Monday, August 06, 2007

புத்தக விளையாட்டு

என்னை இந்த புத்தக விளையாட்டிற்கு அழைத்த நண்பர் பிரதீபாவிற்கு நன்றிகள்.

சிறுவயதில் எனது வீட்டில் ஒரு வாண்டுகள் பட்டாளம் இருந்தது என்பதாலும், எங்கள் காம்பௌண்டில் பல வாண்டுகள் இருந்ததாலும், குறைவின்றி பல்வேறு வகையான காமிக்ஸ் கிடைத்தது. அதில் என்னைக் மிகவும் கவர்ந்தது ஸ்பைடர்மேன், வேதாளம் (Fantom) மற்றும் இரும்புக்கை மாயாவி போன்ற கதாநாயகர்கள். இதில் சற்றே வித்தியாசப்பட்டவர் இந்த ஸ்பைடர் மேன். தான் குற்றவியல் சக்கரவர்த்தி என்று தன்னை இருத்திக் கொள்வதே இவரது முக்கிய நோக்கமாக இருக்கும். இவருக்கு சவால் விடும் வகையில் வரும் மற்ற கொடுங்கோலர்களையும், போலிஸையும் இவர் சமாளிக்கும் விதம் மிகவும் அற்புதமாக காட்டப்பட்டிருக்கும்.

பொள்ளாச்சியில் பூங்கா அருகில்தான் நூலகம் இருந்தது. அதன் பின் சில இடங்களுக்கு மாறி மீண்டும் பூங்கா அருகிலேயே வந்துவிட்டது. இப்போதும் அது அங்குதான் உள்ளது என்று நினைவு. எனது பெரியப்பா எங்களை பூங்காவிற்கு இட்டு செல்வார். அத்துடன் சற்று இருள் கவியத்துவங்கும் சமயம், அருகிலுள்ள நூலகத்திற்கு இட்டு செல்வார். ஆரம்பத்தில் அங்கு சென்று மிரள மிரள விழித்ததும், ஐந்தாவது ஆறாவது வகுப்பு படிக்கும் காலத்தில் பல்வேறுவகயான குழந்தைகள் கதைகள் கொண்ட அலமாரியை அலற வைத்ததும் நன்றாக நினைவில் உள்ளது. இக்காலகட்டம் எங்களை தனியாக வெளியே அனுப்ப பெற்றோர்கள் இசைந்த தருணங்கள்.

அச்சமயத்தில் எனது வெங்கடராமன் மாமா, தில்லியிலிருந்து நேருபால புத்தகாலயத்தின் பதிப்புகளாக் சுமார் பதினோரு புத்தகங்கள் அனுப்பி வைத்தார். நமது கப்பற்படை, கிரிகெட், பறவைகளைப் பார், பூனை இனம், வேடிக்கை கதைகள், என ஒரு நீண்ட பட்டியல் அது. பெரும்பாலும் ஒவ்வொரு விடுமுறையிலும் அந்த புத்தகங்கள் எங்களால் மீண்டும் படிக்கப்படும். எனது விவரமான புத்தக வாசிப்பு இங்கு இருந்து ஆரம்பித்தது எனக் கொள்ளலாம். விடுமுறை காலங்களில் எனது தந்தையார் அவரது பள்ளியில் இருந்து கொண்டு வந்த சிந்துபாத் கதைகள் மனதில் அப்படியே இருக்கின்றது. அதன் பிறகு சற்று பதிமன் வயதுகளில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் கருதி, எனது தந்தை abridged version-களாக வந்த count of montecresto, around the world in eighty days என சில புத்தகங்களை அறிமுகப் படுத்தினார்.

பத்தாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாட புத்தகம் தவிர வேறெதுவும் படித்ததாக நினைவில் இல்லை. non-detailed-ல் நல்ல சிறுகதைகள் படித்தது நினைவில் உள்ளது. மிளகாய் பழச்சாமியார், மற்றும் ஜெயகாந்தனின் சிறுகதை (நந்தவனத்தில் ஓர் ஆண்டி) இன்றும் நினைவில் உள்ளது.

பிற்பாடு கல்லூரியில் சேர்ந்த பிறகு வாசிப்பு விரிய ஆரம்பித்தது எனலாம். பல்வேறு வகையான புத்தகங்கள், ருசிய கதைகள், என சுவாரசியமான பருவம் அது. திரு. ஈ.அருணந்தி அவர்கள் தாய் புத்தகத்தை கொடுத்து படிக்கச் செய்தார். முதல் வாசிப்பில் அதில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு புரியவில்லை. அதை மீண்டும் இருவருடங்கள் கழித்து படிக்கும் போது, கீழே வைக்க முடியவில்லை. அந்த வருடங்களில்தான் எனக்கு சமூகத்தை பார்க்க சில துணிவுகளும், தேவைகளும் ஏற்ப்பட்டது. எனது வாழ்வியல் ஆசானாக அருணந்தி அவர்கள் இருந்தார். இப்பொழுது என் நினைவில் மட்டும் இருக்கின்றார். அதன் பின் உண்மையில் எனது சிந்தனைகளை புரட்டி போட்ட புத்தகம் என்றால் அது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய புத்தகம். அது பல் வேறு தளங்களில் எனதாக இருந்த கற்பிதத்தை தகர்த்து எறிந்தது.

பின்பு இந்திய அறிவியற் கழகத்திற்கு வந்த பின், இன்னும் பல நட்புகள். இன்னும் பல புத்தகங்கள். இங்கு கிடைத்தது அக வளர்ச்சிக்கான புத்தகங்கள். குறிப்பிட்டு சொல்வதானால் ஹெர்மென் ஹெஸ்ஸெ-வின் சித்தார்த்தா, ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல், ஒல்ட் மேன் அண்ட் த சீ, அவன் காட்டை வென்றான், பால் கொய்லோவின் அல்கெமிஸ்ட் போன்றவை. ஆனால் உளப் போக்கிற்கு ஏற்ற வகையில் இருந்தது என சொல்லும் வகையில் அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ், கி.ரா வின் படைப்புகள், to kill a mocking bird போன்றவைகளை சொல்லாம். மேலும் நல்ல அனுபவமாக இருந்தது, மோக முள், செம்பருத்தி, சிந்தாநதி (குறிப்பாக சொல் என்ற தலைப்பின் கீழ் வரும் இரு கட்டுரைகளும்), அபிதா. இந்த சமயத்தில்தான் ஜெயகாந்தனின் கதைகளும் வாசித்தேன். அவரது கதைகளின் முன்னுரைகள் என்றும் fresh-ஆனவை. எனக்கு அவரது கதைகளின் மிகவும் பிடித்தது ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும். பாரீசுக்கு போ ஒரு நல்ல நாவல் என்றாலும் அதன் களத்தை அவர் வலிய உருவாக்கி இருந்ததால் ஒருவித செயற்கைதனம் தெரிந்தது. அவரது சிறுகதை தொகுப்பும் அப்போது வாசிக்க கிடைத்தது. என்னை மிகவும் குதூகலப்படுத்தியது குட்டி இள்வரசனும், ஜன்னலில் ஒரு சிறுமியும். அப்துல் ரகுமானின் காதல் கவிதை தொகுப்பையும் இங்கு தான் வாசித்தேன். வண்ணதாசன் எழுத்துக்கள் எனக்கு உண்மையை மட்டும் உரைப்பதாக தெரியும். சின்னு முதல் சின்னு வரை ஒரு தேர்ந்த படைப்பு. மனித உணர்வின் மாற்றங்கள் வீடுவீடாக மாறும் அற்புதம் அதில் காணலாம். நிலா பார்த்தல்- படித்ததன் விளைவு air field-ல் பல இரவுகள் கழிந்தன.

மேலும் என்னை அதிர வைத்த புத்தகங்கங்களாக நான் நினைப்பது, 1. கம்பிக்குள் வெளிச்சம் 2. தூக்கு மேடை குறிப்புகள்.3. நாகாராஜன் படைப்புகள். இவை எனது பல நாட்களின் இரவை தின்றுள்ளன. இதை தவிர வேற்று மாநில படைப்புகள் என்றால் இந்திரன் தொகுத்த அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், சமஸ்காரா போன்றவை என்னை பாதித்தவை எனக் கொள்ளலாம்.

இப்பொழுது வாசிப்பில் இருக்கும் புத்தகங்கள்

1. முறிந்த பனை
2. பச்சை தேவதை
3. If life is bowl of Cherries, what am i doing in the pits?
4. இரவில் நான் உன் குதிரை (சிறுகதை தொகுப்பு)
5. மூலதனம் -தியாகுவின் மொழிப் பெயர்ப்பு

எப்போதும் வாசிப்பது

1. பாரதியார் கவிதைகள்
2. திருக்குறள்

மிகமிக முக்கியமான புத்தகங்களாக கருதுவது

1. வால்காவிலிருந்து கங்கை வரை -சாங்கிருத்யாயன்
2. ரூட்ஸ் - அலெக்ஸ் ஹேலி
3. குட்டி இளவரசன் - எக்சுபெரி
4. மோகமுள்- தி.ஜா.ரா
5. தூக்குமேடை குறிப்புகள்- புஸிக்
6. கம்பிக்குள் வெளிச்சம் -தியாகு
7. ஜன்னலில் ஒரு சிறுமி - டேட்சுகோ குரொநாயகே
8. தாய் -கார்க்கி


படிக்க விரும்பும் நூல்கள்

இது ஒரு பெரிய பட்டியல்.

நான் புத்தகங்களை படிக்க எனது நண்பர்களே காரணம். கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எங்கள் மத்தியில் சுழற்சி முறையில் இருந்தது. தங்கமணியின் அறை ஒரு குட்டி நூலகமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. எனது அறையில் நான் இருந்ததை விட அவரது அறையில் நான் கழித்த அர்த்தமுள்ள பொழுதுகள் ஏராளம். அது போல் கோகுல்-தேவி -யின் வீட்டில் படித்த புத்தகங்கள் குறிப்பாக அனைத்து JK புத்தகங்கள் தேவி தந்தவைதான். இதை தவிர மீனா எனக்கு வழங்கிய புத்தகங்களும் பல. பாபு கொடுத்தது எனது அறையில் ஆப்பிரிக்க வானம். பின்பு சென்னை செல்லும் போதெல்லாம், new bookland-ல் வாங்கியவையும் அடங்கும். பெங்களூரை விட்டு கிளம்பும் சமயம் வாங்கிய புத்தகங்கள் இப்போது மீனா வீட்டில் இருக்கும் நான் படிக்காத புத்தகங்கள்.

நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்

1. மயிலாடுதுறை சிவா
2. சங்கர பாண்டி (இவருக்கு வலைப்பதிவு இல்லை. எனக்கு அனுப்பினால் நான் அதை இடுகின்றேன்)
3. பொள்ளாச்சி நசன் (இவர் படித்ததை
முழுதாக எழுத இயலாது என தெரியும். ஆனால் இவரது வாசிப்பனுபவம் நமக்கு மிக்க
பயனுள்ளதாக இருக்கும்)
4. செல்வராஜ்
5. நற்கீரன்
6. நந்தலாலா

No comments: