Showing posts with label நம்மிடையே இருக்கும் நம்மவர்கள். Show all posts
Showing posts with label நம்மிடையே இருக்கும் நம்மவர்கள். Show all posts

Monday, August 06, 2007

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 6 தபால்காரர்(கள்)

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இன்னிக்கு வரை மக்களின் வாழ்வோடு பின்னி பிணைஞ்சவருனு நான் பார்க்கிற ஒரு நபர் இந்த தபால்காரர். நாங்க வாண்டுகளா இருக்கும் போது எங்க காம்பௌண்ட்க்கு ரெகுலரா வருவதால் கவனத்தை ஈர்த்த நபர் இவரு. பதினோரு வீட்ல ஏதாவது ஒரு வீட்டிற்காவது தபால் இருக்கும். ஐயங்கார் மாமி, எங்க அம்மா-ட்ட,``ஏண்டி ஜெயம், தபால்காரன் வந்துட்டானா?``ன்னு கேட்பார். அப்படி கேட்டால், NGM காலேஜ்ல மேலாளரா வேலை செய்யும் அவரோட கணவருக்கு மதிய சாப்பாடு எடுத்து செல்ல, அந்தோணி என்பவர் சீக்கிரம் வந்துருவார்னு அர்த்தம். இப்படி தபால்காரர் வருவது அவருக்கு நேரத்தை உணர்த்தும் விசயமா இருந்துச்சு.

இந்த தபால்காரர்கள் சைக்கிள் அல்லது கால் நடையா நடந்து, ஒரு கற்றை காகிதங்களை கையில் வைத்துக் கொண்டு, மீதியை அவர்களின் உடலுறுப்பாகவே ஆன தோள் பையில் வைத்துக் கொண்டும் வருவது, பலருக்கு ஒரு வகை எதிர்ப்பார்ப்பையும், நிம்மதியையும் தருவதாக இருக்கும். எங்க ஏரியா தபால்காரர் பொதுவா, பாலா கோபால(BG) புரம் தெரு ஆரம்பித்து, பல்லடம் ரோட்டை ஒட்டிய சில இடங்களை சுற்றி விட்டு பின்பு எங்க தெருவுக்கு வருவார். எனது பெரியப்பாவிற்கு எப்போதும் ஒருவித பரபரப்பு உண்டு தகவலை முன் கூட்டி அறிவதில். ஆகையால் விடுமுறை நாட்களில் (postal holidays அற்ற மற்ற நாட்களில், குறிப்பா சனிக்கிழமைகளில்) என்னையும் சில வாண்டுகளையும் முன்னரே BGபுரத்திற்கு அனுப்பி தபால்காரரிடம் தபாலை பெற்று வரச் சொல்லுவார். அப்போது நாங்க வண்டிய எடுத்துகிட்டு (பஸ் தான்...) சும்மா டிர்ர்ர்ர்ன்னு கிளம்பினா, கிருஷ்ண மூர்த்தி டாக்டர் கிளினிக் பக்கத்துல அவர பிடிச்சுடுவோம். அவருக்கு மூடு நல்லா இருந்தா உடனே பார்த்து தருவாரு. இல்லாட்டி ``அதுதான் வரிசையா வரேன்ல.. போய் அய்யன்கிட்ட சொல்லு``ன்னு முடுக்கி விடுவார். அவரு தபால கையில குடுத்துட்டார்னா வர்ற சந்தோஷம் இருக்கே யப்பா....

இவர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம். இது ரொம்ப பாஸிட்டிவ்வான ஒரு தன்மைன்னு இன்றைக்கு தோன்றுகின்றது. எப்போ போய் இவங்ககிட்ட தபால் இருக்கான்னு கேட்டாலும், அன்றைய நாள்ல நமக்கு தபால் இல்லைன்னா, ஒரு வித கடமை கலந்த மனோபாவத்துடன், ``நாளைக்குதான்`` ந்னு சொல்லுவாங்க. தபால் இல்லைன்னு மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்ல மாட்டாங்க. இதுவே எங்களுக்கு பழகி போய்,``என்னங்க தபால் இருக்கா, இல்ல நாளைக்கு தானான்னு`` கேட்க ஆரம்பிச்சிட்டோம்.
இவர்கள் அணியும் சீருடை பல சமயங்களில் வண்ணங்கள் மாற்றப்பட்டு, சமீப காலங்களில் காக்கி நிறத்தில் இருக்கின்றது. எனக்கு தெரிந்து இவர்கள் ஒரு வித சாம்பல் கலந்த நீல நிறம், மர நிறம், என பல நிறங்களில் காட்சி தந்துள்ளனர். மேலும் ஒரே பீட்டில் நீண்ட நாள் வந்தவராயின் ஒரு சினேக மனோபாவத்தையும் இவர்கள் நமக்கு தருவார்கள். என்னோட அன்பு ராஜூ அண்ணாவிற்கு இண்டர்வியூ கடிதம் வரும்னா அதை முன்னரே தபால் காரரிடம் சொல்லிவைத்து தபால் நிலையத்திலேயே அதை வாங்கிக்கிற சலுகைகளையும் அவங்க தந்தாங்க.
நாங்க பழனிக்கு மாறினப்பிறகு, இங்கும் தபால்காரர்களது தன்மைகளின் பல ஒற்றுமைகளை பார்த்தேன். நாங்க இருக்கிறது தெற்குரத வீதி. அப்பா பெயர் திரு. சுப்பிரமணியன். வடக்குரதவீதியிலும், இன்னொரு திரு. சுப்பிரமணியன். இன்னொரு ஒற்றுமை (தபால் காரருக்கு கொடுமை) என்னன்னா, இவரும் வாத்தியார். தெருவின் பெயர் சரியாக இல்லாத, குறிப்பா ரதவீதி -ன்னு மட்டும் இருக்கிற கடிதங்கள் சிலது ரெண்டு இடத்திலும் பாடாய் படும். ஆனாலும் இந்த தபால்காரர் இருக்காரே, மிகச் சரியாக இதை கொண்டு சேர்த்துடுவார்.
நான் பெங்களூர் வந்த பிறகு, இன்ஸ்டிட்யூட்டில் என்னை அடையாளம் கண்டு கையில் கடிதத்தை கொடுக்கும் அளவிற்கு அவர்கள் நட்பு பாராட்டினார்கள்.`` ஏனு பாலாஜி சாரே``-ன்னு அவங்க கூப்பிடறதுல இருக்குற வாஞ்சை மற்ற எந்த இடத்திலும் நான் பார்க்கவில்லை. இவர்கள் நமக்கு முக்கிய செய்தி தொடர்பாளர்களாக இருக்கின்றனர். இந்த ஈ-மெயில் யுகத்திலும் இவர்களது சேவை மிக்க அவசியமானது. இவர்கள் மழை வெய்யில் என்று எந்த காலநிலையிலும் தங்களை கரைத்துக்கொண்டு நமக்கு செய்யும் சேவைக்கு ஈடு ஏதுமில்லை.மேலும் கிராமங்களில் இவர்களது சேவை பலதரப்பட்டது. சிலருக்கு படித்துக்காட்ட வேண்டும். சிலருக்கு பதில் எழுதிதர வேண்டும். போர் முகத்தில் இருக்கும் தனது மகனிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்து இருக்கும் மூதாட்டிக்கு ஆறுதல் சொல்ல வேண்டி இருக்கும். இவ்வாறு பல ..ம் கள்.
இவர்களின் தொழிற்சார்ந்த சகோதரர்கள் தான் தந்தி பட்டுவாடா செய்யும் நபர்கள். இரவு பகல், என்றில்லாமல் எந்த வித செய்தியையும் ஒரு ப்ரோஃபசனல் மனோபாவத்துடன் செய்யும் இந்த நபர்களும் நமது நன்றிக்குரியவர்கள்.
இப்படி பட்ட இந்த நபர்களுக்கு அரசாங்கம் தரும் சம்பளம் மிகவும் சொற்பமே. இந்த அருமையான நண்பர்கள், விழா காலங்களில் ஒரு பேப்பர் எடுத்துக் கொண்டு உங்களால் ஆனதை கொடுங்கள் என நம் முன் நிற்கும் போது, நாம் தான் உண்மையில் வெட்கம் கொள்ள வேண்டும்.
இவர்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன்
பாலாஜி-பாரி

Saturday, February 28, 2004

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்....-2)

அவர் ஒரு நிதானத்துடன் ஒரு மரத்தை அண்ணாந்து பார்ப்பார். பின்பு ஒரு கையை அதன் மேல் வைத்து, அழகான லாவகத்துடன் தனது கால்களில் நாரால் ஆன பெல்ட்டை மாட்டி கொள்வார். அதன் பின் அவர் வலது கையை மரத்தை அணைத்தவாறு பிடித்துக் கொண்டு, இடது கையை மரத்தில் அழுத்தி, நாரால் ஆன பிணைப்பின் உதவியோடு கால்களால் மரத்தை கவ்விக் கொண்டு ஏறுவார். அது ஓர் பெரிய நேர்த்தியான செயல். அவர் அதை அனாயசமாக செய்வார். மர உச்சியை அடைந்தவுடன், கைகளால் காய்ந்த மட்டைகளை பிய்த்து போடுவார். வீட்டில் இருக்கும் தட்டி வழியாக அண்ணாந்து பார்க்க அவ்வளவு பரபரப்பாக இருக்கும். அதன் பின், தேங்காய வெட்டி மேலே இருந்து போடுவார். அப்ப கீழே நிற்கும் அவரது மகனோ அல்லது மனைவியோ அந்த வழி செல்பவர்களை உஷார் செய்வர். இவ்வாறு கவனித்து செய்யும் பொழுது கூட எங்களது காம்பௌண்ட் அருகில் உள்ள (ஜெயந்தி அக்கா) வீட்டில் தேங்காய் விழுந்து அவரது தாயாரின் மலையாளம் கலந்த தமிழ் வசை சொற்கள் அசரீரியாக வரும். இதனிடையே, கொஞ்சம் பச்சை மட்டைகளையும் மேலேயிருந்து தள்ளுவார். இவ்வாறு அனைத்து மரங்களையும் ஒரு ரவுண்ட் வந்த பிறகு பறித்த தேங்காய்களை மூட்டையிலிட்டு எடுத்து செல்வார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில், மேலேயிருந்து சிதறி இருக்கும் தென்னங் குரும்பைகள், தென்னம் மட்டைகள் ஆகியன வாண்டுகளின் உற்சாகத்தை கூட்டும். தென்னங்குரும்பைகளை நாங்கள் குரும்பைக்காய் என்போம். அது பல சமயங்களில் எங்களுக்கு Ball -ஆக மாறி கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் குரும்பைக்காயை கொண்டு கிலுகிலுப்பை செய்யலாம். குரும்பக்காயின் தொப்பி பகுதியை நீக்கி மென்மையான முன் பகுதியை தரையில் தேய்த்து தட்டை ஆக்கி கொள்ள வேண்டும். ஈர்க்குச்சி ஒன்று எடுத்து அதை வளைத்து தட்டை பகுதியில் U வடிவத்தில் அமைத்து செருகி கொள்ள வேண்டும். மேலும் ஓர்க் குச்சியை மையத்தில் செருகிக் கொள்ள வேண்டும். இப்போது அது நாமம் மாதிரி தோன்றும். அதற்கு செங்குத்தாக இரு குச்சிகளை செருகி சுழற்றும் போது, நடுவில் இருக்கும் குச்சி முன்னும் பின்னும் அசைந்து கடக், கடக் என்று சீராய் ஒலி எழுப்பும். கிலுகிலுப்பை தயார். தென்னம் மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி, சிறிது செதுக்கி Bat-ஆக மாற்றும் ஓர் கலையும் நாங்கள் கற்றோம். மட்டையின் மேல் இருவர் உட்கார மேலும் இருவர் அதை இழுத்து செல்லும் வண்டி விளையாட்டும் மிக்க களிப்பை தரும். பச்சை தென்னம் மட்டைகளிலிருந்து ஓலைகளை பறித்து அதில் குச்சிக்கு அருகில் நுனியில் இருந்து அடி வரை கீறி விட்டு கடைசியில் தொங்குமாறு செய்து, அதை பின்னி ஒரு பாம்பு போல் செய்வோம். தென்னை ஓலைகளில் இருந்து ஊது குழல் செய்வதும் எளிது. ராக்கெட் மாதிரி அந்த ஓலைகளை பறக்க விடவும் செய்யலாம். எங்களுக்குள் இருக்கும் குரங்கு விழித்து எழுந்து விட்டால், தென்னை மரத்தில் ஒரு கால் பங்கு உயரம் ஏறுவோம்.

இவ்வாறு தென்னை மரத்தின் பயன்கள் பல. (தென்னை மரத்தின் பயன்கள் என்ன? என்ற பரிட்சை கேள்விக்கு நியாயமான பதில் இதுதான் என்பது அடியேனின் அக்கால எண்ணம்).

காம்பௌண்டை பிரித்து விற்க வேண்டிய ஓர் சூழ்நிலையில், அம்மரத்துக்காரர் வந்தார். அவருடன் மேலும் சில நபர்கள் வந்தனர். அவர் ஒரு சில மரங்களை கைகாட்டி அவர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் பார்த்தது அம்மரங்களின் வீழ்ச்சியை. நான்கு மரங்களும் ஓரிரு நாட்களில் சாய்ந்தன. அப்போது நான் ஒரு துயரமும் இன்றி அதை வேடிக்கை பார்க்க அசாத்திய தைரியம் அடைந்தவனானேன். அந்த தென்னை மரத்துக்காரரும் அவ்வாறே எண்ணியிருக்க கூடும்.
(தென்னை மரத்துக்காரர் - முற்றும்)

- பாரி

Thursday, February 19, 2004

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்துக்காரர்)

கடந்த பல வாரங்களாக மற்ற விஷயங்களில் சென்ற கவனம், இன்று தான் இந்த தொடருக்கு திரும்பியது.

எங்க காம்பௌண்ட்ல பதினோரு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையிலோ என்னவோ, பதினொரு தென்னை மரங்கள் இருந்தன. ஒரு அடர்த்தியில்லா தென்னந்தோப்பு. இதை தவிர ஒரு பெரிய அடுக்கு - செம்பருத்தி செடி (புதர்?), அழகிய மஞ்சள் பூக்கள் தரும் மந்தாரைச் செடி, குட்டியா ஒரு செம்பருத்தி செடி, கிணற்றடி அருகிலே வசந்தி அக்காவின் முயற்சியில் தோன்றிய சில வாழை மரங்கள், என்று கலகலப்பாக இருக்கும். நான் மூன்றாவது படிக்கும் போது, எனது பெரியம்மாவின் கடைசி மகன் (என்னையும் சேர்த்துக் கொண்டு), சோமு என்ற நண்பரின் வீட்டில் இருந்து, ஜீன்யா செடியை கொண்டு வந்தான். இந்த பூக்கள் பல வண்ணங்களில் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நான் இதுவரை பல பூக்களை (பெயர் தெரியாவிட்டாலும்) கண்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் ஜீன்யா பூ எனக்கு சொல்ல முடியாத அளவு பெரு மகிழ்ச்சி தரும். இப்போது பார்த்தாலும்.... (JNC-விடுதிக்கு அருகில் இதை நான் காலையில் தினமும் பார்க்கின்றேன்). இதை தவிர, சேனைக் கிழங்கு எனது தந்தையின் முயற்சியால் அவ்வப்போது இடப்படும். (சேனைக் கிழங்கு செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்: வெளிர் பச்சையில் ...)

சரி. விசயத்திற்கு வருவோம். இந்த தென்னை மரங்களில், இரண்டு "செவ்வெளநீ" தரும். இந்த இரண்டில் ஒன்று பாலா மாமியின் வீட்டினுள் வளர்ந்து கூரை வழியாக வெளி வரும். கூரை சீமை ஓடால் வேயப்பட்டிருக்கும். அந்த மரத்தில் தென்னம் மட்டைகள் காய்ந்து போனால், பாலா மாமிக்கு டென்ஷன் அதிகமாகிவிடும். "இப்படியே இருந்தாக்க, காத்தடிச்சு மட்டை விழுந்து ஓடுகள பொறுக்கணும். இந்த விஷயத்தை ராஜாமணி காதில போட்டுடணும்" என்பார். (ராஜாமணி என்பவர், எங்க house ownerin ரின் மூத்த புதல்வர்). இவரை தவிர மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் எப்போதாவது அகஸ்மத்தாக விழும் ஒரு தென்னம் மட்டை, ஒரு தேங்காய் இவைகள் வாண்டுகளுக்கு ஒரு களிப்பை உண்டாக்கும். விழும் தேங்காய்களை கைப்பற்ற ஒரு பெரிய கலாட்டாவே நடக்கும். இவ்வாறு நடக்கும் கலாட்டாவில் பெற்ற சில வெற்றிகள் எனக்கு, "தேங்காய்" என்ற ஓர் சிறப்பு பட்டத்தை (!) எனது வீட்டாரிடம் பெற்று தந்தது.

பாலாமாமியின் வார்த்தைகள் சிறிது நாட்களில் வேலை செய்யும். நாரால் (என்ன நார்?) ஆன ஒரு V-பெல்-டை தோளில் எடுத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு அரிவாளை செருகி, திறந்த மேலுடம்புடன் அவர் வருவார். அதாங்க நம்ம தென்ன மரத்துக்காரர். எப்பயாவது விழும் தென்னை மட்டைக்கே குதியாட்டம் போடும் நாங்க, அவரக் கண்டதும் பயங்கர ஜாலி ஆயிடுவோம். ஆனா வழக்கம் போல பெரியவங்க பிரச்சனை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க! அவன் போனப்புறமா வந்து விளையாடலாம்".
(தென்னை மரத்துக்காரர் - தொடரும்)

Friday, December 26, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 4(பேப்பர்....பேப்பரேய்ய்ய்)


வியாபார ரீதியாக நம்மை அணுகும் மனிதர்களில் சிலர் தங்களை அறியாமலே, சுற்று சூழல் அறிவியலின் ஒரு கூறாக உள்ள "மீள்சுழற்சி" என்ற செயல்முறைக்கு உதவியாக உள்ளனர். இதை தவிர, பல சொல் வழக்குகளிலும், நாடகம் மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவைக்கு வாய்ப்பு தந்துள்ளனர் (எ. கா: கரகாட்டக்காரன் படத்துல, கவுண்டமணி ஒரு அரத பழசான "காரை" ஓட்டிட்டு வருவாரு. அப்போ அந்த பக்கம் வந்த நம்ம ஆளு அந்த "காரை" பார்த்து உரக்க சொல்வாரு "ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்"ந்னுட்டு. அதை தொடர்ந்து வரும் வசனங்கள்ல ஒரு நல்ல சிரிப்பு இருக்கு (அது அப்புறம்)). பண்டைய கால வியாபார முறைகளை தற்காலத்திலும் கைக்கொண்டு இருக்கும் கடைசிக் கண்ணிகள் இவர்கள். பணம் கொடுத்து பொருள் வாங்கிப் பழகிய நமக்கு, பொருள் வாங்கி பணம்/பண்டம் கொடுப்பவர்கள். நம்மிடையே இருக்கும் அத்தகைய நபர்களில் எனக்கு தெரிந்த சிலரை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
துரு ஏறிப்போன சக்கரங்கள் கொண்ட ஒரு மிதி வண்டியில், மதியம் மங்கி மாலை தோன்றும் பொழுதில் "பேப்ப்ரு........... பேப்ரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"ந்னு அவர் சத்தம் கொடுத்துட்டு வருவார். அந்த சைக்கிள் காரியர்ல ஒரு மரப் பெட்டி இருக்கும். அத ஒரு "சைக்கிள் ட்யூப்"நால இழுத்து, சைக்கிள் காரியரோட கட்டி இருப்பார். அதுக்குள்ள என்ன இருக்கும் என்பது எட்டிப் பார்த்தாலும் தெரியாத ஒரு மர்மமே!. சைக்கிள் பாரோட இரண்டு பக்கத்திலேயும் கோணிச்சாக்குகள் தொங்கும். எங்க காம்பௌண்ட்-க்குள் அவர் வருவது வாண்டுகளான எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும் என்றால், எனது அப்பாவிற்கும்-பெரியப்பாவிற்கும் பிதுரார்ஜித சொத்து பறி போகிற பயம் வந்து தொற்றிக் கொள்ளும். எங்கள் வீட்டில் இருக்கும் பயன் தராத பொருட்களை களைய முயலும் எனது பெரியம்மாவிற்கு அவரது வரவு ஒரு வடிகாலாக அமையும். கூவுவதற்கு தான் "பேப்பர்". மற்றபடி அவர் பழைய உடைந்து போன பிளாஸ்டிக் பக்கெட்கள், கண்ணாடி சீசாக்கள், பழைய தகரங்கள் இவைகளையும் தக்க பொருள் தந்து ஆர்ஜிதம் செய்துகொள்வார்.
இவரைத் தவிர, சீனிக் கிழங்கு, உப்பு, புதிய பிளாஸ்டிக் பொருள் போன்றனவற்றை பண்ட மாற்றாக கொடுத்து பழைய பொருட்கள் வாங்கிச் செல்லும் நபர்களும் எங்கள் காம்பௌண்டிற்கு வந்து செல்வார்கள்.

Thursday, December 11, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 3 (தாயம்மா.........தொடர்ச்சி.....

தாயம்மாவிற்கு இரண்டு மகள்கள், கடைசியில் ஒரு மகன். முன்பு கூறிய, என்னோடொத்த பேரன்கள் இருவரும் மூத்த மகளின் புதல்வர்கள்.
தாயம்மாவிற்கு அந்த காம்பௌண்ட் ஒரு நிரந்தரமான நிலை என்று அவரும், அவரது பந்தங்களும் நம்பியதாக இன்று நான் நினைக்கிறேன். அவரது பணி காலை பகலவன் வரும் முன் தொடங்கும். வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விடுதல்தான் அவரது முதல் வேலை. அதன் பின் ஒரு எட்டு மணிக்கு, பாத்திரம் தேய்பதற்கு வருவார். அப்போது அவருக்கு ஒரு டோஸ் காப்பி/டீ கிடைக்கும். பின்பு பெரிய அய்யங்கார் மாமி அவரை "வானொலி" வாங்க அனுப்புவார். மதியம் ரேசன் கடைக்கு சென்று எவர் வீட்டுக்கெனும் வேண்டிய பொருட்களை வாங்கி வருவார். மாலை நேரம் மீண்டும் ஒரு முறை அனைத்து கூட்டி பெருக்க வேண்டிய இடங்களை தூய்மை செய்து விட்டு தன் வீட்டிற்கு செல்வார்.
அவருக்கே உரித்தான சில பிரச்சனைகள் இருந்தன. பல வீடுகளில் தரும் உணவை அவர் உண்டுவிட்டு மீதியை, தனது தொட்டியின் அருகே ஒரு அலுமினியத் தூக்கில் இட்டு வீட்டிற்கு எடுத்து செல்ல வைத்திருப்பார். அதை சரியாக மூடாமலோ, அல்லது நன்கு வெளியே தெரியும்படியோ வைத்துவிட்டால், காக்கைகளும் அந்த உணவுக்கு போட்டியாக வந்து விடும். அந்த உயிர் போராட்டத்தில் பங்கு கொள்ள சில வேளைகளில் பூனைகளும் வரும்.
சில மாலை பொழுதுகளில் அவரது இரண்டாம் பெண் அங்கு வருவதுண்டு, ஏதேனும் சிக்கல்களோடு. சமூக மற்றும் பொருளாதார நிலையில் தாழ்ந்து, தனது நேர்மை, மற்றும் உடலுழைப்பை மட்டும் சார்ந்து வாழும் அவருக்கு வாழ்க்கை அச்ச மூட்டுவதாக அமைந்து விட்டதில் வருத்தங்களே எஞ்சி இருந்தது. அந்நிலையில் அவரது மகளுக்கான தேவையை நிறைவேற்றுவதில், தனக்கு உண்டான தோல்வியை கோபமாக சத்தம்போட்டு மகளை திட்டித்தீர்ப்பதில் வெளிப்படுத்துவார். மகளின் திருமணமோ, திருமணம் ஆகி சில வருடங்களில் மகளின் கணவன் இறந்ததோ, இரண்டு மூன்று நாள் பணி விடுப்பு என்று மட்டுமே உணர வேண்டியதாகியது தாயம்மாவிற்கு, சில கண்ணீர் துளிகளுடன்.
அதற்கு பின் இரண்டு - மூன்று வருடங்கள் கழித்து, என் அம்மாவிடம் கூறியது "என் பொண்ணு இப்போ நல்லா இருக்குங்க. இரும்படிச்சு அடுப்பு செஞ்சு விக்கும் கடை வைச்சிருக்கிர ஒரு ஆளு வீட்டுக்கு வந்து போகுதுன்னு எனக்கு படுது. அந்தாள பத்தியும் மோசமான வார்த்தை இல்ல" என்று கூறிவிட்டு, "நான் என்னம்மா செய்யறது? அதுஅதுக நல்லா இருந்த சரி" என்று கூறி மூக்கை சிந்தியவாறே மற்றும் ஒரு நாளை ஆரம்பித்தார். (தாயம்மா- முற்றும்)

Wednesday, December 03, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 3 (தாயம்மா..)

இன்றைய வேகமான நாட்களில், குறிப்பாக இரண்டு சம்பாத்தியம் இருக்கும் வீடுகளில் அல்லது முதியோர் மட்டும் வசிக்கும் வீடுகளில், அந்த வீட்டில் உள்ளோரைத் தவிர தினமும் மிக உரிமையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்கள், அந்த வீட்டின் "வேலைக்காரர்கள்". இவர்களை நீங்கள் சந்தித்திருக்க கூடும், சமயங்களில் கருணையோடும், சமயங்களில் காழ்ப்போடும். இங்கு அறிமுகமாவது லக்ஷ்மி புரத்தில் பெரும்பாலான வீடுகளில் பணிபுரிந்த "தாயம்மா" அவர்கள்.......

குழந்தைகள் மனிதர்களை அடையாளம் அறியும் வயதிலேயே, எனக்கு அறிமுகமானவங்கதான் "தாயம்மா". இவங்க பார்க்க நல்ல கருப்பா இருப்பாங்க. ரொம்ப ஒல்லியான வற்றிப் போன உடம்பு. ஆனா ஆச்சரியப் பட வைக்கிற சுறுசுறுப்பு. எங்க காம்பௌண்ட்ல ஒரு சதுரமான வாயுடைய கிணறு இருக்கு(ம்). அதுல தண்ணி வத்தினதே கிடையாது. அந்த கிணறை சுத்தி நேர்த்தியான கல் சுவர்கள் இருக்கும். கல் சுவர்கள் மேலே ஒரு நீர் சேமிப்பு தொட்டி உண்டு. அந்த கல் சுவரின் ஒரு பக்கத்தில்தான் தாயம்மாவோட பொருட்கள் அடங்கிய சற்றே சிதிலமான தொட்டி இருக்கும். இதுதான் அவங்க சொத்து.

அவங்க எப்பவும் "பிசி"யாவே இருப்பாங்க. அவங்க சாப்பிடறது பெரும்பாலும் 11-வீடுகள்ல் எதிலிருந்தாவது கொடுக்கப்பட்டிருக்கும் உணவாக இருக்கும். அவங்ககிட்ட ஒரு பழக்கம். மதியம் சாப்பிட்டவுடன் கொஞ்ச நேரம் தூங்குவது. தாயம்மாவின் பேரன்களுக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அவர்கள் அவ்வப்போது வந்து போவார்கள்.

-தொடரும்....

Saturday, November 29, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள் : 2 ( குடுகுடுப்பாண்டி......)

இந்த நபர் வந்து விட்டால், வாண்டுகளின் சர்வ நாடிகளும் ஒடுங்கி விடும். எங்க காம்பௌண்ட்-ல் இருக்கும் அனைத்து "மல்ட்டிப்பிள்" வால்களும் சுருண்டு அடங்கி விடும். இந்த நபரை பற்றிய எங்களுக்கான அறிமுகம்தான் இதன் காரணம்.
பாலாமாமி சொல்வார் "குட்டிகளா! அவன் உங்கள காணப்படாது கேட்டேளா?" என்று கூறி பின்னர் மிரட்டும் மற்றும் எச்சரிக்கும் குரலில் "அவன் உங்களை பார்த்தாலோ, அப்படியே வீபூதி போட்டு மயானத்துக்கு கூட்டிண்டு போய்டுவன்"என்பார். எங்களில் பலருக்கு மயானம் என்றால் அம்புலிமாமா-வின் விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளத்தின் இருப்பிடம் கண் முன் வந்து மிரண்டு கிடக்கும் எங்களை மேலும் மிரளச்செய்யும்.
இது போதாது என்று எங்கள் வீடுகளில் இருக்கும் அக்காக்களும், அண்ணண்களும், தங்களது சிறுவயதில் எப்படியெல்லாம் அவரின் (குடுகுடுப்பாண்டி) வசியத்தில் இருந்து தப்பியதாக கூறி அவர்களது சாதனைகளை பட்டியலிடுவார்கள். அதிலும், குறிப்பா பாக்கியாக்கா கூறிய சம்பவம் எப்பொழுதும் எனக்கு கனவாக வந்து நுரை தள்ள வைக்கும். அவங்க சொன்னாங்க "நான் அன்னிக்கு உடம்புக்கு முடியாம ஸ்கூலுக்கு போகல. பத்து மணிக்கு தண்ணி பைப் பக்கத்துல நிக்கும் போது அவன் வந்துட்டன். கையும் ஒடல, காலும் ஒடல. நான் ஆம்முக்கு வேகமா ஓட பாக்கிறேன். என்னால ஓட முடியலயாக்கும். (102 டிகிரி காய்ச்சல எப்படி ஓட முடியும்?). அப்போ என்ன அவன் கூப்பிட்டு "பாப்பா! இந்தா விபூதி"ன்னான்"!!. எனக்கு மயக்கம் வர்ர மாதிரி ஆகி, அம்மான்னு கத்திண்டே கிழே விழுந்தேன். அப்போ பார்த்து அம்மை அங்கே வந்தாள். இல்லேன்னாக்கா, இன்னிக்கு நான் உனக்கு கதை சொல்ல இங்க இல்லையாக்கும்", என்று முடித்தாள் மாபெரும் மர்மத்தோடு.
பிற்காலத்தில், குடுகுடுப்பை காரர்களின் வாழ்க்கை முறை அறிந்து, அவர்களின் நாடாறு, காடாறு மாத திரிதல்களில் வியந்து, அவர்களது கடவுளான ஜக்கம்மா-வின் மகிமை(?), கட்ட பொம்முவின் வம்சம் தாங்கள் என்பனவைகளை கூறக் கேட்டாலும், எங்களது அறியா வயதின் அந்த புரியா மர்மம் இப்பொழுதும் எங்களை சிலிர்க்க வைக்கும்.

Friday, November 28, 2003

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்.....

நம் வாழ்க்கை அமைப்பில், நாம் விரும்பாவிட்டாலும் நம்முடன் இருப்பவர்கள், "பிச்சைகாரர்கள்".
நம்மில் பலருக்கு பிச்சை எடுத்து வாழும் சில-பல நபர்களின் பரிச்சயம் உண்டாகி இருக்கும். சில வேளைகளில், அவர்களை சந்திக்காவிடில் "இன்ன்னிக்கு எங்கே காணம்?"என்ற எண்ணம் லேசாய் தோன்றி மறையும். அவ்வாறு எனக்கு சிறு வயதில் பரிச்சயமான இங்லீஷ் பிச்சைகாரரை பற்றி....

எங்க காம்பௌண்ட்ல, 11-வீடு இருக்கும். நண்டும், சிண்டுகளுமாய் 8- 10 வாண்டுக இருப்போம். (அதுல சிலருக்கு அது "அவே ப்ரம் ஹோம் க்ரவுண்ட்"). ஞாயிற்றுக் கிழமைகள்ள, வெய்யில வீணாக்காம விளையாடும் போதுதான், மேலே சொன்ன இங்லீஷ் பிச்சைகார அன்பர் வருவாரு. என்னமோ இங்கிலாந்து-ல இருந்து நேரா எங்க காம்பௌண்டிற்கு வர்ரவருன்னு நினைக்க வேண்டாம். ரொம்பபோன அவரோட பூர்வீகம், எங்க தெருவிலிருந்து ஒரு மூன்று தெரு தள்ளி இருக்கும். அவ்வளவுதான். மனுஷன் "சீனுக்கு"வந்த உடனே, அதாவது எதிர்காலத்தில் புகழ் பெற போகும் "லக்ஷ்மி புரம்" காம்பௌண்டின் (எங்க காம்பௌண்டின் திரு நாமம் தான்) நுழை வாயிலை மிதித்ததும், சொல்வாறு "டுடே சண்டே" என்று. இப்படி அவரு சொன்னதுதான் தாமதம் எங்களுக்கு குஷி பிறந்திடும். எங்கள்ல சிலதுக கான்வென்ட்ல் படிகிறதுக. அதுக "டெல் ஒன், டூ, த்ரி...."ந்னு ஆரம்பிக்குங்க. , அவரோட இங்கிலீசு கேட்க, அவருக்கு பின்னாடியெ பதினோறு வீட்டுக்கும் போவோம். சில சமயம் மக்க அடிக்கிற கடுப்புல, அவரு தன்னோட கைத்தடிய வைச்சு அடிக்க வரும் போது "கே-கொள்ளே"ன்னு சத்தம் போட்டு வீட்ல இருக்கிற பெரியவங்களுக்கு எங்கனால முடிஞ்ச அமைதிய கொடுப்போம். அவரு அப்போ என்ன பேசினாரோ தெரியாது. ஆனா, என்னய மாதிரி, நகராட்சி நடு நிலைப் பள்ளி-ல் (BG புரம்) படிச்ச மக்களுக்கு (வாண்டுகளுக்கு) அவர்தான் முதல் இங்லிஷ் வாத்தியாரு......................