Monday, August 06, 2007

பாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்!!

அன்பு நண்பர்களே! பாரதி உயிருடன் இருந்தால், இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான். " பாரடா, நான் கொண்ட கனவை மெய்பித்தவளை. சக்தி கனலடா இவள்!" என்று கர்ஜித்திருப்பான் பெருமை பொங்க. என்னுள் ஒரு பெரும் சக்தியாக தோற்றம் எடுத்தது இவர் கூறிய பதில்கள். நமக்கு பாரதியின் கூற்றான மனதில் உறுதி வேண்டும் என்ற சொற்றொடருக்கு உண்மை பொருள் விளக்கினார் தனது மிக எளிய பதிவின் மூலம். இப்பொழுது "அசைவறு மதி வேண்டும்" என்பதற்கு புது பொலிவு சேர்க்கின்றார். பல நேரங்களில் நாம் take it for granted-ஆக எடுத்துக் கொள்ளும் வரிகளில், வாழ்க்கையின் பொருளை நிறுத்தி, நமக்கு களைப்பை தீர்க்க வருகின்றார், திருமதி. பத்மா அர்விந்த்.
இவர் தற்போது பொது நல ஆரோக்கிய திட்ட அமைப்பாளராக பணி புரிந்து வருகின்றார். இது இந்தியாவில் சிவில் சர்வீஸ் பணிக்கு நிகரானது. இவர் தனது உழைப்பையும், பாஸிட்டிவ்வான (நேர்மறையான) உளப்பாங்கையும் ஆற்றலின் தோற்றமாகக் கொண்டு, ஒரு விதையாக தோன்றி விருட்சமாக வளர்ந்தவர் . இவரது பதிவை பார்க்கும் எவரும் "அட" என்று எண்ணும் வகையில் ஒரு வரியை எழுதி வைத்துள்ளார். அது: ``I enjoy planning activities and design strategic plans for poor people``.

இனி இவருடன் ...

1. நீங்க பிறந்து வளர்ந்த சூழ்நிலை, உங்கள் பால்ய கால படிப்பார்வம் மற்றும் உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் பற்றி கூறுங்களேன்.

ஒரு கீழ் நிலை நடுத்தர குடும்பத்தில், 5 சகோதர, சகோதரிகளுடன் பிறந்தேன். கோப்பையில் குடித்தால் சீக்கிரமே ஆகிவிடும் என்று கஞ்சியை தட்டில் ஊற்றி மெதுவாய் பருகி பசிதீர்த்துக்கொள்வோம். கிடைப்பது ஒரு மிட்டாய் என்றாலும் 8ஆல் வகுந்து உண்போம். பொருளுக்கு பஞ்சம் என்றாலும் அன்புக்கு பஞ்சமில்லை. எல்லோருமே நன்றாக படித்ததால், பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு செல்லப் பிள்ளை. வீட்டில் சர்க்காவும் ராட்டினமும் கொண்டு அம்மா நூல் நூற்று சட்டைகள் செய்வதுண்டு.

அப்போதெல்லாம் திருக்குறள், திருப்பாவை திருவெண்பாவை ஒப்பித்தல் போட்டிகள் வரும். நாங்கள் அனைவரும் பங்கு கொண்டு அந்த அந்த வகுப்புக்கு வரிசையில் பரிசு பெறுவது உண்டு. போக போக மற்றவர்கள் ஆர்வம் குறைந்துவிட, நான் மட்டும் தொடர்ந்து பங்கு பெறுவேன். திடீரென ஒரு தலைப்பு கொடுத்தாலும் பேசுவதில் எனக்கு தகுதி உண்டு என்பதால் என் பள்ளியின் சார்பாக பல ஊர்களுக்கும் சென்று பேச்சு போட்டிகள், பட்டி மன்றங்கள் இவற்றில் கலந்து கொள்வதும் உண்டு. கந்தர் கலிவெண்பா போன்றவை படித்து எழுத்து தேர்விலும் முதல் பரிசு பெற்றால் தொடர்ந்து ஒரு ஊதிய தொகை வரும். இது என் பெற்றோருக்கு உதவும் என்பதும் நான் தமிழ் படிக்க ஒரு காரணம். ஆனாலும் சில காலத்திற்கு பிறகு கட்டாயமாக ஆங்கில புத்தகங்களே படிக்க வீட்டில் ஊக்குவித்தனர்.
விளையாட நேரம் ஒதுக்குவதைக் காட்டிலும் படிப்பதும், யார் எழுதிய புத்தகமானாலும் தேடி படிப்பதும் பொழுது போக்காக இருந்தது. மற்ற குழந்தைகளுக்கும் விட்டு பாடங்களில் உதவுவதும், tutuion நடத்துவதும் மேலும் படிக்க ஆர்வம் வர காரணம்.

2. அறிவியல் துறையில் உங்களுக்கு ஈடுபாடு வருவதற்கு எத்தகைய சூழ்நிலை காரணமாக இருந்தது?

வறுமை. இலக்கியம் படிக்க ஆர்வம் இருந்தும் படித்தால் வேலை கிடைப்பது சிரமம், அறிவியல் படித்தால் உடனே எங்கு வேண்டுமானாலும் வேலை கிடைக்கும் என்று என் சகோதரர்கள் சொன்னதும், என் அக்கா தான் செய்யும் ஆராய்ச்சி பற்றி பேசுவதும், என் அண்ணன் ஐ.ஐ.டியில் தன் அனுபவங்கள் பற்றி சொல்வதும் இதற்கும் மேலாக அவர்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது அவர்களுக்கு கிடைக்கும் நல்ல கவனிப்பும் காரணம். ஒருமுறை என் அம்மா கடுமையாக நோய்வாய்பட, காசில்லாமல் கவனிக்க யாருமின்றி, உறவினரும் கைவிட்ட நிலையில், ஒரு மருத்துவர் எங்கள் வேண்டுகோள் கேட்டு வீட்டிற்கு இரவில் வந்து கவனித்தபோது நான் சொல்லிக் கொள்வேன் " இது போல கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவாவது மருத்துவராக வேண்டும்" என்று.

3. உங்கள் மேற்படிப்பு குறித்து சில விவரங்களை பகிர்ந்து கொள்ள இயலுமா?

என் அண்னனும் அக்காவும் மேற் படிப்பு படித்து கொண்டிருந்ததால் மற்ற நால்வரும் இளநிலை படித்து வேலை தேடிக்கொள்ளவேண்டும் என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார். ஆசிரியை வேலை பார்த்தாலே போதும் என்பதும் எப்படியாவது என் அக்காவிற்கு திருமணம் முடிக்க பொருள்சேர்க்க வேண்டும் என்றும் திடமாக இருந்தார். ஆனால் ஒவ்வொருவரும் 'நுழைவுதேர்வு தானே! இடம் கிடைக்கும் என்று என்ன நம்பிக்கை?" "முயற்சி செய்து பார்க்கிறேனே!" என்று சொல்லி அனுமதி வாங்குவோம். இதன் படி ஜிப்மரில் மருத்துவ துறையில் உயிர்வேதியில் படிக்க சேர்ந்தேன். நுழைவுத்தேர்வில் 10000 (கிட்டதட்ட) பேரில் தேர்வு செயப்பட்ட 500 பேரில் ஒருத்தியாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். வந்திருந்த 500 பேர்களில் ஐவருக்குத்தான் இடம் என்பதால் எனக்கு கிடைக்காது என்று தந்தை நம்பியிருக்க, வந்த அனைவரும் கான்வென்ட் ஆங்கிலத்தில் பேச, நான் தமிழை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உரையாட, நம்பிக்கை அற்று ஊருக்கு திரும்பிவிட்டோம். ஆச்சரியமாக முதலிடம் பெற்று தேர்ந்தேன். உதவிதொகையும் பிர்லாவிடமிருந்தும் உதவிதொகையும் கிடக்க அது ஆசிரியை வேலையைவிட அதிக ஊதியம் என்பதால் படிக்க அனுமதி கிடைத்தது. அப்போது முதன் முதலில் இறந்த ஒரு மனிதனின் உடலை அறுத்து படிக்கும் போது சக மாணவர்களும், ஆசிரியர்களும் கேவலமாக பெண் உறுப்புகளை பேசுவதும், அறுவை சிகிச்சை போது தவறாக பேசுவதையும் கண்கூடாக பார்த்து மனித மனத்தின் வக்கிரங்களை அறிந்து கொண்டேன்.

அதன் பின் AIIMS ல் காசநோய்க்கான எதிர்ப்பு சக்தியில் ஆராய்சி செய்ய அனுமதி கிடத்தது. என் சகோதரன் புது தில்லியில் வேலை பார்த்தால், அவனுக்கும் உதவியாக இருக்கும் stipendஉம் சம்பளத்தைவிட அதிகம் (அர்விந்த் கண் மருத்துவ மனியில் விரிவுரையாளர் வேலை) என்றும் தில்லி சென்றேன்.

வேலைக்கான ஊதியத்தைவிட, உதவிதொகை அதிகம் என்றே நாங்கள் அனைவரும் மேற்படிப்பு படிக்க அனுமதி பெற்றோம்.

என் மூத்த சகோதரிக்கே திருமணமாகாத நிலையில் நானும் வீட்டில் இருந்தால் என்ன செய்வது என்பதும், இவை அனைத்திற்கும் மேலாக எங்களுக்கு உறுதுணையாக என் அம்மா இருந்ததும் (அப்பாவிற்கு தெரியாமல் விண்ணப்ப படிவங்களை அனுப்ப,... அப்பா படிப்பதற்கு எதிரி இல்லை என்றாலும் நண்பர்களின் விமரிசனத்தையும் தன்னுடைய உறவினர்கள் எங்கள் குடும்பத்தை ஒதுக்கிவைத்ததையும் அவரால் தாங்க முடியவில்லை) மனம் தளரும் போதெல்லாம் மருந்தாக இருந்தது.


4. நீங்கள் எப்போது சமூகத்தை ஒரு விமர்சனக் கண்ணோடு பார்க்க துவங்கினீர்கள்? அதை குறித்த ஏதேனும் சம்பவங்கள் சொல்ல இயலுமா?

எனக்கு 4 வயதாக ஒருக்கும் போது எதிர்வீட்டு aunty கையில் குழந்தையுடன் மழையில் வெளியேற்றப் பட்ட போது எதனால் என்று அம்மாவிடம் கேட்க, பெண்குழந்தை பிறந்ததால் என்று சொன்னார். புரியாவிட்டாலும் நானும் பெண் தானே அவர்வீட்டு பாப்பாவிற்கு என்ன குறை என கேட்டது நினைவிருக்கிறது.எங்கள் வீட்டில் இரவை கழித்த அந்த பெண் மறு நாள் பாலிடால் குடித்து இறந்தது என்னை பாதித்தது.

என் 2வது வகுப்பு ஆசிரியை கோமளா அனுராதா திருமணம் தடை பட்டு கொண்டே போக, வருத்தப் பட்டு இறந்ததும் அர்த்தம் புரியாத வயதில் ஆழ்மனதில் காயமாகிப் போனது. பள்ளி விடுமுறை என அனைவரும் சந்தோஷிக்க எனக்கு மட்டும் வெறுப்பாகிப் போனது.
5வது படிக்கும் போது என் தோழி மேகலாவிற்கு திடீரென திருமண்ம் ஆக, நண்பர்கள் கேலி செய்ய, பூச்சி மருந்தை குடித்து இறந்து போனாள். அவளை மாலையுடன் பார்த்ததும் மனதில் படிந்திருக்கிறது.
சேரிகளில் வசிக்கும் சிலரை தண்ணீர்கூட தராமல் கேவலமாக பேசுவதும், வயதில் எத்தனை பெரியவராக இருந்தாலும் பெயர் சொல்லி அழைப்பதும் எனக்கு பிடித்ததில்லை. இவர்களுக்கு என் அம்மா வீட்டில் எழுத படிக்க சொல்லி தருவார். ஒரு பெண் சிங்கப்பூரில் வேலை பார்த்த தன் கணவரிடமிருந்து வரும் கடிதங்களை அடுத்தவரை விட்டு படிக்க சொல்வதும், அவர்கள் அந்த பெண்ணின் கணவர் அனுப்பும் பணத்தில் ஏமாற்றுவதை பார்த்த என் அம்மா வீட்டிலேயே இலவசமாக படிப்பு சொல்லி தருவார். அந்த பெண்களின் சந்தோஷம் சொல்லி மாளாது. இது எனக்கு பிடித்திருந்தது. ( :) பாரி)

நானும் சிறு சேமிப்பு, குடும்ப கட்டு பாடு என்றெல்லாம் வீடு வீடாய் சென்று பேச ஆரம்பித்த போது எனக்கு 7 வயது. சிறுமியாக இருந்து கொண்டு குடும்ப கட்டு பாடு பற்றி பேசும் போது கேலி செய்தவர் உண்டு. ஆனாலும் என்னை அலட்சியப்படுத்தியவர் இல்லை.
ஏழைகளை அவமதிப்பவர் இந்தியாவில் அதிகம். இன்னமும் ஒரு பொறியியல் வல்லுனருக்கு கிடைக்கும் மரியாதை ஒரு செருப்பு தைப்பவருக்கு இல்லை. இத்தனைக்கும் யாரும் யாரையும் சார்ந்திருக்காமல் இல்லாவிட்டாலும் அவமரியாதை அதிகம். நானும் என் அண்ணனும் என் தந்தையின் நண்பரின் வீட்டிற்கு அவரே அழைத்ததால் போன போது அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு சிறுவன் "நாங்களே இன்னும் சாப்பிடைல்லை அதுக்குல்ளேயே வந்தாச்சா, போ! போ!!" என்று விரட்டியதும், பாத்திரங்களை அடகு வைக்க போகுமிடத்தில் கேவலமாக பார்ப்பதும் பேசுவதும் என்று தேவையில்லாமல் காரணமில்லாமல் மனதை காயப்படுத்துவது அதிகம். இந்தியாவில் இந்த மனப்பான்மை அதிகம். தன்னிடம் வேலை பார்க்காதவராக இருந்தாலும், தனக்கே சம்பந்தம் இல்லதவராக இருப்பினும் ஏழை என்றால் ஏதோ அடிமைகள் போல் நடத்துவதும், அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை புரிந்து கொள்ள மறுப்பதும் ஏனென்று தெரியவில்லை.

5. இந்தியாவில் அறிவியல் துறையும், அதில் பெண்களின் பங்கும், அவர்களது நிலை குறித்தும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

பெண் விஞ்ஞானிகளுக்கு அதிக நேரம் ஆய்வகத்தில் வேலைசெய்துகொண்டு வீட்டையும் கவனிக்க முடியாது என்ற பரவலான கருத்து உள்ளது. மேலும் ICMR, DST போன்ற இடங்களில் பொருளாதார உதவி தொகை (grant) கிடப்பது கடினம். இதில் நிறைய அரசியல் கலந்திருக்கிறது. என்னுடைய முதல் grant கிடைக்க நான் மிகவும் சிரமப்பட்டேன். சக ஆராய்சியாளர்களும் இரவில் வேலை செய்யும் போது, எனக்கு உன் மீது காம உணர்ச்சி வந்துவிட்டது என்று சொல்லி தொல்லை கொடுப்பதும், ஆரய்சிக்கு கிடைக்க வேண்டிய அனுமதி கிடைப்பதற்காக தடங்கல்கள் செய்வதும் உண்டு. இதையும் மீறி நிறைய பெண் விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். சில குறைவான பெண் விஞ்ஞானிகள் ஆண்களின் சபலத்தை பயன் படுத்தி அவர்களை வேலை செய்ய சொல்வதும் உண்டு!!

அறிவியல் துறை (மருத்துவ) இந்தியாவில் முன்னேற வேண்டுமானால் அதற்கு உரிய அங்கீகாரம் வேண்டும். ஒரு வேதி பொருள், அல்லது ரேடியோ கதிவீசு kit வரும் போது அதன் தன்மையை புரிந்து கொண்டு சுங்க அதிகரிகள் அதனை உடனே தந்து விட வேண்டும். அதற்கும் லஞ்சம் எதிர்பார்த்து தேக்கி வைத்தால் அதன் வீரியம் கெட்டு விடும். இதற்கும் மேலாக, மனித திசுக்கள், இரத்தம் ஆகியவற்றில் ஆராய்சி செய்ய தேவையான உரிமைகள் பெறவும், மனிதர்களின் confidentiality பாதுகாக்கவும் அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
சமீபத்தில் பாஸ்டனில் இந்தியாவிலிருந்து வந்திருந்த சில விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் போது இன்னமும் நிலை மாறவில்லை என்பது தெரிந்தது.
அரசு அங்கீகாரத்தோடு national biotechnology board அமெரிக்காவிற்கு பயிற்சி பெற அனுப்ப தேர்ந்தெடுக்கும் விஞ்ஞானிகளில் அரசியல் கலப்பு உண்டு. புது தில்லியில் ஆராய்ச்சி கழகத்திலிருந்து வருபவருக்கு உடனே அனுமதி கிடப்பதும், தென்னக கல்லூரிகளிலிருந்து வருபவருக்கு அனுமதி கிடைக்காததும் சகஜம். cloningஇல் தேர்சி பெற 6 மாத சம்பளத்தோடு, பயண செலவுகளும் தந்து NIH வந்த ஒருவர் ஊர் திரும்பியபோது இதெல்லாம் எனக்கு புரியாது. நான் நன்றாக ஊர் சுற்றி பார்த்தேன் என்று சொன்னதை கேட்டிருக்கிறேன். AIIMSல் இருந்த பெருவாரியான ஆராய்சி மாணவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்ல உதவி தொகையும் அனுமதியும் விரைவாக பெறுவதும், அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் உள்ள மாணவிக்கு அனுமதி கிடைக்காமல் இருப்பதும் நானே கேட்ட சில புகார்கள். இந்த நிலை மாறி, தகுதி அடிப்படையில் எல்லருக்கும் பயிற்சி தர வேண்டும் , அறிவியலில் அரசியல் கலப்பு கூடாது.


இதன் இரண்டாம் பாகம் நாளை......

No comments: