Monday, August 06, 2007

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 6 தபால்காரர்(கள்)

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரை மக்களின் வாழ்வோடு பின்னி பிணைஞ்சவருனு நான் பார்க்கிற ஒரு நபர் இந்த தபால்காரர். நாங்க வாண்டுகளா இருக்கும் போது எங்க காம்பௌண்ட்க்கு ரெகுலரா வருவதால் கவனத்தை ஈர்த்த நபர் இவரு. பதினோரு வீட்ல ஏதாவது ஒரு வீட்டிற்காவது தபால் இருக்கும். ஐயங்கார் மாமி, எங்க அம்மா-ட்ட,``ஏண்டி ஜெயம், தபால்காரன் வந்துட்டானா?``ன்னு கேட்பார். அப்படி கேட்டால், NGM காலேஜ்ல மேலாளரா வேலை செய்யும் அவரோட கணவருக்கு மதிய சாப்பாடு எடுத்து செல்ல, அந்தோணி என்பவர் சீக்கிரம் வந்துருவார்னு அர்த்தம். இப்படி தபால்காரர் வருவது அவருக்கு நேரத்தை உணர்த்தும் விசயமா இருந்துச்சு.

இந்த தபால்காரர்கள் சைக்கிள் அல்லது கால் நடையா நடந்து, ஒரு கற்றை காகிதங்களை கையில் வைத்துக் கொண்டு, மீதியை அவர்களின் உடலுறுப்பாகவே ஆன தோள் பையில் வைத்துக் கொண்டும் வருவது, பலருக்கு ஒரு வகை எதிர்ப்பார்ப்பையும், நிம்மதியையும் தருவதாக இருக்கும். எங்க ஏரியா தபால்காரர் பொதுவா, பாலா கோபால(BG) புரம் தெரு ஆரம்பித்து, பல்லடம் ரோட்டை ஒட்டிய சில இடங்களை சுற்றி விட்டு பின்பு எங்க தெருவுக்கு வருவார். எனது பெரியப்பாவிற்கு எப்போதும் ஒருவித பரபரப்பு உண்டு தகவலை முன் கூட்டி அறிவதில். ஆகையால் விடுமுறை நாட்களில் (postal holidays அற்ற மற்ற நாட்களில், குறிப்பா சனிக்கிழமைகளில்) என்னையும் சில வாண்டுகளையும் முன்னரே BGபுரத்திற்கு அனுப்பி தபால்காரரிடம் தபாலை பெற்று வரச் சொல்லுவார். அப்போது நாங்க வண்டிய எடுத்துகிட்டு (பஸ் தான்...) சும்மா டிர்ர்ர்ர்ன்னு கிளம்பினா, கிருஷ்ண மூர்த்தி டாக்டர் கிளினிக் பக்கத்துல அவர பிடிச்சுடுவோம். அவருக்கு மூடு நல்லா இருந்தா உடனே பார்த்து தருவாரு. இல்லாட்டி ``அதுதான் வரிசையா வரேன்ல.. போய் அய்யன்கிட்ட சொல்லு``ன்னு முடுக்கி விடுவார். அவரு தபால கையில குடுத்துட்டார்னா வர்ற சந்தோஷம் இருக்கே யப்பா....

இவர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம். இது ரொம்ப பாஸிட்டிவ்வான ஒரு தன்மைன்னு இன்றைக்கு தோன்றுகின்றது. எப்போ போய் இவங்ககிட்ட தபால் இருக்கான்னு கேட்டாலும், அன்றைய நாள்ல நமக்கு தபால் இல்லைன்னா, ஒரு வித கடமை கலந்த மனோபாவத்துடன், ``நாளைக்குதான்`` ந்னு சொல்லுவாங்க. தபால் இல்லைன்னு மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்ல மாட்டாங்க. இதுவே எங்களுக்கு பழகி போய்,``என்னங்க தபால் இருக்கா, இல்ல நாளைக்கு தானான்னு`` கேட்க ஆரம்பிச்சிட்டோம்.
இவர்கள் அணியும் சீருடை பல சமயங்களில் வண்ணங்கள் மாற்றப்பட்டு, சமீப காலங்களில் காக்கி நிறத்தில் இருக்கின்றது. எனக்கு தெரிந்து இவர்கள் ஒரு வித சாம்பல் கலந்த நீல நிறம், மர நிறம், என பல நிறங்களில் காட்சி தந்துள்ளனர். மேலும் ஒரே பீட்டில் நீண்ட நாள் வந்தவராயின் ஒரு சினேக மனோபாவத்தையும் இவர்கள் நமக்கு தருவார்கள். என்னோட அன்பு ராஜூ அண்ணாவிற்கு இண்டர்வியூ கடிதம் வரும்னா அதை முன்னரே தபால் காரரிடம் சொல்லிவைத்து தபால் நிலையத்திலேயே அதை வாங்கிக்கிற சலுகைகளையும் அவங்க தந்தாங்க.
நாங்க பழனிக்கு மாறினப்பிறகு, இங்கும் தபால்காரர்களது தன்மைகளின் பல ஒற்றுமைகளை பார்த்தேன். நாங்க இருக்கிறது தெற்குரத வீதி. அப்பா பெயர் திரு. சுப்பிரமணியன். வடக்குரதவீதியிலும், இன்னொரு திரு. சுப்பிரமணியன். இன்னொரு ஒற்றுமை (தபால் காரருக்கு கொடுமை) என்னன்னா, இவரும் வாத்தியார். தெருவின் பெயர் சரியாக இல்லாத, குறிப்பா ரதவீதி -ன்னு மட்டும் இருக்கிற கடிதங்கள் சிலது ரெண்டு இடத்திலும் பாடாய் படும். ஆனாலும் இந்த தபால்காரர் இருக்காரே, மிகச் சரியாக இதை கொண்டு சேர்த்துடுவார்.
நான் பெங்களூர் வந்த பிறகு, இன்ஸ்டிட்யூட்டில் என்னை அடையாளம் கண்டு கையில் கடிதத்தை கொடுக்கும் அளவிற்கு அவர்கள் நட்பு பாராட்டினார்கள்.`` ஏனு பாலாஜி சாரே``-ன்னு அவங்க கூப்பிடறதுல இருக்குற வாஞ்சை மற்ற எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை. இவர்கள் நமக்கு முக்கிய செய்தி தொடர்பாளர்களாக இருக்கின்றனர். இந்த ஈ-மெயில் யுகத்திலும் இவர்களது சேவை மிக்க அவசியமானது. இவர்கள் மழை வெய்யில் என்று எந்த காலநிலையிலும் தங்களை கரைத்துக்கொண்டு நமக்கு செய்யும் சேவைக்கு ஈடு ஏதுமில்லை.மேலும் கிராமங்களில் இவர்களது சேவை பலதரப்பட்டது. சிலருக்கு படித்துக்காட்ட வேண்டும். சிலருக்கு பதில் எழுதிதர வேண்டும். போர் முகத்தில் இருக்கும் தனது மகனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து இருக்கும் மூதாட்டிக்கு ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கும். இவ்வாறு பல ..ம் கள்.
இவர்களின் தொழிற்சார்ந்த சகோதரர்கள் தான் தந்தி பட்டுவாடா செய்யும் நபர்கள். இரவு பகல், என்றில்லாமல் எந்த வித செய்தியையும் ஒரு ப்ரோஃபசனல் மனோபாவத்துடன் செய்யும் இந்த நபர்களும் நமது நன்றிக்குரியவர்கள்.
இப்படி பட்ட இந்த நபர்களுக்கு அரசாங்கம் தரும் சம்பளம் மிகவும் சொற்பமே. இந்த அருமையான நண்பர்கள், விழா காலங்களில் ஒரு பேப்பர் எடுத்துக் கொண்டு உங்களால் ஆனதை கொடுங்கள் என நம் முன் நிற்கும் போது, நாம் தான் உண்மையில் வெட்கம் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன்
பாலாஜி-பாரி

No comments: