Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Sunday, October 10, 2004

மூளை சுமப்பவர்களின் பயணம்!!

மூளையை அதன் இடத்தில் இருந்து விலக்கி, அமிக்டாலாவை ஊதி பெரிதாக நிரப்பி மூளை இருந்த இடத்தில் அதை மறு ஈடு செய்த நபர்கள் இவர்கள். இவர்களின் பாதை அனைத்தும் அவர்களது உணர்வால் நிரப்பப் பட்டிருந்தது. அவர்கள் சந்தோஷத்தையும் கொண்டாடினார்கள். துக்கத்தையும் கொண்டாடினார்கள். இவர்களும் பல இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி உணர்வால் மட்டுமே உந்தப்பட்டு சென்று கொண்டிருந்தனர்


ஒரு சமவெளியில் மாடுகளின் மேய்ச்சல் நிலத்தின் அங்கமாக இருந்த அச்சிறுவனின் கையில் ஒரு புல்லாங்குழல். சுற்றி இருந்த அந்த இடத்தின் வெற்றிடத்தை நிறைத்தது அவனது இலக்கணங்களுக்குள் வராத மன ஓசை. நுரையீரலில் தோன்றி அமிக்டாலாவின் அற்புதத்தில் கலந்து புல்லாங்குழலின் துளை வழியே வந்த இசை மாடுகளையும் மரங்களையும் அவன்பாற் வசப்படுத்தியது. இசை நன்று. இலக்கணங்கள் கட்டுமானம். புது இசை அவனது உணர்வு. கட்டுமானங்கள் உடைபட்டன. அவன் வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஆடிக்கொண்டு வந்த அவளையும் அவன் இசை கவர்ந்தது. அவள் நின்றாள். அவள் மயங்கினாள். அவள் குதூகலித்தாள். அச்சிறுவனிடம் " கண்ணனின் விந்தை நான் கண்டேன். சிறுவ என் பயணத்தில் இணைந்து கொள். நோக்கம் பயணத்தின் பாதையில் நாம் காண்போம். என்னில் இருந்த உணர்வின் பிரதிபலிப்பை உன் குழலின் வழியே அந்த பசுக்களை அடையக் காண்கின்றேன். அவைகள் நன்றிக்குரியன. நாம் செல்வோம்" என்றவாறே முந்தானையில் முடிந்த மூளையின் வெளிப்புற சாயலை அவனிடம் காட்டினாள். அவனும், குதித்து எழுந்து புதரில் நரிக்காக வைத்துவிட்ட அந்த மூளையை எடுத்துக் கொண்டு, பிரபஞ்ச மொழிக்கு ஊடாக அப்பாதையில் நடக்க துவங்கினான்.

சற்று தொலைவில் இவர்களைப் போல் பலர் எந்தவித கட்டுபாடுமற்று தங்கள் நிலையில் ஆழ்ந்த களிப்பும், பேருவகையும், நிகரற்ற சோகமும் தனதாக்கி கொண்டு இவர்கள் சென்ற திசையிலேயெ சென்று கொண்டிருந்தனர். ஓவென்று அழுது கொண்டும், ஹா... ஹா.... என்று சிரித்து கழித்தும்.

-தொடரும்

-பாரி

Saturday, September 11, 2004

அமிக்டாலா மூளையர்கள்!!

இதயம் சுமப்போர் போல் அல்லாது, தலையில் கபாலம் பிரித்து உள்ளிருக்கும் அமிக்டாலா பகுதியை மறு ஈடு செய்து, முன்,பின் மூளையை களைந்து அதை கையிலெடுத்து, ஈட்டி போன்ற அமைப்பின் முன் செருகிக் கொண்டு அவன் "ததிங்கிணத்தோம், தத்தரிகிடதித்தோம், தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிடதித்தோம்... தட்டாவது வீச்சாவது... அனைத்தும் வெறும் பேச்சு..என் நடை என் உள்ளப்பாடு ஐயா!!" என எதிரே உள்ளவன் உணரும் வகையில் குதித்து களித்தும், களித்து குதித்தும் சென்றான். மரங்கள் அசைந்தன. மலர்கள் சிரித்தன. ஒரே ஆரவார எக்காளம் அவனுக்கு... "ஹே.... " என்று கூக்குரலிட்டவாறே ஓடித்திரிந்தான். அவனும் பாதையில் முன்னேறியவாறே இருந்தான்.

மலைகள் நிறைந்த பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒருவித கிறக்கம் தரும் தேனை நீங்கள் பருகியதுண்டா?. அதன் சுவை இனிப்பு. ஆனால் அதன் நறுமணம் தன்னைச் சுரந்த மலர்களின் நினைவினை பொதித்துக் கொண்டிருக்கும். (NT,Jens,balu,srika Thanks guys!!)

இதன் கிறக்கத்தையும் உள்வாங்கி "ஆடினா நான் ஆடினா அது ஆட்டம் மக்கா" என்று கைகொண்ட வாத்தியத்தை தனது சீராக மற்றவருக்கு மாறாக முழங்கி கொண்டே அவளும் இறங்கினாள். வந்தான் என் காதலன், வாழ்வில் அவனில்லை எனில் சாதலின் என ஒலித்தவாறே வந்தாள் அவளும் ஒய்யாரமாக. அவளது வழியில் காட்டு மலர்களும், கானக்குயில்களும் அவளுடன் அன்பு மொழி பேசின; ஓயாமல் அவளும் அவைகளிடம்.

இதை நன்றாக உணர்ந்து, எந்த ஒரு திட்டமும் இன்றி, போகும் வழியில் இறைந்த மலர்களை சுமந்தவாறே அந்த ஓடையும் அவள் துணையாக சென்றது.

-தொடரும்

பாரி
(குறிப்பு: அமிக்டாலா- உணர்வுகள் உருவாக காரணமாக இருக்கும் மூளையின் ஒரு பகுதி)

Sunday, September 05, 2004

இதயச் சுமையாளிகளின் சந்திப்பு



அப்பள்ளத்தாக்கில் இருந்த ஒரு மரத்தின் மீதமர்திருந்த சிறுவனின் கையில் ஒரு பொட்டலம். அதில் அவனது இதயம். அவன் தொணாத்திக் கொண்டு இருந்தான். அப்போது அம்மரத்தின் அருகிலே நின்று கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன், ஒரு சிறிய பென்சிலை கொண்டு பல எண்களை எழுதி அழித்துக் கொண்டே,அச்சிறுவனின் தொணத்தலை கேட்டான். சிறுவன் " நான் ஆசையுடன் சென்றேன் பல விசயங்களை கற்றுக் கொள்ள வகுப்பிற்கு. எனது மாமா பயிற்றுவித்த படிக்கும் முறைகளால், நான் மேலும் படித்த விசயங்களை மற்றவர்களிடம் குறிப்பாக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டபோது கிடைத்தவை பிரம்படிகள். அதுவும் உள்பாதத்தில். இதயம் நொறுங்கியது. ஆசை அழிந்தது. இதோ! என் கையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள என் இதயம்." கவனமாக தனது இதயத்தை கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன் எக்காளமாக கூறினான் "போ! போ!! இனி உன் அகராதியில் ஆசையும் இல்லை! இதயமும் இல்லை!!" பின்பு அலுத்துக் கொண்டு மேலும் மெதுவாக " என்னிடமும்தான்" எனக் கூறிக் கொண்டே, எண்களை கூட்டிக் கழித்து பெருக்கி தனது வாழ்க்கையை வாழ தன்னை தயாரித்துக் கொண்டான்.

அங்கே ஒரு பாறையின் மீதமர்ந்த மற்றொருவன், தன் துணையுடன் புணர்ந்த கொண்டிருந்த சமயத்தில் எவ்வாறு தன் துணை, படைகளின் குண்டுகளுக்கு பலியானாள் என்றும், இனி எப்போதுமே நிரப்பப்பட இயலாத ஒரு வெற்றிடத்தில் தன் ஸ்கலிதம் பாதியில் முடிந்து போனதை கூறி தன் இதயத்தை அவனது பொதியில் இருந்து வெளியில் காட்டினான். அதைக் கேட்ட அருகிலிருந்தவன், "சரி இப்போ என்ன?. என் விறைத்த குறியை சிதறச் செய்யவும் அவர்களால் ஆனது. இனி நம் குறிகள் நம் தலையில் தான்", என கூறிவிட்டு அமைதிகாத்தான் சற்றே படபடத்த தன் கையில் இருந்த இதயத்தை தாலாட்டிக் கொண்டே.

சிறிதும் கவலையின்றி, தனக்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டதையும், மற்றவர்கள் சூழ்ந்து தன்னையே அவர்கள் மறக்கடித்ததையும், இவைகளையே சித்தாந்தங்களாக கொண்டு அவர்கள் வாழ்ந்ததையும் அவள் கூறினாலும் பள்ளத்தாக்கை அடைய மேற்கொண்ட பெருமுயற்சிகள் வியர்வையை தந்து அவளது நிலையைக் காட்டியது. அவள் தான் சுமந்த இதயத்தின் சுமையை பொருட்படுத்தவில்லை.

இத்தகைய நிலையில் தங்கள் இதயத்தின் கைப்பிடியில் இருந்து விலகி வாழ்வது வாழ்க்கை என்று அவர்கள் நம்பச் செய்யப்பட்டார்கள். அத்தகையோர் அங்கே குழுமி இருந்தனர். அவர்கள் குழுமியதன் நோக்கம் என்னவென்று அவர்கள் அப்போது உணரவில்லை. அது ஓர் கூட்டம் என்று மட்டுமே உணர்ந்தனர்.

இருள்கறுப்புக் குதிரையில், தனது முடி அலை போல பரவ, காற்றை போல் அப்பள்ளத்தாக்கை அவள் அடைந்தாள். அவள் நம்மைப் போன்ற சாதாரன மனுசி. இதயத்தை தன் உடலின் ஒரு பாகமாக கொண்டவள். அங்கே அவள் கண்ட கூட்டம் அவளை நிலை குலையச் செய்தது. அவளுக்கு இதயத்தை சுமந்தபடி மக்கள் வாழ இயலுமா? என்ற கேள்வியும், அவர்கள் பேச்சை கேட்டு இவர்கள் அதைச் சுமந்தால் வாழ இயலாது என்பதையும் அறிந்து, தன்னில் ஓர் பிளவாக அவள் அங்கிருந்து சென்றாள். ஆனாலும் அவள் பட்ட அதிர்ச்சி அவளது உயிர் நிலை ஆட்டி வைத்தது.

அவள் தனது பாதையில் செல்ல யத்தனிக்கும் போது ஒரு பேரிரைச்சல் சில காத தூரங்களுக்கு அப்பாலிருந்து வருவதை கேட்டாள்.

-தொடரும்.

Monday, August 30, 2004

இதயத்தை சுமக்கின்றவர்கள்!!!


இது மற்றொரு ஜீவன். தன் இதயத்தை ஒரு கூடையில் சுமந்து கொண்டு அதை இடுப்பில் இட்டு காக்கை, கழுகுகளிடமிருந்து காப்பாற்ற ஒரு மெல்லிய துணியால் மூடி ஒரு ஒற்றையடி பாதையின் வழியாக முக்கிய வீதியை அடைந்தது.

அஜ்ஜீவனின் நடையிலும் தீவிரம். முகத்தில் ஒரு நிராசை. என்ன இது என்று சொல்ல இயலா ஒரு குறிப்பில்லாத முகத்தோற்றம்.

அந்த ஜீவனின் நடை முன்னோக்கியே இருந்தது. பையில் இதயத்தை சுமப்பவர், அந்த ஜீவனை சந்திக்க ஆவலானார். தனது துரித நடையில் நம்பிக்கை வைத்து, அடிகளை எட்டிப் போட்டார். அந்த ஜீவனின் கவனத்தை கவர தன்னால ஆன அனைத்தையும் செய்தார். ஒரு வழியாக அவரை எட்டினார். கூடையில் இதயம் சுமப்பவரை சற்று கடந்ததும், தலையை மட்டும் திருப்பி, எங்கே என்று கண்களால் வினவினார். ஆனாலும் இருவரின் நடையிலும் சற்றும் வேக குறைச்சல் இல்லை.

கூடையில் இதயம் சுமப்பவரோ, 'பாதைகள் பலவானாலும் போகும் இடம் ஒன்று' என்று கூற, கைப்பைக்காரர் அமைதியுற்றார்.


கூடையில் இதயம் சுமப்பவர் தான் கடந்து வந்த பாதைகளை நினைக்கும் பொழுது, சிறிது துணுக்குற்றார். தனது குழந்தை பருகிய அமிர்தம் சுரந்த முலைகளில் ரத்தம் சுரக்க துவங்கும் கணம் தனது இதயத்தை பிடுங்கி கூடையிலிட்டது நினைவுக்கு வர அவருக்கு வியர்வை பெருக்கெடுத்தது, இதயம் கூடையில் இருந்தாலும்.

பதின்ம வயதில் இருக்கும் தனது வாரிசை கிளம்பிய இடத்திலே மட்டும் விட்டு விட்டு, தனது இதயத்தை பிய்த்து கையில் வைத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்த உடன் தன் பாச உணர்வுகள் மறக்கடிக்கப்பட்டது உறைத்தது. ஆனாலும் அது எந்த ஒரு வலியையும் தோற்றுவிக்கவில்லை. எதேச்சையாக கைகள் நிரடும் போது, காய்ந்த போன ரத்த துளிகள் மட்டும் மூளைக்கு செய்தியாகச் சென்றது.


அவர்கள் நடந்த போது உண்டான சரக் சரக் சப்தம் மட்டுமே அவர்களுக்கு ஒலித் துணையாக இருந்தது.


அவர்கள் சென்ற பாதை சில மலைகளுக்கு நடுவில் ஒரு பள்ளத்தாக்கை அடைந்தது. அப்பள்ளத்தாக்கு அவர்கள் வந்தது போன்ற பல பாதைகளின் சங்கமமாக இருந்தது. அப்போதுதான் கைப்பைக்காரர் அங்கே பல மனிதர்கள் பரவி இருந்ததைக் கண்டார். மரத்தின் நிழல்களில், பெரிய பாறைகளின் அடியில், சிறிய குகைகளில், இவ்வாறு பல இடங்களில். அனைவரிடத்திலும் ஒரு கைப்பையோ அல்லது கூடையோ அல்லது பாலிதீன் பைகளோ அல்லது கனச்துர, செவ்வக வடிவ டப்பாக்களோ இருந்த்தது.


மனத்தின் சார்புகளை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்தார்களா? அல்லது முடிவு செய்ய வைக்கப்பட்டார்களா?.

-தொடரும்


பாரி

Friday, August 27, 2004

இதயத்தை சுமக்கும் கணங்கள்...

குருதி வடிந்து கொண்டே இருக்கும் தனது இதயத்தை முதலில் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்கத் துவங்குகையில் அதன் ஆர்ப்பரிப்பு ஒரு இம்சையை கொடுத்தது. ஆகையால் அதனை ஒரு பையில் இட்டு, அதன் கைப்பிடி உதவியுடன் வசதியாக தூக்கி சென்றால் என்ன? என்ற எண்ணம் மேலிட, அவ்வெண்ணம் செயல் வடிவம் பெற்றது. அந்த இதயத்தின் ஆர்ப்பாரிப்புகள் தற்காலிகமாக அடக்கப்பட்டது.

பல கண்கவரும் வண்ணங்களை காட்டி வளர்க்கப்பட்ட ஒரு சிறுமி அந்த கைப்பையில் இருக்கும் கருஞ்சிவப்பு இரத்தம் தோய்ந்த இதயத்தை காண்கின்றாள். உடனே தனக்கு கூறப்பட்ட ஆப்பிள் பழம் அவள் நினைவில் வர, " கைப்பையில் ஆப்பிள்! கைப்பையில் ஆப்பிள்" என்று உற்சாக குரல் எழுப்பினாள்.

தன் இதயம் வெளியில் பளபளப்பான கருஞ்சிவப்புடன் இருந்தாலும் அதை அறுத்துப் பார்த்தால் அதனுள்ளே எங்கும் வெண்மை படர்ந்து இருக்கும் என்ற எண்ணம் சட்டென்று தோன்றி மறைகின்றது. ஆனாலும் தனது நடையில் சற்றும் தளர்வில்லை.

ஒரு பூனையை ஒரு பையில் வைத்துக் கொண்டு சற்று தூரம் நடந்துள்ளீர்களா? அதுவும் ஒரு சுறுசுறுப்பான பூனையுடன்?. அப்பூனையை விட மென்மையான அதைவிட சுறுசுறுப்பான தனது இதயத்தை அப்பையில் சுமந்து செல்வது சற்று வேடிக்கையாகவே இருந்தது. ஆனாலும் ஆர்பாரித்த இதயம் பூனை போல் அல்லது அதைவிட சமர்த்தாக இருந்ததால் நடையை சற்று நிதானமாக்க நினைத்தாலும், நடையின் நோக்கம் நடையை தளரச் செய்யவில்லை.

அந்த கைப்பையில் இருந்த இதயம், ஒரு குழந்தை ஓவென்று அழுது பின் சமாதானமடைந்து, மறுபடியும் அழ ஆரம்பிப்பது போல மீண்டும் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தது. தனது கைகளால் அதனை வருடி சமாதனமடையச் செய்த முயற்சி பலனற்றுப் போனது. குருதி ஊறும் இதயத்தின் ரத்தம் மட்டுமே உள்ளங்கையில் மிச்சம். ஆனாலும் தனது நடையில் தளர்வில்லை.

சந்தியா காலங்களில் மலர்ந்த சிறிய ஆரஞ்சு நிற தண்டுகள் கொண்ட அழகிய வெண்மையான இதழ்களுடன் அமைந்த பவளமல்லி மலர்களிலிருந்து கிளம்பிய நறுமணம் நாசியை வருடி சிலிர்க்கச் செய்தது. ஆனாலும் இதயத்திற்கு இதமோ இம்மணம் என தோன்றும் பொழுதே, இதயம் தனியாக தனது கைப்பையில் இருக்கின்றது என்ற நினைவு ஒரு வறண்ட புன்னகையாக வெளிப்பட்டது.

-தொடரும்.

(இது ஒரு தொடர் முயற்சி. இதன் முதல் அத்தியாயம் இப்போது நீங்கள் படித்தது. ஒவ்வொர் அத்தியாத்தின் தலைப்பு அப்பதிவின் தலைப்பாக அமையும். கடைசியில் இதை தொகுத்து ஓர் நாமகரணம் செய்வோம். -அன்புடன் -பாரி )

Thursday, August 12, 2004

அறிவார்ந்த அடிமைகள்

இப்போதெல்லாம் எனக்கு தோன்றுகின்ற சில விசயங்களை நான் பகிர்ந்து கொள்கின்றேன். இது எதற்கும் களிம்பல்ல.

ஒரு விசயம் நடக்கின்றது. அந்த விசயத்தை நீ பார் என்றால், அவர்கள் தங்களை அந்த விசயங்களோடு இணைத்து கொள்கின்றனர். தாங்களே அவ்விஷயம் என பாவித்து கொள்கின்றனர். இது எந்த வகை மனோபாவம் என்றால், ஆங்கிலேயனுக்கு கணக்கு எழுதி அதனால் தங்களுக்கு ஓர் பெருமையும், அடிவருடியதால் கிடைத்த எச்சில் பொட்டலங்களை அலுவுலகத்தை விட்டு வெளிவந்த பின் "பார்! என் கையில் பொட்டலம். நான் உங்களினும் மேலானவன்!!" என்று பாமர சனங்களை பயமுறுத்திய பச்சோந்தி மனோபாவம்.

இவர்களுக்கு போராட்டம் என்பது, பள்ளியில் டப்பா அடித்து மதிப்பெண் பெறுவது மட்டும்தான். தன்னைவிட பலம் வாய்ந்த தெரிந்தே தவறு செய்யும் அமைப்பை எதிர்ப்பதை இவர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. தன்னை அடிமையாய் வைத்துள்ள ஓர் அமைப்பு எதை எதிர்க்கின்றதோ அதை அவர்களும் எதிர்ப்பர். ஏனென்றால் அதுதான் அவர்களது உளவியலுக்கும் இருப்புக்கும் பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். இவர்கள் அந்த அமைப்பினால் செய்யப்படும் சுரண்டல்களயும் துரோகத்தையும் இனி வருங்காலங்களில் வருந்தாமல் பாரம் சுமப்பர். அவ்வளவுதான் இவர்கள்.

இந்த இடத்தில்தான், நான் மேலும் சில விசயங்களை கூற விரும்புகின்றேன்.

1. இவர்களால் அழ முடியுமே தவிர அடித்தவரை நேர்கண் கொண்டு பார்க்க முடியாது.

2. அடித்தவர் ஏன் அவ்வாறு என்று சொல்லாமல், ஓர் மிட்டாய் அல்லது ஓப்பியம் கொடுத்து அடியை மறக்கச் செய்வார்.

3. இவர்களும் எப்படி எங்கள் தலைவர்கள் என்று அவர்களை பாராட்டி ஓப்பிய பயன்பாட்டை எதிர்த்துக் கொண்டே மகிழ்ச்சியாக அதை உட்கொள்வர்.

4. இவர்களும் விடுதலை பற்றி பேசுவர். அவர்கள்தான் உலகில் (நாட்டில்) உள்ளனர் என்றும் மற்றவர்கள் முன்னிருந்தவாறே இருக்க (தங்கள் அடிமையாய் இருக்க) வேண்டும் என்றும் கூறுவர்.

5. இந்த விசயங்களை போற்றி பாதுகாக்க பலரின் அருளாசிகளும் உண்டு.

இவர்கள் பேசுவதில் உள்ள ஆதிக்க மனப்பான்மை எதிராளியை மருளச் செய்யும். இவர்களில் எவரேனும் ஈராக் சம்பவத்தை எழுதிய அதே வேகத்துடன் மணிப்பூர் சம்பவத்தை பற்றி எழுதுகின்றனரா?. இவர்களுக்கு முக்கியம் சொந்த நலன்கள். இவர்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதிலும், ஆடம்பர பேச்சுகள் மூலமும், கோஷ்டியாய் வந்து தாக்குவதன் மூலமும் தங்கள் அமைப்புக்கு அடிவருடி தங்களை இழந்து கொண்டே தங்களின் போலித்தனத்தை சற்றும் வெட்கமின்றி தொடர்வார்கள்.

அடிப்படையான நேர்மைத்திறனும், உண்மையான மனிதப் பண்பும் பார்த்து இவர்களிடம் பேசினால் சேற்றை வாரி இறைப்பர் ஏனென்றால் அவர்கள் உழல்வது அதிலேதான்.

நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....


அன்புடன்
பாலாஜி-பாரி