Monday, August 06, 2007

மெக்தலீனா சகோதரிகள் (2002)

இத்திரைப்படம் கிறித்துவ கத்தோலிக்க சமூகம், அயர்லாந்தில் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற பெண்கள் மீதான மதத்தின் பெயரில் செய்த அடக்கு முறையை விரிவாக சொல்கின்றது.

மார்கரெட்: தனது உறவினான ஒரு கயவனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றாள்.
ரோஸ்: இப்பெண் தந்தை அறியா குழந்தைக்கு தாயாகின்றாள்
பெர்னடெட்: இச்சிறுமி அனாதை விடுதியில் வளர்ந்து வருகின்றாள். பருவத்தின் இயல்பில் அவள் அழகாக இருக்கின்றாள். விடுதியின் வெளியில் இருந்து சில பையன்களின் குரலைக் கேட்டு மகிழ்கின்றாள்.

இவர்கள் மூவரும் கத்தோலிக்க கிறித்துவ முறையை பின்பற்றும் குடும்பங்களிலும், காப்பகத்திலும் இருக்கின்றனர். மார்க்கரெட் தனது தந்தையரின் நிர்பந்தத்தாலும், பெற்ற குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டு அந்ததாயை (ரோஸ்) அவளின் பெற்றோரினாலும், பெர்னடட் என்ற சிறுமி காப்பக கன்யாஸ்திரிகளாலும், மெக்தலீனா காப்பகத்தில் சலவைத் தொழிலாளி ஆக்கப்படுகின்றனர்.
அதன் நிர்வாகியான ஒரு மூத்த கன்னியாஸ்திரி தனக்கு கூறப்பட்ட வழிமுறைகளின் சற்றும் மாறாமல் இறைவனின் சேவையில் ஈடுபடும் பெண்களை கவனித்துக் கொல்கின்றார் ('ல்' எழுத்துப் பிழையல்ல).

அவர்களுக்குண்டான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. அவர்கள் அங்கு அடிமை போல் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு தவறுகளுக்கும் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றது.

அங்கு இருக்கும் பெண்கள் அனைவரும் பாவிகள் என்றும் அங்கு பணி செய்வதன் மூலம் தூய்மையடைந்து புனித ஆவியின் அன்புக்கு பாத்திரமாகி சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று கூறுகின்றார் அதன் நிர்வாகி.

இதில் முக்கியமான ஒரு பாத்திரமாக வருபவர் கிறிஸ்பினா. அவர் தனது குழந்தையை பிரிந்ததால் மனச்சிதைவுக்குள்ளாகின்றார். அவரை ஒரு பாதிரி தன் உடலிச்சையை தணிக்க பயன்படுத்துகின்றார். இதை வெளியில் கூற நேரும் பொழுது (YOU ARE NOT A GOD MAN என 27 முறை கூறுகின்றார்) தலைமை கன்னியாஸ்திரி அவரை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றார். இதனிடையில் இவர் தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவிற்கு நிலைகுலைக்கப் படுகின்றார்.

24-வயதில் அம்மருத்துவமனையில் அவர் இறந்து விடுகின்றார்.


மதம் தன்னை நிறுவுவதற்கு செய்யும் செயல்கள் மிக நுட்பமானது. இதில் ஒரு முறைதான் (method) நாம் மேலே கண்டது.

இத்திரைப்படம் sex in the cold climate என்ற ஆவணப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆவணப்படம் மிக மிக முக்கியமானது. இதில் உண்மையில் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையை கூறுவது மிகவும் உருக்கமானது. உண்மைகள் பொதிந்தது.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் மதம் தனது ஏஜென்ட்கள் பெண்களோ அல்லது ஆண்களோ இருந்தாலும் ஆதிக்க மனப்போக்கை எளிதாக கையாளுகின்றனர். மதம் போன்ற அமைப்பை நிறுவுவதில் ஆண்களின் நோக்கமும் பயமும் இவ்வகையான நிறுவனங்களின் கட்டமைப்பில் கண்கூடு. எனக்கு இது விந்தையாக படவில்லை. ஏனெனில் ஆண்களது பணி, இவற்றை நிறுவுவது மற்றும் இதன் அடிநாதத்தை கைகொள்வது மட்டுமே ஆகும். இவற்றை செய்த பின் மற்றவைகள் விளைவுகள் மட்டுமே. அந்த விளைவுகள் ஆண்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்குமாறு அந்த நிறுவனம் பார்த்து கொள்ளும் என்ற நிலையில் அதிலிருந்து விலகிவிடுகின்றனர் என தோன்றுகின்றது.

இந்திய சூழலில் இத்தகைய ஒரு படமாக நான் கருதுவது Son, father and holy war.
இதை பற்றி தங்கமணி தெளிவாக குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன்.
Son, father and holy war படம் போர்/ வன்முறை எப்படி முழுக்க முழுக்க ஆணாதிக்கத் தயாரிப்பு என்பதையும். உண்மையில் போர்/மதம்/ வன்முறை போன்றவை இருதரப்பினரையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே அன்றி வேறெதுவும் இல்லை என்றும் காட்டியிருக்கும்.போர்/மதம்/ வன்முறையினை மத சக்திகள் (மும்மதங்களும்) எவ்வாறு பெருமைப்படுத்துகின்றன, அதன் அடிப்படையில் கற்பு, ஒழுக்கம், இவைகள் எப்படி கிளைக்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகிற படம். அந்தப்படம் இரண்டு தரப்பினரையும் (இந்து, முஸ்லீம்) சரியாகவே காட்டியது.


இத்திரைப்படம் மிகவும் பாதிப்புக்குள்ளாக்ககூடியது.

-பாலாஜி-பாரி

No comments: