Monday, August 06, 2007

அணு என்ற கருத்துருவாக்கம் -1

அணுக்களை பற்றி பேச, கவிதை போன்ற மொழி நடையே மிக்க வசதியாக உள்ளது. - நேய்ல்(ஸ்) போர் (1885-1962 AD )

அணு என்ற வார்த்தை நம்மில் பலர் பல இடங்களில் கேட்டிருப்போம். சித்தர் பாடல்களில் கூட இதை பற்றிய குறிப்புள்ளதாக அறிகின்றேன். ஆங்கிலத்தில் atom என்று அழைக்கப்படும்.

அணு என்ற வார்த்தை எதை குறிகின்றது?. இது குறித்தான சிந்தனை யாரால் எப்போது முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது?

இக்கேள்விக்கான பதில் நோக்கி நாம் கால இயந்திரத்தை பின்னோக்கி செலுத்தினால்……
நாம் அடைந்த இடம்: மத்திய தரைக் கடல் பகுதியில் இருக்கும் த்ராசியன் கடற்கரை.
கால இயந்திரத்தின் மானிட்டரில் நாம் பார்க்கும் கால அளவை: 460 - 370 B C

ஒரு மிதமான வெய்யில் இருக்கும் நற்காலை பொழுது. கடலை ஒட்டிய ஒரு பாறையின் மேல் அமர்ந்து கொண்டிருக்கின்றான் டிமாக்ரிடஸ். அவன் கைகளில் ஒரு ஆப்பிள். தன் முன் இருக்கும் பரந்து விரிந்த ஆகாயமும், அதனை மௌனமாக தொட்டு விளையாடும் ஆழமான கடலும் அவனுள் ஒரு மோனத்தை உருவக்குகின்றது. அப்பொழுது அவனுள் இருக்கும் ஆகாயத்திலிருந்து ஒரு மின்னல் கீற்று ஒரு சிந்தனையாக வெளிப்படுகின்றது. ” இந்த ஆப்பிளை நான் வெட்டினால், இரு அரை பகுதிகள் கொண்ட துண்டுகள் கிட்டும். அவைகளில் ஒரு பகுதியை நான் வெட்டினால் என்னிடம் நான்கில் இரு பகுதிகள் இருக்கும். இவ்வாறே நான் தொடர்ந்து வெட்டிக்கொண்டே போனால், என்னிடம் 1/8,1/16, 1/32, ..1/1024…..etc., என ஒரு ஆப்பிளின் சிற்சிறு துண்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்குமா? அல்லது, இந்த முயற்சியில் ஒரு கட்டத்தில் ஆப்பிளின் பண்பை இழந்த, தனித்தன்மையிலான மீச் சிறு துண்டுகள் மட்டுமே எஞ்சுமா?”

அவனது இக்கேள்வியில் ஒரு உண்மை பொதிந்து கிடந்தது. ஒரு பொருளை சிதைத்துக்கொண்டே போனால் ஒரு கட்டத்தில் மேலும் பிளக்க இயல நிலை உண்டாகும் என்ற முடிவுக்கு வந்தான். அதை அவன் “பிளக்க இயலா துகள்” என பெயரிட்டான். கிரேக்கத்தில் அதனை
ατομοζ என்று அழைப்பர். ஆங்கிலத்தில் atom என்று பிற்காலத்தில் வழங்கலாயிற்று. இந்த தகவல்களை அவன் “Little world system” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளான்.

சரி. நாம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டு(ம்) வந்து விடுவோம்.

தற்கால அறிவியலில் டெமாக்ரிடஸ் அணு கருத்துருவாக்கத்தின் தந்தை என போற்றப்படுகின்றார்.

இவரை பற்றி சிறு குறிப்பு: அப்டேரா என்ற இடத்தில் பிறந்தார். இந்த இடம் மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்த த்ராசியன் கடற்கரையில் இருந்தது. இவர் லூசிப்பஸின் சீடன் ஆவார். மேலும் இவர் சால்டியன் சான்றோர்களிடமும், பெர்சிய மாகி -இடமிருந்தும் பாடங்கள் பெற்றார். இவர் பெரிய நாடோடியாக இருந்துள்ளதால் பல தகவல் அறிந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். இவரது நகரத்து மக்கள் இவரிடம் பெரு மதிப்பு வைத்திருந்ததாகவும், இவரது இறுதிச் ஊர்வலத்தில் பொது மக்கள் பெருந்திரளாக இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. ஓவியர்கள் இவரை உயரமான, குறுந்தாடியுடைய மனிதனாக சித்தரிக்கின்றனர்.

நான் மேலே குறிப்பிட்டதை நன்கு கவனித்தால் தெரியும் நான் சொன்னது முதன் முதலில் “பதிவு” செய்யப்பட்ட தகவல் என்று. நமக்கு அங்குமிங்குமாக கிடைக்கும் வராலாறு என்ன சொல்கின்றது என பார்ப்போம். டெமாக்ரிடஸ்-ன் ஆசானான லூசிப்பஸ்-க்கும் அணு கருத்துருவாக்கத்தில் பங்கு இருகின்றது என கூறப்படுகின்றது. பண்டைய இந்திய சிந்தனையாளர்களில் ஒருவரான கனடா என்பவரும் டெமாக்ரிடஸ்-க்கு முன்பே அணுக் கருத்துருவாக்கத்தில் கவனம் கொண்டார் என்றும் தெரிகின்றது. இதை பற்றி விவரமாக அடுத்த பகுதியில் பதிகின்றேன்.

-தொடரும்

இந்த கட்டுரை (தொடர்) L I Ponomarev அவர்களால் எழுதப்பட்ட The quantum dice என்ற புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்படுகின்றது. இப்புத்தகம் Mir publishers Moscow- ஆல் 1988-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எனக்கு இந்த புத்தகம் ஒரு பழைய புத்தக கடையில் கிடைத்தது

பாலாஜி-பாரி

No comments: