கருவூலம் சிதறி அடிக்கப்படும் அப்பயணத்தில். சிதறிய துண்டுகளோ மேலும் அழகானதாகவும் உள் மனதை கவரும் வகையில் பாங்குற அமையும். பயணிப்பதற்கு பல விதைகள் நாங்கள்! என்று வழித்தடம் இடும்.

தூக்கி கவிழ்த்துப் போட்டாலும் அந்தரத்தில் பல தளங்களை காட்டி மிதக்கச் செய்யும்.

அந்த மஞ்சள் மலரின் மெல்லிய இதழ் போல வலிமையை தன்னுள் கொண்டு, மிகவும் எளிமையை காட்டும். " ஆகா! எளியதே அழகு" என்ற பேருண்மையை அப்பயணத்தில் முரசறிவிக்கும். முயற்சியை பேருவகையுடன் தொடர வழி செய்யும். கால்த்தால், பரிமாணத்தால் எப்படி கடக்கப் போகிறோம் என்ற கவலையை தோற்றுவித்தாலும் எல்லையற்ற பெருவெளியில் தூலம் கரைந்து சென்று, எண்ண அதிர்வலையை பெருவெளியில் நிறைக்க அன்றே அப்பயணம் முடியும், மேலும் ஒரு புதிராக, மற்றொரு பயணத்தின் துவக்கமாக.........!!!

தான் இருக்கும் நிதர்சனத்தை காட்டிய அந்த புதிருக்கு இக்கணம் நன்றி.........!!!!!

-பாரி