Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Monday, August 06, 2007

இப்படியாக மீண்டும்...

நண்பர்களுக்கு வணக்கம்!

பனிக்காலம் கடந்து வசந்த காலத்தின் நுழைவாயிலில் நிற்கும் எம்மை பறவைகளும், பளீர் கதிரவனும் வரவேற்கும் நேரத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. வாழ்வெனும் நதியில் பல நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அதில் எமக்கான நிகழ்வுகளும் அடங்கும். அதில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

குறிப்பாக நாங்கள் இருக்கும் பகுதியில், மேப்பிள் "சிரப்" பிரபலமானது. இந்த "சிரப்" நம்ம ஊர்கள்ல இருக்கும் தேன்பாகு போன்று இருக்கும். இது மேப்பிள் மரத்திலிருந்து எடுக்கப்படுகின்றது. இதை எடுக்கும் முறையை நாங்கள் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அதை பகிர்வதற்கு முன் மேப்பிள் மரத்தை பற்றி சில வரிகள். இம் மரம் கனடாவில் எல்லா இடங்களிலும் காணலாம். இம்மரங்கள் பனிக்காலத்தில் மொத்தமாக இலைகளை இழந்து நிற்கும். வசந்த காலத்தில் துளிர்த்து, கோடையில் பசுமையாக வளர்ந்து, இலையுதிர் காலத்தின் துவக்கத்தில் பற்பல நிறங்களை காட்டி வசியம் செய்து, கடைசியில் அனைத்து இலைகளையும் உதிர்த்து விடும். கனடா நாட்டின் கொடியிலும் இடம் பெற்றிருக்கின்றது இந்த மரத்தின் இலை வடிவம்.

Image hosting by Photobucket


எங்களது பல்கலைக்கழக்திலிருந்து ஏழு நபர்கள் மேப்பிள் சிரப் தயாரிக்கப்படும் இடத்திற்கு சென்றோம்.
இது "கேபினை சுக்ரு" என்றழைக்கப்படும் ஒரு உணவகத்திற்கு அருகில் இருந்தது. அங்கு போய் வழக்கம் போல முதற் கடமையாக வயிறு முட்ட தின்றுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் நீல நிறக் குழாய்கள் எல்லா மரங்களையும் இணைத்திருந்ததை கண்டோம். எங்களது ஆர்வக் கோளாறினால், சில கேள்விகளை எழுப்ப ஆரம்பித்ததும், திரு. மார்க் என்பவர் எங்களுக்கு விவரிக்க துவங்கினார்.


Image hosting by Photobucket

இம்மரங்களில் ஊறும் நீர்த்த திரவத்தை பனிக்காலத்தின் இறுதியில் அம்மரங்களில் இருந்து துழையிட்டு வடிப்பார்கள். இதை எங்களுக்கும் விளக்கும் முகமாக, அவர் ஒரு மின் துழைப்பானை எடுத்து மரத்தில் துழையிட்டு அதில் ஒரு சிறிய குழாயை இணைத்து படத்தில் காட்டியுள்ள ஒரு பாத்திரத்தை பொறுத்தினார். ஒரு சில நிமிடங்களில் மேப்பிள் திரவம் அதில் சேரத்துவங்கியது. இந்த பாத்திரத்திற்கு பதில் குழாய்களை ஒரு பின்னலாக இணைத்து, மேப்பிள் திரவத்தை "பம்ப்" செய்கின்றனர். அந்த திரவத்தை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரிக்கின்றனர். அது பெரிய மின் அடுப்புக்கு மேல் உள்ளது. அதன் பிறகு அதை பாகு போல் காய்ச்சி போத்தல்களில் அடைக்கின்றனர்.

Image hosting by Photobucket

மேப்பிள் மரத்தில் இருந்து வரும் திரவம், மிகவும் குறைந்த இனிப்புடன் உள்ளது. ஆனால் அதை காய்ச்சும் போது இறுகி பாகு பதத்திற்கு வருகின்றது. இதை தான் மேப்பிள் "சிரப்" என்கிறார்கள். இது கிட்டதட்ட நம் ஊரில் கிடைக்கும் தேன்பாகு போல் இனிக்கின்றது.

இந்த மேப்பிள் "சிரப்" பனிக்கட்டிகளின் மேல் ஊற்றி மிட்டாய்களாகவும் செய்வார்கள்.

சரி, நண்பர்களே!!

விரைவில் மீண்டும் சந்திப்போம்.

1947

பரிசாக வந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. அந்த புத்தகத்தில் இருக்கும் ஒரு கட்டுரையை இங்கே இட்டுள்ளார் ஆசிரியர்.
படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

இதில் இருக்கும் இன்னும் இரு கட்டுரைகளும் உண்மைகளை உரைப்பவை. இந்த புத்தகம் கிடைக்கும் விவரத்தை நாளை இடுகின்றேன்.

-பாலாஜி-பாரி

புத்தக விளையாட்டு

என்னை இந்த புத்தக விளையாட்டிற்கு அழைத்த நண்பர் பிரதீபாவிற்கு நன்றிகள்.

சிறுவயதில் எனது வீட்டில் ஒரு வாண்டுகள் பட்டாளம் இருந்தது என்பதாலும், எங்கள் காம்பௌண்டில் பல வாண்டுகள் இருந்ததாலும், குறைவின்றி பல்வேறு வகையான காமிக்ஸ் கிடைத்தது. அதில் என்னைக் மிகவும் கவர்ந்தது ஸ்பைடர்மேன், வேதாளம் (Fantom) மற்றும் இரும்புக்கை மாயாவி போன்ற கதாநாயகர்கள். இதில் சற்றே வித்தியாசப்பட்டவர் இந்த ஸ்பைடர் மேன். தான் குற்றவியல் சக்கரவர்த்தி என்று தன்னை இருத்திக் கொள்வதே இவரது முக்கிய நோக்கமாக இருக்கும். இவருக்கு சவால் விடும் வகையில் வரும் மற்ற கொடுங்கோலர்களையும், போலிஸையும் இவர் சமாளிக்கும் விதம் மிகவும் அற்புதமாக காட்டப்பட்டிருக்கும்.

பொள்ளாச்சியில் பூங்கா அருகில்தான் நூலகம் இருந்தது. அதன் பின் சில இடங்களுக்கு மாறி மீண்டும் பூங்கா அருகிலேயே வந்துவிட்டது. இப்போதும் அது அங்குதான் உள்ளது என்று நினைவு. எனது பெரியப்பா எங்களை பூங்காவிற்கு இட்டு செல்வார். அத்துடன் சற்று இருள் கவியத்துவங்கும் சமயம், அருகிலுள்ள நூலகத்திற்கு இட்டு செல்வார். ஆரம்பத்தில் அங்கு சென்று மிரள மிரள விழித்ததும், ஐந்தாவது ஆறாவது வகுப்பு படிக்கும் காலத்தில் பல்வேறுவகயான குழந்தைகள் கதைகள் கொண்ட அலமாரியை அலற வைத்ததும் நன்றாக நினைவில் உள்ளது. இக்காலகட்டம் எங்களை தனியாக வெளியே அனுப்ப பெற்றோர்கள் இசைந்த தருணங்கள்.

அச்சமயத்தில் எனது வெங்கடராமன் மாமா, தில்லியிலிருந்து நேருபால புத்தகாலயத்தின் பதிப்புகளாக் சுமார் பதினோரு புத்தகங்கள் அனுப்பி வைத்தார். நமது கப்பற்படை, கிரிகெட், பறவைகளைப் பார், பூனை இனம், வேடிக்கை கதைகள், என ஒரு நீண்ட பட்டியல் அது. பெரும்பாலும் ஒவ்வொரு விடுமுறையிலும் அந்த புத்தகங்கள் எங்களால் மீண்டும் படிக்கப்படும். எனது விவரமான புத்தக வாசிப்பு இங்கு இருந்து ஆரம்பித்தது எனக் கொள்ளலாம். விடுமுறை காலங்களில் எனது தந்தையார் அவரது பள்ளியில் இருந்து கொண்டு வந்த சிந்துபாத் கதைகள் மனதில் அப்படியே இருக்கின்றது. அதன் பிறகு சற்று பதிமன் வயதுகளில் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் கருதி, எனது தந்தை abridged version-களாக வந்த count of montecresto, around the world in eighty days என சில புத்தகங்களை அறிமுகப் படுத்தினார்.

பத்தாவது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பாட புத்தகம் தவிர வேறெதுவும் படித்ததாக நினைவில் இல்லை. non-detailed-ல் நல்ல சிறுகதைகள் படித்தது நினைவில் உள்ளது. மிளகாய் பழச்சாமியார், மற்றும் ஜெயகாந்தனின் சிறுகதை (நந்தவனத்தில் ஓர் ஆண்டி) இன்றும் நினைவில் உள்ளது.

பிற்பாடு கல்லூரியில் சேர்ந்த பிறகு வாசிப்பு விரிய ஆரம்பித்தது எனலாம். பல்வேறு வகையான புத்தகங்கள், ருசிய கதைகள், என சுவாரசியமான பருவம் அது. திரு. ஈ.அருணந்தி அவர்கள் தாய் புத்தகத்தை கொடுத்து படிக்கச் செய்தார். முதல் வாசிப்பில் அதில் சொல்லப்பட்டது எதுவும் எனக்கு புரியவில்லை. அதை மீண்டும் இருவருடங்கள் கழித்து படிக்கும் போது, கீழே வைக்க முடியவில்லை. அந்த வருடங்களில்தான் எனக்கு சமூகத்தை பார்க்க சில துணிவுகளும், தேவைகளும் ஏற்ப்பட்டது. எனது வாழ்வியல் ஆசானாக அருணந்தி அவர்கள் இருந்தார். இப்பொழுது என் நினைவில் மட்டும் இருக்கின்றார். அதன் பின் உண்மையில் எனது சிந்தனைகளை புரட்டி போட்ட புத்தகம் என்றால் அது "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய புத்தகம். அது பல் வேறு தளங்களில் எனதாக இருந்த கற்பிதத்தை தகர்த்து எறிந்தது.

பின்பு இந்திய அறிவியற் கழகத்திற்கு வந்த பின், இன்னும் பல நட்புகள். இன்னும் பல புத்தகங்கள். இங்கு கிடைத்தது அக வளர்ச்சிக்கான புத்தகங்கள். குறிப்பிட்டு சொல்வதானால் ஹெர்மென் ஹெஸ்ஸெ-வின் சித்தார்த்தா, ஜோனாதன் லிவிங்ஸ்டன் சீகல், ஒல்ட் மேன் அண்ட் த சீ, அவன் காட்டை வென்றான், பால் கொய்லோவின் அல்கெமிஸ்ட் போன்றவை. ஆனால் உளப் போக்கிற்கு ஏற்ற வகையில் இருந்தது என சொல்லும் வகையில் அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ், கி.ரா வின் படைப்புகள், to kill a mocking bird போன்றவைகளை சொல்லாம். மேலும் நல்ல அனுபவமாக இருந்தது, மோக முள், செம்பருத்தி, சிந்தாநதி (குறிப்பாக சொல் என்ற தலைப்பின் கீழ் வரும் இரு கட்டுரைகளும்), அபிதா. இந்த சமயத்தில்தான் ஜெயகாந்தனின் கதைகளும் வாசித்தேன். அவரது கதைகளின் முன்னுரைகள் என்றும் fresh-ஆனவை. எனக்கு அவரது கதைகளின் மிகவும் பிடித்தது ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும். பாரீசுக்கு போ ஒரு நல்ல நாவல் என்றாலும் அதன் களத்தை அவர் வலிய உருவாக்கி இருந்ததால் ஒருவித செயற்கைதனம் தெரிந்தது. அவரது சிறுகதை தொகுப்பும் அப்போது வாசிக்க கிடைத்தது. என்னை மிகவும் குதூகலப்படுத்தியது குட்டி இள்வரசனும், ஜன்னலில் ஒரு சிறுமியும். அப்துல் ரகுமானின் காதல் கவிதை தொகுப்பையும் இங்கு தான் வாசித்தேன். வண்ணதாசன் எழுத்துக்கள் எனக்கு உண்மையை மட்டும் உரைப்பதாக தெரியும். சின்னு முதல் சின்னு வரை ஒரு தேர்ந்த படைப்பு. மனித உணர்வின் மாற்றங்கள் வீடுவீடாக மாறும் அற்புதம் அதில் காணலாம். நிலா பார்த்தல்- படித்ததன் விளைவு air field-ல் பல இரவுகள் கழிந்தன.

மேலும் என்னை அதிர வைத்த புத்தகங்கங்களாக நான் நினைப்பது, 1. கம்பிக்குள் வெளிச்சம் 2. தூக்கு மேடை குறிப்புகள்.3. நாகாராஜன் படைப்புகள். இவை எனது பல நாட்களின் இரவை தின்றுள்ளன. இதை தவிர வேற்று மாநில படைப்புகள் என்றால் இந்திரன் தொகுத்த அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், சமஸ்காரா போன்றவை என்னை பாதித்தவை எனக் கொள்ளலாம்.

இப்பொழுது வாசிப்பில் இருக்கும் புத்தகங்கள்

1. முறிந்த பனை
2. பச்சை தேவதை
3. If life is bowl of Cherries, what am i doing in the pits?
4. இரவில் நான் உன் குதிரை (சிறுகதை தொகுப்பு)
5. மூலதனம் -தியாகுவின் மொழிப் பெயர்ப்பு

எப்போதும் வாசிப்பது

1. பாரதியார் கவிதைகள்
2. திருக்குறள்

மிகமிக முக்கியமான புத்தகங்களாக கருதுவது

1. வால்காவிலிருந்து கங்கை வரை -சாங்கிருத்யாயன்
2. ரூட்ஸ் - அலெக்ஸ் ஹேலி
3. குட்டி இளவரசன் - எக்சுபெரி
4. மோகமுள்- தி.ஜா.ரா
5. தூக்குமேடை குறிப்புகள்- புஸிக்
6. கம்பிக்குள் வெளிச்சம் -தியாகு
7. ஜன்னலில் ஒரு சிறுமி - டேட்சுகோ குரொநாயகே
8. தாய் -கார்க்கி


படிக்க விரும்பும் நூல்கள்

இது ஒரு பெரிய பட்டியல்.

நான் புத்தகங்களை படிக்க எனது நண்பர்களே காரணம். கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எங்கள் மத்தியில் சுழற்சி முறையில் இருந்தது. தங்கமணியின் அறை ஒரு குட்டி நூலகமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. எனது அறையில் நான் இருந்ததை விட அவரது அறையில் நான் கழித்த அர்த்தமுள்ள பொழுதுகள் ஏராளம். அது போல் கோகுல்-தேவி -யின் வீட்டில் படித்த புத்தகங்கள் குறிப்பாக அனைத்து JK புத்தகங்கள் தேவி தந்தவைதான். இதை தவிர மீனா எனக்கு வழங்கிய புத்தகங்களும் பல. பாபு கொடுத்தது எனது அறையில் ஆப்பிரிக்க வானம். பின்பு சென்னை செல்லும் போதெல்லாம், new bookland-ல் வாங்கியவையும் அடங்கும். பெங்களூரை விட்டு கிளம்பும் சமயம் வாங்கிய புத்தகங்கள் இப்போது மீனா வீட்டில் இருக்கும் நான் படிக்காத புத்தகங்கள்.

நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்

1. மயிலாடுதுறை சிவா
2. சங்கர பாண்டி (இவருக்கு வலைப்பதிவு இல்லை. எனக்கு அனுப்பினால் நான் அதை இடுகின்றேன்)
3. பொள்ளாச்சி நசன் (இவர் படித்ததை
முழுதாக எழுத இயலாது என தெரியும். ஆனால் இவரது வாசிப்பனுபவம் நமக்கு மிக்க
பயனுள்ளதாக இருக்கும்)
4. செல்வராஜ்
5. நற்கீரன்
6. நந்தலாலா

ஒரு மாலை உணவு வேளையில்

ஒரு நாடுவிட்டு மறுநாட்டிற்கு செல்லும் போது, நமக்கு புதிய நாட்டின் மக்களின் பண்பாடு, மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்கொள்வது மிகவும் சுவையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம். மற்ற ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது, கனடாவில், பல் வகை நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களிடையே பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள், தங்களது தாய் நாட்டை சார்ந்து இருந்தாலும், இங்குள்ள இயற்கை நிகழ்வுகள் காரணமாக அவர்கள் அதில் சில மாறுதல்களை செய்து வாழ்வதை பார்க்க நல்ல அனுபவமாக இருக்கும்.
மேலும் கனடாவின் மக்கள் என்று யாரை சொல்லலாம் என்றால், சிவப்பிந்தியர்களையும், இன்னுயிட்-களையும் சொல்லலாம்.

எனது பல்கலை கழக நண்பர் ஒருவர் இந்திய உணவு வகைகள் மேல் நாட்டம் கொண்டவர். திரு. பாடில் என்பது அவர் பெயர். அல்ஜீரிய நாட்டுக் காரர். அவருக்கு இந்திய உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிய ஆர்வம். ஆகையால் அவரையும், எனது நண்பரும் வீட்டின் உரிமையாளருமான திரு குல்வந்த் என்ப்வரையும் அழைத்தேன். மாலை உணவு செய்து சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தோம்.

திரு பாடில் தனது அனுபவங்களை சொல்ல துவங்கினார்.

அவருக்கு ஒரு நண்பர். அவர் ஓண்டாரியாவில் வசிப்பவர். அந்த நண்பர் ஒரு முறை பணி நிமித்தமாக வட கனடா செல்ல வேண்டி இருந்தது. அவர் சென்ற பகுதியில் இன்னுயிட்ஸ் வாழ்ந்து வருகின்றார்கள். இரு வாரங்கள் அங்கிருந்து விட்டு, திரும்பி வந்தவர், உடனே யாரிடமும் எதுவும் சொல்லாமல், மறுபடியும் வடகனடா சென்று, ஒரு ஆறுமாதம் வாழ்ந்தார். பின்பு அங்கிருந்து வந்து, தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று, இந்த் ஆண்டுடன் 22 வருடங்களாகி விட்டது என்று பாடில் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. தொடர்ந்து திரு பாடில் கூறினார் , "அவர் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் என்னை அங்கு ஒரு பள்ளியில் பாடம் கற்பிக்க அழைத்தார். அப்போது எனக்கு தெரிந்து இருக்கவில்லை எத்தகைய அனுபவம் எனக்கு காத்திருக்கிறதென்று. நான் அங்கு சென்றேன். ஒரு ஆறு மாதம் இருந்தேன்", என்று சொல்லிவிட்டு அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றி சொல்லத் துவங்கினார்.

இன்னுயிட்ஸ் மக்கள் சமூகமாக வாழ்வதையும் அவர்களது நேர்மையான சிந்தனைகளையும், எளிய வாழ்க்கை முறைகளையும் பற்றி சொன்னார்.

அவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தல், வேட்டையாடுதல். அனைவரிடமும் துப்பாக்கிகள் உண்டு. அவர்கள் தாங்கள் வேட்டையாடிய பொருட்களையும், சீல் மற்றும் மீன்களையும் ஒரு ஊருக்கு பொதுவான இடத்தில் சேமித்து வைத்து விடுவார்கள். அந்த ஊர் மக்கள் தங்களுக்கு அன்றன்றைய தேவைக்கானதை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வார்கள் "இலவசமாக". பாடிலிடம் கூட அவர்கள் இது உங்களுக்கும் சேர்த்துதான் என்று சொன்னதை அவரால் ஏற்க முடியாமல் பின்பு அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதையும் சொன்னார்.

அவர்களுக்குள் சண்டைகள் வரும், மற்ற எல்லா சமூகத்தினரையும் போல. ஆனால், அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதில்லை இச்சண்டைகளில். கத்தியால் கொலை கூட செய்வர். ஆனாலும், விசாரணையின் போது, "ஆமாம் கொலை செஞ்சேன்" என்று உரத்து கூறிவிடுவர்.

இவர்கள் சமூகத்தில் குழந்தைகளின் போக்கு சுவாரசியமானது. ஒரு ஐந்து வயது சிறுவன், தனது குளிர் உடுப்பை கழற்றி வைத்துவிட்டு, பனியில் சுருக்கி கொண்டு கிடந்துள்ளான். பாடில் அதை பார்த்துவிட்டு பதறி போய், அருகேயிருந்த பெரியவரிடம் சுட்டிக்காட்டி அவனை எழுப்ப சொன்னாராம். அந்த பெரியவர், "அட போப்பா! அவன் எதாவது வம்பு பண்ணிட்டிருப்பான்" என்று சொன்னாராம். இவர் மேலும் மேலும் வலியுறுத்தவே, அவர் அவனை எழுப்பியுள்ளார். உடனே அச்சிறுவன் தலையை மட்டும் திருப்பி, "ஹாய்" என்றானாம் சிரித்தவாறே. உடனே அப்பெரியவர் சிரித்துக் கொண்டே, "அவன் இந்த பனிக்கு பழகறான்" என்று கூறி சென்றுவிட்டாராம். நம்ம ஆளு முகத்தில் ஈயாடவில்லை(கிளிசே :P )

அவர்களுக்கு கல்வியின்பாற் நாட்டமும் இல்லை. வெறுப்பும் இல்லை. இது சுவையன்றோ?. இவர் முதன் முதலில் வகுப்புக்கு செல்கின்றார் பாடம் எடுக்க. வகுப்பில் யாரையும் காணவில்லை. ஆனால் சத்தம் மட்டும் வருகின்றது. என்னடா என்று பார்த்தால், குழந்தைகள் டெஸ்க்-கின் அடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனராம். இவருக்கு ஒரே சிரிப்பு இதைக் கண்டு. அவர்களை ஒருவாறு ஒன்று சேர்த்து டெஸ்க்கில் உட்காரவைத்து பாடம் எடுக்கும் போது, மிட்டாய்களை கொடுத்து ஆர்வத்தை வரவழைத்த கதையையும் சொன்னார்.

இதை கேட்டு கொண்டிருந்த திரு. குல்வந்த், " இந்த இடத்திலிருந்து இன்னும் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு சுற்றுலாவாக சில மாணவர்களை எங்கள் பள்ளி அழைத்திருந்தது. அவர்கள் வந்தார்கள். சுற்றி பார்த்தார்கள். மகிழ்ந்தார்கள். அவர்கள் திரும்பும் போது, அவர்களிடம் நாங்கள் கேட்டோம், உங்களுக்கு ஆச்சரியமும் சந்தோசத்தையும் அளித்த பொருள் என்ன? என்று." அதற்கு அவர்கள் அனைவருமே ஒரு சேர அளித்த பதில் "மரம்". அவர்கள் இதற்கு முன் மரங்களை பார்த்ததில்லையாம். அவர்கள் இருக்கும் இடங்களில் கிடையாதாம்.!!

மேலும் ஆங்கில மொழி பேராசிரியர் என்ற வகையில் அவர் கூறியது " நாற்பது வருடங்கள் முன்பு வரை அவர்களது மொழியில் நான், எனது என்ற வார்த்தைகளே கிடையாது". இது என்னை திகைப்புறச் செய்தது.

இதை குறித்து நான் மேலும் படிக்க முயல்கையில், சமூக அறிவியலாளர் ஒருவர், ஒரு இன்னுயிட்டிடம், பேச்சு வாக்கில் கேட்டாராம், " என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க?" என்று. அதற்கு அந்த இன்னுயிட் நண்பர், " நான் ஏன் யோசிக்கனும்? எங்ககிட்டே தேவையான மாமிச உணவு இருக்கே" என்று மிக இயல்பாக கூறினாராம். இது ஸென் கதை மாதிரி இருக்கு. இல்லையா?.

அப்புறம், என் நண்பன் ஒரு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த செய்தியை சொன்னான்.
அக்காலத்தில் இன்னுயிட்களில் வயதானவர்கள் தாங்கள் சமூகத்திற்கு பாரம் என்று நினைத்துவிட்டால் தங்களது ஆடைகளை களைந்து விட்டு, வடக்கு நோக்கி யாரிடம் எதுவும் கூறாமல் நடக்கத் துவங்கி விடுவர் என்று.

இயற்கை நமக்கு பாடங்களை கற்பித்தவாறே உள்ளது.

ஒரு புத்தகம்-shogun

பொதுவாக நான் ஒரு பரந்த வாசிப்பனுபவம் கொண்டவன் கிடையாது. ஆனாலும் அவ்வப்போது என் கண்களில் சில சுவாரசியமான புத்தகங்கள் படத்தான் செய்கின்றன. தேர்ந்த உண்மையான உள்ளொளியுடன் எழுதப் படுகின்ற புத்தகங்கள், நமக்கு பல நாள் வாழ்ந்த அனுபவங்களை கொடுப்பதில் தவறுவதில்லை. இவ்வகையில் நான் சீரிய புத்தகங்களை சான்றோர்களாக கருதுகின்றேன். கல்வெட்டுகள், சுவடிகள், செவி வழி ஞானம் என்று பல வகைகளில் நமக்கு அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகளை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்படும் வரலாற்று புதினங்கள் சில நம்மில் பலருக்கு அறிமுகமானவைகளே. இதில் குறிப்பிட்டு சொல்வதென்றால், 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' என்ற இந்த இரு புத்தகங்களையும் சொல்லலாம். இவை தவிர 'வால்காவிலிருந்து கங்கை வரை' சமுக நிகழ்வுகளுக்கு பின் புலமாக இருந்த சில காரணிகளை தோலுரிப்பதால் இந்நூலை அவ்வகை புத்தகங்களில் மிக முக்கியமான ஒன்று எனக் கொள்கின்றேன். இந்த பதிவில் வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஆங்கில புதினத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள தலைப் படுகின்றேன்.

புத்தகத்தின் தலைப்பு: ஷோகன்
வெளியான ஆண்டு: 1975
ஆசிரியர் : ஜேம்ஸ் க்ளெவல்
வெளியீடு :Atheneum, NewYork

இந்தப் புதினம், 1600-க்கு மேற்பட்ட ஆண்டுகளில் ஜப்பான் எவ்வாறு இருந்தது என்பதை நமக்கு காட்டுகின்றது. அங்கு நிலவிய அரசியல், சமூக,மத சூழ்நிலைகளை நமக்கு ஒரு ஐரோப்பிய மாலுமியின் மூலம் அறிமுகப் படுத்துகின்றார், திரு. ஜேம்ஸ் க்ளெவல். இந் நூலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் 1560-1600 வரையான காலகட்டத்தில் ஐரோப்பாவின் அரசியல் நிலை பற்றிய சிறு குறிப்பை க்ளெவலின் கண்கள் மூலம் பார்ப்போம்.
கத்தோலிக்க ஸ்பெயினுடன் நாற்பது வருடத்திற்கும் மேலாக போர்முறை எதிர்ப்பை காட்டி வருகின்றது புரொட்டஸ்டன்ட் நெதர்லாந்து. நெதர்லாந்து சட்டரீதியாக ஸ்பெயின் பேரரசின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. இங்கிலாந்து ரோமன் கிறித்துவ சம்பிரதாயங்களில் இருந்து ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் விடுபட்ட முதல் நாடு என்பதால், இருபது வருடங்களாக ஸ்பெயினுடன் அறிவிக்கப்பட்ட போரில் ஈடுபட்டுள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் கடைசி பத்தாண்டுகளாக இங்கிலாந்து, நெதர்லாந்துடன் இணைந்து செயல்படுகின்றது.
மேலும் போப் கிளிமண்ட் VII 'ஸாராகோசா ஒப்பந்தத்தில்' (1529) கையெழுத்திட்டு, உலகின் கிழக்கு பாகாங்களை போர்த்துகீசியருக்கும், மேலை பாகங்களை ஸ்பானியர்களுக்கும் பிரித்து விடுகின்றார். போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் ரோமன் கத்தோலிக்க சர்ச்-சை ஏற்றுக் கொண்டவர்கள்.

இந்த நிலையில் கதை துவங்குகின்றது.

ஒரு இங்கிலாந்து மாலுமி, நெதர்லாந்து கப்பலை செலுத்தி கொண்டு தென் அமெரிக்கா அடைவதும் அங்கிருந்து அவர் ஜப்பானுக்கு செல்வதும் ஒரு அற்புத தன்னம்பிக்கை முயற்சி. இதில் மாலுமி எவ்வாறு திடசித்தனாக இருப்பதும், தனது குழுவினருக்காக போராடுவது நன்றாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த மாலுமியின் பெயர், Blackthrone. இவர், ஜப்பானிய வாழ்க்கை முறைகளை பின்பற்றி அதில் உள்ள சிறப்பம்சங்களை உள்வாங்குவது, பல மன அதிர்வுக்குள் நிகழ்கின்றது. இந்த மாலுமிக்கு அன்ஜின்-சான் என்ற பெயர் ஜப்பானியர்களால் இடப்படுகின்றது. இதற்கு கேப்டன்
என்று பொருள். இவர் ஜப்பானுக்கு வருவதற்கு முன்பே, அங்கு போர்த்துகீசர்களால் ரோமன் கத்தோலிக் சர்ச் நிறுவப்பட்டிருக்கின்றது. இதன் பாதிரியாக அல்விட்டோ என்பவர் உள்ளார். இவர் ஜப்பானில் சர்ச்களை வளர்ப்பதில் பேரார்வம் கொண்டு அங்குள்ள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக்க கடுமையாக முயல்கின்றார்.

ஜப்பான் அக்கால கட்டத்தில் பல மாகாணங்களாக பிரிந்து இருக்கின்றது. 1542 களில் டைக்கோ என்பவர், தனது போர்திறம் மூலம், அனைத்து மாகாணங்களையும் இணைத்து ஒரு அவையை உண்டாக்குகிறார். அந்த அவைக்கு கவுன்சில் ஓஃப் ரீஜென்ட்ஸ் என்று பெயரிடப்படுகின்றது.டைக்கோ அதன் தலைவராக பிரகடனப்படுத்தி கொள்கிறார். டைக்கோ-விற்கு வாரிசாக ஒரு சிறுவன் இருக்கும் தருவாயில் அவர் மரணமுறுகின்றார். அச்சிறுவன் வளர்ந்து பொறுப்பேற்கும் வரை, டோரோனாகா -வை தலைவனாக அந்த கவுன்சில் அரசியல் மற்றும் அதிகாரத்தின் காரணமாக ஏற்றுக் கொள்கின்றது. டோரோனாக டைக்கோவின் வட்டத்திலேயே என்றும் இருந்தவர் என்பதும் ஒரு காரணம். ஆனாலும் மாகாணங்களின் தலைவர்களுக்கு கவுன்சிலின் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருக்கின்றது.

இச்சூழலில் தான் பிளாக்த்ரோன் ஜப்பானுக்குள் நுழைகின்றார். அவரது கலம் புயலில் சிக்கி கரையைத் தட்டுகின்றது. பின்பு டோரோனாகா -வை சந்திக்கின்றார். இவரை பயன்படுத்தி, தனது இராஜ தந்திரம் மூலம் டோரோனாகா எவ்வாறு காயை நகர்த்துகின்றார் என்பது சுவாரசியமானது.

சில மாகாண தலைவர்கள் ரோமன் சர்ச்சி-ற்கு ஆதரவாக உள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு சர்ச்-சை விட அதன் மூலம் கிடைக்கும் கறுப்புக் கப்பல் வணிகத்தின் மீது அதிக நாட்டம்.

இவ்வாறு ஒரு பெரிய அளவில் அரசியல் நிகழ்வுகளும், அதில் உள்ள சிக்கல்களும், அதை ஒவ்வொருவரும் பயன்படுத்தும் முறைகளும் மிகவும் திடுக்கிட வைக்கும்.

இப்புதினத்தில் எனக்கு மிகுந்த சுவாரசியமான சில விசயங்களை உங்களுக்கு தருகின்றேன்.

1. Rutters: இது ஒரு மாலுமியின் உயிர் மூச்சு. இது ஒரு சிறு புத்தகம். இதில் ஒரு மாலுமி தான் புதிதாக பயணம் மேற்கொள்ளும் வழிகளில் காணும் நிகழ்வுகள் குறிக்கப்பட்டிருக்கும். துறைமுகங்களுக்கும், முனைகளுக்கும் உண்டான காந்த முள்ளின் அளவைகள் இருக்கும். மேலும், அவர்கள் காணும் கடலின் நிறமும், ஒலியும், கடற்படுகைகளும் குறிக்கப்பட்டு இருக்கும். காற்றின் போக்கும் அவைகளின் திசைகளும் இருக்கும். மேலும் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதான் செய்திகளும் உண்டு. ஒரு பாதுகாப்பான கடற்பயணத்திற்கு தேவையான அனைத்து குறிப்பும் எனக் கொள்ளலாம்.
இதை கைபற்ற பல வழிகளில் பல முயற்சிகள் நிகழும். இதில் போலிகளும் உண்டு. ஒரு தேர்ந்த மாலுமியால் மட்டுமே போலியையும், உண்மையையும் பிரித்து அறிய முடியும். இதை எவ்வாறு பிளாக்த்ரோன் பயன்படுத்துகிறார் என்பது சுவாரசியம்.

2. டைக்கோவின் இறப்புக் கவிதை:
" நான் ஒரு பனித்துளி யென பிறந்தேன்
பனித்துளியாக மறைகின்றேன்
ஓசாகா கோட்டையும் மேலும் யான் புரிந்த மற்றவைகளும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவே"

இதை படித்தவுடன், பாரதி சொன்ன பாடல் நினைவுக்கு வந்தது.

"உலகெ லாமொர் பெருங்கன வஃதுள்ளே
..........................................
........................
மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங்கன வாகும்." (சுயசரிதை : முன்னுரை: பாடல் 3)

இதை பற்றி மேல் விவரங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்

3. ஜப்பானியர்களின் ஜாதீய முறைகள், அவர்களுக்கு இருக்கும் "கர்மா" (விதி என்ற பொருளில்) நம்பிக்கை அவர்களது சமூகத்தை ஆதிக்க சமூகமாக பார்க்கத் தூண்டுகின்றது. மேலும் அவர்கள் பெண்களுக்கு இட்டிருக்கும் நியதிகள் இக்கூற்றை உறுதி செய்கின்றது.

இவற்றையெல்லாம் மீறி, இப்புத்தகம் படிக்க சுவாரசியமானது என்பது நிஜம்.

Saturday, February 19, 2005

பணி இடமும், பனி இடமும் !!

அன்பு நண்பர்களுக்கு,
பாலாஜி-பாரி யின் வணக்கங்கள்.நான் கடைசியாக வலைப் பதிந்தது அக்டோபர் மாதம் என நினைக்கின்றேன். இப்பொழுது மீண்டும் வலை பதிய வந்துள்ளேன்.
இந்த கால இடைவெளியில் பல நிகழ்வுகள். என் பணியிடம் இப்போது பனி இடம். நான் கனடாவில் புதிய பணியை ஒப்புக் கொண்டுள்ளேன். இந்த இடம் மிகவும் அழகாகவும், பணி நிறைவை தருவதாகவும் உள்ளது. இங்கு வந்து மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. இங்குதான் முதன் முதலில் நேரடியாக பனியை பார்க்கின்றேன். நான் இப்போது இருப்பது கிழக்கு கடற்கரையில். இங்கு பனி விழுவது அதிகம், என்றாலும் அவ்வப்போது வந்து போகும் பனிப்புயலினால் வீட்டிற்குள்ளேயே அடைபட்டிருக்க நேரிடும். ஒரு நாள் விவரம் தெரியாமல் காலையில் கடமையாக தொழிலுக்கு கிளம்பி, பாதி வழியிலேயே மேலும் செல்ல இயலாமல் வீட்டிற்கு வந்து ரேடியோவை திருகினால், “ஐயா, இன்னிக்கு லீவுங்கையா” என்ற சேதி .

இங்கு வந்து இந்த காலவெளி ஓட்டத்தில் கலந்து இளைப்பாறும் சமயத்தில் இனி வலை பதியவும் இயலும் எனத் தோன்றுகின்றது. எனது பதிவு இதுகாறும் கூட்டாஞ்சோறு போல் இருந்தது. மதி அவர்களின் உதவியுடன் தனி தனி பண்டமாக இனி உங்களுக்கு வழங்க அவா. ஆதலினால் இந்த புதிய வீட்டிற்கு குடி புகுதல்.
முதலில் செய்ய வேண்டியது எப்போதோ தொடங்கிய ஒரு தொடர்கதையை முடித்து வைத்தல். பின்பு பார்த்த படங்கள் பற்றிய ஒரு பதிவு. அறிவியல் பதிவுகள் சில. இதெல்லாம் தாள்களில் எழுதப்பட்டு சிதறிக் கிடக்கின்றது. ஒவ்வொன்றாக அந்தந்த categories -ல் பதிய எண்ணம். பின்பு “நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்” என்ற தொடரையும் தூசி தட்டுகின்றேன்.

இனி மேல் நான் paari.weblogs.us என்ற இடத்தில் மட்டுமே வலை பதிய உள்ளேன். தாங்கள் மேலுள்ள சுட்டியில் எனது புது இடத்திற்கு வர முடியும்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Thursday, June 17, 2004

வன்முறை

இந்த பதிவிற்கு திரு. JR அவர்களின் கவிதைதான் காரணம்( அவர் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இட்டது ).
எனது உள்ளில் இருக்கும் மூர்க்கம் சார்ந்த வன்முறையை வெளிக்கொணர அவர் தூண்டுகோலாகிவிட்டார்.

நான் சிறுவயதில் இருந்து செய்த, எனக்கு நினைவில் இருக்கும், வன்முறை என நான் கருதிய செயல்களை பகிர்ந்து கொள்கின்றேன்.

UKG படிக்கும் சமயம் என் அம்மாவிடம் அடி வாங்கிய போது நடந்தது....
நான் அழுதபடி எங்கள் வீட்டில் இருந்த பலகையில் (சின்ன பலகை) உட்கார்ந்து கொண்டிருந்தேன். செய்த தவறை நான் உணர வேண்டும் என்பதற்காக சினஞ் சொற்கள் கூறிக் கொண்டிருந்தார் என் அம்மா. அது என் கோபத்தை வலுப்படுத்தியது. அவரை எதிர்க்க நான் அப்பொழுது கூறியது," போடி...".

இரண்டாவது வகுப்பு படிக்கும் போது என் நண்பன் முருகானந்தத்திடம் சண்டை இட்டேன். அப்பொழுது எழுந்த வன்சீறலில், என் கைகளின் நகங்களை வைத்து அவன் தொடையை கிள்ளி விட்டேன், இரத்தம் கசியும் அளவிற்க்கு. அவன் தனது போலீஸ் அண்ணனண அழைத்து வருதாக மிரட்டி, என்னை இரு தினங்கள் மிரள வைத்தான்.

எனது தங்கையை நான் கடித்து விட்டதால் பல் பதிந்து இரத்தம் வந்து, அந்த வடு இன்றும் இருக்கின்றது. அவள் கைகளில் மட்டும் அல்ல, எனது நெஞ்சிலும்.

ஐந்தாவது படிக்கும் போது பள்ளிவிட்டு செல்லும்போது ஓர் சண்டையை வைத்து, சக்திவேலும் நானும் மோதினோம். திட்டமிட்ட ஒரு ஒற்றைகொற்றை சண்டை.

தொட்டு விளையாட்டின் போது, எனது தங்கை என்னை முந்திய தருணத்தில் அவளது பொட்டு சிதறி விழ, அதை வன்மத்துடன் எடுத்து பிய்த்து போட்டேன். பாவம் அவள் தப்பினாள்.

ஏழாவது படிக்கும்போது, துடுக்கான முதல் வீட்டுப் பையனின் பட்ட பெயரை அவனது வீட்டின் முன் எழுதி அவனை தாழ செய்தேன்.

என்னை விட வயதில் மூத்த என் ஒன்றுவிட்ட அண்ணனை, குரூரமாக வார்த்தைகளால் தாக்கியது.

இன்னும் பலப்பல உள்ளன....

என் செய்வது, இதை அறிய முயலும் போதும் வேறொரு தவறை செய்து விடுகின்றேன்.

குற்ற உணர்வின் காரணமாக இப்பதிவு எழுத்ப்படவில்லை என்பதையும் வரிகளுக்கு இடையே படியுங்கள்.

Tuesday, June 01, 2004

ஒரு சிறுகதை..

இந்த கதை தினமனி கதிரில் வெளியாகியுள்ளது. கதையின் கரு ஒரு ஆழமான விஷயத்தை எடுத்துரைகின்றது. நம்பிக்கை ஊட்டும் விதத்திலும் அமைந்துள்ளது. படித்து பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


அன்புடன்
பாரி

Sunday, May 30, 2004

குடி நீர் திட்டம்!!

கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை நடுவண் அரசு செயல் படுத்த போவதாகவும், அது முதலில் தமிழ் நாட்டில் துவக்கப்படும் என்ற செய்தி விகடன் தளத்தில் வந்துள்ளது.
மற்ற விவரங்கள் அறிந்தவர் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Wednesday, May 12, 2004

தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி

As I could not find a place which hosts 38 MB file, this post remains incomplete. I regret it.
(This post is corrected and republished with above info on 20May04 at 2:45 AM IST)



தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஹோஸூரில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவை தமிழ் வளர்ச்சி மன்றம் நடத்தியது.அவ்விழாவில் ஒரு பட்டிமன்றமும், திரு. புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி அவர்களின் பாட்டுக் கச்சேரியும் நடந்தது.
நண்பர் திரு. ராஜா அவர்களின் அன்பான அழைப்பினால் இந்நிகழ்ச்சியை நாங்கள் (தங்கமணி,யென்ஸ்,பாலாஜி) கண்டுகளிக்கச் சென்றோம். இந்த விழியத்தை நம் அனைவருக்கும் பதிவு செய்து வழங்கியது திரு. யென்ஸ். அவர் ஜெர்மனியை சேர்ந்தவர். இங்கு பின்முனைவராக () பணியாற்ற வந்துள்ளார். அவருக்கு இசையில் ஈடுபாடு அதிகம். அன்றைய நிகழ்ச்சியை அவர் வெகுவாக ரசித்தார். இதை இங்கு இட ஆலோசனைகள் வழங்கிய நண்பர் ரமணீதரன், சத்தியராஜ்குமார்,சுந்தர் ஆகியோருக்கு நன்றிகள். நண்பர் ஸ்ரீகாந்த் தேவையான ஜாவா ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுத்தமைக்கு அவருக்கு உங்கள் சார்பில் ஒரு பெரிய "ஓ".


அன்புடன்
பாரி

Monday, May 10, 2004

நண்பர் சித்ரன்

இன்று நண்பர் சித்ரனின் வலைப்பக்கத்தை காண நேர்ந்தது. மரத்தடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதற் பரிசை வென்றவர். கல்கியில் பல நல்ல கதைகள் உள்ளார். அவரது வரவு நம் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Sunday, May 09, 2004

uthavi! uthavi!!

ஒரு மூவி க்ளிப்பிங்க் இருக்கு!! அதை எப்படி இடுவது என்பதை யாரேனும் கூற இயலுமா??

இன்னொன்னு....




இந்த புலி பதிவு முடிச்சுட்டு ரூம்முக்கு போனா, நண்பன் பாபு, "மால்குடிக்கு ஒரு புலி"(ஆங்கிலம்) ங்கிற புத்தகம் வைத்திருந்தான். ஒரே புலிகள் மயமா இருக்கேன்னு நினைச்சேன். அப்போ "இந்த ஒரு படம் மட்டும் சரிப்படாது. இன்னொன்னு போடுன்னு" புலி சொல்றாப்ல இருந்துச்சா. இன்னொரு படமும் புகைப்படமும் போட்டாச்சு.

பாலாஜி-பாரி

Saturday, May 08, 2004

புலி பாருங்கோ! புலி பாருங்கோ!!


புலி பாருங்கோ!! புலி பாருங்கோ!!!
பெங்களூரு புலி பாருங்கோ!!!!
'புலி' ந்னு சொன்னா பயப்படாதீங்கோ!!
தேசியம் சம்பந்தப் பட்டதுங்கோ!!!
அதாவது இந்திய தேசிய விலங்குங்கோவ் :) !!!
(நாங்கள் வன உலா சென்ற போது, இந்த புலியை நண்பர் 'யென்ஸ்' படம் பிடித்தார்!!)

"என் ஜாய் மாடி!!"
-பாரி

Wednesday, March 03, 2004

தமிழ் பற்றி UNESCO அறிக்கை

திரு சுரேஷ் அவர்கள் மரத்தடியில் இட்டுள்ள அறிக்கையின் சுட்டி.
யுனஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்த திரு. மணவை முஸ்தாபா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி சுட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் பற்றி UN என்ன கூறி உள்ளது என்ற விபரம் உள்ளது.

Thursday, February 19, 2004

அறிவுக் களஞ்சியம் www.thamizham.net

இன்று ஒரு இணைய தளத்தை நண்பர் தங்கமணி சுட்டிக்காட்ட நான் பார்த்தேன். அதில் ஓர் ஆசிரியரின் சீரிய பணியை கண்டு வியந்தேன். இவர் தற்கால தமிழ் இலக்கியத்தின் ஓர் கருவூலம். இவரை பற்றி நம் வலைபதிவர்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. ஆகையால் இந்த உடனடி செய்தி.
திரு. நடேசன் அவர்கள், பொள்ளாச்சியில் இருந்து கொண்டு இந்த அருமையான தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது நூலகத்தில் இருக்கும் சிற்றிதழ்-களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மேலும் போற்றத் தக்கது. அவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஓர் தீவிரம். அனைவரையும் நாம் போற்றுவோமாக.
இவர்களின் பணி ஓர் கூட்டு முயற்சியாய் நடை பெறுகின்றது. பல அரிய புத்தகங்களும், தமிழ் சார்ந்த பல தகவல்களும் சுவாரசியம் கொள்ள செய்கின்றன. இவர்கள் இதை மின் ஊடகத்தில் மாற்றவும் முயற்சி செய்கின்றனர். இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அன்புடன்
-பாரி

Monday, January 19, 2004

பேர்ல என்ன இருக்கு ??

இப்படி யாராவது சொன்னா... தயவு செஞ்சு இதை படிங்க.....


பாலாஜி. இது வெறும் மூணெழுத்து வார்த்தை. இந்த வார்த்தை படற பாடு... படுத்தற பாடு.... இருக்கே..... சொல்லி மாளாது....ஆனால் சொல்லாமயும் இருக்க முடியல.......

B-ல ஆரம்பிக்குதா.... ஸ்கூல் அட்டெண்டென்ஸ்ல எப்படியும் மூணு நாலு பெயருக்குள்ள வந்து விடும். ஜன்னல் ஓரத்துல உக்காந்துட்டு சீனியர் மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட்டை வகுப்பறையிலிருந்து (match ன்னா கேட்கவே வேணாம்!! உடல் மட்டும் வகுப்பறையில்...) வேடிக்கை பார்க்கும் போது, ரெண்டு அல்லது மூணு பாலாஜி-ல என் பெயர (S.Balaji) கூப்பிடறதுக்கு முன்னாடியோ அல்லது அப்புறமோ "ப்ரெசண்ட் மிஸ்"ன்னு சொல்லி, "என்ன எரும? வெளில என்ன ஆடுது?" ன்னு சரோஜினி மிஸ்-கிட்ட திட்டு வாங்கி இருக்கேன்.

SRIMHSS-ல் +2 படிக்கும் போது, ரெண்டு பாலாஜி. இன்னொரு பாலாஜி Computer science. நான் Biology. எங்களுக்கு இந்த வித்தியாசம் இருந்த போதும், பயாலஜி பாலாஜி-ன்னு கூப்பிட கஷ்ட்டப்பட்டுகிட்டு எங்களுக்கு புது அடை மொழி கொடுத்தாங்க. நான் பழனியில் இருந்து வந்ததால பழனி பாலாஜி -யாகவும், அவங்க அப்பா மிட்டாய் கடை வைச்சு இருந்ததால இன்னொரு பாலாஜி, மிட்டாய் பாலாஜி -யாகவும், ஆகிவிட்டோம். ( "நண்பா! மிட்டாய் பாலாஜி! அந்த கணக்கு டுயூசன் சம்பவம் எனக்கு தெரிஞ்சு போச்சுடா. இதை படித்த பின்பும் நீ தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்!!")

APAC -ல ஃபிசிக்ஸ் படிக்கும் போதும் ரெண்டு பாலாஜி. இங்கே ஒரு சின்ன ஆறுதல். இன்னொரு பாலாஜி பேரு பாலாஜி விஸ்வநாதன். இங்கே குழப்பம் கம்மின்னு நினைச்சேன். ஆனா, ஒரு தடவை எங்கிட்ட வந்து "ஆமா!! ஏண்டா இப்படி லொள்ளு பண்ற? physics lab -la யாரும் இல்லாத போது physics பூதம் டான்ஸ் ஆடுதுன்னு சொன்னியாம்"ன்னாங்க பசங்க. அப்போதான் தெரிஞ்சுது " B. vishwanathan" மிகுந்த நகைச்சுவை உடையவர் என்று.

நல்ல வேளை... AC-ல 94php-ல ஒரே ஒரு பாலாஜிதான் :))

சரி ஐயா! IISc யில எங்க dept-ல ஒரு பாலாஜிதான்னு சந்தோஷப்படும் போது, registrar office-ல இருந்து phone வருது. என்ன விஷயம்ன்னு கேட்டா, "உங்கள gymkhaana treasurer-ஆ select பண்ணி இருக்காங்க" அப்படீங்கறாங்க. என்னாடா இது புதுக் குழப்பம்ன்னு "உங்களுக்கு யார் வேணும்?"-னு பணிவா கேட்டேன் (வேற என்ன பண்ண??). " நீங்க student் தானே?"ன்னாங்க. "ஆமாம்!!" னேன். "உங்க பேரு "S.Balaji" தானே?". இதுக்கும் "ஆமாம்" னேன். "அப்ப உங்களத்தான் செலக்ட் பண்ணிருக்காங்க"ன்னாங்க. உடனே நான் "அட நான் எலெக்ஷன்னுக்கு நாமினேட் பண்ணவே இல்லீங்க" னு சொன்னேன். "இல்லையே Instrumentation னு போட்டு இருக்கே" அப்படீன்னு சொல்றாங்க. நான் "சே!! இங்கேயும் இப்படியான்னு" நினைச்சுகிட்டு, "சார்! வேற dept-ல என்கொயர் பண்ணுங்க. அப்புறமா நான் உங்க office-க்கு வரேன்னு சொல்லி phone-ஐ வைத்தேன். பிற்பாடு Metullargy-ல ஒரு "S.Balaji", இருந்தது, அவரும் நானும் ஒரே பிளாக்கில் (PD-Block) இருந்தபடியால் நண்பர்களானது ஒரு பின் கதை.
இங்கேயும் குழப்பம் இல்லாமல் இல்லை. ஏன்னா, அவரோட ரூம் நம்பர் "137". என்னோட ரூம் நம்பர் "37". எல்லாரும் செக்யூரிட்டி கிட்ட தபால் ஏதேனும் வந்தான்னு விசாரிச்சுகிட்டா, நாங்க மட்டும் பரஸ்பரமா-வும் letter வந்ததுருக்கான்னு கேட்டுப்போம். :)

இங்கே வட மாநில பசங்களுக்கு "ஜி" ங்கறது மரியாதை விகுதியாம். அதனால என்னை "பாலா" ன்னு-தான் கூப்பிடுவாங்க.

இப்போ நெட்-ல எழுத ஆரம்பிச்ச பின்னரும், இதே கதை தொடருது. சரி ஒரு புனைப் பெயர் வைத்துக் கொள்வோம்னு "பாரி" னு வைச்சுக்கிட்டேன். பார்த்தா, blogspot-ல பரிமேள்ஸ் "பரி"ன்னு ரொம்ப நாளா எழுதறார். திண்ணையில் பாரி பக்கத்தில் " பாரி பூபாலன்" னு ஒருத்தர் எழுதறார்.

அதானால இனிமே "PAARI" (பாரி) ங்கற நாம கரணத்தை மட்டும் தரித்துக் கொள்றேன். இனி நெட்-ல பாலாஜி-க்கு கோவிந்தா!!!! :)))

அன்புடன்
பாரி

Wednesday, January 14, 2004

பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

நம் உயிர் வாழ்தலுக்கு அடிப்படையாக விளங்கும் உழவுத் தொழிலை மேற்கொள்ளும் அந்த உழவர் நண்பர்களுக்கும் நம் நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்!!

பருவ மழை தப்பாமல், அவர்களது உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கவும், அவர்கள் வாழ்வில் வளங்கள் பொங்கவும், பிரார்த்திப்போம்!!!

இப்பொங்கல் விழா சந்தர்ப்பத்தில், உழவர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!!

அன்புடன்
பாலு மற்றும் பாலாஜி

Monday, November 24, 2003

அன்புடையீர், வணக்கம்!!

பாரியின் உருமி மேளத்தில் வரவிருக்கும் சில தாளங்கள்....
1. சமூகமும் அதன் இயக்கமும்....
2. அறிவியல்.......
3. சில கதைகளும், "கட்டு"உரைகளும்....
4. பாதித்த கவிதைகளும், பாதிப்பால் உண்டான கவிதைகளும்.....