Monday, August 06, 2007

தலித்துகளின் தொடரும் அவல நிலை: விவாதங்களின் தொகுப்பு

இந்த பதிவு கடந்த பதிவில் இருந்த பின்னூட்டங்களின் தொகுப்பே ஆகும். இது ஆவணப்படுத்தலுக்காக மீண்டும் இடப்படுகின்றது.
உங்கள் தகவலுக்காக.

தலித்துகளின் தொடரும் அவல நிலை..

தீண்டாமை என்றோ நடந்ததாக பேசி இக்காலத்தில் அவர்களுக்கு போதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பவர்களுக்காக இந்த சுட்டி. ஒரு பெரிய ஆதிக்க ஜாதியின் தன்மைகளை உள்வாங்கி தன்னளவில் அதை நிகழ்த்தும் ஒரு வெறியர்களின் கூட்டத்தின் செயல் என்று தடுக்கப்படும்?.

தங்கமணி :

http://thatstamil.indiainfo.com/news/2005/04/24/buddha.html
இதைப்பாருங்கள். தமிழகத்தில் (இந்தியாவில்) இது பெருமளவு நடக்கவேண்டும். மற்ற மதங்களைவிட புத்தமதம் தமிழ்நாட்டில் குறைவாகவே நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. தவிர இந்து, ஆபிரகாமிய மதங்களைவிட குறைவான அமைப்புரீதியான மடத்தனங்களைக் கொண்டுள்ளதும் ஒருகாரணம்.

ரோஸாவசந்த் :

பாலாஜி, எழுதியதற்கு நன்றி. ஆனால் ஆதிக்க ஜாதியினர் என்று பொதுவாய் சொல்வது சரியல்ல. தேவர் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் உள்ளது என்று நினைக்கிறேன்.

karthikramas Says:

//தேவர் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் உள்ளது //
கள்ளர் என்றுசொல்ல வந்தீங்களா? இந்த செய்தியில் அப்படித்தான் படித்ததாய் ஞாபகம்

காசி Says:

//இதற்கிடையே, தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அழகுமலை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், தலித் சமுதாயத்தினர் இந்தக் கிராமத்தில் சிறுபான்மையினராக உள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவது நியாயமாக இருக்காது. எனது மனசாட்சிக்கு அது நியாயமாகப் படவில்லை. அதனால் தான் பதவயை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறியுள்ளார் அழகுமலை.//
பெரும்பான்மையினர் ஆண்டால்தான் அது சரி என்பதுபோலவும், என்னவோ எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினர்தான் ஆள்வதுபோலவும்! நல்ல சப்பைக்கட்டு. இந்த ஒரு ஊர் அவலத்தை சரிப்படுத்த முடியாமல் முக்கியக் கட்சிகள் ஜனநாயகம் பேசுவது கேலிக்கூத்து.

-/பெயரிலி. Says:

/தவிர இந்து, ஆபிரகாமிய மதங்களைவிட குறைவான அமைப்புரீதியான மடத்தனங்களைக் கொண்டுள்ளதும் ஒருகாரணம். /
அப்படியாகச் சொல்லமுடியுமா, தங்கமணி? ஆனால், புத்தர் போதித்த பௌத்தம் குறித்து நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன்.

Dondu Says:

இத்தொகுதியில் உள்ள ஆதிக்க சாதி பிறமலைக் கள்ளர் வகுப்பினர். இம்மாதிரி சம்பந்தப்பட்ட இடங்களில் ஆதிக்கசாதியின் பெயரை அடையாளம் கண்டு எழுதிக் கொண்டு வந்தால் ஒரு பெரிய உண்மை தெரிய வரும். நல்லத் துவக்கம்.
காசி கூறுகிறார்: “பெரும்பான்மையினர் ஆண்டால்தான் அது சரி என்பதுபோலவும், என்னவோ எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினர்தான் ஆள்வதுபோலவும்!”
சிறுபான்மை வகுப்பினர் சில இடங்களில் வெற்றி பெற்றால் அது தனிப்பட்ட வேட்பாளரின் வெற்றி. பெரும்பான்மையினர் இவர் நமக்கு நல்லது செய்வார் என நம்பி வாக்களிப்பதாகும். இந்த இடத்தில் அது பொருந்தாது. பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப் பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும். எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

தங்கமணி Says:

பெயரிலி, தமிழ்நாட்டில் பெளத்தம் ஒரு பலகீனமான அமைப்பையே கொண்டிருக்கிறது. மேலும் அதில் சாதியைக் கொண்டுவரமுடியாதென நினைக்கிறேன். நான் பெளத்ததை முன்வைக்கும் போது ஜப்பானில், கொரியாவில் இருப்பது மாதிரி அமைப்பு வழிபட்ட இறுக்கமான மத நம்பிக்கையற்ற ஒரு சூழல் இங்கும் (தமிழ்நாட்டில்) வரவேண்டியே சொல்கிறேன். நிச்சயம் இலங்கை போல நிறுவனப் படுத்தப்பட்ட ஒன்றை நோக்கியல்ல.

-/பெயரிலி. Says:

தங்கமணி நன்றி. புரிகின்றது.
டோண்டு ஐயா, உங்களுக்கு ஐயங்காரை ஆதிக்கசாதி என்று எண்ணாதவரையிலே உங்களுடைய பிரச்சனை முடிவடைந்துவிடுகின்றது என்று தோன்றுகின்றது. தேவர், கள்ளர், நாடார் என்று தலித்தோடு நிகழும் சாதிக்கொடூரம் ஒரு புறமிருக்கட்டும். ஏன் பிராமணர்கள் (குறிப்பாக, ஆர் எஸ் எஸ் + பிஜேபி இனைச் சேர்ந்த பிராமணர்கள்), தலித்துகளை நோக்கித் தம் கட்சிக்காகக் குறிவைக்கின்றார்கள் என்பதை உங்கள்-விஸ்வாமித்திரன் இணைப்பு உணர்த்துகின்றது. பிராமணர்களுக்குப் போட்டியாக வந்துவிட்டார்களோ என்ற நிலையிலிருக்கும் பிராமணியத்தின் சாதித்திட்டத்தைக் கொண்டு தொங்கும் அடுத்த மட்டச்சாதிக்காரர்களை (பிராமணருக்கும் பிராமணியத்துக்குமான வேறுபாடு உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன்; இல்லாவிட்டால், உங்களைச் சோ காக்கட்டும்) மடக்கத் தங்கள் கருவியாகப் பயன்படுத்துவதிலே பிராமணியத்தை இன்னும் பிடித்துத்தொங்க முயலும் பிராமணர்கள் கையோங்கியிருக்கும் இந்துத்துவா இயக்கங்கள் முயல்கின்றது கண்கூடு. ஆடு நனைகிறதே என்று… அழுகின்றவர்கள் ஆரோ?

அன்புடன் பாலா Says:

ரோசா,
//டோண்டு போன்றவர்கள், ஆடு நனைவதற்கு கண்ணீர் விட்டு, மனதில் நகைப்பதற்கான சமுதாய சூழலே இதன் அடிப்படை காரணம்
//
டோண்டு ராகவன் தலித்துகளின் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவராகத் தோன்றவில்லை. அவரே தலித்துகளின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து பாராட்டுதலுக்கு உரிய ஒரு பதிவு எழுதியுள்ளார். சுட்டி இதோ!
http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
நீங்களும் அதற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்!
ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான். தலித் முன்னேற்றத்துக்கு எதிரானவர் என்று ஒரேடியாக கூறுவதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்
பாலா

Dondu Says:

“டோண்டு ராகவன் தலித்துகளின் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவராகத் தோன்றவில்லை. அவரே தலித்துகளின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து பாராட்டுதலுக்கு உரிய ஒரு பதிவு எழுதியுள்ளார். சுட்டி இதோ!
http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
நீங்களும் அதற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்!”
ரோசா அவர்கள் அப்பதிவுக்கிட்டப் பின்னூட்டங்கள் அனைத்தும் அதைரியப்படுத்துவதாகவே இருந்தன. இரட்டைத் தம்ளர் முறை செய்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினார். 55 வருடங்கள் செய்துப் பார்த்துத் தோற்ற முறையையே கட்டிக் கொண்டு அழுதால் என்ன பலன்? ஆகவே லேட்டரல் திங்கிங் போன்ற ஒரு முறையைக் கூறினேன். அதற்கு எத்தனை விளக்கங்கள் கூறினேன்!
“ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான்.”
நான் கூறியதில் என்ன தவறு? அதுதான் உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலாஜி-பாரி Says:
இப்போது நிதர்சனமாக தெரியும் உண்மை என்னவென்றால், தலித் மக்கள் தாங்கள் நினைத்தாலும் தங்கள் நிலைமையை மாற்ற இயலா சூழலில் உள்ளனர் என்பதே. பூங்கொடி போன்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அதாவது தங்கள் போராட்டத்தை துவக்கினால், ஊரை விட்டு விலக்கி வைக்கப்படும் நிலைதான் உள்ளது. இவர்களுக்கு தேர்தலில் நிற்பது என்பதே போராட்டமாகிப் போன நிலையில் நாம் எதை ஜனநாயகம் என்பது?.
இத்தகைய சூழலில், மேலும் ஒரு செய்தி.
http://kanchifilms.blogspot.com/2005/04/blog-post_26.html
ஒரு தலித் தன்னை எரித்துக் கொண்டுள்ளார். இது ஏனென்றால் தனது வயிற்றுப்பாட்டிற்கு உழைக்கும் நிலையில் அதிகாரவர்கங்களின் ஆவேச தாக்குதல்களால். தாக்குதல்கள் மனதில் ஏற்பட்டால் அதன் வலி உயிரையும் பொருட்படுத்தாது. மக்களின் காவலனாக நிற்க வேண்டிய காவலர்கள் அவரை முதலில் மனதால் காயப்படுத்தினர். பின்பு அவரது 70% சத்வீத தீக்காயத்திற்கு காரணமாகினர்.
இதிலிருந்து நாம் சில உண்மைகளையாவது கொள்வோம்.
1.அவர்கள் வளர நினைத்தாலும், போராடினாலும், (பார்ப்பனிய மனோபாவத்தை கொண்ட)அதிகாரவர்கங்கள் அவர்களை அழுத்திப் பிடித்தாவாறே தான் உள்ளது.
2. இப்படி அழுத்தி பிடிப்பதற்குண்டான கலையை மனு எழுதி வைத்தான்.
3. இவர்களுக்கு விடிவு என்பது அவர்களிடம் மட்டுமில்லை உங்களிடமும் என்னிடமும் நம் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ளது. இதற்கான மனோபாவ மாற்றம் இந்த செய்திகளை கண்ட பிறகாவது நிகழ வேண்டும்.
4.ஒரு ரிசர்வ் தொகுதியில் ஒருவர் போட்டியிட்டு ஜெயித்தால் அவர் ராஜினாமா செய்வது ஏன் என்பதை பார்க்க வேண்டும். இது உள்ளங்கை நெல்லிக்கனி. பிறன் மலைக்கள்ளர் வகுப்பினரின் ஆதிக்க மனோபாவம்தான். ஆனால் இவர்களுக்கு யாரையா கற்றுக் கொடுத்தது? மரத்தின் கிழைகள்தான் இவர்கள். வேர் எங்குள்ளது என்று தங்கமணி கூறிவிட்டார்.
5. ஒரு ரிசர்வ் தொகுதியில் ரிசர்வ்ட் மக்கள் யார் வேண்டுமானால் நிற்கலாம். இதில் எந்தவித பேச்சு வார்த்தையும் தேவையிருக்க கூடாது. இது அடிப்படை உரிமை.
நிறைய இருக்கின்றது எழுத. இப்போது நேரமில்லை. முடிந்தால் தனிப் பதிவாக பதிகின்றேன்.

Karthikramas Says:

இது மாதிரியான விஷயங்களுக்கு தீர்வாய் என்ன செய்யமுடியுமென்று யோசித்த்து ஒன்று கிடைக்காமல் தற்போதைக்கு என் புத்தியை சாடிக்கொண்டிருக்கிறேன். மேலும் எழுதுவேன்

Padma Arvind Says:

சிலை திறப்பு விழாவிற்காக வந்த மத்திய மந்திரி ஜெகஜீவன் ராம் சென்றபின் அந்த சிலைக்கு புண்ணியாசனம் செய்ததை மறக்க முடியுமா? தினமர் செய்தியயும் புகைப்படத்தையும் பார்த்து அதிர்ந்து போனேன். ஒவ்வொரு நாட்டிலும் ஏதேனும் ஒரு பெயரில் தீண்டாமை இன்னமும் இருக்கிறது, அரசியல்வாதிகள் அதை வளர்க்கிறார்கள். மக்கள் தொகைகணக்கெடுப்பு இந்தியாவில் சாதீய அடிப்படையில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இன அடிப்படையில் இருப்பதாகவும் சமீபத்தில் நடந்த குழு விவாதம் ஒன்றில் அறிய கேட்டேன்

Padma Arvind Says:

மத்திய மந்திரி ஜெகஜீவன் ராம்சிலை திறந்துவைத்துவிட்டு சென்றபின், சிலையை புணருத்தாரணம் செய்த மக்கள் வாழும் இடத்தில் இருக்கிறோம். தினமலர் செய்தியை பார்த்தபின், தீக்குளித்த ஒருவரை வேடிக்கை பார்த்த கூட்டமும் பார்த்தேன். வேதனையாக இருக்கிறது. தீண்டாமை எல்லா நாட்டிலும் ஏதோ ஒருவகையில் இருக்கிறது சில அரசியல்வாதிகளின் வாழ்த்துக்களுடன். சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் மக்கள் தொகை கணக்கீடு இந்தியாவில் சாதி அடிப்படியிலும், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார அடிப்படையிலும், அமெரிக்காவில் இன அடிப்படையிலும் செய்யப்படுவதாக உரையாடப்பட்டது. சாதி அடிப்படையில் தேர்தலில் நிற்பதும், இன்னார் இந்த சாதி என்று அடையாளம் சொல்வதும், சாதிக்குள்ளேயே சில சின்ன சின்ன பிரிவுகள் தீண்டாதவராய் நடத்தப்படுவதும் அனுபவத்தில் கண்ட உண்மை. வருந்த வேண்டிய செய்தி, இதை விடாமல் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள் அரசியல்வாதிகள் சுய இலாபத்திற்காக.

தங்கமணி Says:

//உங்களின் இந்தக்கருத்தை ஒத்துக்கொள்ளலாம்.//
பெயரிலி,
கருவறைக்குள் நாங்கள் மட்டும்தான் வருவோம் (நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும், பஞ்சாயத்துத் தலைவராக நாங்கள் மட்டும் தான் வருவோம்(நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே நோய் முதல் நாடி தீர்த்தலே சரியானது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் சுனாமி ஆராய்ச்சி மையமும், அறிவிப்பு மையமும் அமைக்கப்போவதைச் சொல்லமுடியாது பெயரிலி, அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஆனால் உண்மையிலேயே சுனாமியை எதிர்கொள்ள உணவுப்பொட்டலங்கள் போதாது; அது வழியுமல்ல. மூன்று தொகுதி மக்களுக்கான தீர்வல்ல நான் சொல்லிக்கொண்டிருப்பது. அது உங்களுக்கு புரியும், புரியவேண்டும்.
பாலாஜி, தீவைத்துக்கொண்டவனுக்கு மருந்து போட்டுவிட்டு பொட்டிக்கடை வைத்துக்கொடுத்துவிட்டால் அவர்கள் சுயமாக உழைத்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
அவனும் சுயமாக கட்டிடத்தொழில் பண்ணி பிழைத்துகொண்டுதானிருந்தான். அவனுக்கு என்ன கொழுப்பு வந்ததென்று போய் நெருப்பு வச்சுகிட்டான்? எல்லாவற்றுக்கும் காரணமாக சுயமாக முன்னுக்கு வரவேண்டும் என்று சொல்வது ஒரு வகையில் அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. இந்தியாவில் காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.
சுயமரியாதை அம்மக்களுக்கு எப்போதும் குறைவாய் இருந்ததில்லை; ஏனெனில் அது உழைப்போடு சம்பந்தப்பட்டது.

-/பெயரிலி. Says:

/கருவறைக்குள் நாங்கள் மட்டும்தான் வருவோம் (நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும், பஞ்சாயத்துத் தலைவராக நாங்கள் மட்டும் தான் வருவோம்(நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே நோய் முதல் நாடி தீர்த்தலே சரியானது./
தங்கமணி, நீங்கள் சொல்லும் பார்வையிலே அது சரியே; நான் சொல்ல வந்தது, சாமிக்கு முன்னால் சாப்பாடு முக்கியமென்ற அடிப்படையினைக் குறித்து. (அதிலே டோண்டு ஐயாவின் ‘மட்டும்’கூடச் சேர்ந்து கொண்டுவிட்டது)

Padma Arvind Says:

தங்கமணி
உழைப்போடு சம்பந்தப்பட்டது சுய மரியாதை. சரியாய் சொன்னீர்கள்

ரோஸாவசந்த் Says:

//“ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான்.”
//
நான் கூறவில்லை. பாலாஜி உங்கள் மெயிலுகு பதில் எழுதுகிறேன். சங்கரபாண்டி, நாராயணணுக்கும் எழுதுகிறேன்.

ரோஸாவசந்த் Says:

//காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.//
நன்று சொன்னீர் தஙகமணி. சில திசைதிருப்பல்களை புறக்கணித்து, அதற்கு மீண்டும் மீண்டும் பதில் தருவதை நிறுத்தி இந்த பிரச்சனை குறித்து மட்டும் பேசுவது தேவை என்று நினைக்கிறேன்.

ரோஸாவசந்த். Says:

http://thatstamil.indiainfo.com/news/2005/04/27/keeripatti.html

தங்கமணி Says:

http://thatstamil.indiainfo.com/news/2005/04/28/kovai.html

aathirai Says:

டோ ண்டு சார் நல்ல மனத்துடனே சொன்னாலும், பொருளாதார மாற்றம்
மட்டுமே முழு தீர்வு ஆக முடியாது.
தமிழ்நாட்டில் 4/5 தலித் IAS ஆபீசர்கள் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இதில் ஒருவர் கோர்ட்டுக்கு போய் பின்னர் போஸ்டிங்க் வாங்கியிருக்கிறார். IAS க்கு இந்த நிலைமை என்றால்…..
தங்கமணியின் பின்னூட்டத்தில் கூறியிருப்பதைப் போல அடிப்படை பிரச்சினையை அணுகாமல் மேலோட்டமா
இந்த பிரச்னையை தீர்க்க முடியாது.

aathirai Says:
“இந்தியாவில் காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.”
மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

Karthikramas Says:
Thanks to Kumudam.com
=========================
அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்குவதும் பின்னர் மீண்டும் அழகர்மலை நோக்கிச் செல்வதும் ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சி. அதுபோலத்தான் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவியும் ஆகிவிட்டது.
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. இதுதான் பிரச்னையே! இந்தமுறை பல அரசியல் கட்சிகள் ஆதரவோடு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேட்பாளர் பூங்கொடி நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து கிராம மக்கள் சார்பில் அழகுமலை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். வழக்கம்போல கிராம மக்களின் வேட்பாளரான அழகுமலை, அமோக வெற்றி பெற்றார். பூங்கொடி வெறும் 29 ஓட்டுக்கள் மட்டுமே வாங்கினார்.
கடந்த 24_ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்குப் பதவிப் பிரமாணம் எடுப்பதற்காக அழகுமலை, கீரிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் இரண்டு போலீஸாரும் பாதுகாப்புக்கு வந்தனர். யாருடனும் பேசாமல் நின்ற அழகுமலையை நெருங்கி, ‘பதவிப் பிரமாணம் செய்தவுடன் ராஜினாமா செய்துவிடுவீர்களாமே…’ என்று கேட்டோம். ‘ஆமாம்…’ என்றார் மெல்லிய குரலில். ‘தேர்தலின்போது வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்றுவேன் எனச் சொன்னீர்களே?’ என்றதும், ‘எல்லோரும் நிம்மதியாக வாழணும்… அவ்வளவுதான்’ எனச் சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார்.
சுமார் ஒன்பதரை மணியளவில் கிராமத்து மக்கள் சுமார் முப்பது பேர் அழகுமலையை அங்கிருந்த கோயிலுக்கு ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்கள். அவருக்கு ஜரிகைத் துண்டு அணிவிக்கப்பட்டது. அழகுமலை முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. எல்லோரும் சாமி கும்பிட்டார்கள். பின்னர் அருகிலுள்ள பெரிய வேப்ப மரத்தின் கீழ் கிராமக் கூட்டம் நடந்தது. அதில் சில வக்கீல்களும் கலந்துகொண்டனர். அப்போது ஒரு வக்கீல் எழுந்து ஒரு அஃபிடவிட்டை வாசித்தார். ‘அதில் உள்ளதெல்லாம் எனக்கு உடன்பாடுதான்’ என்று சொன்ன அழகுமலை, அதில் கையெழுத்துப் போட்டார். பிறகு ஒரு வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொல்லி Êஏதோ எழுதி அதுவும் வாசிக்கப்பட்டு அழகுமலையின் கையெழுத்தும் பெறப்பட்டது. அழகுமலை ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.
பிறகு அழகுமலை, பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கிராம மக்களால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பத்தேகால் மணியளவில் பி.டி.ஓ. ராமச்சந்திரன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூடிநின்ற கூட்டம் கைதட்டியது. பதவியேற்றதும் மினிட் புத்தகத்தில் அவர் கையெழுத்துப் போட்டார். பின்னர் வக்கீல் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு வெள்ளைத்தாளை அழகுமலையிடம் நீட்ட… அதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர், அதை வாங்கி மீண்டும் அந்த வக்கீலிடமே நீட்டினார். ‘அதிகாரியிடம் கொடு…’ என கண்ஜாடை செய்த பின்னரே அதிகாரியிடம் கொடுத்தார். அது ராஜினாமா கடிதம்!
அதை வாங்கிப் படித்த பி.டி.ஓ., ‘நீங்க பதவியைத் தொடரணும். அப்போதுதானே கிராமத்தில் வளர்ச்சிப்பணியெல்லாம் தடையில்லாம நடக்கும். ஊருக்கு நல்லது செய்யணும்னா நீங்க பதவியில இருக்கணும். ஏன் ராஜினாமா செய்யறீங்க?’ என்று அட்வைஸ் செய்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘மந்திரி ராஜினாமா செஞ்சா ஏன் எதுக்குன்னு கேட்பீங்களா… இனி வக்கீல் பேசுவார்’ என்றது. பின்னர் வக்கீல் ஒருவர் அழகுமலைக்காக அஃபிடவிட் ஒன்றை அதிகாரியிடம் கொடுத்தார். அதனுடன் ராஜினாமா கடிதமும் இருந்தது.
அழகுமலை கையெழுத்திட்டிருந்த அந்த அஃபிடவிட்டில்…
‘18.4.2005 அன்று பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், யாருடைய வற்புறுத்தலுமின்றி, அச்சுறுத்தலுமின்றி, தூண்டுதலுமின்றி பதவியேற்பு நாளான இன்று என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒருமித்த கருத்துப்படி பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்த பிரமலைக்கள்ளர் இன மக்கள் 1950_ம் ஆண்டு ஜனவரி 26_ம் தேதி வரை ஞிமீஜீக்ஷீமீssமீபீ சிறீணீssமீs என்ற பட்டியலில் பள்ளர், பறையரோடு அனைத்து சலுகைகளையும் பெற்று வந்தனர். அதன்பிறகு அரசு சலுகைகள் குறைந்து மற்ற முன்னேறிய இனத்தவரை அவர்களோடு சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிட்டு அவர்களின் சலுகைகள் குறைக்கப்பட்டன.
அதே நேரத்தில் எங்கள் இன மக்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை எங்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைக் கண்டிக்கிறேன். அடுத்தமுறை இந்தப் பஞ்சாயத்துத் தலைவர் பதவி, பொதுப்பட்டியலுக்கு வரவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் விதமாக என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பி.டி.ஓ. ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என முடிவு செய்யவேண்டியது கலெக்டர்தான்… இந்தக் கடிதம் கலெக்டருக்கு அனுப்பப்படும்’’ என்றார்.
இந்தத் தேர்தல் சட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளால் நியமிக்கப்பட்டிருந்த சென்னை பார் கவுன்சில் உறுப்பினரும் தி.க. சட்டப்பிரிவு மாநிலச் செயலாளருமான கி. மகேந்திரனிடம் இந்த ராஜினாமா முடிவு குறித்துக் கேட்டோம்.
‘‘தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜினாமா செய்யக்கூடாது என நாங்கள் ஏற்கெனவே வற்புறுத்தி வருகிறோம். இப்போது அவர் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளார். அதை கலெக்டர் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெளிவான முடிவு எடுக்கவில்லையென்றால் நியாயம் கிடைக்க கோர்ட்டிற்குச் செல்வோம்…’’ என்றார்.



விவாதத்தில் பங்கேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்
அன்புடன்
பாலாஜி-பாரி

PS: பின்னூட்டம் இடுவதில் இருந்த சிரமங்கள் குறித்து திரு. இராகவன் கூறிய தகவலுக்கு நன்றிகள். அதை சரிசெய்துள்ளேன் என நினைக்கின்றேன். (எனது இந்த புது வீட்டில் பல விசயங்கள் இன்னும் புதிதாகவே உள்ளது!)

No comments: