Thursday, February 21, 2008

கிரகணம்


ஷிப்பாகன்,கனடா,21பிப்2008

Wednesday, January 02, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்



இந்த வருசமாவது உருப்படியாவும், தொடர்ந்தும் பதிவுகள எழுதணும்னு ஒரு நெனப்பு. சில நிகழ்வுகள பதிவுல போடணும்னு தோணும். ஆனா என்னோட சோம்பேறிதனத்தால அத செய்யாம, கணிணில உக்காந்து கொஞ்சம் வலை மேஞ்சுட்டு அப்படியே போய்ட்டுருந்தேன்.
இனியாவது எழுதலாம்னு ஒரு எண்ணம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்
பாலாஜி-பாரி

பின்குறிப்பு: என்னோட பழைய பதிவுகள் paari.weblogs.us -ல இருக்கு.
இப்போ ப்ளாகர்லயே வகை பிரிக்கவும், மறுமொழிகள மட்டுறுத்தவும் முடியறதால இனி ப்ளாகர்ல எழுதறதா உத்தேசம்.

Monday, August 06, 2007

அறிவியல் ஆயிரம்

நமது செயல்பாடுகளை மேம்படுத்த இன்றைய உலகில் தினமும் எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அவை பயன்பாட்டு அளவிலும், கோட்பாட்டு அளவிலும் மானுடத்திற்கு அரிய பல பயன்களை அளிக்கின்றன. அறிவியல் ஆயிரம் பகுதியில் இத்தகைய கண்டுபிடிப்புகளை சிறிது வெளிச்சமிட்டு காட்ட முயல்கின்றேன். மேலும் இதன் பயனாக பல தமிழ் அறிவியற் சொற்களும் கலந்துரையாடலுக்கு வரும் என நம்புகின்றேன்.



மின்பகிர் வண்ண மாற்றி-குளிர் கண்ணாடி:

வாசிங்டன் பல்கலைகழகத்தில் ஒரு குளிர்-கண்ணாடி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் இயங்கும் தன்மை பின்வருமாறு: இதை அணிபவர் தனக்கு தேவையான வண்ணத்தையும் தனக்கு தேவையான அளவிற்கு ஒளி குறைப்பும் செய்து கொள்ள இயலும். ஆதலால் இக்கண்ணாடி வெளிபுற செயல்களுக்கு ஆக பயன் தரக்கூடியதாக இருக்கும். காட்டாக, மலையேறுதல், இருசக்கர இயந்திர வாகனங்களில் செல்லுதல், மேலும் பல.
இதில் நிறம் மாறுவதற்கு 1 அல்லது 2 நொடிகளே தேவை படுகின்றது. இதன் அமைப்பு ஆறு வகையான அடுக்குகள் கொண்டதாக உள்ளது. புற-ஊதா தடுப்பான் ஒரு அடுக்கிலும், மின்-ஒளி கடத்தும் இண்டியம் டின் ஆக்ஸைடு இரு அடுக்குகளிலும், அயனி கடத்தும் பாலிமர் ஒரு அடுக்கிலும், மின்பகிர் வண்ண மாற்றி பாலிமர் ஒரு அடுக்கிலும் இருக்கின்றது. இந்த ஆறு அடுக்குகளும் சாதரணமாக அணியும் மூக்கு கண்ணாடியின் மேல் ஆக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் இது சந்தைக்கு வரும் எனத் தெரிகின்றது. (Ref: Photonics spectra May 2007, page 22)

இதையே சற்று மாற்றி வடிவமைத்து, மகிழ்வூர்திகளின் பின்புற பிம்பக் கண்ணாடியில் பயன்படுத்தப்படுகின்றது. இது பின்னே வரும் மகிழ்வுந்து எவ்வளவு தொலைவில் வருகின்றது என்பதை பொறுத்து நிறத்தை மாற்றி காண்பிக்கும். ஆதலால் இது ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

அன்புடன்
பாலாஜி-பாரி

நிறமற்ற மொழி

Photobucket - Video and Image Hosting


செயலிழந்து நிறுத்தப்பட்டதை
தவிப்புடன் உணர்கின்றேன்.
மொழியின் கடைவாய்களில் சிக்கியது
ஒரு கவிதை.

அவ்வளவு எளிமையாக
மொழியின் சுழலை மீறி
மிதக்கின்றது உன் புன்னகை.

என் நாவின் புரளல்
ஆண்மொழியிலிருந்து
நழுவும் ஒரு புள்ளியில்
துலங்குகின்றது
மொழியில்லாத ஒரு கவிதை.

நன்றிகளடி என் தோழி.

*பாலாஜி-பாரி

ஒரு கவிதையும் அது உருவாக்கிய சுழலும்

சமீபத்தில் படித்த ஒரு கவிதையை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பூவின் வலி
அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
பூவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சந்தித்த
பறவையின் உதிரும் இறகுகளைப்போல

பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

-குட்டி ரேவதி (பக்:26-தனிமையின் ஆயிரம் இறக்கைகள்-டிசம். 2003 - பனிக்குடம் பதிப்பகம்- சென்னை)

இக்கவிதையை படித்தவுடன் குல்-மொஹர் மரத்திலிருந்து, மழைக் கால துவக்கத்தில் உதிர்ந்த அந்த சிவப்பு வண்ண இதழ்கள் பாதையெங்கும் வியாபித்து விரிந்து கிடக்கும் அந்த பேரழகு இன்று ஒரு நினைவாக வருகின்றது. பெங்களூரில் இத்தகைய காட்சிகள் எங்களது வளாகத்தில் நிறைய சிதறிக் கிடக்கும்.

அன்புடன்
பாலாஜி-பாரி

இப்படியாக மீண்டும்...

நண்பர்களுக்கு வணக்கம்!

பனிக்காலம் கடந்து வசந்த காலத்தின் நுழைவாயிலில் நிற்கும் எம்மை பறவைகளும், பளீர் கதிரவனும் வரவேற்கும் நேரத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்வெனும் நதியில் பல நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதில் எமக்கான நிகழ்வுகளும் அடங்கும். அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

குறிப்பாக நாங்கள் இருக்கும் பகுதியில், மேப்பிள் "சிரப்" பிரபலமானது. இந்த "சிரப்" நம்ம ஊர்கள்ல இருக்கும் தேன்பாகு போன்று இருக்கும். இது மேப்பிள் மரத்திலிருந்து எடுக்கப்படுகின்றது. இதை எடுக்கும் முறையை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதை பகிர்வதற்கு முன் மேப்பிள் மரத்தை பற்றி சில வரிகள். இம் மரம் கனடாவில் எல்லா இடங்களிலும் காணலாம். இம்மரங்கள் பனிக்காலத்தில் மொத்தமாக இலைகளை இழந்து நிற்கும். வசந்த காலத்தில் துளிர்த்து, கோடையில் பசுமையாக வளர்ந்து, இலையுதிர் காலத்தின் துவக்கத்தில் பற்பல நிறங்களை காட்டி வசியம் செய்து, கடைசியில் அனைத்து இலைகளையும் உதிர்த்து விடும். கனடா நாட்டின் கொடியிலும் இடம் பெற்றிருக்கின்றது இந்த மரத்தின் இலை வடிவம்.

Image hosting by Photobucket


எங்களது பல்கலைக்கழக்திலிருந்து ஏழு நபர்கள் மேப்பிள் சிரப் தயாரிக்கப்படும் இடத்திற்கு சென்றோம்.
இது "கேபினை சுக்ரு" என்றழைக்கப்படும் ஒரு உணவகத்திற்கு அருகில் இருந்தது. அங்கு போய் வழக்கம் போல முதற் கடமையாக வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் நீல நிறக் குழாய்கள் எல்லா மரங்களையும் இணைத்திருந்ததை கண்டோம். எங்களது ஆர்வக் கோளாறினால், சில கேள்விகளை எழுப்ப ஆரம்பித்ததும், திரு. மார்க் என்பவர் எங்களுக்கு விவரிக்க துவங்கினார்.


Image hosting by Photobucket

இம்மரங்களில் ஊறும் நீர்த்த திரவத்தை பனிக்காலத்தின் இறுதியில் அம்மரங்களில் இருந்து துழையிட்டு வடிப்பார்கள். இதை எங்களுக்கும் விளக்கும் முகமாக, அவர் ஒரு மின் துழைப்பானை எடுத்து மரத்தில் துழையிட்டு அதில் ஒரு சிறிய குழாயை இணைத்து படத்தில் காட்டியுள்ள ஒரு பாத்திரத்தை பொறுத்தினார். ஒரு சில நிமிடங்களில் மேப்பிள் திரவம் அதில் சேரத்துவங்கியது. இந்த பாத்திரத்திற்கு பதில் குழாய்களை ஒரு பின்னலாக இணைத்து, மேப்பிள் திரவத்தை "பம்ப்" செய்கின்றனர். அந்த திரவத்தை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரிக்கின்றனர். அது பெரிய மின் அடுப்புக்கு மேல் உள்ளது. அதன் பிறகு அதை பாகு போல் காய்ச்சி போத்தல்களில் அடைக்கின்றனர்.

Image hosting by Photobucket

மேப்பிள் மரத்தில் இருந்து வரும் திரவம், மிகவும் குறைந்த இனிப்புடன் உள்ளது. ஆனால் அதை காய்ச்சும் போது இறுகி பாகு பதத்திற்கு வருகின்றது. இதை தான் மேப்பிள் "சிரப்" என்கிறார்கள். இது கிட்டதட்ட நம் ஊரில் கிடைக்கும் தேன்பாகு போல் இனிக்கின்றது.

இந்த மேப்பிள் "சிரப்" பனிக்கட்டிகளின் மேல் ஊற்றி மிட்டாய்களாகவும் செய்வார்கள்.

சரி, நண்பர்களே!!

விரைவில் மீண்டும் சந்திப்போம்.

இரண்டு கவிதைகள்

இன்று புரட்டிக் கொண்டிருந்த கவிதை புத்தகத்தில் இக்கவிதை என்னைக் கவர்ந்தது.
இதை கல்யாண்ஜியின் கவிதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். பல கவிதைகள் நன்றாக உள்ளன.


கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.

-கல்யாண்ஜி


நீண்ட நாட்களாக பதிய வேண்டும் என்று நினைத்த ஒரு கவிதை இந்த புத்தகத்தில் இருக்கின்றது.
உரையாடல் கவிதை அனுபவம்- இந்திரன் மற்றும் வ.ஐ.ச ஜெயபாலன்

இக்கவிதையை எழுதியது இந்திரன். இவரது சில மொழிபெயர்ப்புகளை படித்திருந்தாலும், இவரது கவிதையை ஒரு தொகுப்பாக படிப்பது இதுவே முதல் முறை. மியூசியம் என்ற தலைப்பில் இருந்த கவிதையில் இருந்து சில வரிகள்.

மியூசியம்

பசியிலிருந்து தப்பிக்க
தூக்கம்
மிக உசிதம்

மியூசியம்
படிகளில்
தூங்குவதென்றால்
இன்னும் உன்னதம்.

புராதனமானது
பசியைக் காட்டிலும் வேறென்ன?

மஞ்சள் பூத்துப்போன
எலும்புக்கூடுகளோடும்
துருப்பிடித்த பீரங்கிகளோடும்
தூங்குகையில்

இறந்த காலத்தின் உள்புதைந்த
மரண அமைதியுடன்
இன்றைய உலகின்
உயிர்த் துடிப்புள்ள ஒரு பகுதி
கலந்து விடுகிறது.

வெளியே

தளிர்க்கோதும் மைனாக்கள்
சதா ஒலியெழுப்புகின்றன.

உள்ளே

நூற்றாண்டுகளுக்கு முன்னரே
வெடிக்க மறந்துபோன துப்பாக்கிகளுக்கு
எண்ணெய் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
முதுமக்கள் தாழிகள்
நொறுங்கிய
தங்கள் வயிறுகளுக்குள்
எதிர்காலத்தை
ஏப்பம் விடுமோ என்கிற
அச்சம் ஏதுமின்றி.

ஒளிக்கற்றைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடும்
உதிர்ந்த சருகுகளை

ஊதிப்பறக்க விடுகிறது
காற்று.

-இந்திரன்

1947

பரிசாக வந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. அந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையை இங்கே இட்டுள்ளார் ஆசிரியர்.
படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

இதில் இருக்கும் இன்னும் இரு கட்டுரைகளும் உண்மைகளை உரைப்பவை. இந்த புத்தகம் கிடைக்கும் விவரத்தை நாளை இடுகின்றேன்.

-பாலாஜி-பாரி

பாஸ்தாவை எப்படியெல்லாம் சமைக்க கூடாது?

எப்படியெல்லாம் சமைக்க கூடாதுந்னு தெரிஞ்சுக்க, கிரகங்கள், நட்சத்திரங்கள், கிரகணங்கள், கரகங்கள் எல்லாம் கூடி வர்ற மாதிரி ஒரு பொழுது வேணும். மேலதிகமா, ஒரு பேச்சிலரா இருக்கணும் (அட பேச்சு இலர் இல்லீங்க). அதாவது, சாயங்காலம், ஓடியாடி பேட்மிண்டன் மாதிரியான விளையாட்டுகள ஒரு கை பாத்துட்டு, அப்படியே இன்னிக்கு பிட்ஸா வாங்கி சாப்பிடலாம்ந்னு முடிவு பண்ணணும். அப்புறம், மெதுவா இந்த கணிணி பக்கம் வந்து தமிழ் மணம் பிடிச்சுட்டு மறுபடியும் யோசிக்கணும். இந்த சமயத்துல மேலே சொன்ன கூடி வர்ற சாமாச்சாரங்கள் உங்களுக்கு உள்ளே ஒரு குரல உருவாக்கி, அந்த குரல் இன்னிக்கு வித்தியாசமா ஏதாவது பண்ணுவோம்நு அலறணும். அந்த கூச்சல் தாங்காம சரி இன்னிக்கு இந்த காட் பாதர் ஐட்டத்த (அல்லது அன்னை சோனியாவையும் நினைச்சுக்கலாம்) பண்ணுவோம்நு முடிவு பண்ணிக்கணும்.

இப்போ அப்படியே ஒரு கெத்தா, வூட்டுக்குள்ள போய் ஒரு தெளிவான குளியலப் போடணும். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பாத்திரத்துல தண்ணிய எடுத்து அடுப்புல வைக்கணும். குளிச்சுட்டு வந்தப் பிறகு அது நல்லா கொதிச்சுகிட்டு இருக்கும். (இதனால் அறியப்படுவது இவ்வலைப்பதிவர் குளிக்கும் என்ற கர்மத்தை அறிந்தவர் என்பதாகுக!). அப்புறம் ஓசில கிடைச்ச ஒரு டப்பா பாஸ்தாவை எடுத்து அந்த ஒரு முறை நல்லா பார்க்கணும். அதுல என்ன விவரம் இருக்குண்ணு. அப்புறம் என்ன விவரம் இருந்தாலும், ..ha-னு சொல்லிட்டு பாஸ்தா-வ ஒரு குண்ஸா கைல அள்ளி அத கொதிக்கிற வெந்நீல போடணும். இது பார்ட்-1.

இந்த பாஸ்தா இருக்கு பாருங்க இத தனியா சாப்பிட முடியாது. (எப்படியுமே இத சாப்பிட முடியாதுங்கறது சில தங்கமானவர்களோட தனிப்பட்ட கருத்து..:P). இதுக்கு ஏதாவது சாஸ் (நம்மூர்-ல குழம்புந்னு சொல்லுவாங்க) செய்யணும். இந்த "சாஸ்" செய்யணும் அப்படிங்கற எண்ணமே, பாஸ்தா பாதி வெந்ததுக்கு அப்புறம்தான் வரணும். அந்த எண்ணம் வந்த உடனே, இதென்ன பிரமாதம்!! இருக்கவே இருக்கு டொமேட்டோ மிக்ஸ்ட் சாஸ். அதுல கொஞ்சம் பூண்டு, இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்க வைச்சா மேட்டர் முடிஞ்சுது-ங்க ஒரு எண்ணம் தோணணும். அப்புறம் ஃப்ரிட்ஜ்-அ திறந்து அந்த சாஸ் கேன் ந பார்க்கணும். அதுக்குள்ள நல்ல திரவ நிலையில் சிவப்புநிறத்தில ஏதேனும் இருந்தா, ஆகா! ந்னு ஒரு பொறி கிளம்பணும். அந்த சமயத்துல நீங்க அதுல, best before sep18. pest after your use அப்படிங்கறத பார்த்தா ஆகா, இந்த மாதம் தானே நம்ம தங்கச்சிக்கு பிறந்த நாள். நம்ம மருமவப் பையனும் இந்த மாசந்தானே பொறந்தாங்-கிற எண்ணம் எல்லாம் வந்த போன பிறகு, மெதுவா நிகழ் உலகத்துக்கு வந்து பார்த்தா "மகனே! இன்று அக்டோபர் ஐந்து" ந்னு ஒரு குரல் சொல்லும்.
சரியா இப்போ, ஆடின ஆட்டம் நினைவுக்கு வரும். நல்லா குளிச்சது நினைவுக்கு வரும். "தலைல தண்ணி ஊத்தினதும் உனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுமே"ன்னு அம்மா சொன்னது நினைவுக்கு வரும். இப்படி..வரும்................ வரும்..........வரும்..வரும்.வரும்வரும்...னு குணா ரேஞ்சுக்கு ஒரு மனநிலை வரும் பசி-ங்கற் பேய்நால.

இப்படி எல்லாமா வந்து சரி இப்போ நேரம் என்னனு பார்த்தா 9:30ந்னு கடிகாரம் சொல்லும். இப்போ ஒரு ஐடியா தோணும். சரி தக்காளி கொத்சு பண்ணி பாஸ்தால கலந்து ஒரு தாக்கு தாக்குவோம். அன்னை சோனியா இந்தியரான மாதிரி அவங்க ஊரு பாஸ்தாவையும் இந்தியனைஸ் பண்ணிடலாம்னு ஒரு உற்சாகம் தோணி மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும், சிவப்பா ஏதோ பார்த்தா நியாபகத்துல. அப்படி திறந்து பார்க்கும் போது தக்காளி ஆப்பிளா மாறி நம்மள பார்த்து கெக்கலிக்கும்.

இதுக்குள்ள நீங்க ஒரு புத்தனின் மனோநிலையை அடைஞ்சிருக்கனும். (இல்லைண்ணா, மறுநாளே....இல்ல...இல்ல...அப்பவே வீட்டை காலி பண்ண சொல்லி நோட்டீஸ் வந்துறும். வீட்டில இருக்குற ஜன்னல் கண்ணாடி, அவங்க கொடுத்த டின்னர் செட், மேசை நாற்காலிந்னு உடைச்சா அப்படித்தான ஆகும்?. ஆனா புத்தர் அருள் பாலிச்சா, இந்த நிலையையும் கடந்து விடலாம்.)

இப்போ முற்றிலும் மாறுப்பட்ட மனிதரா நீங்க மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும். என்னென்ன இருக்குன்னு பார்க்கணும். (இது சுயத்தை பார்ப்பதிலும் கடினம்நு நீங்க சொன்னா, ஆகா, என் நண்பாந்னு உங்களையும் என்னோட சேர்த்துக்குவேன்.) பாதி வெங்காயம் இருக்கணும். அப்புறம், ஃப்ரீட்ஸர்ல உறைய வைக்கப்பட்ட காய்கறி இருக்கணும். இந்த காய்கறிய எடுத்து கொதிச்சுட்டு இருக்குற பாஸ்தால போட்டு மொத்தமா வேக வைக்கணும். வெங்காயத்தை தனியா எடுத்து எண்ணெய்ல வதக்கிக்கணும்.
இதுக்கு நடுல பாஸ்தாவும் காய்கறியும் வெந்து, அதுல தண்ணிய வடிச்சு பிறகு அதை அப்படியே வெங்காயம் வதக்கி இருக்கிற பாத்திரத்துல கொட்டி ரெண்டு கிளறு கிளறி, பாஸ்தாவை புடலங்காயா நினைச்சு எல்லாத்தையும் சேர்த்து வயித்துல எரிஞ்சுக்கிட்டு இருக்குற நெருப்புக்குள்ள கொட்டணும். சிலர் இந்த செயலை சாப்பிடறதுந்னு சொல்லுவாங்க!!

பாலாஜி-பாரி

படகும் மனமும்

ஜாதி மல்லிகையின்
மணம் நிரப்பியது போல்
இசையால் நிறைந்திருந்தது
எனது அறை.

கரையில் இருந்த
ஆளற்ற தனி படகு
எண்ணங்களை மீட்டுகின்றது.

காற்று எழுதும் வரிகளாக
சிறு அலைகள்
வளைகுடா நீரின் மீது.

எழுதப்படாத கவிதையாக நீ
"கனவுகள் வேண்டாம்" என்கின்றாய்,
புன்முறுவல்களின் அதிர்வுள்ள குரலில்.

இருப்பின் மறுகரையை அடைய
என் படகை நான் அண்மித்த பொழுது
புத்தனும் ஆர்ப்பரிக்கின்றான்.

இப்பொழுதும் நிறைந்திருக்கின்றது
எனது அறை.


பாலாஜி-பாரி

செய்திகள்

இயற்கை சில சமயங்களில் பல அழகை காட்டி நிற்கின்றது. சில சமயம் எனும்போது அவதானிப்பாரின் கணங்கள் எனக் கொள்க. இயற்கை எக்கணமும் ஏதேனும் ஒரு சுவாரசியத்தை கொண்டுள்ளது என்பதுதான் உண்மையோ?

ஒரு பெரிய அளவிலான வண்ண வளைவாக, கடலில் ஒரு முனையை கொண்டு, வானை அளந்து, தேவாலயம், பச்சை மரங்கள், சில மனிதர்கள் ஆகியவற்றிற்கு ஆரமாய் வடிவெடுத்து, தன் மறுமுனையை மண்ணில் புதைத்துக் கொண்டு, சில கணங்களே இருந்த ஒரு வானவில்லை பற்றி சொல்ல முயல்வது கடினம்.

சில தண்மை துளிகள் காற்றில் நிறைந்த கணத்தில், வெம்மை கதிர்கள் ஊடாடி நிகழ்த்தும், ஒரு முரண்களின் கலப்பு தோற்றுவிக்கும், அழகே இந்த வண்ணப் பட்டைகள் என்பது அறிவியல் மொழி. இந்த முரண்கள் தண்மை, வெம்மை என்ற வார்த்தைகளின் பிரசங்கமாக கூட இருக்கலாம். அவை தன்னியல்பில் பூரணமானவை. நிகரானவை.

பாதையின் மருங்கில் இருக்கும் கிரைசாந்திமம் பூவிலும் நிறைந்துள்ளது. வானவில்லின் சில கண இருப்பிலும் ஒளிந்துள்ளது. அவைகள் மெதுவாகவும், பல முறை கூறிவிட்ட சலிப்புடனும் மீண்டும் தங்களது இருத்தல்களில் முரண்கள் வெறும் கற்பிதங்கள் என்பதை காட்டியவாறே உள்ளன.

இன்று ஒரு ஒளிதுகள் உள்ளே.

பெண் என்பவள் பொருளுடமையா?

http://in.rediff.com/news/2005/aug/09sold.htm

இந்த சுட்டியில் சமீபத்தில் நடந்த ஒரு பெண் விற்கும் படலத்தை பற்றிய தகவல்கள் உள்ளது.

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையினை கொளுத்துவோம்...என்ற வரிகள் பாடி ஒரு நூற்றாண்டு ஆக போகின்றது. நாம் இன்னும் கற்காலத்தில்..

பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்

Image hosted by Photobucket.com


பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்-1
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு : டிசம்பர் 2003(முதல் பதிப்பு)
ISBN 81-87477-65-2



சமீபத்தில் டொராண்டோ சென்ற போது அங்கு நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை காண நேரிட்டது. இந்த புத்தகத்தை புரட்ட எனக்கு தூண்டுதலாய் அமைந்தது, அதன் முகப்பு அட்டையே. இதில் ஒரு வயதான மூதாட்டியின் படம் இருந்தது. அந்த முதுமையான முகத்தில் ஒரு சிறிய கம்பீரம்.

இவர்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியை என்று அறிந்த போது சற்றே திகைப்பும் ஒரு மகிழ்ச்சியும் உண்டானது.

முதலில் இந்த புத்தகத்தை பற்றி:

இந்த புத்தகம் 1929 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை பூரணி என்ற சம்பூர்ணம்மாளின் படைப்புகளை தாங்கி நிற்கின்றது.

எழுத்துக்களினூடே படைப்பாளியும் வாசிக்கப்படுகின்றார் என்பதை என் வாசிப்பில் நான் உணருகின்றேன். அப்படி பார்க்கும் போது, முடுகு(1930-45) என்ற ஒரு கவிதையில் அந்த கால மாற்றங்களை அழகாக சொல்லி, மாற்றத்தை ஏற்றுக் கொள்கின்றார். இதில் உள்ள எளிமையும் நிறைவாய் உள்ளது. அக்கவிதையின் கடைசி வரிகள் சில:

"தண்ணீர் குடம் தூக்கும்
தருணியர்கள் இப்போ
டென்னிஸ் விளையாட
கிளப்புகள் உண்டாச்சு
ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்பொழுதும் மாறுதலே
இதையறியா பல பெரியோர் கண்டு இகழ்வதும் அறியாமையே".

இவருக்கு பாடு பொருள் பல உண்டு. இவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கவில்லை தம் படைப்புகளில். விடுதலை போராட்டத்தை ஆதரித்து, மக்களுக்கு பழக்கமான மெட்டுகளில் பாடலமைத்து அதை வெளிப்படுத்தியது மிகவும் போற்றத்தக்கது. அரிசிமாக் கோலமும், வெள்ளி மின்னலும், மேரு மலைகளும், கோடை மதியமும், குடியானவனின் கிராமமும் இவர் பார்வையிலே கவிதையாகின்றன. பெண்களின் எழுச்சியையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன.
பெண் என்ற கவிதையில்

" பட்டமென்ன சட்டமென்ன
பாராளும் ஜோரென்ன
கட்டினவன் மோசமென்றால்
ரத்து செய்யும் உரிமையென்ன

இன்றைய பெண்குலமே
எழுச்சி கொண்டததிசியம்தான்"

என்று கூறிவிட்டி, அதே வேகத்தில்

"என்றாலும் தீமைகள்
எல்லாமும் முடியவில்லை" என்றும் எச்சரிக்கின்றார்.

இருக்கும், பார்க்கும், உணரும் நிகழ்வுகள் மட்டுமே இவரிடம் கவிதையாகவில்லை.

சாத்திரம் (1965-67) என்ற ஓர் கதை கவிதையை படைக்கின்றார்.
அது ஒரு அற்புதம். பெண்ணின் உளப்பாங்கையும், வெட்டி தர்பார் செய்யும் தந்தையும், காதல் மருகும் ஓர் ஆண்மகனையும் காட்டுகின்றார். இதில் வெற்று சனாதன தாங்கிகளையும் ஒரு பிடி பிடிக்கின்றார். இவர்களது தன்மையை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்கின்றார். (அவரிடம் அனுமதி வாங்கிய பின் இதை நான் தனி பதிவாக இடுகின்றேன்).

சென்ற நூற்றாண்டில் 1970 களுக்கு பின் எழுதியதில் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:

காலை ஒலிகள்

பத்துக் குடித்தனங்கள்
ரேடியோக்கள்
பக்திப்பா, துதிப் பாடல்
சுப்ரபாதம்
வீதியிலே கிஸ்னாயில்
கீரை சப்தம்...
...
....
போரிங்பம்பு அடிப்பதனால்
தடதடப்பு.

என்று போகின்றது. இது ஒரு காட்சியாக கண்முன் விரிகின்றது.

பெண் - என்ற தலைப்பில் மீண்டும் ஒரு கவிதை வருகின்றது. இந்த கவிதை நாட்டுல பெண்கள் முன்னேறிட்டாங்க என்று கூறும் நபர்களுக்கு சவுக்கடியாய் இருக்கின்றது. இதில் இவர் காலத்தை பதிவு செய்துள்ளார். 1940-களில் பெண்களுக்கு இருந்த நிலை 1970-களுக்கு பிறகும் தொடர்கின்றது என்பதை அக்கவிதை உரைக்கின்றது. அது அவலமன்றோ?

2003-ல் அவர் எழுதிய கவிதைகள், ஹிந்துத்துவாவை சாடுகின்றது. அகலிகை பற்றியும் சீதை பற்றியும் அவர் எழுதியுள்ளது ஆழமான மன மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் நிச்சயம் பெண் கொடுமைக்கு எதிரான தொண்ணூறு வயது கிழவியின் மௌனமான மன வலி ரேகைகளை அதில் காணலாம்.

இப்புத்தகத்தின் முத்தாய்ப்பாக இருப்பது கபீர் கவிதைகள். இவரது மொழிபெயர்ப்பு மிகவும் கூர்மையானதாகவும், மனதில் தைக்கும் படியும் உள்ளது
காட்டாக,

"பரத்திலே மனம் கலந்தது அந்த
மனத்திலே பரம் கலந்தது
ஜலதிலுப்புக் (ஜலத்தில் உப்பு) கலந்த பின்னும்
ருசித்தபோது தெரிந்தது"

இவரது கவிதை புத்தகம் ஒரு விடுதலை விரும்பியின் கால ஆவணம்.

இவரைப் பற்றி:

இவரை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பு உள்ளது.

இவரது சொந்த ஊர் பழனி. வாழ்க்கைப்பட்டது தராபுரம். பின்பு சென்னையில் வசிக்கின்றார் என்று அறிகின்றேன். (இவரது மகளும் கவிதைகள் படைக்கின்றார்.பெயர் கிருஷாங்கினி. இவர் நன்கு அறியப்பட்டவர். தட்ஸ் தமில் . காமில் இவரது சில படைப்புகள் உள்ளது)
மேலும் இப்புத்தகத்திற்கு அம்பை முன்னுரை எழுதியுள்ளார். அதுவே மிகவும் அருமையாக உள்ளது.

( வரும் திங்கள் அன்று புத்தகத்தின் முகப்பை தெளிவான முறையில் இட முயல்கின்றேன்)

வண்ண மலரும், வண்ணத்துப் பூச்சியும்

Image hosted by Photobucket.com

நதிக்கரையில் பூத்திருந்த அந்த மலர் கூறியது, "நான் மிகவும் பொதிவாகவும், பாதுகாப்பாகவும், என்னில் என் ஆடைகள் இறுக்கமாகவும், தேவைக்கு சற்றும் மிகாமல் உள் வெப்பமும், குறுகுறுத்த உணர்வுகள் ஆழமான உள்ளில் புடம் போட்டுக் கொண்டும், உறைகளின் உள்ளே ஓர் அதிசய அனுபவத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தேன்".

"வெளிப்புற சலனம் அறியா அவ்வேளையில் நான் இனமறியா ஏங்குதலின் பிரதிநிதியாக இருந்தேன்."

"சட்டென்று என் மீது, ஒரு கணத்தில் தண்மை நிறைந்த காற்று உறவாடியது. எனது ஆடைகள் மிக சௌகரியமாக பறந்து விரிந்தது. அக்கணம் என் ஆழ் மனதில் சிறிய பயம் கவ்வினாலும், ஆகா! இதுவே சுகானுபவ நிகழ்வு!! என்ற அடையாளம் அறிந்து பரந்து விரிந்த விளைவால் பாந்தமான அணிகலனுடன் நான் மலர்ந்ததும், அக்காற்றில் கலந்து கிடந்த தண்மையினால் நான் சிலிர்ப்புடன் திக்குமுக்காடினேன். ஆனந்தக் கூத்தாடிக் களித்தேன்".

"சுற்றி இருந்த சூழ்நிலை, இருளின் கருமையை உணர்த்தியது. அந்த சூழ்நிலை மாறும் போது, பல மாறுதல்கள். மஞ்சள் வெய்யிலின் மூலம் கண்டபோது, ஆ! இஃதா அந்த சூழ்நிலை மாற்றும் வித்தையைப் புரிவது! என்று புரிந்து தெளிந்தேன். நான் அமைந்த ஒரு கரம் போல, அருகிலே பல கரங்கள். அவற்றின் மீது இதன்முன் பார்த்தறியா வண்ணச் செறிவு கொண்ட நேர்த்தியான வடிவங்கள். உள்ளத்தின் உணர்வுகளைக் கரைக்கின்றன. நெகிழ்கின்றேன்".

"சற்று தொலைவில் நான் பார்த்த போது, ஓங்கி உயர்ந்திருந்து அந்தப் பச்சை நிற வண்ணத்தை தன்னில் திப்பிதிப்பியாய் கொண்டு மிக நீண்ட பருமனான கரங்களை அங்குமிங்கும் அசைத்துக் கொண்டிருந்தது ஒரு பிரம்மாண்டம். என்னை எழுப்பிய அக்காற்று அதை அசைக்கின்றதா அல்லது அந்த உயிர் தழுவிய காற்றை எனக்கு அந்தப் பச்சைகள் அளிக்கின்றதா? முயங்குகின்றேன் !!."

"வெளிர் நிற வெய்யிலின் நிறம் கொண்ட சிறிய நுனியையும் தோன்றிய வேளையில் நான் கண்ட அந்த சூழலின் நிறத்தை மற்ற இடங்களிலும் கொண்டு அடி வயிற்றில் இருந்து, அதன் நீண்ட பின் பகுதிகள் சற்றே தாழ அது எழுப்பும் அந்த ஒலி என்னை ஏனோ மிகவும் கவருவதுடன் என்னைச் சலனமடையச் செய்கின்றது. ஆனந்த சலனம். ஆனால் அதற்கோர் விந்தை இயல்பு. ஒரிடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் அலை பாய்கின்றது. துள்ளித்திரிகின்றது. சந்தோஷிக்கின்றது."

மலரின் மழலையை கேட்ட வான் தோட்டத்தில் உலவும் அந்த வண்ணத்துப் பூச்சி "ஓ! அன்பு நிறைந்த மலரே!! அந்த ஓசைக்கு உரியவள் பெயர் குயில்!. அவ்வாறு அதை மாந்தர் அழைப்பர். எங்களைக் கூட வண்ணத்துப் பூச்சி என்றும், பட்டாம்பூச்சி என்றும் கூறுவர். "தென்றலில் மிதந்து வரும் வண்ண மலரே!!" என்று கூட எங்களை வருணிப்பர்!" எனக் கூறி அந்த அழகிய, பூரணமான, திண்ணமான வடிவம் கொண்ட அந்த மலரிலிருந்து சற்று மேலெழும்பி பின்பு வசதியாக அதன் மேல் மீண்டும் அமர்ந்தது.

"ஆகா! சரியாக சொன்னார்கள்!! இதை கேட்டவுடன் உன் மேல் அன்பு அதிகரிக்கின்றது....ஆனால் நீயோ மிகவும் அழகாக இருக்கின்றாய். பின் ஏன் உன்னை மலர் என்று கூற வேண்டும்?" என்றது தன்னறிதல் தேவையற்ற அம்மலர்.

"ஓ...! அன்பு மலரே!! உன் குழந்தை இயல்பு என்னை குதூகலிக்கச் செய்கின்றது. இவ்வாறே நீ இருப்பாயாக....என்றும்!!" என வாழ்த்தி, "நீ உன்னை அறிய முயலும் போது உன் போல் இருக்கும், அருகில் நின்று அசைந்தாடும் அந்த மலரைப் பார்க்க நேரிடும்," எனக் கூறிவிட்டு படபட-வென்று அந்த மற்றொரு மலரை நோக்கிச் சென்றது, எண்ணங்கவர் வண்ணத்துப் பூச்சி.

"இப்பொழுது அந்த மலரிடம் உன்னை அறிமுகம் செய்து வைத்தேன். தூரம் இருந்தாலும், அறிமுகம் ஆகிவிட்டால் மலர்ந்த பயன் எய்துவீர். இது போல பல மலர்களைச் சந்திக்கச் செய்வதுதான் என் உயிரின் விளைவு" என்று கூறியது, திரும்பி வந்து உல்லாசமாய் அம்மலரின் மீது அமர்ந்த அந்த வண்ணத்துப் பூச்சி.

"எவ்வளவு ஆச்சர்யமான, மிகவும் உவக்கத்தக்க, அற்புதமான பணி!! ஓ... என் மித்ர!! நீ என்னிடம் இருந்து சிறிது மது பருகுவாயாக" என்று நயந்து நட்பு பாராட்டியது அந்த மலர்.

"உனக்கு மிகவும் நன்றி!. என் அன்பு மஞ்சள் மலரே, கேள்!! நீ மற்றவைகளிடமிருந்து மாறுபட்டவள். இன்று நீ கழித்த இத்தருணம் குறித்து பின்னாட்களில் ஒரு சமயம் உனக்கு யோசிக்க நேரும். என்னை நன்றியுடன் நினைக்கும் அக்கணத்திற்காக, இக்கணம் நான் கூறிய நன்றி உரித்தாகட்டும்", என்றவாறே வாடைக் காற்றின் வழியோடியது அந்த வண்ணமிகு பறக்கும் மலர்.

வண்ணத்துப் பூச்சியை வழியனுப்ப தன் மணம் பரவும் எல்லை வரை உடன் சென்று மகிழ்ந்தது அந்த மலர்.

நாட்கள் சில கழிந்தன. பூவிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கும் காய் இருந்த அத் தாவரத்தின் கீழ் இருந்தது வண்ணத்துப் பூச்சியின் உதிர்ந்த ஒற்றை இறக்கை.

(நன்றி: மரத்தடி.காம்- பல மாதங்களுக்கு முன் மரத்தடியில் இட்டது. இங்கு மீண்டும் இற்றை படுத்துவதற்காக மீண்டும்)

நீ

சில ஒலிக்குறிப்புகள்.
சிற்சில எழுத்துக்கள் கொண்ட சிறுவார்த்தை.
சின்னஞ்சிறு செயல்கள்.
வியக்க செய்கின்றது
உனது மொழியின் விஸ்தீரணம்.
என் கவிதைகள்
மௌனமாகின்றது.
இது இயல்பு.

புத்தக விளையாட்டு

என்னை இந்த புத்தக விளையாட்டிற்கு அழைத்த நண்பர் பிரதீபாவிற்கு நன்றிகள்.

சிறுவயதில் எனது வீட்டில் ஒரு வாண்டுகள் பட்டாளம் இருந்தது என்பதாலும், எங்கள் காம்பௌண்டில் பல வாண்டுகள் இருந்ததாலும், குறைவின்றி பல்வேறு வகையான காமிக்ஸ் கிடைத்தது. அதில் என்னைக் மிகவும் கவர்ந்தது ஸ்பைடர்மேன், வேதாளம் (Fantom) மற்றும் இரும்புக்கை மாயாவி போன்ற கதாநாயகர்கள். இதில் சற்றே வித்தியாசப்பட்டவர் இந்த ஸ்பைடர் மேன். தான் குற்றவியல் சக்கரவர்த்தி என்று தன்னை இருத்திக் கொள்வதே இவரது முக்கிய நோக்கமாக இருக்கும். இவருக்கு சவால் விடும் வகையில் வரும் மற்ற கொடுங்கோலர்களையும், போலிஸையும் இவர் சமாளிக்கும் விதம் மிகவும் அற்புதமாக காட்டப்பட்டிருக்கும்.

பொள்ளாச்சியில் பூங்கா அருகில்தான் நூலகம் இருந்தது. அதன் பின் சில இடங்களுக்கு மாறி மீண்டும் பூங்கா அருகிலேயே வந்துவிட்டது. இப்போதும் அது அங்குதான் உள்ளது என்று நினைவு. எனது பெரியப்பா எங்களை பூங்காவிற்கு இட்டு செல்வார். அத்துடன் சற்று இருள் கவியத்துவங்கும் சமயம், அருகிலுள்ள நூலகத்திற்கு இட்டு செல்வார். ஆரம்பத்தில் அங்கு சென்று மிரள மிரள விழித்ததும், ஐந்தாவது ஆறாவது வகுப்பு படிக்கும் காலத்தில் பல்வேறுவகயான குழந்தைகள் கதைகள் கொண்ட அலமாரியை அலற வைத்ததும் நன்றாக நினைவில் உள்ளது. இக்காலகட்டம் எங்களை தனியாக வெளியே அனுப்ப பெற்றோர்கள் இசைந்த தருணங்கள்.

அச்சமயத்தில் எனது வெங்கடராமன் மாமா, தில்லியிலிருந்து நேருபால புத்தகாலயத்தின் பதிப்புகளாக் சுமார் பதினோரு புத்தகங்கள் அனுப்பி வைத்தார். நமது கப்பற்படை, கிரிகெட், பறவைகளைப் பார், பூனை இனம், வேடிக்கை கதைகள், என ஒரு நீண்ட பட்டியல் அது. பெரும்பாலும் ஒவ்வொரு விடுமுறையிலும் அந்த புத்தகங்கள் எங்களால் மீண்டும் படிக்கப்படும். எனது விவரமான புத்தக வாசிப்பு இங்கு இருந்து ஆரம்பித்தது எனக் கொள்ளலாம். விடுமுறை காலங்களில் எனது தந்தையார் அவரது பள்ளியில் இருந்து கொண்டு வந்த சிந்துபாத் கதைகள் மனதில் அப்படியே இருக்கின்றது. அதன் பிறகு சற்று பதிமன் வயதுகளில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் கருதி, எனது தந்தை abridged version-களாக வந்த count of montecresto, around the world in eighty days என சில புத்தகங்களை அறிமுகப் படுத்தினார்.

பத்தாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாட புத்தகம் தவிர வேறெதுவும் படித்ததாக நினைவில் இல்லை. non-detailed-ல் நல்ல சிறுகதைகள் படித்தது நினைவில் உள்ளது. மிளகாய் பழச்சாமியார், மற்றும் ஜெயகாந்தனின் சிறுகதை (நந்தவனத்தில் ஓர் ஆண்டி) இன்றும் நினைவில் உள்ளது.

பிற்பாடு கல்லூரியில் சேர்ந்த பிறகு வாசிப்பு விரிய ஆரம்பித்தது எனலாம். பல்வேறு வகையான புத்தகங்கள், ருசிய கதைகள், என சுவாரசியமான பருவம் அது. திரு. ஈ.அருணந்தி அவர்கள் தாய் புத்தகத்தை கொடுத்து படிக்கச் செய்தார். முதல் வாசிப்பில் அதில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு புரியவில்லை. அதை மீண்டும் இருவருடங்கள் கழித்து படிக்கும் போது, கீழே வைக்க முடியவில்லை. அந்த வருடங்களில்தான் எனக்கு சமூகத்தை பார்க்க சில துணிவுகளும், தேவைகளும் ஏற்ப்பட்டது. எனது வாழ்வியல் ஆசானாக அருணந்தி அவர்கள் இருந்தார். இப்பொழுது என் நினைவில் மட்டும் இருக்கின்றார். அதன் பின் உண்மையில் எனது சிந்தனைகளை புரட்டி போட்ட புத்தகம் என்றால் அது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய புத்தகம். அது பல் வேறு தளங்களில் எனதாக இருந்த கற்பிதத்தை தகர்த்து எறிந்தது.

பின்பு இந்திய அறிவியற் கழகத்திற்கு வந்த பின், இன்னும் பல நட்புகள். இன்னும் பல புத்தகங்கள். இங்கு கிடைத்தது அக வளர்ச்சிக்கான புத்தகங்கள். குறிப்பிட்டு சொல்வதானால் ஹெர்மென் ஹெஸ்ஸெ-வின் சித்தார்த்தா, ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல், ஒல்ட் மேன் அண்ட் த சீ, அவன் காட்டை வென்றான், பால் கொய்லோவின் அல்கெமிஸ்ட் போன்றவை. ஆனால் உளப் போக்கிற்கு ஏற்ற வகையில் இருந்தது என சொல்லும் வகையில் அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ், கி.ரா வின் படைப்புகள், to kill a mocking bird போன்றவைகளை சொல்லாம். மேலும் நல்ல அனுபவமாக இருந்தது, மோக முள், செம்பருத்தி, சிந்தாநதி (குறிப்பாக சொல் என்ற தலைப்பின் கீழ் வரும் இரு கட்டுரைகளும்), அபிதா. இந்த சமயத்தில்தான் ஜெயகாந்தனின் கதைகளும் வாசித்தேன். அவரது கதைகளின் முன்னுரைகள் என்றும் fresh-ஆனவை. எனக்கு அவரது கதைகளின் மிகவும் பிடித்தது ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும். பாரீசுக்கு போ ஒரு நல்ல நாவல் என்றாலும் அதன் களத்தை அவர் வலிய உருவாக்கி இருந்ததால் ஒருவித செயற்கைதனம் தெரிந்தது. அவரது சிறுகதை தொகுப்பும் அப்போது வாசிக்க கிடைத்தது. என்னை மிகவும் குதூகலப்படுத்தியது குட்டி இள்வரசனும், ஜன்னலில் ஒரு சிறுமியும். அப்துல் ரகுமானின் காதல் கவிதை தொகுப்பையும் இங்கு தான் வாசித்தேன். வண்ணதாசன் எழுத்துக்கள் எனக்கு உண்மையை மட்டும் உரைப்பதாக தெரியும். சின்னு முதல் சின்னு வரை ஒரு தேர்ந்த படைப்பு. மனித உணர்வின் மாற்றங்கள் வீடுவீடாக மாறும் அற்புதம் அதில் காணலாம். நிலா பார்த்தல்- படித்ததன் விளைவு air field-ல் பல இரவுகள் கழிந்தன.

மேலும் என்னை அதிர வைத்த புத்தகங்கங்களாக நான் நினைப்பது, 1. கம்பிக்குள் வெளிச்சம் 2. தூக்கு மேடை குறிப்புகள்.3. நாகாராஜன் படைப்புகள். இவை எனது பல நாட்களின் இரவை தின்றுள்ளன. இதை தவிர வேற்று மாநில படைப்புகள் என்றால் இந்திரன் தொகுத்த அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், சமஸ்காரா போன்றவை என்னை பாதித்தவை எனக் கொள்ளலாம்.

இப்பொழுது வாசிப்பில் இருக்கும் புத்தகங்கள்

1. முறிந்த பனை
2. பச்சை தேவதை
3. If life is bowl of Cherries, what am i doing in the pits?
4. இரவில் நான் உன் குதிரை (சிறுகதை தொகுப்பு)
5. மூலதனம் -தியாகுவின் மொழிப் பெயர்ப்பு

எப்போதும் வாசிப்பது

1. பாரதியார் கவிதைகள்
2. திருக்குறள்

மிகமிக முக்கியமான புத்தகங்களாக கருதுவது

1. வால்காவிலிருந்து கங்கை வரை -சாங்கிருத்யாயன்
2. ரூட்ஸ் - அலெக்ஸ் ஹேலி
3. குட்டி இளவரசன் - எக்சுபெரி
4. மோகமுள்- தி.ஜா.ரா
5. தூக்குமேடை குறிப்புகள்- புஸிக்
6. கம்பிக்குள் வெளிச்சம் -தியாகு
7. ஜன்னலில் ஒரு சிறுமி - டேட்சுகோ குரொநாயகே
8. தாய் -கார்க்கி


படிக்க விரும்பும் நூல்கள்

இது ஒரு பெரிய பட்டியல்.

நான் புத்தகங்களை படிக்க எனது நண்பர்களே காரணம். கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எங்கள் மத்தியில் சுழற்சி முறையில் இருந்தது. தங்கமணியின் அறை ஒரு குட்டி நூலகமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. எனது அறையில் நான் இருந்ததை விட அவரது அறையில் நான் கழித்த அர்த்தமுள்ள பொழுதுகள் ஏராளம். அது போல் கோகுல்-தேவி -யின் வீட்டில் படித்த புத்தகங்கள் குறிப்பாக அனைத்து JK புத்தகங்கள் தேவி தந்தவைதான். இதை தவிர மீனா எனக்கு வழங்கிய புத்தகங்களும் பல. பாபு கொடுத்தது எனது அறையில் ஆப்பிரிக்க வானம். பின்பு சென்னை செல்லும் போதெல்லாம், new bookland-ல் வாங்கியவையும் அடங்கும். பெங்களூரை விட்டு கிளம்பும் சமயம் வாங்கிய புத்தகங்கள் இப்போது மீனா வீட்டில் இருக்கும் நான் படிக்காத புத்தகங்கள்.

நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்

1. மயிலாடுதுறை சிவா
2. சங்கர பாண்டி (இவருக்கு வலைப்பதிவு இல்லை. எனக்கு அனுப்பினால் நான் அதை இடுகின்றேன்)
3. பொள்ளாச்சி நசன் (இவர் படித்ததை
முழுதாக எழுத இயலாது என தெரியும். ஆனால் இவரது வாசிப்பனுபவம் நமக்கு மிக்க
பயனுள்ளதாக இருக்கும்)
4. செல்வராஜ்
5. நற்கீரன்
6. நந்தலாலா

மெக்தலீனா சகோதரிகள் (2002)

இத்திரைப்படம் கிறித்துவ கத்தோலிக்க சமூகம், அயர்லாந்தில் சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற பெண்கள் மீதான மதத்தின் பெயரில் செய்த அடக்கு முறையை விரிவாக சொல்கின்றது.

மார்கரெட்: தனது உறவினான ஒரு கயவனால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றாள்.
ரோஸ்: இப்பெண் தந்தை அறியா குழந்தைக்கு தாயாகின்றாள்
பெர்னடெட்: இச்சிறுமி அனாதை விடுதியில் வளர்ந்து வருகின்றாள். பருவத்தின் இயல்பில் அவள் அழகாக இருக்கின்றாள். விடுதியின் வெளியில் இருந்து சில பையன்களின் குரலைக் கேட்டு மகிழ்கின்றாள்.

இவர்கள் மூவரும் கத்தோலிக்க கிறித்துவ முறையை பின்பற்றும் குடும்பங்களிலும், காப்பகத்திலும் இருக்கின்றனர். மார்க்கரெட் தனது தந்தையரின் நிர்பந்தத்தாலும், பெற்ற குழந்தையை தாயிடம் இருந்து பிரித்து அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டு அந்ததாயை (ரோஸ்) அவளின் பெற்றோரினாலும், பெர்னடட் என்ற சிறுமி காப்பக கன்யாஸ்திரிகளாலும், மெக்தலீனா காப்பகத்தில் சலவைத் தொழிலாளி ஆக்கப்படுகின்றனர்.
அதன் நிர்வாகியான ஒரு மூத்த கன்னியாஸ்திரி தனக்கு கூறப்பட்ட வழிமுறைகளின் சற்றும் மாறாமல் இறைவனின் சேவையில் ஈடுபடும் பெண்களை கவனித்துக் கொல்கின்றார் ('ல்' எழுத்துப் பிழையல்ல).

அவர்களுக்குண்டான உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. அவர்கள் அங்கு அடிமை போல் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு தவறுகளுக்கும் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றது.

அங்கு இருக்கும் பெண்கள் அனைவரும் பாவிகள் என்றும் அங்கு பணி செய்வதன் மூலம் தூய்மையடைந்து புனித ஆவியின் அன்புக்கு பாத்திரமாகி சொர்க்கத்திற்கு செல்லலாம் என்று கூறுகின்றார் அதன் நிர்வாகி.

இதில் முக்கியமான ஒரு பாத்திரமாக வருபவர் கிறிஸ்பினா. அவர் தனது குழந்தையை பிரிந்ததால் மனச்சிதைவுக்குள்ளாகின்றார். அவரை ஒரு பாதிரி தன் உடலிச்சையை தணிக்க பயன்படுத்துகின்றார். இதை வெளியில் கூற நேரும் பொழுது (YOU ARE NOT A GOD MAN என 27 முறை கூறுகின்றார்) தலைமை கன்னியாஸ்திரி அவரை மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றார். இதனிடையில் இவர் தற்கொலைக்கு முயற்சி செய்யும் அளவிற்கு நிலைகுலைக்கப் படுகின்றார்.

24-வயதில் அம்மருத்துவமனையில் அவர் இறந்து விடுகின்றார்.


மதம் தன்னை நிறுவுவதற்கு செய்யும் செயல்கள் மிக நுட்பமானது. இதில் ஒரு முறைதான் (method) நாம் மேலே கண்டது.

இத்திரைப்படம் sex in the cold climate என்ற ஆவணப்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆவணப்படம் மிக மிக முக்கியமானது. இதில் உண்மையில் பாதிக்கப்பட்ட அந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையை கூறுவது மிகவும் உருக்கமானது. உண்மைகள் பொதிந்தது.

இந்த ஆணாதிக்க சமூகத்தில் மதம் தனது ஏஜென்ட்கள் பெண்களோ அல்லது ஆண்களோ இருந்தாலும் ஆதிக்க மனப்போக்கை எளிதாக கையாளுகின்றனர். மதம் போன்ற அமைப்பை நிறுவுவதில் ஆண்களின் நோக்கமும் பயமும் இவ்வகையான நிறுவனங்களின் கட்டமைப்பில் கண்கூடு. எனக்கு இது விந்தையாக படவில்லை. ஏனெனில் ஆண்களது பணி, இவற்றை நிறுவுவது மற்றும் இதன் அடிநாதத்தை கைகொள்வது மட்டுமே ஆகும். இவற்றை செய்த பின் மற்றவைகள் விளைவுகள் மட்டுமே. அந்த விளைவுகள் ஆண்களுக்கு எப்போதும் சாதகமாக இருக்குமாறு அந்த நிறுவனம் பார்த்து கொள்ளும் என்ற நிலையில் அதிலிருந்து விலகிவிடுகின்றனர் என தோன்றுகின்றது.

இந்திய சூழலில் இத்தகைய ஒரு படமாக நான் கருதுவது Son, father and holy war.
இதை பற்றி தங்கமணி தெளிவாக குறிப்பிட்டதை நினைவு கூறுகின்றேன்.
Son, father and holy war படம் போர்/ வன்முறை எப்படி முழுக்க முழுக்க ஆணாதிக்கத் தயாரிப்பு என்பதையும். உண்மையில் போர்/மதம்/ வன்முறை போன்றவை இருதரப்பினரையும் தாண்டி ஆண்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியே அன்றி வேறெதுவும் இல்லை என்றும் காட்டியிருக்கும்.போர்/மதம்/ வன்முறையினை மத சக்திகள் (மும்மதங்களும்) எவ்வாறு பெருமைப்படுத்துகின்றன, அதன் அடிப்படையில் கற்பு, ஒழுக்கம், இவைகள் எப்படி கிளைக்கின்றன என்ற கேள்விகளை எழுப்புகிற படம். அந்தப்படம் இரண்டு தரப்பினரையும் (இந்து, முஸ்லீம்) சரியாகவே காட்டியது.


இத்திரைப்படம் மிகவும் பாதிப்புக்குள்ளாக்ககூடியது.

-பாலாஜி-பாரி

வார்த்தைகள்

Image hosted by Photobucket.com
நமது உரையாடல்கள்
நிறைவு பெறுவதேயில்லை.
எனது 'உள்'ளில் சில வார்த்தைகள்
பாறை மீதின் அலையாக
மோதிச் சிதறுகின்றன.
வீட்டின் தோட்டத்தில்
பழுப்பு நிற மைனாக்கள் விளையாடுகின்றன.
புல்வெளியின் விளிம்பில்
மஞ்சள் பூக்கள் மலர்ந்துள்ளன.
நீ புன்முறுவல் செய்கின்றாய்
வார்தைகள் வெல்லப்படுகின்றன.


பாலாஜி-பாரி

ஊதா நிற மெழுகுவர்த்தி

Image hosted by Photobucket.com



எனது தேசம்
மணம் நிறைந்த
ஊதா நிற மெழுகுவர்த்தியால் ஆகியிருந்தது
உள் உணரா தேவனின் கட்டளையாக.

வாடையில் நடக்கும் போது
சில சமயம் இறுகியதால்
சில இடங்களில் உடைந்து போனது.

கோடையில் நடக்கும் போது
காற்றில் மணத்தை நிரப்பி
தேசம் உருகியதில் பாதங்கள் சிக்குண்டது.

சட்டென்று எதிர்பாராத கணத்தில்
ஒரு ஒளித் திவலை தோன்றி
என் தேசத்தின் மைய நாடியில்
வளர் சுடராக தன்னை அமர்த்திக் கொண்டது.

வேனில் கால காற்றில்
மணம் நிறைந்த சூழலில்
அமைதியான அந்த மெழுகுவர்த்தியின் ஒளியில்
என்னுள் இப்போது
தேவன் புன்னகைக்கின்றான்.

என்னுடன் நடப்பாயா?


-பாலாஜி-பாரி

தலித்துகளின் தொடரும் அவல நிலை: விவாதங்களின் தொகுப்பு

இந்த பதிவு கடந்த பதிவில் இருந்த பின்னூட்டங்களின் தொகுப்பே ஆகும். இது ஆவணப்படுத்தலுக்காக மீண்டும் இடப்படுகின்றது.
உங்கள் தகவலுக்காக.

தலித்துகளின் தொடரும் அவல நிலை..

தீண்டாமை என்றோ நடந்ததாக பேசி இக்காலத்தில் அவர்களுக்கு போதிய சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பவர்களுக்காக இந்த சுட்டி. ஒரு பெரிய ஆதிக்க ஜாதியின் தன்மைகளை உள்வாங்கி தன்னளவில் அதை நிகழ்த்தும் ஒரு வெறியர்களின் கூட்டத்தின் செயல் என்று தடுக்கப்படும்?.

தங்கமணி :

http://thatstamil.indiainfo.com/news/2005/04/24/buddha.html
இதைப்பாருங்கள். தமிழகத்தில் (இந்தியாவில்) இது பெருமளவு நடக்கவேண்டும். மற்ற மதங்களைவிட புத்தமதம் தமிழ்நாட்டில் குறைவாகவே நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. தவிர இந்து, ஆபிரகாமிய மதங்களைவிட குறைவான அமைப்புரீதியான மடத்தனங்களைக் கொண்டுள்ளதும் ஒருகாரணம்.

ரோஸாவசந்த் :

பாலாஜி, எழுதியதற்கு நன்றி. ஆனால் ஆதிக்க ஜாதியினர் என்று பொதுவாய் சொல்வது சரியல்ல. தேவர் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் உள்ளது என்று நினைக்கிறேன்.

karthikramas Says:

//தேவர் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியம் உள்ளது //
கள்ளர் என்றுசொல்ல வந்தீங்களா? இந்த செய்தியில் அப்படித்தான் படித்ததாய் ஞாபகம்

காசி Says:

//இதற்கிடையே, தலைவர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணத்தை அழகுமலை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், தலித் சமுதாயத்தினர் இந்தக் கிராமத்தில் சிறுபான்மையினராக உள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவது நியாயமாக இருக்காது. எனது மனசாட்சிக்கு அது நியாயமாகப் படவில்லை. அதனால் தான் பதவயை ராஜினாமா செய்து விட்டேன் என்று கூறியுள்ளார் அழகுமலை.//
பெரும்பான்மையினர் ஆண்டால்தான் அது சரி என்பதுபோலவும், என்னவோ எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினர்தான் ஆள்வதுபோலவும்! நல்ல சப்பைக்கட்டு. இந்த ஒரு ஊர் அவலத்தை சரிப்படுத்த முடியாமல் முக்கியக் கட்சிகள் ஜனநாயகம் பேசுவது கேலிக்கூத்து.

-/பெயரிலி. Says:

/தவிர இந்து, ஆபிரகாமிய மதங்களைவிட குறைவான அமைப்புரீதியான மடத்தனங்களைக் கொண்டுள்ளதும் ஒருகாரணம். /
அப்படியாகச் சொல்லமுடியுமா, தங்கமணி? ஆனால், புத்தர் போதித்த பௌத்தம் குறித்து நான் உங்களுடன் ஒத்துப்போகிறேன்.

Dondu Says:

இத்தொகுதியில் உள்ள ஆதிக்க சாதி பிறமலைக் கள்ளர் வகுப்பினர். இம்மாதிரி சம்பந்தப்பட்ட இடங்களில் ஆதிக்கசாதியின் பெயரை அடையாளம் கண்டு எழுதிக் கொண்டு வந்தால் ஒரு பெரிய உண்மை தெரிய வரும். நல்லத் துவக்கம்.
காசி கூறுகிறார்: “பெரும்பான்மையினர் ஆண்டால்தான் அது சரி என்பதுபோலவும், என்னவோ எல்லா இடங்களிலும் பெரும்பான்மையினர்தான் ஆள்வதுபோலவும்!”
சிறுபான்மை வகுப்பினர் சில இடங்களில் வெற்றி பெற்றால் அது தனிப்பட்ட வேட்பாளரின் வெற்றி. பெரும்பான்மையினர் இவர் நமக்கு நல்லது செய்வார் என நம்பி வாக்களிப்பதாகும். இந்த இடத்தில் அது பொருந்தாது. பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப் பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும். எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

தங்கமணி Says:

பெயரிலி, தமிழ்நாட்டில் பெளத்தம் ஒரு பலகீனமான அமைப்பையே கொண்டிருக்கிறது. மேலும் அதில் சாதியைக் கொண்டுவரமுடியாதென நினைக்கிறேன். நான் பெளத்ததை முன்வைக்கும் போது ஜப்பானில், கொரியாவில் இருப்பது மாதிரி அமைப்பு வழிபட்ட இறுக்கமான மத நம்பிக்கையற்ற ஒரு சூழல் இங்கும் (தமிழ்நாட்டில்) வரவேண்டியே சொல்கிறேன். நிச்சயம் இலங்கை போல நிறுவனப் படுத்தப்பட்ட ஒன்றை நோக்கியல்ல.

-/பெயரிலி. Says:

தங்கமணி நன்றி. புரிகின்றது.
டோண்டு ஐயா, உங்களுக்கு ஐயங்காரை ஆதிக்கசாதி என்று எண்ணாதவரையிலே உங்களுடைய பிரச்சனை முடிவடைந்துவிடுகின்றது என்று தோன்றுகின்றது. தேவர், கள்ளர், நாடார் என்று தலித்தோடு நிகழும் சாதிக்கொடூரம் ஒரு புறமிருக்கட்டும். ஏன் பிராமணர்கள் (குறிப்பாக, ஆர் எஸ் எஸ் + பிஜேபி இனைச் சேர்ந்த பிராமணர்கள்), தலித்துகளை நோக்கித் தம் கட்சிக்காகக் குறிவைக்கின்றார்கள் என்பதை உங்கள்-விஸ்வாமித்திரன் இணைப்பு உணர்த்துகின்றது. பிராமணர்களுக்குப் போட்டியாக வந்துவிட்டார்களோ என்ற நிலையிலிருக்கும் பிராமணியத்தின் சாதித்திட்டத்தைக் கொண்டு தொங்கும் அடுத்த மட்டச்சாதிக்காரர்களை (பிராமணருக்கும் பிராமணியத்துக்குமான வேறுபாடு உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன்; இல்லாவிட்டால், உங்களைச் சோ காக்கட்டும்) மடக்கத் தங்கள் கருவியாகப் பயன்படுத்துவதிலே பிராமணியத்தை இன்னும் பிடித்துத்தொங்க முயலும் பிராமணர்கள் கையோங்கியிருக்கும் இந்துத்துவா இயக்கங்கள் முயல்கின்றது கண்கூடு. ஆடு நனைகிறதே என்று… அழுகின்றவர்கள் ஆரோ?

அன்புடன் பாலா Says:

ரோசா,
//டோண்டு போன்றவர்கள், ஆடு நனைவதற்கு கண்ணீர் விட்டு, மனதில் நகைப்பதற்கான சமுதாய சூழலே இதன் அடிப்படை காரணம்
//
டோண்டு ராகவன் தலித்துகளின் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவராகத் தோன்றவில்லை. அவரே தலித்துகளின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து பாராட்டுதலுக்கு உரிய ஒரு பதிவு எழுதியுள்ளார். சுட்டி இதோ!
http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
நீங்களும் அதற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்!
ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான். தலித் முன்னேற்றத்துக்கு எதிரானவர் என்று ஒரேடியாக கூறுவதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்
பாலா

Dondu Says:

“டோண்டு ராகவன் தலித்துகளின் நலனுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பவராகத் தோன்றவில்லை. அவரே தலித்துகளின் ஒரு முக்கியப் பிரச்சினை குறித்து பாராட்டுதலுக்கு உரிய ஒரு பதிவு எழுதியுள்ளார். சுட்டி இதோ!
http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
நீங்களும் அதற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்!”
ரோசா அவர்கள் அப்பதிவுக்கிட்டப் பின்னூட்டங்கள் அனைத்தும் அதைரியப்படுத்துவதாகவே இருந்தன. இரட்டைத் தம்ளர் முறை செய்பவர்களை சட்டம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினார். 55 வருடங்கள் செய்துப் பார்த்துத் தோற்ற முறையையே கட்டிக் கொண்டு அழுதால் என்ன பலன்? ஆகவே லேட்டரல் திங்கிங் போன்ற ஒரு முறையைக் கூறினேன். அதற்கு எத்தனை விளக்கங்கள் கூறினேன்!
“ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான்.”
நான் கூறியதில் என்ன தவறு? அதுதான் உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலாஜி-பாரி Says:
இப்போது நிதர்சனமாக தெரியும் உண்மை என்னவென்றால், தலித் மக்கள் தாங்கள் நினைத்தாலும் தங்கள் நிலைமையை மாற்ற இயலா சூழலில் உள்ளனர் என்பதே. பூங்கொடி போன்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால், அதாவது தங்கள் போராட்டத்தை துவக்கினால், ஊரை விட்டு விலக்கி வைக்கப்படும் நிலைதான் உள்ளது. இவர்களுக்கு தேர்தலில் நிற்பது என்பதே போராட்டமாகிப் போன நிலையில் நாம் எதை ஜனநாயகம் என்பது?.
இத்தகைய சூழலில், மேலும் ஒரு செய்தி.
http://kanchifilms.blogspot.com/2005/04/blog-post_26.html
ஒரு தலித் தன்னை எரித்துக் கொண்டுள்ளார். இது ஏனென்றால் தனது வயிற்றுப்பாட்டிற்கு உழைக்கும் நிலையில் அதிகாரவர்கங்களின் ஆவேச தாக்குதல்களால். தாக்குதல்கள் மனதில் ஏற்பட்டால் அதன் வலி உயிரையும் பொருட்படுத்தாது. மக்களின் காவலனாக நிற்க வேண்டிய காவலர்கள் அவரை முதலில் மனதால் காயப்படுத்தினர். பின்பு அவரது 70% சத்வீத தீக்காயத்திற்கு காரணமாகினர்.
இதிலிருந்து நாம் சில உண்மைகளையாவது கொள்வோம்.
1.அவர்கள் வளர நினைத்தாலும், போராடினாலும், (பார்ப்பனிய மனோபாவத்தை கொண்ட)அதிகாரவர்கங்கள் அவர்களை அழுத்திப் பிடித்தாவாறே தான் உள்ளது.
2. இப்படி அழுத்தி பிடிப்பதற்குண்டான கலையை மனு எழுதி வைத்தான்.
3. இவர்களுக்கு விடிவு என்பது அவர்களிடம் மட்டுமில்லை உங்களிடமும் என்னிடமும் நம் சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் உள்ளது. இதற்கான மனோபாவ மாற்றம் இந்த செய்திகளை கண்ட பிறகாவது நிகழ வேண்டும்.
4.ஒரு ரிசர்வ் தொகுதியில் ஒருவர் போட்டியிட்டு ஜெயித்தால் அவர் ராஜினாமா செய்வது ஏன் என்பதை பார்க்க வேண்டும். இது உள்ளங்கை நெல்லிக்கனி. பிறன் மலைக்கள்ளர் வகுப்பினரின் ஆதிக்க மனோபாவம்தான். ஆனால் இவர்களுக்கு யாரையா கற்றுக் கொடுத்தது? மரத்தின் கிழைகள்தான் இவர்கள். வேர் எங்குள்ளது என்று தங்கமணி கூறிவிட்டார்.
5. ஒரு ரிசர்வ் தொகுதியில் ரிசர்வ்ட் மக்கள் யார் வேண்டுமானால் நிற்கலாம். இதில் எந்தவித பேச்சு வார்த்தையும் தேவையிருக்க கூடாது. இது அடிப்படை உரிமை.
நிறைய இருக்கின்றது எழுத. இப்போது நேரமில்லை. முடிந்தால் தனிப் பதிவாக பதிகின்றேன்.

Karthikramas Says:

இது மாதிரியான விஷயங்களுக்கு தீர்வாய் என்ன செய்யமுடியுமென்று யோசித்த்து ஒன்று கிடைக்காமல் தற்போதைக்கு என் புத்தியை சாடிக்கொண்டிருக்கிறேன். மேலும் எழுதுவேன்

Padma Arvind Says:

சிலை திறப்பு விழாவிற்காக வந்த மத்திய மந்திரி ஜெகஜீவன் ராம் சென்றபின் அந்த சிலைக்கு புண்ணியாசனம் செய்ததை மறக்க முடியுமா? தினமர் செய்தியயும் புகைப்படத்தையும் பார்த்து அதிர்ந்து போனேன். ஒவ்வொரு நாட்டிலும் ஏதேனும் ஒரு பெயரில் தீண்டாமை இன்னமும் இருக்கிறது, அரசியல்வாதிகள் அதை வளர்க்கிறார்கள். மக்கள் தொகைகணக்கெடுப்பு இந்தியாவில் சாதீய அடிப்படையில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இன அடிப்படையில் இருப்பதாகவும் சமீபத்தில் நடந்த குழு விவாதம் ஒன்றில் அறிய கேட்டேன்

Padma Arvind Says:

மத்திய மந்திரி ஜெகஜீவன் ராம்சிலை திறந்துவைத்துவிட்டு சென்றபின், சிலையை புணருத்தாரணம் செய்த மக்கள் வாழும் இடத்தில் இருக்கிறோம். தினமலர் செய்தியை பார்த்தபின், தீக்குளித்த ஒருவரை வேடிக்கை பார்த்த கூட்டமும் பார்த்தேன். வேதனையாக இருக்கிறது. தீண்டாமை எல்லா நாட்டிலும் ஏதோ ஒருவகையில் இருக்கிறது சில அரசியல்வாதிகளின் வாழ்த்துக்களுடன். சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் மக்கள் தொகை கணக்கீடு இந்தியாவில் சாதி அடிப்படியிலும், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார அடிப்படையிலும், அமெரிக்காவில் இன அடிப்படையிலும் செய்யப்படுவதாக உரையாடப்பட்டது. சாதி அடிப்படையில் தேர்தலில் நிற்பதும், இன்னார் இந்த சாதி என்று அடையாளம் சொல்வதும், சாதிக்குள்ளேயே சில சின்ன சின்ன பிரிவுகள் தீண்டாதவராய் நடத்தப்படுவதும் அனுபவத்தில் கண்ட உண்மை. வருந்த வேண்டிய செய்தி, இதை விடாமல் வளர்த்துக் கொண்டே இருப்பார்கள் அரசியல்வாதிகள் சுய இலாபத்திற்காக.

தங்கமணி Says:

//உங்களின் இந்தக்கருத்தை ஒத்துக்கொள்ளலாம்.//
பெயரிலி,
கருவறைக்குள் நாங்கள் மட்டும்தான் வருவோம் (நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும், பஞ்சாயத்துத் தலைவராக நாங்கள் மட்டும் தான் வருவோம்(நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே நோய் முதல் நாடி தீர்த்தலே சரியானது.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் போய் சுனாமி ஆராய்ச்சி மையமும், அறிவிப்பு மையமும் அமைக்கப்போவதைச் சொல்லமுடியாது பெயரிலி, அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஆனால் உண்மையிலேயே சுனாமியை எதிர்கொள்ள உணவுப்பொட்டலங்கள் போதாது; அது வழியுமல்ல. மூன்று தொகுதி மக்களுக்கான தீர்வல்ல நான் சொல்லிக்கொண்டிருப்பது. அது உங்களுக்கு புரியும், புரியவேண்டும்.
பாலாஜி, தீவைத்துக்கொண்டவனுக்கு மருந்து போட்டுவிட்டு பொட்டிக்கடை வைத்துக்கொடுத்துவிட்டால் அவர்கள் சுயமாக உழைத்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
அவனும் சுயமாக கட்டிடத்தொழில் பண்ணி பிழைத்துகொண்டுதானிருந்தான். அவனுக்கு என்ன கொழுப்பு வந்ததென்று போய் நெருப்பு வச்சுகிட்டான்? எல்லாவற்றுக்கும் காரணமாக சுயமாக முன்னுக்கு வரவேண்டும் என்று சொல்வது ஒரு வகையில் அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. இந்தியாவில் காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.
சுயமரியாதை அம்மக்களுக்கு எப்போதும் குறைவாய் இருந்ததில்லை; ஏனெனில் அது உழைப்போடு சம்பந்தப்பட்டது.

-/பெயரிலி. Says:

/கருவறைக்குள் நாங்கள் மட்டும்தான் வருவோம் (நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும், பஞ்சாயத்துத் தலைவராக நாங்கள் மட்டும் தான் வருவோம்(நீங்கள் வரக்கூடாதெனச்) சொல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. எனவே நோய் முதல் நாடி தீர்த்தலே சரியானது./
தங்கமணி, நீங்கள் சொல்லும் பார்வையிலே அது சரியே; நான் சொல்ல வந்தது, சாமிக்கு முன்னால் சாப்பாடு முக்கியமென்ற அடிப்படையினைக் குறித்து. (அதிலே டோண்டு ஐயாவின் ‘மட்டும்’கூடச் சேர்ந்து கொண்டுவிட்டது)

Padma Arvind Says:

தங்கமணி
உழைப்போடு சம்பந்தப்பட்டது சுய மரியாதை. சரியாய் சொன்னீர்கள்

ரோஸாவசந்த் Says:

//“ஆனால் அவர் கூறிய
//பெரும்பான்மை மக்களை வற்புறுத்தினால் இம்மாதிரி கேலிக்கூத்துகள்தான் நடக்கும். ஏன், ரிசர்வேஷனை இத்தொகுதியிலிருந்து வேறு ஏதாவது தொகுதிக்கு மாற்றிப்
பாருங்களேன், சம்பந்தப்பட்டத் தொகுதியில் இருக்கும் அரசியல்வியாதிகள் எப்படி அழுகின்றனர் என்று? இதுவும் பலர் இதை அடக்கி வாசிப்பதின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
எங்கேயாவது தங்கள் தொகுதிக்கும் இந்த நிலை வந்து விடுமோ என்று எல்லோரும் அஞ்சுகின்றனர்.
//
விவாதத்திற்கு உரியது தான்.”
//
நான் கூறவில்லை. பாலாஜி உங்கள் மெயிலுகு பதில் எழுதுகிறேன். சங்கரபாண்டி, நாராயணணுக்கும் எழுதுகிறேன்.

ரோஸாவசந்த் Says:

//காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.//
நன்று சொன்னீர் தஙகமணி. சில திசைதிருப்பல்களை புறக்கணித்து, அதற்கு மீண்டும் மீண்டும் பதில் தருவதை நிறுத்தி இந்த பிரச்சனை குறித்து மட்டும் பேசுவது தேவை என்று நினைக்கிறேன்.

ரோஸாவசந்த். Says:

http://thatstamil.indiainfo.com/news/2005/04/27/keeripatti.html

தங்கமணி Says:

http://thatstamil.indiainfo.com/news/2005/04/28/kovai.html

aathirai Says:

டோ ண்டு சார் நல்ல மனத்துடனே சொன்னாலும், பொருளாதார மாற்றம்
மட்டுமே முழு தீர்வு ஆக முடியாது.
தமிழ்நாட்டில் 4/5 தலித் IAS ஆபீசர்கள் எந்த வேலையும் கொடுக்கப்படாமல் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.
இதில் ஒருவர் கோர்ட்டுக்கு போய் பின்னர் போஸ்டிங்க் வாங்கியிருக்கிறார். IAS க்கு இந்த நிலைமை என்றால்…..
தங்கமணியின் பின்னூட்டத்தில் கூறியிருப்பதைப் போல அடிப்படை பிரச்சினையை அணுகாமல் மேலோட்டமா
இந்த பிரச்னையை தீர்க்க முடியாது.

aathirai Says:
“இந்தியாவில் காலையில் இருந்து மாலைவரை, குடும்பத்தோடு சுயமாக உழைக்கும் சாதியினருக்கு,பெண்கள் வெளியே போனால் ஒழுக்கமின்மை என்று அறிவுறுத்தும் சிந்தனைவாதிகள் சுயமாக உழைப்பதையும், சுயமரியாதையையும் பற்றியும் சொல்லிக்கொடுப்பதுதான் வன்முறையின் உச்சகட்டம்.”
மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

Karthikramas Says:
Thanks to Kumudam.com
=========================
அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்குவதும் பின்னர் மீண்டும் அழகர்மலை நோக்கிச் செல்வதும் ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சி. அதுபோலத்தான் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவியும் ஆகிவிட்டது.
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. இதுதான் பிரச்னையே! இந்தமுறை பல அரசியல் கட்சிகள் ஆதரவோடு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேட்பாளர் பூங்கொடி நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து கிராம மக்கள் சார்பில் அழகுமலை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். வழக்கம்போல கிராம மக்களின் வேட்பாளரான அழகுமலை, அமோக வெற்றி பெற்றார். பூங்கொடி வெறும் 29 ஓட்டுக்கள் மட்டுமே வாங்கினார்.
கடந்த 24_ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்குப் பதவிப் பிரமாணம் எடுப்பதற்காக அழகுமலை, கீரிப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் இரண்டு போலீஸாரும் பாதுகாப்புக்கு வந்தனர். யாருடனும் பேசாமல் நின்ற அழகுமலையை நெருங்கி, ‘பதவிப் பிரமாணம் செய்தவுடன் ராஜினாமா செய்துவிடுவீர்களாமே…’ என்று கேட்டோம். ‘ஆமாம்…’ என்றார் மெல்லிய குரலில். ‘தேர்தலின்போது வெற்றி பெற்று மக்களுக்குத் தொண்டாற்றுவேன் எனச் சொன்னீர்களே?’ என்றதும், ‘எல்லோரும் நிம்மதியாக வாழணும்… அவ்வளவுதான்’ எனச் சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார்.
சுமார் ஒன்பதரை மணியளவில் கிராமத்து மக்கள் சுமார் முப்பது பேர் அழகுமலையை அங்கிருந்த கோயிலுக்கு ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்கள். அவருக்கு ஜரிகைத் துண்டு அணிவிக்கப்பட்டது. அழகுமலை முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. எல்லோரும் சாமி கும்பிட்டார்கள். பின்னர் அருகிலுள்ள பெரிய வேப்ப மரத்தின் கீழ் கிராமக் கூட்டம் நடந்தது. அதில் சில வக்கீல்களும் கலந்துகொண்டனர். அப்போது ஒரு வக்கீல் எழுந்து ஒரு அஃபிடவிட்டை வாசித்தார். ‘அதில் உள்ளதெல்லாம் எனக்கு உடன்பாடுதான்’ என்று சொன்ன அழகுமலை, அதில் கையெழுத்துப் போட்டார். பிறகு ஒரு வெள்ளைத்தாள் வாங்கி வரச்சொல்லி Êஏதோ எழுதி அதுவும் வாசிக்கப்பட்டு அழகுமலையின் கையெழுத்தும் பெறப்பட்டது. அழகுமலை ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.
பிறகு அழகுமலை, பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கிராம மக்களால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். பத்தேகால் மணியளவில் பி.டி.ஓ. ராமச்சந்திரன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கூடிநின்ற கூட்டம் கைதட்டியது. பதவியேற்றதும் மினிட் புத்தகத்தில் அவர் கையெழுத்துப் போட்டார். பின்னர் வக்கீல் ஏற்கெனவே வைத்திருந்த ஒரு வெள்ளைத்தாளை அழகுமலையிடம் நீட்ட… அதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர், அதை வாங்கி மீண்டும் அந்த வக்கீலிடமே நீட்டினார். ‘அதிகாரியிடம் கொடு…’ என கண்ஜாடை செய்த பின்னரே அதிகாரியிடம் கொடுத்தார். அது ராஜினாமா கடிதம்!
அதை வாங்கிப் படித்த பி.டி.ஓ., ‘நீங்க பதவியைத் தொடரணும். அப்போதுதானே கிராமத்தில் வளர்ச்சிப்பணியெல்லாம் தடையில்லாம நடக்கும். ஊருக்கு நல்லது செய்யணும்னா நீங்க பதவியில இருக்கணும். ஏன் ராஜினாமா செய்யறீங்க?’ என்று அட்வைஸ் செய்தார். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘மந்திரி ராஜினாமா செஞ்சா ஏன் எதுக்குன்னு கேட்பீங்களா… இனி வக்கீல் பேசுவார்’ என்றது. பின்னர் வக்கீல் ஒருவர் அழகுமலைக்காக அஃபிடவிட் ஒன்றை அதிகாரியிடம் கொடுத்தார். அதனுடன் ராஜினாமா கடிதமும் இருந்தது.
அழகுமலை கையெழுத்திட்டிருந்த அந்த அஃபிடவிட்டில்…
‘18.4.2005 அன்று பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், யாருடைய வற்புறுத்தலுமின்றி, அச்சுறுத்தலுமின்றி, தூண்டுதலுமின்றி பதவியேற்பு நாளான இன்று என்னைத் தேர்ந்தெடுத்த மக்களின் ஒருமித்த கருத்துப்படி பதவியை ராஜினாமா செய்கிறேன். என்னைத் தேர்ந்தெடுத்த பிரமலைக்கள்ளர் இன மக்கள் 1950_ம் ஆண்டு ஜனவரி 26_ம் தேதி வரை ஞிமீஜீக்ஷீமீssமீபீ சிறீணீssமீs என்ற பட்டியலில் பள்ளர், பறையரோடு அனைத்து சலுகைகளையும் பெற்று வந்தனர். அதன்பிறகு அரசு சலுகைகள் குறைந்து மற்ற முன்னேறிய இனத்தவரை அவர்களோடு சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிட்டு அவர்களின் சலுகைகள் குறைக்கப்பட்டன.
அதே நேரத்தில் எங்கள் இன மக்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை எங்களில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைக் கண்டிக்கிறேன். அடுத்தமுறை இந்தப் பஞ்சாயத்துத் தலைவர் பதவி, பொதுப்பட்டியலுக்கு வரவேண்டுமென்பதைப் பிரதிபலிக்கும் விதமாக என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பி.டி.ஓ. ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ‘‘அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என முடிவு செய்யவேண்டியது கலெக்டர்தான்… இந்தக் கடிதம் கலெக்டருக்கு அனுப்பப்படும்’’ என்றார்.
இந்தத் தேர்தல் சட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளால் நியமிக்கப்பட்டிருந்த சென்னை பார் கவுன்சில் உறுப்பினரும் தி.க. சட்டப்பிரிவு மாநிலச் செயலாளருமான கி. மகேந்திரனிடம் இந்த ராஜினாமா முடிவு குறித்துக் கேட்டோம்.
‘‘தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜினாமா செய்யக்கூடாது என நாங்கள் ஏற்கெனவே வற்புறுத்தி வருகிறோம். இப்போது அவர் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளார். அதை கலெக்டர் ஏற்றுக்கொள்ளக்கூடாது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தெளிவான முடிவு எடுக்கவில்லையென்றால் நியாயம் கிடைக்க கோர்ட்டிற்குச் செல்வோம்…’’ என்றார்.



விவாதத்தில் பங்கேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்
அன்புடன்
பாலாஜி-பாரி

PS: பின்னூட்டம் இடுவதில் இருந்த சிரமங்கள் குறித்து திரு. இராகவன் கூறிய தகவலுக்கு நன்றிகள். அதை சரிசெய்துள்ளேன் என நினைக்கின்றேன். (எனது இந்த புது வீட்டில் பல விசயங்கள் இன்னும் புதிதாகவே உள்ளது!)