Tuesday, June 22, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு-கிடையாது!! -1

இன்னைக்கு அபிலாஷ் கூப்பிட்டதால் இந்த படத்தை பார்த்தேன். இன்ஸ்டிட்டுயுட் ஜிம்கானாவில் திரையிட்டனர். அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்களின் படம்.
சுதந்திரத்திற்கு முன்பு நடக்கும் கதை. குற்றவாளியை தூக்கில போடற பணியை செய்யும் ஒருவரை பற்றியும் அவர் குடும்பத்தை பற்றியும் சொல்றாங்க.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் குற்றவாளிகளை தண்டிக்க உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை தருவார்கள். இதை நிறைவேற்றும் பணியை செய்பவர் "அரச்சார்" என்றழைக்கப்படுவர். இது பரம்பரையாக வரும் பணி.

இப்படத்தின் நாயகன் சுமார் ஐம்பது-அறுபது வயதான "அண்ணாச்சி" (கொடுவில் உன்னிக்கிருஷ்ணன்). அவருடைய மனைவி, சுகுமாரி. அவர்களுக்கு மூன்று வாரிசுகள். மூத்தவள் திருமணமாகி, எட்டு வயது பெண் குழந்தைக்கு தாய். அவள் கணவன் (முரளி). அடுத்தவன் சுதந்திர போராட்ட வீரன். சத்தியாகிரகி. கடைக்குட்டி, பதிமூன்று வயதான மல்லிகா.

இப்படம், ஒரு கள்ளுக்கடையில் அண்ணாச்சி குடித்துக் கொண்டிருப்பதில் இருந்து துவங்கும். தான் தூக்கிலிட்ட ஒரு நபர் குற்றவாளி இல்லை என்று தெரிந்தும் தூக்கிலிட்ட வருத்தத்தை குடித்துவிட்டு புலம்புவார்.

கதையின் ஓர் முக்கிய அம்சம் சமஸ்தானத்தில் நடக்கும் ஓர் பழக்கம். தூக்கிலிடுவதற்கான கயிறை சிறையில் கைதிகள் தயாரிப்பர். அக்கயிற்றுக்கான நோக்கம் நிறைவேறியவுடன், அண்ணாச்சி அதை தன் வீட்டின் பூசை அறையில் வைப்பார். அக்கயிற்றை பஸ்பம் செய்து நோய் கண்டவர்களுக்கு வீபூதியாக கொடுப்பார். அதனால் நோய் தீர்ந்துவிடும் என்று நம்பி பலர் அவரிடம் வருவார்கள். (ஒருகட்டத்தில், நீண்ட நாட்களுக்கு தூக்கில் யாரையும் போடாததால், அண்ணாச்சியின் பவர் குறைந்து விட்டது என்று ஊர்மக்கள் பேசுவர்:-)).

தூக்கிலிடும் பணியை மேற்கொள்ளும் அவருக்கு சொல்லொண்ணா சோகம். தனக்கு தெரியாத ஒருவன் எப்படி தன் எதிரியாக முடியும்?. அவனைக் கொல்கின்றோமே என்ற எண்ணம் அவர் முகத்தில் எப்பொழுதும் தெரியும். தனக்கு உடம்பு சரியில்லை என்றெல்லாம் சொல்வார். ஆனாலும் அவரை அழைத்து சென்றுவிடுவர். தீவிர காளி பக்தர். தன் குற்ற உணர்வை குறைக்க, தன் மீது காளி வந்து இக்காரியம் செய்கின்றாள் என நினைத்து கொள்வார்.

-தொடரும்

No comments: