Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, August 06, 2007

நிறமற்ற மொழி

Photobucket - Video and Image Hosting


செயலிழந்து நிறுத்தப்பட்டதை
தவிப்புடன் உணர்கின்றேன்.
மொழியின் கடைவாய்களில் சிக்கியது
ஒரு கவிதை.

அவ்வளவு எளிமையாக
மொழியின் சுழலை மீறி
மிதக்கின்றது உன் புன்னகை.

என் நாவின் புரளல்
ஆண்மொழியிலிருந்து
நழுவும் ஒரு புள்ளியில்
துலங்குகின்றது
மொழியில்லாத ஒரு கவிதை.

நன்றிகளடி என் தோழி.

*பாலாஜி-பாரி

ஒரு கவிதையும் அது உருவாக்கிய சுழலும்

சமீபத்தில் படித்த ஒரு கவிதையை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

பூவின் வலி
அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
பூவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சந்தித்த
பறவையின் உதிரும் இறகுகளைப்போல

பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

-குட்டி ரேவதி (பக்:26-தனிமையின் ஆயிரம் இறக்கைகள்-டிசம். 2003 - பனிக்குடம் பதிப்பகம்- சென்னை)

இக்கவிதையை படித்தவுடன் குல்-மொஹர் மரத்திலிருந்து, மழைக் கால துவக்கத்தில் உதிர்ந்த அந்த சிவப்பு வண்ண இதழ்கள் பாதையெங்கும் வியாபித்து விரிந்து கிடக்கும் அந்த பேரழகு இன்று ஒரு நினைவாக வருகின்றது. பெங்களூரில் இத்தகைய காட்சிகள் எங்களது வளாகத்தில் நிறைய சிதறிக் கிடக்கும்.

அன்புடன்
பாலாஜி-பாரி

இரண்டு கவிதைகள்

இன்று புரட்டிக் கொண்டிருந்த கவிதை புத்தகத்தில் இக்கவிதை என்னைக் கவர்ந்தது.
இதை கல்யாண்ஜியின் கவிதைகள் என்ற தொகுப்பில் படித்தேன். பல கவிதைகள் நன்றாக உள்ளன.


கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.

-கல்யாண்ஜி


நீண்ட நாட்களாக பதிய வேண்டும் என்று நினைத்த ஒரு கவிதை இந்த புத்தகத்தில் இருக்கின்றது.
உரையாடல் கவிதை அனுபவம்- இந்திரன் மற்றும் வ.ஐ.ச ஜெயபாலன்

இக்கவிதையை எழுதியது இந்திரன். இவரது சில மொழிபெயர்ப்புகளை படித்திருந்தாலும், இவரது கவிதையை ஒரு தொகுப்பாக படிப்பது இதுவே முதல் முறை. மியூசியம் என்ற தலைப்பில் இருந்த கவிதையில் இருந்து சில வரிகள்.

மியூசியம்

பசியிலிருந்து தப்பிக்க
தூக்கம்
மிக உசிதம்

மியூசியம்
படிகளில்
தூங்குவதென்றால்
இன்னும் உன்னதம்.

புராதனமானது
பசியைக் காட்டிலும் வேறென்ன?

மஞ்சள் பூத்துப்போன
எலும்புக்கூடுகளோடும்
துருப்பிடித்த பீரங்கிகளோடும்
தூங்குகையில்

இறந்த காலத்தின் உள்புதைந்த
மரண அமைதியுடன்
இன்றைய உலகின்
உயிர்த் துடிப்புள்ள ஒரு பகுதி
கலந்து விடுகிறது.

வெளியே

தளிர்க்கோதும் மைனாக்கள்
சதா ஒலியெழுப்புகின்றன.

உள்ளே

நூற்றாண்டுகளுக்கு முன்னரே
வெடிக்க மறந்துபோன துப்பாக்கிகளுக்கு
எண்ணெய் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.
முதுமக்கள் தாழிகள்
நொறுங்கிய
தங்கள் வயிறுகளுக்குள்
எதிர்காலத்தை
ஏப்பம் விடுமோ என்கிற
அச்சம் ஏதுமின்றி.

ஒளிக்கற்றைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடும்
உதிர்ந்த சருகுகளை

ஊதிப்பறக்க விடுகிறது
காற்று.

-இந்திரன்

படகும் மனமும்

ஜாதி மல்லிகையின்
மணம் நிரப்பியது போல்
இசையால் நிறைந்திருந்தது
எனது அறை.

கரையில் இருந்த
ஆளற்ற தனி படகு
எண்ணங்களை மீட்டுகின்றது.

காற்று எழுதும் வரிகளாக
சிறு அலைகள்
வளைகுடா நீரின் மீது.

எழுதப்படாத கவிதையாக நீ
"கனவுகள் வேண்டாம்" என்கின்றாய்,
புன்முறுவல்களின் அதிர்வுள்ள குரலில்.

இருப்பின் மறுகரையை அடைய
என் படகை நான் அண்மித்த பொழுது
புத்தனும் ஆர்ப்பரிக்கின்றான்.

இப்பொழுதும் நிறைந்திருக்கின்றது
எனது அறை.


பாலாஜி-பாரி

பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்

Image hosted by Photobucket.com


பூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்-1
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு : டிசம்பர் 2003(முதல் பதிப்பு)
ISBN 81-87477-65-2



சமீபத்தில் டொராண்டோ சென்ற போது அங்கு நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை காண நேரிட்டது. இந்த புத்தகத்தை புரட்ட எனக்கு தூண்டுதலாய் அமைந்தது, அதன் முகப்பு அட்டையே. இதில் ஒரு வயதான மூதாட்டியின் படம் இருந்தது. அந்த முதுமையான முகத்தில் ஒரு சிறிய கம்பீரம்.

இவர்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியை என்று அறிந்த போது சற்றே திகைப்பும் ஒரு மகிழ்ச்சியும் உண்டானது.

முதலில் இந்த புத்தகத்தை பற்றி:

இந்த புத்தகம் 1929 ஆம் ஆண்டிலிருந்து 2003 ஆம் ஆண்டு வரை பூரணி என்ற சம்பூர்ணம்மாளின் படைப்புகளை தாங்கி நிற்கின்றது.

எழுத்துக்களினூடே படைப்பாளியும் வாசிக்கப்படுகின்றார் என்பதை என் வாசிப்பில் நான் உணருகின்றேன். அப்படி பார்க்கும் போது, முடுகு(1930-45) என்ற ஒரு கவிதையில் அந்த கால மாற்றங்களை அழகாக சொல்லி, மாற்றத்தை ஏற்றுக் கொள்கின்றார். இதில் உள்ள எளிமையும் நிறைவாய் உள்ளது. அக்கவிதையின் கடைசி வரிகள் சில:

"தண்ணீர் குடம் தூக்கும்
தருணியர்கள் இப்போ
டென்னிஸ் விளையாட
கிளப்புகள் உண்டாச்சு
ஏலேலோ இயற்கையதின் தன்மை எப்பொழுதும் மாறுதலே
இதையறியா பல பெரியோர் கண்டு இகழ்வதும் அறியாமையே".

இவருக்கு பாடு பொருள் பல உண்டு. இவர் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கவில்லை தம் படைப்புகளில். விடுதலை போராட்டத்தை ஆதரித்து, மக்களுக்கு பழக்கமான மெட்டுகளில் பாடலமைத்து அதை வெளிப்படுத்தியது மிகவும் போற்றத்தக்கது. அரிசிமாக் கோலமும், வெள்ளி மின்னலும், மேரு மலைகளும், கோடை மதியமும், குடியானவனின் கிராமமும் இவர் பார்வையிலே கவிதையாகின்றன. பெண்களின் எழுச்சியையும் இவரது கவிதைகள் பிரதிபலிக்கின்றன.
பெண் என்ற கவிதையில்

" பட்டமென்ன சட்டமென்ன
பாராளும் ஜோரென்ன
கட்டினவன் மோசமென்றால்
ரத்து செய்யும் உரிமையென்ன

இன்றைய பெண்குலமே
எழுச்சி கொண்டததிசியம்தான்"

என்று கூறிவிட்டி, அதே வேகத்தில்

"என்றாலும் தீமைகள்
எல்லாமும் முடியவில்லை" என்றும் எச்சரிக்கின்றார்.

இருக்கும், பார்க்கும், உணரும் நிகழ்வுகள் மட்டுமே இவரிடம் கவிதையாகவில்லை.

சாத்திரம் (1965-67) என்ற ஓர் கதை கவிதையை படைக்கின்றார்.
அது ஒரு அற்புதம். பெண்ணின் உளப்பாங்கையும், வெட்டி தர்பார் செய்யும் தந்தையும், காதல் மருகும் ஓர் ஆண்மகனையும் காட்டுகின்றார். இதில் வெற்று சனாதன தாங்கிகளையும் ஒரு பிடி பிடிக்கின்றார். இவர்களது தன்மையை மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்கின்றார். (அவரிடம் அனுமதி வாங்கிய பின் இதை நான் தனி பதிவாக இடுகின்றேன்).

சென்ற நூற்றாண்டில் 1970 களுக்கு பின் எழுதியதில் என்னைக் கவர்ந்த ஒரு கவிதை:

காலை ஒலிகள்

பத்துக் குடித்தனங்கள்
ரேடியோக்கள்
பக்திப்பா, துதிப் பாடல்
சுப்ரபாதம்
வீதியிலே கிஸ்னாயில்
கீரை சப்தம்...
...
....
போரிங்பம்பு அடிப்பதனால்
தடதடப்பு.

என்று போகின்றது. இது ஒரு காட்சியாக கண்முன் விரிகின்றது.

பெண் - என்ற தலைப்பில் மீண்டும் ஒரு கவிதை வருகின்றது. இந்த கவிதை நாட்டுல பெண்கள் முன்னேறிட்டாங்க என்று கூறும் நபர்களுக்கு சவுக்கடியாய் இருக்கின்றது. இதில் இவர் காலத்தை பதிவு செய்துள்ளார். 1940-களில் பெண்களுக்கு இருந்த நிலை 1970-களுக்கு பிறகும் தொடர்கின்றது என்பதை அக்கவிதை உரைக்கின்றது. அது அவலமன்றோ?

2003-ல் அவர் எழுதிய கவிதைகள், ஹிந்துத்துவாவை சாடுகின்றது. அகலிகை பற்றியும் சீதை பற்றியும் அவர் எழுதியுள்ளது ஆழமான மன மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும் நிச்சயம் பெண் கொடுமைக்கு எதிரான தொண்ணூறு வயது கிழவியின் மௌனமான மன வலி ரேகைகளை அதில் காணலாம்.

இப்புத்தகத்தின் முத்தாய்ப்பாக இருப்பது கபீர் கவிதைகள். இவரது மொழிபெயர்ப்பு மிகவும் கூர்மையானதாகவும், மனதில் தைக்கும் படியும் உள்ளது
காட்டாக,

"பரத்திலே மனம் கலந்தது அந்த
மனத்திலே பரம் கலந்தது
ஜலதிலுப்புக் (ஜலத்தில் உப்பு) கலந்த பின்னும்
ருசித்தபோது தெரிந்தது"

இவரது கவிதை புத்தகம் ஒரு விடுதலை விரும்பியின் கால ஆவணம்.

இவரைப் பற்றி:

இவரை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பு உள்ளது.

இவரது சொந்த ஊர் பழனி. வாழ்க்கைப்பட்டது தராபுரம். பின்பு சென்னையில் வசிக்கின்றார் என்று அறிகின்றேன். (இவரது மகளும் கவிதைகள் படைக்கின்றார்.பெயர் கிருஷாங்கினி. இவர் நன்கு அறியப்பட்டவர். தட்ஸ் தமில் . காமில் இவரது சில படைப்புகள் உள்ளது)
மேலும் இப்புத்தகத்திற்கு அம்பை முன்னுரை எழுதியுள்ளார். அதுவே மிகவும் அருமையாக உள்ளது.

( வரும் திங்கள் அன்று புத்தகத்தின் முகப்பை தெளிவான முறையில் இட முயல்கின்றேன்)

நீ

சில ஒலிக்குறிப்புகள்.
சிற்சில எழுத்துக்கள் கொண்ட சிறுவார்த்தை.
சின்னஞ்சிறு செயல்கள்.
வியக்க செய்கின்றது
உனது மொழியின் விஸ்தீரணம்.
என் கவிதைகள்
மௌனமாகின்றது.
இது இயல்பு.

வார்த்தைகள்

Image hosted by Photobucket.com
நமது உரையாடல்கள்
நிறைவு பெறுவதேயில்லை.
எனது 'உள்'ளில் சில வார்த்தைகள்
பாறை மீதின் அலையாக
மோதிச் சிதறுகின்றன.
வீட்டின் தோட்டத்தில்
பழுப்பு நிற மைனாக்கள் விளையாடுகின்றன.
புல்வெளியின் விளிம்பில்
மஞ்சள் பூக்கள் மலர்ந்துள்ளன.
நீ புன்முறுவல் செய்கின்றாய்
வார்தைகள் வெல்லப்படுகின்றன.


பாலாஜி-பாரி

ஊதா நிற மெழுகுவர்த்தி

Image hosted by Photobucket.com



எனது தேசம்
மணம் நிறைந்த
ஊதா நிற மெழுகுவர்த்தியால் ஆகியிருந்தது
உள் உணரா தேவனின் கட்டளையாக.

வாடையில் நடக்கும் போது
சில சமயம் இறுகியதால்
சில இடங்களில் உடைந்து போனது.

கோடையில் நடக்கும் போது
காற்றில் மணத்தை நிரப்பி
தேசம் உருகியதில் பாதங்கள் சிக்குண்டது.

சட்டென்று எதிர்பாராத கணத்தில்
ஒரு ஒளித் திவலை தோன்றி
என் தேசத்தின் மைய நாடியில்
வளர் சுடராக தன்னை அமர்த்திக் கொண்டது.

வேனில் கால காற்றில்
மணம் நிறைந்த சூழலில்
அமைதியான அந்த மெழுகுவர்த்தியின் ஒளியில்
என்னுள் இப்போது
தேவன் புன்னகைக்கின்றான்.

என்னுடன் நடப்பாயா?


-பாலாஜி-பாரி

கனவுகளைத் தேடி

கதிரவனின் வெண் மஞ்சளில்
எனது கனவுகள் செதுக்கப்படுகின்றது.
எண்ணங்களே வாழ்க்கையாகி
சிந்தனை சிலைவடிக்கும்
கனவுச் சிற்பி ஆகினேன்.
மிதக்கும் கம்பளங்களாகிப் போன
இக்கனவுலகு
இயல்நிலையை தொடும் கணம்,
மனச் சூறாவளியில்
அலை எழுப்ப,
நானும் நீங்களும் எப்போதும்
எதிரெதிர் கரைகளிலேயே!

-பாலாஜி-பாரி

Tuesday, February 15, 2005

நான் உணர்ந்த நீ

மலர்கள் நிறைந்த சோலையை காட்டினேன்
வண்டுகளின் இருப்பே உன்னை உறுத்தியது
என்னுள் நந்தவனங்கள் அழிந்தன

மஞ்சள் மாலை மேகங்கள் காட்டினேன்
"ஓ!.. அதனால் என்ன?" என்றாய்
என் மனதில் தொடு வானம் இருண்டது

நட்சத்திரங்களின் ஒளிச் சமிஞ்ஞைகளை சுட்டினேன்
நீ மின்மினிகளில் உன்னை பார்த்தாய்
எனது கிரகத்தில் அடுப்பு அணைந்தது.

நான் இப்போது செயலற்று விலகுகிறேன்
இனியும் என்னுள் இருக்கும்
உன் இயற்கையை கொல்லலாகாது.

-பாலாஜி-பாரி

Thursday, July 08, 2004

நான் யார்?

"நீ வந்த இடம் கால்"
"அதை மட்டுமே நீ பார்"
ஆதிக்க வார்த்தைகள் கேட்டு,
ஆண்டுகளின் கணக்கறியா,
எமது மதங்கள் சுமத்திய
மாய சுமையறிந்தே கூனிய
முதுகு உன் தலையை
நிமிராது அழுத்தி பிடித்தது
எம் பெரியவர்கள் மூலம்.
ஆம் சிகிச்சையில்லா மூலம் தான் - அவர்கள்
மானிடத்திற்கு.

சுமந்தது என் இடது தோள்
இதுகாறும் முப்புரிநூல் மட்டும் அன்று
அதனூடாக ஈராயிரத்தின் கழிவுகளை.
எண்ணிச் சுமையென உணர்தல் கண்டேன்
எண்ணியபடி தீயில் சுட்டெரித்தேன்.
தீயே நீதான் என்னில் இறங்கு-காட்டு
நான் யாரேன எனக்கும்,
தான் யாரேன அவர்களுக்கும்.

பாலாஜி-பாரி

Tuesday, May 11, 2004

பயணம்

முகமறியா பலர் அமைத்த பாதை.

ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.

புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....

இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.

சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...

கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.

சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.

வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.



அன்புடன்
-பாரி

Tuesday, May 04, 2004

துருவலாய் மழை பொழியும் ஓர் காலை நேரத்தில்.....

முன்னிரவில் ஓய்வின்றி பொழிந்த மழை
மந்தமான வெளிச்சத்தை
பாரிலே பரப்பிவிட்டு
தன் ஓய்வை அறிவிக்க முயல்கிறது!!
நீர்க்குச்சிகள் துருவலாய் மாறி
தான் உதிர்த்த பல வண்ண மலர்களின் இதழ்களுக்கு
இதமாக இதழ் கொடுக்கின்றது!!
மந்தகாசம் மனதை நிறைத்த காலை
சிறு சோம்பலுடன் அலுவலகம் அடைந்து
இருக்கையின் பின்னிருக்கும்
ஜன்னலை திறந்தேன்.
மழைத் துருவலில் சிலிர்த்து
கம்பிகள் ஊடே அறையில் நுழைந்து சிலிர்க்கச் செய்தது
நட்சத்திரங்கள் கொண்ட பெயர் தெரியா அச்சிகப்பு மலர்!!


அன்புடன்
பாரி

Thursday, February 26, 2004

என் வேதனைக் கால குறிப்புகள் - 2

முகில்கள் தோற்குமோ
கவின் மிகு பிம்பங்களில்....

மலைகள் தோற்குமோ
அழுத்தமான இருப்புகளில்...

மலர்கள் தோற்குமோ
பரவச ரசனைகளில்....

ஒளிகற்றை தோற்குமோ
தேடல்களின் ஆழத்தில்...

உணர்வுகள் தோற்குமோ
உயிர் துடிக்கும் பிரிவின் அக்கணத்தில்...

(காற்றிலே கலந்து இருந்தது
பெண்டத்தால் வாசனை குளிர்ச்சியாய்)


- பாரி

Wednesday, February 18, 2004

கல்லுக்குள் ஈரம்

ஐந்து நாரைகள்....
புற்களின் மேல் குட்டி குட்டி
வெண் மேகங்களாய்.......
உள்ளங்கைகளின் செந்நிறத்தில்
அதன் அலகுகள் மின்ன....
ஒடிந்து விடுமோ அதன் கால்கள்
என அஞ்ச வைத்து
ஒய்யாரமாய் அது நகர்வதென்ன...
வட்ட விழி கிட்டே பார்த்து
வான் வழி அவை பறக்க,
சுட்டதென்னவோ அவந்தான்.
ஆனாலும் மகிழ்ச்சி அவனுள்
நம்மால் நான்கு தப்பியதே......

-பாரி

Friday, February 13, 2004

என் வேதனைக் கால குறிப்புகள்...

என் நண்பா!!
நமக்கு மிகுந்த துக்கம்
தரக்கூடிய
ஓர் செய்தியை அறிவிக்கிறேன்.
தெளிவோடும்,
முரட்டு தைரியத்தோடும்.

"நம்மால் இனி அன்றைய
+2 மாணாக்கர்களாய்
மாறவே இயலாது".


அறிவின் தெளிவை நோக்கி
உள்ளொளியுடன் எரியும் சக்தியுடன்
வானத்தின் கீழ் அனைத்தும்
புதிதாய் புத்துணர்ச்சியாய்
இருந்தகாலம் இனி
இறந்த காலம்....

புகுத்தப்பட்ட கல்வியால்,
அறிந்த மற்றவைகளால்,
இது இப்படித்தான் என
பாழாய்ப்போன பயனற்ற "அறிவு"
நமக்கு உறுத்தி....
புதிர் காணும் சக்தியென்னும்
ஆக்கையை தொலைவில் நிறுத்தி
நம்மை அண்டத்தின்
அணைப்பில் அண்டவிடாமல்......

அறிவே நீயும் அழிவுதான்.......

-பாரி

Saturday, February 07, 2004

பிளாட் ஃபாரம்

"அங்கனே பாரு புள்ள....
மெயின் ரோட்டுக்கு மத்தியில...
வரிசையா நட்ட மரம் அழகு தாம்லே?"
அப்பா சொல்ல
அதை பார்த்தாள் அச்சிறுமி.
"அட..இதா...ரோட்ல இறங்காத புள்ள..
பிளாட்ஃபாரம்லயே நட..."
"அதெனங்கையா பிளாட்ஃபாரம்?"
"நாம நடக்குதோம் இல்ல? அத்யான்"
"மக்கா... நடக்க என்னாமா
கட்டிருக்காக! பட்டணம்னா சும்மாவா?"
அடிச்ச மழையில் பிஞ்ச கூரை
ஒதுக்கியிருந்தது வேறு சிலரை
பிளாட்ஃபார பாலித்தீன் கூடாரத்தில்.
அதையும் கண்டாள் அச்சிறுமி!
அகலமான கண்கள் மேலும் அகல கேட்டாள்
"அய்யா! இவுகளை யாரு இங்கே நட்டது?"

-பாரி

Saturday, January 31, 2004

No Sound Horn

மைய நூலகத்தின் முன்னமைந்த சாலை
இரு மருங்கிலும் பறவைகளும் அடர்ந்த மரங்கள்
படித்த விஷயத்தை சுமந்தபடி சாலையில் நான்
கீ.ய்...கீச்..கீச்ச்....கீக்கீ..கீய்....கீச்....
ஒரே நேரத்தில் பறவைகளின் ஒலி
எண்ணத்தின் -inertia விலிருந்து என்னை மீட்டது
சற்றே நிமிர்ந்த என் கண்களில் பட்டது
No Sound Horn அறிவிப்பு பலகை

-பாரி

(பின் குறிப்பு: -inertia என்ற பதத்திற்கு தமிழ் வார்த்தை சொல்லி உதவுங்கள்)

Wednesday, January 21, 2004

சருகுகள்

யாரும் கவலை படாத, காற்றிலே மிதந்து செல்லும், உச்சி மரக்கிளையில் இருந்து உதிர்ந்த காய்ந்த சருகை போல் உணர்கிறேன்.
சுதந்திரம்....
புவியின் ஈர்ப்பு மட்டும் இல்லையேல், உடைத்தெறிந்து பறக்கும் உயிர் பறவை உடலை விட்டு.
நீரினுள் கலந்த உப்பாக பிரபஞ்ச கடலினில் கலக்க நினைக்கிறேன். கரையாத கல்லாய் புவியின் ஈர்ப்பினால் உள்ளே மூழ்கி கொண்டிருக்கின்றேன். தரை தட்டுவேனோ, அதை பிளப்பேனோ....
நிகழும் இந்த லீலைகள், நாளைய காவியத்தின், முன்னுரைகள்............

அன்புடன்
பாரி

Wednesday, December 31, 2003

நட்பு

காயப்படுத்திக் கொண்டே
இருந்தாய்
சிரித்தபடி ஏற்றுக் கொண்டேன்

உன் மீது யாரேனும்
பழி சொல்ல,
சொன்னவரைக்
கடிந்து கொண்டேன்

நீ சொல்ல நடந்து
நீ சொல்ல நின்றேன்.

உன் குருவிக்கூட்டு இதயத்திற்குள்
வலுக்காட்டாயமாய் நுழைந்தேன்
மின்னும் மின்மினியாய்

என் சிறகை விரிக்கவும்
எனக்குள் சுருக்கி கொள்ளவும்
உன் கட்டளைக்காய் காத்து நிற்கிறேன்

காதலைப் போல
நட்பிற்கும் மயக்கமுண்டு என்று
காட்டியது நீ!!

- வீணா நிரஞ்சனா (ஒரு இணை தளத்தில் படித்தது.....இவரது படைப்புகளை மேலும் படிக்க விரும்பும் - பாரி)


நட்பு மேலோங்கி நானிலம் தழைக்க, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!!