Wednesday, June 23, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு- கிடையாது!! - 2

இத்திரைப் படம் "அண்ணாச்சியின்" குற்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்கின்றேன். முந்தைய பதிவில் கூறியபடி, எப்பொழுதும் அவர் முகத்தில் தனது பணி நிமித்த சோகம் இழையாக ஓடும்.

இப்படம் பல மனித உணர்வுகளை சிக்கல் இல்லாமல் காட்டுகின்றது.
"அண்ணாச்சியின்" கடைக்குட்டி மல்லிகா பருவம் அடைவது, அதற்கான விழா எடுப்பது, அவ்விழா முடிவில், மூத்த மகளின் கணவன் சொல்லிக் கொண்டு செல்லும் போது, மல்லிகாவை ஒரு கணம் பார்ப்பது, அந்த நிகழ்வை மல்லிகாவின் பெற்றோர் கவனித்து விடுவது இவை அனைத்தும் ஓர் சரம் போல் தொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாச்சியின் மகன், சுதந்திரத்திற்காக பாடுபடுவதை ஓரிரு வசனங்கள் மூலமும், ராட்டையில் நூல் நூற்பதன் மூலமும் காட்டுகின்றார் இயக்குநர். அண்ணாச்சியின் மகன், தூக்கிலிடுவதை எதிர்த்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்வதையும் கள்ளுக்கடை காரர் மூலம் காட்டுகின்றார்.

அண்ணாச்சியிடம் நிறைய நோயாளிகள் வருவதை அறிந்து, மூத்த மகள் நிலம் வாங்க பணம் கேட்டு வருவதும், அது தொடர்பான வசனங்களும், அவள் மீது அண்ணாச்சியின் பரிவை காட்டுகின்றது.

அண்ணாச்சியின் உடல் நலம் குன்றி, அவரால் "ஆரச்சார்" தொழிலை தொடர முயலாத நிலையில், திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வரும் டவாலி, அவரது மகனை உதவிக்கு வைத்து கொள்ளுமாறு பணிக்கிறார். தந்தையின் உடல் நலம் கருதி தானும் அவருடன் செல்கிறார் மகன், கொள்கையை சற்றே ஓரமாக வைத்துவிட்டு.

அங்கு சென்ற பின், தூக்கின் திறனை சோதித்து, ஓர் வீட்டில் உட்காருகின்றனர். தூக்கிலிடுபவர், அன்றைய இரவு உறங்காமல் இருக்க வேண்டும். அதற்காக, அங்கு அவருடன் இருக்கும் மூன்று காவலர்கள் அவருக்கு கதை சொல்ல முயல்கின்றனர். முதலில் ஒருவர், அவருக்கு நந்தனார் கதையை கூறுகின்றார். பின்பு மற்றொருவர், அரிச்சந்திரன் கதையை கூற முற்படும் போது, அக்கதையில் நாட்டம் இன்றி தூக்கம் வருவதாக கூறுகின்றார் அண்ணாச்சி. உடனே, மூன்றாவது நபர் சுவாரசியமான ஓர் கதையை கூறுகின்றார்.

அந்தக் கதை:
ஓர் சிறுமி. 13 வயது. ஆடு மேய்க்க செல்லும் போது புல்லாங்குழல் வாசிப்பவனிடம் பழக்கம் ஏற்படுகின்றது.
அவள் தனது காதலனின் புல்லாங்குழலின் இசையில் மயங்குகிறாள். ஒரு நாள், அவனிடம் அவள் புல்லாங்குழல் வாசிக்க கற்று தரும் படி கேட்க, அவனும் கற்று தருகின்றான். அவள் ஆடு மேய்த்து கொண்டே அவனது புல்லாங்குழலை வாசிக்கின்றாள். அச்சிறுமியின் அக்காள் கணவன், அப்போது அங்கு வந்து அச்சிறுமியை கெடுத்து கொன்று விடுகின்றான். ஆனால், அச்சமயம் அங்கு வரும் அவள் காதலன் மீது பழியாகி தூக்கு தண்டனை பெறுகின்றான்.

இக்கதை அண்ணாச்சியின் மனக் கண்ணில் எவ்வாறு விரிகின்றது என்பது இப்படத்தின் திருப்பம், முடிவு. அவர் அச்சிறுமியை மல்லிகாவாக எண்ணிக்கொள்கின்றார். தனது மாப்பிள்ளையை அவளது அக்காவின் கணவனாக பாவித்து அதனால் அவர் மிக துயருற்று, கதையை நிறுத்தும் படி சொல்கின்றார். அப்போது, கதையாளி, "அண்ணாச்சி, எப்படி கதைய நிறுத்தறது? நீங்க தூக்கில போடப்போவது அந்தப் பையனதான" என்கின்றார். அதற்கு அவர் "நான் மாட்டேன், நான் மாட்டேன்" என்றபடியே சரிகின்றார். மாரடைப்பால் இறந்து விடுகின்றார். இச்சம்பவம் மூலம் இயக்குநர், பார்வையாளர்களின் எண்ணத்தை கவ்வுகின்றார்.

இச்சூழ்நிலையில், தண்டனையை நிறைவேற்ற சட்ட சிக்கல் வந்து விடுகின்றது. அப்போது அவரது மகன் பற்றிய எண்ணம் அவர்களுக்கு வருகின்றது. அவனை அப்பணி செய்ய அழைத்து செல்கின்றனர். கடைசிக் காட்சி நிழலாக காண்பிக்க படுகின்றது.

இப்போது பார்வையாளர் மனதில் ஓர் பாரம்.

இப்படத்தின் இசை இளையராஜா. படத்தில் பல இடங்களில் அவரது மேன்மை தெரிகின்றது. இசையே இல்லாத இடங்களிலும், படத்தினுள் இருக்கும் அக் குட்டிக் கதை துவங்கும் போதும், புல்லாங்குழல் இசையிலும் நம்மை கவர்ந்து விடுகின்றார். சில இடங்களில் அவரது இசை ஓர் அமானுஷ்ய தன்மையை கொடுக்கின்றது. இவரும் படத்தின் முதுகெலும்பு.

நன்றாக இருந்தது இப்படத்தின் ஒளிப்பதிவு. காடுகளும், தாமரைக் குளங்களும், மலைகளும், கண்ணுக்கு குளுமை.

சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கட்டாயம் பாருங்கள்.


Tuesday, June 22, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு-கிடையாது!! -1

இன்னைக்கு அபிலாஷ் கூப்பிட்டதால் இந்த படத்தை பார்த்தேன். இன்ஸ்டிட்டுயுட் ஜிம்கானாவில் திரையிட்டனர். அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படம்.
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. குற்றவாளியை தூக்கில போடற பணியை செய்யும் ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் சொல்றாங்க.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் குற்றவாளிகளை தண்டிக்க உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை தருவார்கள். இதை நிறைவேற்றும் பணியை செய்பவர் "அரச்சார்" என்றழைக்கப்படுவர். இது பரம்பரையாக வரும் பணி.

இப்படத்தின் நாயகன் சுமார் ஐம்பது-அறுபது வயதான "அண்ணாச்சி" (கொடுவில் உன்னிக்கிருஷ்ணன்). அவருடைய மனைவி, சுகுமாரி. அவர்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவள் திருமணமாகி, எட்டு வயது பெண் குழந்தைக்கு தாய். அவள் கணவன் (முரளி). அடுத்தவன் சுதந்திர போராட்ட வீரன். சத்தியாகிரகி. கடைக்குட்டி, பதிமூன்று வயதான மல்லிகா.

இப்படம், ஒரு கள்ளுக்கடையில் அண்ணாச்சி குடித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்கும். தான் தூக்கிலிட்ட ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தும் தூக்கிலிட்ட வருத்தத்தை குடித்துவிட்டு புலம்புவார்.

கதையின் ஓர் முக்கிய அம்சம் சமஸ்தானத்தில் நடக்கும் ஓர் பழக்கம். தூக்கிலிடுவதற்கான கயிறை சிறையில் கைதிகள் தயாரிப்பர். அக்கயிற்றுக்கான நோக்கம் நிறைவேறியவுடன், அண்ணாச்சி அதை தன் வீட்டின் பூசை அறையில் வைப்பார். அக்கயிற்றை பஸ்பம் செய்து நோய் கண்டவர்களுக்கு வீபூதியாக கொடுப்பார். அதனால் நோய் தீர்ந்துவிடும் என்று நம்பி பலர் அவரிடம் வருவார்கள். (ஒருகட்டத்தில், நீண்ட நாட்களுக்கு தூக்கில் யாரையும் போடாததால், அண்ணாச்சியின் பவர் குறைந்து விட்டது என்று ஊர்மக்கள் பேசுவர்:-)).

தூக்கிலிடும் பணியை மேற்கொள்ளும் அவருக்கு சொல்லொண்ணா சோகம். தனக்கு தெரியாத ஒருவன் எப்படி தன் எதிரியாக முடியும்?. அவனைக் கொல்கின்றோமே என்ற எண்ணம் அவர் முகத்தில் எப்பொழுதும் தெரியும். தனக்கு உடம்பு சரியில்லை என்றெல்லாம் சொல்வார். ஆனாலும் அவரை அழைத்து சென்றுவிடுவர். தீவிர காளி பக்தர். தன் குற்ற உணர்வை குறைக்க, தன் மீது காளி வந்து இக்காரியம் செய்கின்றாள் என நினைத்து கொள்வார்.

-தொடரும்

Thursday, June 17, 2004

வன்முறை

இந்த பதிவிற்கு திரு. JR அவர்களின் கவிதைதான் காரணம்( அவர் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இட்டது ).
எனது உள்ளில் இருக்கும் மூர்க்கம் சார்ந்த வன்முறையை வெளிக்கொணர அவர் தூண்டுகோலாகிவிட்டார்.

நான் சிறுவயதில் இருந்து செய்த, எனக்கு நினைவில் இருக்கும், வன்முறை என நான் கருதிய செயல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

UKG படிக்கும் சமயம் என் அம்மாவிடம் அடி வாங்கிய போது நடந்தது....
நான் அழுதபடி எங்கள் வீட்டில் இருந்த பலகையில் (சின்ன பலகை) உட்கார்ந்து கொண்டிருந்தேன். செய்த தவறை நான் உணர வேண்டும் என்பதற்காக சினஞ் சொற்கள் கூறிக் கொண்டிருந்தார் என் அம்மா. அது என் கோபத்தை வலுப்படுத்தியது. அவரை எதிர்க்க நான் அப்பொழுது கூறியது," போடி...".

இரண்டாவது வகுப்பு படிக்கும் போது என் நண்பன் முருகானந்தத்திடம் சண்டை இட்டேன். அப்பொழுது எழுந்த வன்சீறலில், என் கைகளின் நகங்களை வைத்து அவன் தொடையை கிள்ளி விட்டேன், இரத்தம் கசியும் அளவிற்க்கு. அவன் தனது போலீஸ் அண்ணனண அழைத்து வருதாக மிரட்டி, என்னை இரு தினங்கள் மிரள வைத்தான்.

எனது தங்கையை நான் கடித்து விட்டதால் பல் பதிந்து இரத்தம் வந்து, அந்த வடு இன்றும் இருக்கின்றது. அவள் கைகளில் மட்டும் அல்ல, எனது நெஞ்சிலும்.

ஐந்தாவது படிக்கும் போது பள்ளிவிட்டு செல்லும்போது ஓர் சண்டையை வைத்து, சக்திவேலும் நானும் மோதினோம். திட்டமிட்ட ஒரு ஒற்றைகொற்றை சண்டை.

தொட்டு விளையாட்டின் போது, எனது தங்கை என்னை முந்திய தருணத்தில் அவளது பொட்டு சிதறி விழ, அதை வன்மத்துடன் எடுத்து பிய்த்து போட்டேன். பாவம் அவள் தப்பினாள்.

ஏழாவது படிக்கும்போது, துடுக்கான முதல் வீட்டுப் பையனின் பட்ட பெயரை அவனது வீட்டின் முன் எழுதி அவனை தாழ செய்தேன்.

என்னை விட வயதில் மூத்த என் ஒன்றுவிட்ட அண்ணனை, குரூரமாக வார்த்தைகளால் தாக்கியது.

இன்னும் பலப்பல உள்ளன....

என் செய்வது, இதை அறிய முயலும் போதும் வேறொரு தவறை செய்து விடுகின்றேன்.

குற்ற உணர்வின் காரணமாக இப்பதிவு எழுத்ப்படவில்லை என்பதையும் வரிகளுக்கு இடையே படியுங்கள்.

Thursday, June 03, 2004

பௌர்ணமி !!

(சூழலுக்கும் எனக்கும் ஒரு மௌனமான உரையாடல்)

சூழல்: ஒரு மெல்லிசான மேகப் படலத்துக்கு பின்னால பளீர்னு நிலா ஒளி வீசிட்டு இருக்கு.
அத சுத்தி ஒரு பளீர் சாம்பல் நிறத்தில இருந்து துவங்கி விளிம்புல கரும் சாம்பல் நிறம் கொண்ட வானம் பரந்து இருக்கு.

நான்: என்ன ஒரு அற்புதம். நிலவொளி பாயுது, வெளியில் மட்டுமல்ல என்னுளும். என்னை அப்படியே இழுத்து மயக்குது. இந்த இனிமை சொர்க்கம்.

சூழல்: நிலா கிழக்கில எழுந்து மேலெ போய்ட்டு இருக்கு. மேற்கு திசைல இருந்து குளிர் காத்து அடிக்குது. சுத்தி இருக்கிற எல்லா இடத்துலேயும் அதோட வெளிச்சம்.

நான்: வெண்ணிலா தக்க தருணத்தில் தனது அழகை முழுமையா காட்ட தயங்குவது இல்லை. தனது முக வடுக்களை கூட முழுதாய்தான் காண்பிக்கின்றது. அப்பொழுது கூட அதன் ஒளி குறைவதில்லை. சரியாக சொன்னால் அப்பொழுதுதான் அது மிக அழகாகவும், பூரிப்பாகவும் உள்ளது.

சூழல்: நகரத்தின் ஒளியும் அங்கே, இங்கே தென்படுது. சோடியம் ஒளி விளக்குனால ஒரு செம்மஞ்சள் ஒளி தூரத்துல இருக்கு. மரங்கள் ரொம்ப கருப்பா இருக்கு.

நான்: "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே...

சூழல்: இந்த மாதிரிதான் நேத்தும் நான் இருந்தேன். மேகம் கோட்டையெல்லாம் கூட கட்டி இருந்தது. ஆனா இன்னிக்கு ரொம்பச் சின்ன ஒரு கோட்டை நிலாவ சுத்தி.

நான்: நிலவை சுற்றி அந்த வட்டமான கசிந்து இருக்கின்ற ஒளி போதி மரத்தையும் புத்தரையும் மனக்கண்ணில் கொண்டு வருகின்றது. இந்த எல்லையற்ற பெருவெளியில் தொலைந்து போகவேண்டும் என் அடையாளங்கள். நானும். காலத்தில் கரைந்து காற்றிலே மிதந்து செல்லும் ஓர் படிமமாகவாவது நான் உணர வேண்டும்.

சூழல்: அந்த வட்டம் சில நிறங்கள காட்டுது...

நான்: வர்ண ஜாலங்கள்....இத துரத்திட்டு போற செயல்.. அந்த ஆக்க சக்தி நான் வேண்டி நிற்கின்றேன். என் எல்லைகள் எனக்கு அரண்கள். உடைக்க முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தத்தளிகின்றேன்

சூழல்: நிலா இன்னும் கொஞ்சம் மேலே போய்கிட்டிருக்கு. வெளிச்சம் எல்லா இடத்திலேயும் இருக்கு. இப்பவும் மேற்குல இருந்து குளிர் காத்து வீசுது. சின்னதா ஒரு கோட்டை இப்பவும் இருக்கு சில நிறங்களோட.




Tuesday, June 01, 2004

ஒரு சிறுகதை..

இந்த கதை தினமனி கதிரில் வெளியாகியுள்ளது. கதையின் கரு ஒரு ஆழமான விஷயத்தை எடுத்துரைகின்றது. நம்பிக்கை ஊட்டும் விதத்திலும் அமைந்துள்ளது. படித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அன்புடன்
பாரி