Monday, August 06, 2007

அணு என்ற கருத்துருவாக்கம் -2

அனைத்திலும் அவற்றுக்கு உண்டான ஒரு பிரத்யேக அழகுண்டு. ஆனால் அனைவருமே அவற்றை பார்ப்பதில்லை
-கான்பூசியஸ்

நாம் அணு என்பதை பற்றி பேசுவதற்கு முன், ஏன் இப்படியான தலைப்பு என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

உறுமி மேளம் என்றால், மேலுள்ள படத்தை பார்த்து இது தான் உறுமி மேளம் என்று கூறிவிடலாம். மேலதிகமாக இது ஒரு தாள வாத்தியம் என்பதும், இதன் வடிவம் பற்றிய தகவல்களும், இதனை செய்யும் முறையும், உண்டாக்கும் ஒலியும், உறுமி மேளம் என்பதற்கான ஒரு புரிதலை உண்டாக்கும்.

ஆனால் அணுவை பற்றி இவ்வளவு எளிதாக ஏதும் சொல்லிவிட இயலவில்லை. ஏனெனில், முற்காலத்தில் இதை பார்க்க இயலாத நிலை மட்டுமே இருந்தது. இதன் வடிவம் பற்றி கருத்துகள் மட்டுமே சொல்லப்பட்டன. இக்கருத்துக்களுக்கு எந்த வித நிரூபணங்களும் இல்லை. ஆகவே எனக்கு இத்தலைப்பை தவிர வேறேதும் மிக பொருத்தமானதாக தெரியவில்லை. இன்று வரை அணு என்ற கருத்துருவாக்கத்தின் மூலமும் வேர்களும் அறிவியலின் வராலாற்றை ஆராயும் ஆய்வாளர்களுக்கு ஒரு புதிராகவே இருக்கின்றன.

ஆனால், அக்கால அறிஞர்கள்/தத்துவவாதிகள் அணு என்ற ஒன்று உள்ளது என்பதை அவதானித்து இருந்தனர். சென்ற பதிவு அவர்கள் அவ்வாறு உணர தலைபட்டதற்கு எத்தகைய சிந்தனை கோர்வை காரணமாக இருந்தது என்பதை முன் வைத்தது. இந்த பதிவு டிமாக்ரிடஸிற்கு முன்பே இந்தியதுணைக் கண்டத்தில் தோன்றிய அலுக்யா என்ற ஒரு சிந்தனையாளரை அறிமுகம் செய்கின்றது. இவர் கனடா என்றும் அழைக்கப்பட்டார். கனடா என்றால் அணு-உண்ணி என்று பொருள்.

இவர் கிமு 7-ஆம் நூற்றாண்டில் ஒரு சிந்தனா சாலையும், சமயப் பள்ளியையும் நிறுவினார். இவைகளின் மையக்கரு அணுவை சார்ந்தே இருந்தது. இவரது கருத்துப்படி அறிவு என்பது ஆறுவகையான நேர்மறை பிரிவுகளின் மூலம் பெறக்கூடியது. அவையாவன பொருள், தரம், செயற்பாடு, பொதுத்தன்மை, குறிப்பானதன்மை, தெரிந்தறிதல். இதில் பொருள் என்பது ஒன்பது வகையான வெளிப்பாட்டுத் தன்மை உடையது. இவற்றில் ஐந்து பருபொருள் அடிப்படைகளிலும் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஈதர்**), மேலும் நான்கு அரூபமானவையாகவும் (நேரம், வெளி, சுயம், மனம்) உள்ளன. இவற்றில் பருபொருள் அடிப்படையில் அமைந்தவை அனைத்தும் அணுக்களால் ஆனவை. இயற்கையில் நமக்கு கிடைக்கும் மீச்சிறு துகள் ஆறு அணுக்களால் ஆனவை என்றும், இவைகள் சூரிய ஒளிக்கற்றையில் சோடி,சோடியாக (கடவுள் அல்லது மற்ற காரணங்களால்) இருப்பதாகவும், அவர் கூறினார்.

இக்கருத்துக்கள் இன்றைய தேதியில் ஒரு விளையாட்டு போல தோன்றினாலும், தன் ஆய்வுக்கான கருவை தெளிவாக வரையறுத்து பின்பு அவற்றை பிரித்து பட்டியலிட்ட தன்மைக்காகவேனும் அவரது முயற்சியை தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. மேலும் கனடா, அணுவை பற்றி, நாம் உணர்தல் மூலம் தெரிந்து கொள்வதைவிட அவதானிப்பதன் மூலமே தெரிந்து கொள்கின்றோம் என்பதிலும் தெளிவாக இருந்தார். அவர் இந்த அவதானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டும் கொடுத்திருந்தார். பருபொருட்களை கணக்கிலடங்கா (சுழிக்கு ஒப்ப) பங்காக பிரித்து கொண்டே போனால், ஒரு மலைக்கும், ஒரு கடுகிற்கும் எந்தவொரு வேறுபாடும் இருக்காது. ஏனெனில் சுழியும் சுழியும் ஒன்றே எனக் கூறினார்.

இதை பற்றி பொனமரோவ் கூறும் போது: டிமாக்ரிடஸ் கனடாவின் தத்துவங்கள் பற்றி அறிந்திருந்தாரா?. இது சாத்தியமே ஏனெனில் டெமாக்ரிடஸ் ஒரு பயணவிரும்பி. அவர் பயணித்த இடங்கள் பல. ஆகையால் இந்தியாவிற்கும் பயணத்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் கனடாவின் கருத்தே தொன்மையானதாக இருக்கக் கூடும்.

இத்தகைய மாபெரும் சிந்தனையாளர்கள் வாழ்ந்த சூழல் கிழக்கும் மேற்கும்!! ஆனாலும், அவர்களது கருத்து, அவர்களது பார்வை சந்திக்கும் புள்ளிகள் மிகவும் சுவாரசியமானது இல்லையா?

சரி. மேலும் இத்தகைய கருத்துக்கள் எவ்வெவ்வாறு உருமாற்றம் பெற்றன என்பதை வரும் பதிவுகளில் அறிய முயற்சிப்போம்.
-தொடரும்

** ஈதர் பற்றி அவர் எந்த வகையில் சொல்லி இருப்பார் என்பது எனக்கு புதிராகவே உள்ளது. இதை பற்றி மேலும் தகவல் கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.

No comments: