Monday, August 30, 2004

இதயத்தை சுமக்கின்றவர்கள்!!!


இது மற்றொரு ஜீவன். தன் இதயத்தை ஒரு கூடையில் சுமந்து கொண்டு அதை இடுப்பில் இட்டு காக்கை, கழுகுகளிடமிருந்து காப்பாற்ற ஒரு மெல்லிய துணியால் மூடி ஒரு ஒற்றையடி பாதையின் வழியாக முக்கிய வீதியை அடைந்தது.

அஜ்ஜீவனின் நடையிலும் தீவிரம். முகத்தில் ஒரு நிராசை. என்ன இது என்று சொல்ல இயலா ஒரு குறிப்பில்லாத முகத்தோற்றம்.

அந்த ஜீவனின் நடை முன்னோக்கியே இருந்தது. பையில் இதயத்தை சுமப்பவர், அந்த ஜீவனை சந்திக்க ஆவலானார். தனது துரித நடையில் நம்பிக்கை வைத்து, அடிகளை எட்டிப் போட்டார். அந்த ஜீவனின் கவனத்தை கவர தன்னால ஆன அனைத்தையும் செய்தார். ஒரு வழியாக அவரை எட்டினார். கூடையில் இதயம் சுமப்பவரை சற்று கடந்ததும், தலையை மட்டும் திருப்பி, எங்கே என்று கண்களால் வினவினார். ஆனாலும் இருவரின் நடையிலும் சற்றும் வேக குறைச்சல் இல்லை.

கூடையில் இதயம் சுமப்பவரோ, 'பாதைகள் பலவானாலும் போகும் இடம் ஒன்று' என்று கூற, கைப்பைக்காரர் அமைதியுற்றார்.


கூடையில் இதயம் சுமப்பவர் தான் கடந்து வந்த பாதைகளை நினைக்கும் பொழுது, சிறிது துணுக்குற்றார். தனது குழந்தை பருகிய அமிர்தம் சுரந்த முலைகளில் ரத்தம் சுரக்க துவங்கும் கணம் தனது இதயத்தை பிடுங்கி கூடையிலிட்டது நினைவுக்கு வர அவருக்கு வியர்வை பெருக்கெடுத்தது, இதயம் கூடையில் இருந்தாலும்.

பதின்ம வயதில் இருக்கும் தனது வாரிசை கிளம்பிய இடத்திலே மட்டும் விட்டு விட்டு, தனது இதயத்தை பிய்த்து கையில் வைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்த உடன் தன் பாச உணர்வுகள் மறக்கடிக்கப்பட்டது உறைத்தது. ஆனாலும் அது எந்த ஒரு வலியையும் தோற்றுவிக்கவில்லை. எதேச்சையாக கைகள் நிரடும் போது, காய்ந்த போன ரத்த துளிகள் மட்டும் மூளைக்கு செய்தியாகச் சென்றது.


அவர்கள் நடந்த போது உண்டான சரக் சரக் சப்தம் மட்டுமே அவர்களுக்கு ஒலித் துணையாக இருந்தது.


அவர்கள் சென்ற பாதை சில மலைகளுக்கு நடுவில் ஒரு பள்ளத்தாக்கை அடைந்தது. அப்பள்ளத்தாக்கு அவர்கள் வந்தது போன்ற பல பாதைகளின் சங்கமமாக இருந்தது. அப்போதுதான் கைப்பைக்காரர் அங்கே பல மனிதர்கள் பரவி இருந்ததைக் கண்டார். மரத்தின் நிழல்களில், பெரிய பாறைகளின் அடியில், சிறிய குகைகளில், இவ்வாறு பல இடங்களில். அனைவரிடத்திலும் ஒரு கைப்பையோ அல்லது கூடையோ அல்லது பாலிதீன் பைகளோ அல்லது கனச்துர, செவ்வக வடிவ டப்பாக்களோ இருந்த்தது.


மனத்தின் சார்புகளை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்தார்களா? அல்லது முடிவு செய்ய வைக்கப்பட்டார்களா?.

-தொடரும்


பாரி

Friday, August 27, 2004

இதயத்தை சுமக்கும் கணங்கள்...

குருதி வடிந்து கொண்டே இருக்கும் தனது இதயத்தை முதலில் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்கத் துவங்குகையில் அதன் ஆர்ப்பரிப்பு ஒரு இம்சையை கொடுத்தது. ஆகையால் அதனை ஒரு பையில் இட்டு, அதன் கைப்பிடி உதவியுடன் வசதியாக தூக்கி சென்றால் என்ன? என்ற எண்ணம் மேலிட, அவ்வெண்ணம் செயல் வடிவம் பெற்றது. அந்த இதயத்தின் ஆர்ப்பாரிப்புகள் தற்காலிகமாக அடக்கப்பட்டது.

பல கண்கவரும் வண்ணங்களை காட்டி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி அந்த கைப்பையில் இருக்கும் கருஞ்சிவப்பு இரத்தம் தோய்ந்த இதயத்தை காண்கின்றாள். உடனே தனக்கு கூறப்பட்ட ஆப்பிள் பழம் அவள் நினைவில் வர, " கைப்பையில் ஆப்பிள்! கைப்பையில் ஆப்பிள்" என்று உற்சாக குரல் எழுப்பினாள்.

தன் இதயம் வெளியில் பளபளப்பான கருஞ்சிவப்புடன் இருந்தாலும் அதை அறுத்துப் பார்த்தால் அதனுள்ளே எங்கும் வெண்மை படர்ந்து இருக்கும் என்ற எண்ணம் சட்டென்று தோன்றி மறைகின்றது. ஆனாலும் தனது நடையில் சற்றும் தளர்வில்லை.

ஒரு பூனையை ஒரு பையில் வைத்துக் கொண்டு சற்று தூரம் நடந்துள்ளீர்களா? அதுவும் ஒரு சுறுசுறுப்பான பூனையுடன்?. அப்பூனையை விட மென்மையான அதைவிட சுறுசுறுப்பான தனது இதயத்தை அப்பையில் சுமந்து செல்வது சற்று வேடிக்கையாகவே இருந்தது. ஆனாலும் ஆர்பாரித்த இதயம் பூனை போல் அல்லது அதைவிட சமர்த்தாக இருந்ததால் நடையை சற்று நிதானமாக்க நினைத்தாலும், நடையின் நோக்கம் நடையை தளரச் செய்யவில்லை.

அந்த கைப்பையில் இருந்த இதயம், ஒரு குழந்தை ஓவென்று அழுது பின் சமாதானமடைந்து, மறுபடியும் அழ ஆரம்பிப்பது போல மீண்டும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. தனது கைகளால் அதனை வருடி சமாதனமடையச் செய்த முயற்சி பலனற்றுப் போனது. குருதி ஊறும் இதயத்தின் ரத்தம் மட்டுமே உள்ளங்கையில் மிச்சம். ஆனாலும் தனது நடையில் தளர்வில்லை.

சந்தியா காலங்களில் மலர்ந்த சிறிய ஆரஞ்சு நிற தண்டுகள் கொண்ட அழகிய வெண்மையான இதழ்களுடன் அமைந்த பவளமல்லி மலர்களிலிருந்து கிளம்பிய நறுமணம் நாசியை வருடி சிலிர்க்கச் செய்தது. ஆனாலும் இதயத்திற்கு இதமோ இம்மணம் என தோன்றும் பொழுதே, இதயம் தனியாக தனது கைப்பையில் இருக்கின்றது என்ற நினைவு ஒரு வறண்ட புன்னகையாக வெளிப்பட்டது.

-தொடரும்.

(இது ஒரு தொடர் முயற்சி. இதன் முதல் அத்தியாயம் இப்போது நீங்கள் படித்தது. ஒவ்வொர் அத்தியாத்தின் தலைப்பு அப்பதிவின் தலைப்பாக அமையும். கடைசியில் இதை தொகுத்து ஓர் நாமகரணம் செய்வோம். -அன்புடன் -பாரி )

Thursday, August 12, 2004

அறிவார்ந்த அடிமைகள்

இப்போதெல்லாம் எனக்கு தோன்றுகின்ற சில விசயங்களை நான் பகிர்ந்து கொள்கின்றேன். இது எதற்கும் களிம்பல்ல.

ஒரு விசயம் நடக்கின்றது. அந்த விசயத்தை நீ பார் என்றால், அவர்கள் தங்களை அந்த விசயங்களோடு இணைத்து கொள்கின்றனர். தாங்களே அவ்விஷயம் என பாவித்து கொள்கின்றனர். இது எந்த வகை மனோபாவம் என்றால், ஆங்கிலேயனுக்கு கணக்கு எழுதி அதனால் தங்களுக்கு ஓர் பெருமையும், அடிவருடியதால் கிடைத்த எச்சில் பொட்டலங்களை அலுவுலகத்தை விட்டு வெளிவந்த பின் "பார்! என் கையில் பொட்டலம். நான் உங்களினும் மேலானவன்!!" என்று பாமர சனங்களை பயமுறுத்திய பச்சோந்தி மனோபாவம்.

இவர்களுக்கு போராட்டம் என்பது, பள்ளியில் டப்பா அடித்து மதிப்பெண் பெறுவது மட்டும்தான். தன்னைவிட பலம் வாய்ந்த தெரிந்தே தவறு செய்யும் அமைப்பை எதிர்ப்பதை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. தன்னை அடிமையாய் வைத்துள்ள ஓர் அமைப்பு எதை எதிர்க்கின்றதோ அதை அவர்களும் எதிர்ப்பர். ஏனென்றால் அதுதான் அவர்களது உளவியலுக்கும் இருப்புக்கும் பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். இவர்கள் அந்த அமைப்பினால் செய்யப்படும் சுரண்டல்களயும் துரோகத்தையும் இனி வருங்காலங்களில் வருந்தாமல் பாரம் சுமப்பர். அவ்வளவுதான் இவர்கள்.

இந்த இடத்தில்தான், நான் மேலும் சில விசயங்களை கூற விரும்புகின்றேன்.

1. இவர்களால் அழ முடியுமே தவிர அடித்தவரை நேர்கண் கொண்டு பார்க்க முடியாது.

2. அடித்தவர் ஏன் அவ்வாறு என்று சொல்லாமல், ஓர் மிட்டாய் அல்லது ஓப்பியம் கொடுத்து அடியை மறக்கச் செய்வார்.

3. இவர்களும் எப்படி எங்கள் தலைவர்கள் என்று அவர்களை பாராட்டி ஓப்பிய பயன்பாட்டை எதிர்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக அதை உட்கொள்வர்.

4. இவர்களும் விடுதலை பற்றி பேசுவர். அவர்கள்தான் உலகில் (நாட்டில்) உள்ளனர் என்றும் மற்றவர்கள் முன்னிருந்தவாறே இருக்க (தங்கள் அடிமையாய் இருக்க) வேண்டும் என்றும் கூறுவர்.

5. இந்த விசயங்களை போற்றி பாதுகாக்க பலரின் அருளாசிகளும் உண்டு.

இவர்கள் பேசுவதில் உள்ள ஆதிக்க மனப்பான்மை எதிராளியை மருளச் செய்யும். இவர்களில் எவரேனும் ஈராக் சம்பவத்தை எழுதிய அதே வேகத்துடன் மணிப்பூர் சம்பவத்தை பற்றி எழுதுகின்றனரா?. இவர்களுக்கு முக்கியம் சொந்த நலன்கள். இவர்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதிலும், ஆடம்பர பேச்சுகள் மூலமும், கோஷ்டியாய் வந்து தாக்குவதன் மூலமும் தங்கள் அமைப்புக்கு அடிவருடி தங்களை இழந்து கொண்டே தங்களின் போலித்தனத்தை சற்றும் வெட்கமின்றி தொடர்வார்கள்.

அடிப்படையான நேர்மைத்திறனும், உண்மையான மனிதப் பண்பும் பார்த்து இவர்களிடம் பேசினால் சேற்றை வாரி இறைப்பர் ஏனென்றால் அவர்கள் உழல்வது அதிலேதான்.

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....


அன்புடன்
பாலாஜி-பாரி