Monday, August 06, 2007

பாஸ்தாவை எப்படியெல்லாம் சமைக்க கூடாது?

எப்படியெல்லாம் சமைக்க கூடாதுந்னு தெரிஞ்சுக்க, கிரகங்கள், நட்சத்திரங்கள், கிரகணங்கள், கரகங்கள் எல்லாம் கூடி வர்ற மாதிரி ஒரு பொழுது வேணும். மேலதிகமா, ஒரு பேச்சிலரா இருக்கணும் (அட பேச்சு இலர் இல்லீங்க). அதாவது, சாயங்காலம், ஓடியாடி பேட்மிண்டன் மாதிரியான விளையாட்டுகள ஒரு கை பாத்துட்டு, அப்படியே இன்னிக்கு பிட்ஸா வாங்கி சாப்பிடலாம்ந்னு முடிவு பண்ணணும். அப்புறம், மெதுவா இந்த கணிணி பக்கம் வந்து தமிழ் மணம் பிடிச்சுட்டு மறுபடியும் யோசிக்கணும். இந்த சமயத்துல மேலே சொன்ன கூடி வர்ற சாமாச்சாரங்கள் உங்களுக்கு உள்ளே ஒரு குரல உருவாக்கி, அந்த குரல் இன்னிக்கு வித்தியாசமா ஏதாவது பண்ணுவோம்நு அலறணும். அந்த கூச்சல் தாங்காம சரி இன்னிக்கு இந்த காட் பாதர் ஐட்டத்த (அல்லது அன்னை சோனியாவையும் நினைச்சுக்கலாம்) பண்ணுவோம்நு முடிவு பண்ணிக்கணும்.

இப்போ அப்படியே ஒரு கெத்தா, வூட்டுக்குள்ள போய் ஒரு தெளிவான குளியலப் போடணும். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பாத்திரத்துல தண்ணிய எடுத்து அடுப்புல வைக்கணும். குளிச்சுட்டு வந்தப் பிறகு அது நல்லா கொதிச்சுகிட்டு இருக்கும். (இதனால் அறியப்படுவது இவ்வலைப்பதிவர் குளிக்கும் என்ற கர்மத்தை அறிந்தவர் என்பதாகுக!). அப்புறம் ஓசில கிடைச்ச ஒரு டப்பா பாஸ்தாவை எடுத்து அந்த ஒரு முறை நல்லா பார்க்கணும். அதுல என்ன விவரம் இருக்குண்ணு. அப்புறம் என்ன விவரம் இருந்தாலும், ..ha-னு சொல்லிட்டு பாஸ்தா-வ ஒரு குண்ஸா கைல அள்ளி அத கொதிக்கிற வெந்நீல போடணும். இது பார்ட்-1.

இந்த பாஸ்தா இருக்கு பாருங்க இத தனியா சாப்பிட முடியாது. (எப்படியுமே இத சாப்பிட முடியாதுங்கறது சில தங்கமானவர்களோட தனிப்பட்ட கருத்து..:P). இதுக்கு ஏதாவது சாஸ் (நம்மூர்-ல குழம்புந்னு சொல்லுவாங்க) செய்யணும். இந்த "சாஸ்" செய்யணும் அப்படிங்கற எண்ணமே, பாஸ்தா பாதி வெந்ததுக்கு அப்புறம்தான் வரணும். அந்த எண்ணம் வந்த உடனே, இதென்ன பிரமாதம்!! இருக்கவே இருக்கு டொமேட்டோ மிக்ஸ்ட் சாஸ். அதுல கொஞ்சம் பூண்டு, இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்க வைச்சா மேட்டர் முடிஞ்சுது-ங்க ஒரு எண்ணம் தோணணும். அப்புறம் ஃப்ரிட்ஜ்-அ திறந்து அந்த சாஸ் கேன் ந பார்க்கணும். அதுக்குள்ள நல்ல திரவ நிலையில் சிவப்புநிறத்தில ஏதேனும் இருந்தா, ஆகா! ந்னு ஒரு பொறி கிளம்பணும். அந்த சமயத்துல நீங்க அதுல, best before sep18. pest after your use அப்படிங்கறத பார்த்தா ஆகா, இந்த மாதம் தானே நம்ம தங்கச்சிக்கு பிறந்த நாள். நம்ம மருமவப் பையனும் இந்த மாசந்தானே பொறந்தாங்-கிற எண்ணம் எல்லாம் வந்த போன பிறகு, மெதுவா நிகழ் உலகத்துக்கு வந்து பார்த்தா "மகனே! இன்று அக்டோபர் ஐந்து" ந்னு ஒரு குரல் சொல்லும்.
சரியா இப்போ, ஆடின ஆட்டம் நினைவுக்கு வரும். நல்லா குளிச்சது நினைவுக்கு வரும். "தலைல தண்ணி ஊத்தினதும் உனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுமே"ன்னு அம்மா சொன்னது நினைவுக்கு வரும். இப்படி..வரும்................ வரும்..........வரும்..வரும்.வரும்வரும்...னு குணா ரேஞ்சுக்கு ஒரு மனநிலை வரும் பசி-ங்கற் பேய்நால.

இப்படி எல்லாமா வந்து சரி இப்போ நேரம் என்னனு பார்த்தா 9:30ந்னு கடிகாரம் சொல்லும். இப்போ ஒரு ஐடியா தோணும். சரி தக்காளி கொத்சு பண்ணி பாஸ்தால கலந்து ஒரு தாக்கு தாக்குவோம். அன்னை சோனியா இந்தியரான மாதிரி அவங்க ஊரு பாஸ்தாவையும் இந்தியனைஸ் பண்ணிடலாம்னு ஒரு உற்சாகம் தோணி மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும், சிவப்பா ஏதோ பார்த்தா நியாபகத்துல. அப்படி திறந்து பார்க்கும் போது தக்காளி ஆப்பிளா மாறி நம்மள பார்த்து கெக்கலிக்கும்.

இதுக்குள்ள நீங்க ஒரு புத்தனின் மனோநிலையை அடைஞ்சிருக்கனும். (இல்லைண்ணா, மறுநாளே....இல்ல...இல்ல...அப்பவே வீட்டை காலி பண்ண சொல்லி நோட்டீஸ் வந்துறும். வீட்டில இருக்குற ஜன்னல் கண்ணாடி, அவங்க கொடுத்த டின்னர் செட், மேசை நாற்காலிந்னு உடைச்சா அப்படித்தான ஆகும்?. ஆனா புத்தர் அருள் பாலிச்சா, இந்த நிலையையும் கடந்து விடலாம்.)

இப்போ முற்றிலும் மாறுப்பட்ட மனிதரா நீங்க மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும். என்னென்ன இருக்குன்னு பார்க்கணும். (இது சுயத்தை பார்ப்பதிலும் கடினம்நு நீங்க சொன்னா, ஆகா, என் நண்பாந்னு உங்களையும் என்னோட சேர்த்துக்குவேன்.) பாதி வெங்காயம் இருக்கணும். அப்புறம், ஃப்ரீட்ஸர்ல உறைய வைக்கப்பட்ட காய்கறி இருக்கணும். இந்த காய்கறிய எடுத்து கொதிச்சுட்டு இருக்குற பாஸ்தால போட்டு மொத்தமா வேக வைக்கணும். வெங்காயத்தை தனியா எடுத்து எண்ணெய்ல வதக்கிக்கணும்.
இதுக்கு நடுல பாஸ்தாவும் காய்கறியும் வெந்து, அதுல தண்ணிய வடிச்சு பிறகு அதை அப்படியே வெங்காயம் வதக்கி இருக்கிற பாத்திரத்துல கொட்டி ரெண்டு கிளறு கிளறி, பாஸ்தாவை புடலங்காயா நினைச்சு எல்லாத்தையும் சேர்த்து வயித்துல எரிஞ்சுக்கிட்டு இருக்குற நெருப்புக்குள்ள கொட்டணும். சிலர் இந்த செயலை சாப்பிடறதுந்னு சொல்லுவாங்க!!

பாலாஜி-பாரி

No comments: