Monday, August 06, 2007

ஊதா நிற மெழுகுவர்த்தி

Image hosted by Photobucket.com



எனது தேசம்
மணம் நிறைந்த
ஊதா நிற மெழுகுவர்த்தியால் ஆகியிருந்தது
உள் உணரா தேவனின் கட்டளையாக.

வாடையில் நடக்கும் போது
சில சமயம் இறுகியதால்
சில இடங்களில் உடைந்து போனது.

கோடையில் நடக்கும் போது
காற்றில் மணத்தை நிரப்பி
தேசம் உருகியதில் பாதங்கள் சிக்குண்டது.

சட்டென்று எதிர்பாராத கணத்தில்
ஒரு ஒளித் திவலை தோன்றி
என் தேசத்தின் மைய நாடியில்
வளர் சுடராக தன்னை அமர்த்திக் கொண்டது.

வேனில் கால காற்றில்
மணம் நிறைந்த சூழலில்
அமைதியான அந்த மெழுகுவர்த்தியின் ஒளியில்
என்னுள் இப்போது
தேவன் புன்னகைக்கின்றான்.

என்னுடன் நடப்பாயா?


-பாலாஜி-பாரி

No comments: