Monday, August 06, 2007

இரண்டு கவிதைகள்

இன்று புரட்டிக் கொண்டிருந்த கவிதை புத்தகத்தில் இக்கவிதை என்னைக் கவர்ந்தது.
இதை கல்யாண்ஜியின் கவிதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். பல கவிதைகள் நன்றாக உள்ளன.


கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.

-கல்யாண்ஜி


நீண்ட நாட்களாக பதிய வேண்டும் என்று நினைத்த ஒரு கவிதை இந்த புத்தகத்தில் இருக்கின்றது.
உரையாடல் கவிதை அனுபவம்- இந்திரன் மற்றும் வ.ஐ.ச ஜெயபாலன்

இக்கவிதையை எழுதியது இந்திரன். இவரது சில மொழிபெயர்ப்புகளை படித்திருந்தாலும், இவரது கவிதையை ஒரு தொகுப்பாக படிப்பது இதுவே முதல் முறை. மியூசியம் என்ற தலைப்பில் இருந்த கவிதையில் இருந்து சில வரிகள்.

மியூசியம்

பசியிலிருந்து தப்பிக்க
தூக்கம்
மிக உசிதம்

மியூசியம்
படிகளில்
தூங்குவதென்றால்
இன்னும் உன்னதம்.

புராதனமானது
பசியைக் காட்டிலும் வேறென்ன?

மஞ்சள் பூத்துப்போன
எலும்புக்கூடுகளோடும்
துருப்பிடித்த பீரங்கிகளோடும்
தூங்குகையில்

இறந்த காலத்தின் உள்புதைந்த
மரண அமைதியுடன்
இன்றைய உலகின்
உயிர்த் துடிப்புள்ள ஒரு பகுதி
கலந்து விடுகிறது.

வெளியே

தளிர்க்கோதும் மைனாக்கள்
சதா ஒலியெழுப்புகின்றன.

உள்ளே

நூற்றாண்டுகளுக்கு முன்னரே
வெடிக்க மறந்துபோன துப்பாக்கிகளுக்கு
எண்ணெய் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
முதுமக்கள் தாழிகள்
நொறுங்கிய
தங்கள் வயிறுகளுக்குள்
எதிர்காலத்தை
ஏப்பம் விடுமோ என்கிற
அச்சம் ஏதுமின்றி.

ஒளிக்கற்றைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடும்
உதிர்ந்த சருகுகளை

ஊதிப்பறக்க விடுகிறது
காற்று.

-இந்திரன்

No comments: