Tuesday, May 11, 2004

பயணம்

முகமறியா பலர் அமைத்த பாதை.

ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.

புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....

இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.

சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...

கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.

சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.

வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.



அன்புடன்
-பாரி

No comments: