Monday, August 06, 2007

ஒரு மாலை உணவு வேளையில்

ஒரு நாடுவிட்டு மறுநாட்டிற்கு செல்லும் போது, நமக்கு புதிய நாட்டின் மக்களின் பண்பாடு, மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்கொள்வது மிகவும் சுவையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம். மற்ற ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது, கனடாவில், பல் வகை நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களிடையே பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள், தங்களது தாய் நாட்டை சார்ந்து இருந்தாலும், இங்குள்ள இயற்கை நிகழ்வுகள் காரணமாக அவர்கள் அதில் சில மாறுதல்களை செய்து வாழ்வதை பார்க்க நல்ல அனுபவமாக இருக்கும்.
மேலும் கனடாவின் மக்கள் என்று யாரை சொல்லலாம் என்றால், சிவப்பிந்தியர்களையும், இன்னுயிட்-களையும் சொல்லலாம்.

எனது பல்கலை கழக நண்பர் ஒருவர் இந்திய உணவு வகைகள் மேல் நாட்டம் கொண்டவர். திரு. பாடில் என்பது அவர் பெயர். அல்ஜீரிய நாட்டுக் காரர். அவருக்கு இந்திய உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிய ஆர்வம். ஆகையால் அவரையும், எனது நண்பரும் வீட்டின் உரிமையாளருமான திரு குல்வந்த் என்ப்வரையும் அழைத்தேன். மாலை உணவு செய்து சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தோம்.

திரு பாடில் தனது அனுபவங்களை சொல்ல துவங்கினார்.

அவருக்கு ஒரு நண்பர். அவர் ஓண்டாரியாவில் வசிப்பவர். அந்த நண்பர் ஒரு முறை பணி நிமித்தமாக வட கனடா செல்ல வேண்டி இருந்தது. அவர் சென்ற பகுதியில் இன்னுயிட்ஸ் வாழ்ந்து வருகின்றார்கள். இரு வாரங்கள் அங்கிருந்து விட்டு, திரும்பி வந்தவர், உடனே யாரிடமும் எதுவும் சொல்லாமல், மறுபடியும் வடகனடா சென்று, ஒரு ஆறுமாதம் வாழ்ந்தார். பின்பு அங்கிருந்து வந்து, தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று, இந்த் ஆண்டுடன் 22 வருடங்களாகி விட்டது என்று பாடில் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. தொடர்ந்து திரு பாடில் கூறினார் , "அவர் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் என்னை அங்கு ஒரு பள்ளியில் பாடம் கற்பிக்க அழைத்தார். அப்போது எனக்கு தெரிந்து இருக்கவில்லை எத்தகைய அனுபவம் எனக்கு காத்திருக்கிறதென்று. நான் அங்கு சென்றேன். ஒரு ஆறு மாதம் இருந்தேன்", என்று சொல்லிவிட்டு அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றி சொல்லத் துவங்கினார்.

இன்னுயிட்ஸ் மக்கள் சமூகமாக வாழ்வதையும் அவர்களது நேர்மையான சிந்தனைகளையும், எளிய வாழ்க்கை முறைகளையும் பற்றி சொன்னார்.

அவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தல், வேட்டையாடுதல். அனைவரிடமும் துப்பாக்கிகள் உண்டு. அவர்கள் தாங்கள் வேட்டையாடிய பொருட்களையும், சீல் மற்றும் மீன்களையும் ஒரு ஊருக்கு பொதுவான இடத்தில் சேமித்து வைத்து விடுவார்கள். அந்த ஊர் மக்கள் தங்களுக்கு அன்றன்றைய தேவைக்கானதை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வார்கள் "இலவசமாக". பாடிலிடம் கூட அவர்கள் இது உங்களுக்கும் சேர்த்துதான் என்று சொன்னதை அவரால் ஏற்க முடியாமல் பின்பு அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதையும் சொன்னார்.

அவர்களுக்குள் சண்டைகள் வரும், மற்ற எல்லா சமூகத்தினரையும் போல. ஆனால், அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதில்லை இச்சண்டைகளில். கத்தியால் கொலை கூட செய்வர். ஆனாலும், விசாரணையின் போது, "ஆமாம் கொலை செஞ்சேன்" என்று உரத்து கூறிவிடுவர்.

இவர்கள் சமூகத்தில் குழந்தைகளின் போக்கு சுவாரசியமானது. ஒரு ஐந்து வயது சிறுவன், தனது குளிர் உடுப்பை கழற்றி வைத்துவிட்டு, பனியில் சுருக்கி கொண்டு கிடந்துள்ளான். பாடில் அதை பார்த்துவிட்டு பதறி போய், அருகேயிருந்த பெரியவரிடம் சுட்டிக்காட்டி அவனை எழுப்ப சொன்னாராம். அந்த பெரியவர், "அட போப்பா! அவன் எதாவது வம்பு பண்ணிட்டிருப்பான்" என்று சொன்னாராம். இவர் மேலும் மேலும் வலியுறுத்தவே, அவர் அவனை எழுப்பியுள்ளார். உடனே அச்சிறுவன் தலையை மட்டும் திருப்பி, "ஹாய்" என்றானாம் சிரித்தவாறே. உடனே அப்பெரியவர் சிரித்துக் கொண்டே, "அவன் இந்த பனிக்கு பழகறான்" என்று கூறி சென்றுவிட்டாராம். நம்ம ஆளு முகத்தில் ஈயாடவில்லை(கிளிசே :P )

அவர்களுக்கு கல்வியின்பாற் நாட்டமும் இல்லை. வெறுப்பும் இல்லை. இது சுவையன்றோ?. இவர் முதன் முதலில் வகுப்புக்கு செல்கின்றார் பாடம் எடுக்க. வகுப்பில் யாரையும் காணவில்லை. ஆனால் சத்தம் மட்டும் வருகின்றது. என்னடா என்று பார்த்தால், குழந்தைகள் டெஸ்க்-கின் அடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனராம். இவருக்கு ஒரே சிரிப்பு இதைக் கண்டு. அவர்களை ஒருவாறு ஒன்று சேர்த்து டெஸ்க்கில் உட்காரவைத்து பாடம் எடுக்கும் போது, மிட்டாய்களை கொடுத்து ஆர்வத்தை வரவழைத்த கதையையும் சொன்னார்.

இதை கேட்டு கொண்டிருந்த திரு. குல்வந்த், " இந்த இடத்திலிருந்து இன்னும் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு சுற்றுலாவாக சில மாணவர்களை எங்கள் பள்ளி அழைத்திருந்தது. அவர்கள் வந்தார்கள். சுற்றி பார்த்தார்கள். மகிழ்ந்தார்கள். அவர்கள் திரும்பும் போது, அவர்களிடம் நாங்கள் கேட்டோம், உங்களுக்கு ஆச்சரியமும் சந்தோசத்தையும் அளித்த பொருள் என்ன? என்று." அதற்கு அவர்கள் அனைவருமே ஒரு சேர அளித்த பதில் "மரம்". அவர்கள் இதற்கு முன் மரங்களை பார்த்ததில்லையாம். அவர்கள் இருக்கும் இடங்களில் கிடையாதாம்.!!

மேலும் ஆங்கில மொழி பேராசிரியர் என்ற வகையில் அவர் கூறியது " நாற்பது வருடங்கள் முன்பு வரை அவர்களது மொழியில் நான், எனது என்ற வார்த்தைகளே கிடையாது". இது என்னை திகைப்புறச் செய்தது.

இதை குறித்து நான் மேலும் படிக்க முயல்கையில், சமூக அறிவியலாளர் ஒருவர், ஒரு இன்னுயிட்டிடம், பேச்சு வாக்கில் கேட்டாராம், " என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க?" என்று. அதற்கு அந்த இன்னுயிட் நண்பர், " நான் ஏன் யோசிக்கனும்? எங்ககிட்டே தேவையான மாமிச உணவு இருக்கே" என்று மிக இயல்பாக கூறினாராம். இது ஸென் கதை மாதிரி இருக்கு. இல்லையா?.

அப்புறம், என் நண்பன் ஒரு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த செய்தியை சொன்னான்.
அக்காலத்தில் இன்னுயிட்களில் வயதானவர்கள் தாங்கள் சமூகத்திற்கு பாரம் என்று நினைத்துவிட்டால் தங்களது ஆடைகளை களைந்து விட்டு, வடக்கு நோக்கி யாரிடம் எதுவும் கூறாமல் நடக்கத் துவங்கி விடுவர் என்று.

இயற்கை நமக்கு பாடங்களை கற்பித்தவாறே உள்ளது.

No comments: