Saturday, November 29, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள் : 2 ( குடுகுடுப்பாண்டி......)

இந்த நபர் வந்து விட்டால், வாண்டுகளின் சர்வ நாடிகளும் ஒடுங்கி விடும். எங்க காம்பௌண்ட்-ல் இருக்கும் அனைத்து "மல்ட்டிப்பிள்" வால்களும் சுருண்டு அடங்கி விடும். இந்த நபரை பற்றிய எங்களுக்கான அறிமுகம்தான் இதன் காரணம்.
பாலாமாமி சொல்வார் "குட்டிகளா! அவன் உங்கள காணப்படாது கேட்டேளா?" என்று கூறி பின்னர் மிரட்டும் மற்றும் எச்சரிக்கும் குரலில் "அவன் உங்களை பார்த்தாலோ, அப்படியே வீபூதி போட்டு மயானத்துக்கு கூட்டிண்டு போய்டுவன்"என்பார். எங்களில் பலருக்கு மயானம் என்றால் அம்புலிமாமா-வின் விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளத்தின் இருப்பிடம் கண் முன் வந்து மிரண்டு கிடக்கும் எங்களை மேலும் மிரளச்செய்யும்.
இது போதாது என்று எங்கள் வீடுகளில் இருக்கும் அக்காக்களும், அண்ணண்களும், தங்களது சிறுவயதில் எப்படியெல்லாம் அவரின் (குடுகுடுப்பாண்டி) வசியத்தில் இருந்து தப்பியதாக கூறி அவர்களது சாதனைகளை பட்டியலிடுவார்கள். அதிலும், குறிப்பா பாக்கியாக்கா கூறிய சம்பவம் எப்பொழுதும் எனக்கு கனவாக வந்து நுரை தள்ள வைக்கும். அவங்க சொன்னாங்க "நான் அன்னிக்கு உடம்புக்கு முடியாம ஸ்கூலுக்கு போகல. பத்து மணிக்கு தண்ணி பைப் பக்கத்துல நிக்கும் போது அவன் வந்துட்டன். கையும் ஒடல, காலும் ஒடல. நான் ஆம்முக்கு வேகமா ஓட பாக்கிறேன். என்னால ஓட முடியலயாக்கும். (102 டிகிரி காய்ச்சல எப்படி ஓட முடியும்?). அப்போ என்ன அவன் கூப்பிட்டு "பாப்பா! இந்தா விபூதி"ன்னான்"!!. எனக்கு மயக்கம் வர்ர மாதிரி ஆகி, அம்மான்னு கத்திண்டே கிழே விழுந்தேன். அப்போ பார்த்து அம்மை அங்கே வந்தாள். இல்லேன்னாக்கா, இன்னிக்கு நான் உனக்கு கதை சொல்ல இங்க இல்லையாக்கும்", என்று முடித்தாள் மாபெரும் மர்மத்தோடு.
பிற்காலத்தில், குடுகுடுப்பை காரர்களின் வாழ்க்கை முறை அறிந்து, அவர்களின் நாடாறு, காடாறு மாத திரிதல்களில் வியந்து, அவர்களது கடவுளான ஜக்கம்மா-வின் மகிமை(?), கட்ட பொம்முவின் வம்சம் தாங்கள் என்பனவைகளை கூறக் கேட்டாலும், எங்களது அறியா வயதின் அந்த புரியா மர்மம் இப்பொழுதும் எங்களை சிலிர்க்க வைக்கும்.

Friday, November 28, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்.....

நம் வாழ்க்கை அமைப்பில், நாம் விரும்பாவிட்டாலும் நம்முடன் இருப்பவர்கள், "பிச்சைகாரர்கள்".
நம்மில் பலருக்கு பிச்சை எடுத்து வாழும் சில-பல நபர்களின் பரிச்சயம் உண்டாகி இருக்கும். சில வேளைகளில், அவர்களை சந்திக்காவிடில் "இன்ன்னிக்கு எங்கே காணம்?"என்ற எண்ணம் லேசாய் தோன்றி மறையும். அவ்வாறு எனக்கு சிறு வயதில் பரிச்சயமான இங்லீஷ் பிச்சைகாரரை பற்றி....

எங்க காம்பௌண்ட்ல, 11-வீடு இருக்கும். நண்டும், சிண்டுகளுமாய் 8- 10 வாண்டுக இருப்போம். (அதுல சிலருக்கு அது "அவே ப்ரம் ஹோம் க்ரவுண்ட்"). ஞாயிற்றுக் கிழமைகள்ள, வெய்யில வீணாக்காம விளையாடும் போதுதான், மேலே சொன்ன இங்லீஷ் பிச்சைகார அன்பர் வருவாரு. என்னமோ இங்கிலாந்து-ல இருந்து நேரா எங்க காம்பௌண்டிற்கு வர்ரவருன்னு நினைக்க வேண்டாம். ரொம்பபோன அவரோட பூர்வீகம், எங்க தெருவிலிருந்து ஒரு மூன்று தெரு தள்ளி இருக்கும். அவ்வளவுதான். மனுஷன் "சீனுக்கு"வந்த உடனே, அதாவது எதிர்காலத்தில் புகழ் பெற போகும் "லக்ஷ்மி புரம்" காம்பௌண்டின் (எங்க காம்பௌண்டின் திரு நாமம் தான்) நுழை வாயிலை மிதித்ததும், சொல்வாறு "டுடே சண்டே" என்று. இப்படி அவரு சொன்னதுதான் தாமதம் எங்களுக்கு குஷி பிறந்திடும். எங்கள்ல சிலதுக கான்வென்ட்ல் படிகிறதுக. அதுக "டெல் ஒன், டூ, த்ரி...."ந்னு ஆரம்பிக்குங்க. , அவரோட இங்கிலீசு கேட்க, அவருக்கு பின்னாடியெ பதினோறு வீட்டுக்கும் போவோம். சில சமயம் மக்க அடிக்கிற கடுப்புல, அவரு தன்னோட கைத்தடிய வைச்சு அடிக்க வரும் போது "கே-கொள்ளே"ன்னு சத்தம் போட்டு வீட்ல இருக்கிற பெரியவங்களுக்கு எங்கனால முடிஞ்ச அமைதிய கொடுப்போம். அவரு அப்போ என்ன பேசினாரோ தெரியாது. ஆனா, என்னய மாதிரி, நகராட்சி நடு நிலைப் பள்ளி-ல் (BG புரம்) படிச்ச மக்களுக்கு (வாண்டுகளுக்கு) அவர்தான் முதல் இங்லிஷ் வாத்தியாரு......................

Wednesday, November 26, 2003

உயிர்ப் பறவை

ஆழ் மனச் சச்சரவுகள்...
சிதறும் தருவாயில் மனக் குருவி...
..... விட்டு விடுதலையாகி,
அண்டப் பெரு வெளியில்
உற்சாகமாக உயரும் பொழுது
அண்ணாந்து பார்த்து
அமைதியாயின
ஆழ் மனச் சச்சரவுகள்...
விட்டு விடுதலையாகியது

மனக் குருவியா.....???
உயிர்ப் பறவையா.....???

-பாரி

(இந்திய அறிவியல் கழகத்தின் தமிழ் பேரவையின் இலக்கிய மலரான மின்னலில் வெளி வந்த கவிதை இது...)

Monday, November 24, 2003

அன்புடையீர், வணக்கம்!!

பாரியின் உருமி மேளத்தில் வரவிருக்கும் சில தாளங்கள்....
1. சமூகமும் அதன் இயக்கமும்....
2. அறிவியல்.......
3. சில கதைகளும், "கட்டு"உரைகளும்....
4. பாதித்த கவிதைகளும், பாதிப்பால் உண்டான கவிதைகளும்.....