Thursday, June 17, 2004

வன்முறை

இந்த பதிவிற்கு திரு. JR அவர்களின் கவிதைதான் காரணம்( அவர் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இட்டது ).
எனது உள்ளில் இருக்கும் மூர்க்கம் சார்ந்த வன்முறையை வெளிக்கொணர அவர் தூண்டுகோலாகிவிட்டார்.

நான் சிறுவயதில் இருந்து செய்த, எனக்கு நினைவில் இருக்கும், வன்முறை என நான் கருதிய செயல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

UKG படிக்கும் சமயம் என் அம்மாவிடம் அடி வாங்கிய போது நடந்தது....
நான் அழுதபடி எங்கள் வீட்டில் இருந்த பலகையில் (சின்ன பலகை) உட்கார்ந்து கொண்டிருந்தேன். செய்த தவறை நான் உணர வேண்டும் என்பதற்காக சினஞ் சொற்கள் கூறிக் கொண்டிருந்தார் என் அம்மா. அது என் கோபத்தை வலுப்படுத்தியது. அவரை எதிர்க்க நான் அப்பொழுது கூறியது," போடி...".

இரண்டாவது வகுப்பு படிக்கும் போது என் நண்பன் முருகானந்தத்திடம் சண்டை இட்டேன். அப்பொழுது எழுந்த வன்சீறலில், என் கைகளின் நகங்களை வைத்து அவன் தொடையை கிள்ளி விட்டேன், இரத்தம் கசியும் அளவிற்க்கு. அவன் தனது போலீஸ் அண்ணனண அழைத்து வருதாக மிரட்டி, என்னை இரு தினங்கள் மிரள வைத்தான்.

எனது தங்கையை நான் கடித்து விட்டதால் பல் பதிந்து இரத்தம் வந்து, அந்த வடு இன்றும் இருக்கின்றது. அவள் கைகளில் மட்டும் அல்ல, எனது நெஞ்சிலும்.

ஐந்தாவது படிக்கும் போது பள்ளிவிட்டு செல்லும்போது ஓர் சண்டையை வைத்து, சக்திவேலும் நானும் மோதினோம். திட்டமிட்ட ஒரு ஒற்றைகொற்றை சண்டை.

தொட்டு விளையாட்டின் போது, எனது தங்கை என்னை முந்திய தருணத்தில் அவளது பொட்டு சிதறி விழ, அதை வன்மத்துடன் எடுத்து பிய்த்து போட்டேன். பாவம் அவள் தப்பினாள்.

ஏழாவது படிக்கும்போது, துடுக்கான முதல் வீட்டுப் பையனின் பட்ட பெயரை அவனது வீட்டின் முன் எழுதி அவனை தாழ செய்தேன்.

என்னை விட வயதில் மூத்த என் ஒன்றுவிட்ட அண்ணனை, குரூரமாக வார்த்தைகளால் தாக்கியது.

இன்னும் பலப்பல உள்ளன....

என் செய்வது, இதை அறிய முயலும் போதும் வேறொரு தவறை செய்து விடுகின்றேன்.

குற்ற உணர்வின் காரணமாக இப்பதிவு எழுத்ப்படவில்லை என்பதையும் வரிகளுக்கு இடையே படியுங்கள்.

No comments: