Thursday, June 03, 2004

பௌர்ணமி !!

(சூழலுக்கும் எனக்கும் ஒரு மௌனமான உரையாடல்)

சூழல்: ஒரு மெல்லிசான மேகப் படலத்துக்கு பின்னால பளீர்னு நிலா ஒளி வீசிட்டு இருக்கு.
அத சுத்தி ஒரு பளீர் சாம்பல் நிறத்தில இருந்து துவங்கி விளிம்புல கரும் சாம்பல் நிறம் கொண்ட வானம் பரந்து இருக்கு.

நான்: என்ன ஒரு அற்புதம். நிலவொளி பாயுது, வெளியில் மட்டுமல்ல என்னுளும். என்னை அப்படியே இழுத்து மயக்குது. இந்த இனிமை சொர்க்கம்.

சூழல்: நிலா கிழக்கில எழுந்து மேலெ போய்ட்டு இருக்கு. மேற்கு திசைல இருந்து குளிர் காத்து அடிக்குது. சுத்தி இருக்கிற எல்லா இடத்துலேயும் அதோட வெளிச்சம்.

நான்: வெண்ணிலா தக்க தருணத்தில் தனது அழகை முழுமையா காட்ட தயங்குவது இல்லை. தனது முக வடுக்களை கூட முழுதாய்தான் காண்பிக்கின்றது. அப்பொழுது கூட அதன் ஒளி குறைவதில்லை. சரியாக சொன்னால் அப்பொழுதுதான் அது மிக அழகாகவும், பூரிப்பாகவும் உள்ளது.

சூழல்: நகரத்தின் ஒளியும் அங்கே, இங்கே தென்படுது. சோடியம் ஒளி விளக்குனால ஒரு செம்மஞ்சள் ஒளி தூரத்துல இருக்கு. மரங்கள் ரொம்ப கருப்பா இருக்கு.

நான்: "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே...

சூழல்: இந்த மாதிரிதான் நேத்தும் நான் இருந்தேன். மேகம் கோட்டையெல்லாம் கூட கட்டி இருந்தது. ஆனா இன்னிக்கு ரொம்பச் சின்ன ஒரு கோட்டை நிலாவ சுத்தி.

நான்: நிலவை சுற்றி அந்த வட்டமான கசிந்து இருக்கின்ற ஒளி போதி மரத்தையும் புத்தரையும் மனக்கண்ணில் கொண்டு வருகின்றது. இந்த எல்லையற்ற பெருவெளியில் தொலைந்து போகவேண்டும் என் அடையாளங்கள். நானும். காலத்தில் கரைந்து காற்றிலே மிதந்து செல்லும் ஓர் படிமமாகவாவது நான் உணர வேண்டும்.

சூழல்: அந்த வட்டம் சில நிறங்கள காட்டுது...

நான்: வர்ண ஜாலங்கள்....இத துரத்திட்டு போற செயல்.. அந்த ஆக்க சக்தி நான் வேண்டி நிற்கின்றேன். என் எல்லைகள் எனக்கு அரண்கள். உடைக்க முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தத்தளிகின்றேன்

சூழல்: நிலா இன்னும் கொஞ்சம் மேலே போய்கிட்டிருக்கு. வெளிச்சம் எல்லா இடத்திலேயும் இருக்கு. இப்பவும் மேற்குல இருந்து குளிர் காத்து வீசுது. சின்னதா ஒரு கோட்டை இப்பவும் இருக்கு சில நிறங்களோட.




No comments: