Tuesday, May 11, 2004

பயணம்

முகமறியா பலர் அமைத்த பாதை.

ஒவ்வொரு அடியாக அறிந்து
முடிவு காண முயலும் முயற்சி.

புதிரென்ற பேரனுபவம் நிறைந்த
கள் மொந்தையாய்,
ஓர் நெடிய பயணம்....

இருமருங்கிலும் கருவேல மரங்கள்.
அவ்வப்போது பழம் தரும் தருக்கள்.
தோழர்களாய் நிழல் கொடுக்கும்,
வானளாவி நிற்கும்
அக புற பிரமாண்டமாய் விருட்சங்கள்.

சிட்டு குருவியாய்
பசுங் கிளிகளாய்
கான குயில்களாய்
அழகு மயில்களாய்
இருட்டு கோட்டான்களாய்
கற்ற, கற்பிக்கப்பட்ட செய்திகள்.
ஆனாலும் பாதையிலேதான் பயணம்...

கணந்தோறும் புதிய வியப்புகள் தோன்றும்.
வியந்த குழந்தையாய்
கண்கள் மலரும்.
காட்சி மிக களிப்பூட்டும்
மஞ்சள் மந்தாரையாய்,
சிகப்பு செம்பருத்தியாய்,
வெண் சங்கு மலராய்,.
அவ்வழி பயணத்தில்.

சோலைகளாய் வரும் அந்த
மன மயக்கம்...
பாதைகள் கண் மயங்க
புதர் முட்கள் பாதம் தைக்கும்.
மனம் விழித்து
கண் திறக்க மீண்டும்
அதே பாதையிலேதான் பயணம்.

வாழ்க்கை
மேலும் கீழும் கோடுகளை இட்டு
தருணங்களை ஓவியமாக்கி
காலத்துடன் கலந்து
தொடர் பிம்பங்களாய்
தோற்றுவித்த அப்பாதையிலே
கனம் இல்லாமல்
காற்றைப் போல்
நீங்களும், நானும், சில மழைத் துளிகளும்.



அன்புடன்
-பாரி

Monday, May 10, 2004

நண்பர் சித்ரன்

இன்று நண்பர் சித்ரனின் வலைப்பக்கத்தை காண நேர்ந்தது. மரத்தடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதற் பரிசை வென்றவர். கல்கியில் பல நல்ல கதைகள் உள்ளார். அவரது வரவு நம் அனைவருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
பாலாஜி-பாரி

Sunday, May 09, 2004

uthavi! uthavi!!

ஒரு மூவி க்ளிப்பிங்க் இருக்கு!! அதை எப்படி இடுவது என்பதை யாரேனும் கூற இயலுமா??

இன்னொன்னு....




இந்த புலி பதிவு முடிச்சுட்டு ரூம்முக்கு போனா, நண்பன் பாபு, "மால்குடிக்கு ஒரு புலி"(ஆங்கிலம்) ங்கிற புத்தகம் வைத்திருந்தான். ஒரே புலிகள் மயமா இருக்கேன்னு நினைச்சேன். அப்போ "இந்த ஒரு படம் மட்டும் சரிப்படாது. இன்னொன்னு போடுன்னு" புலி சொல்றாப்ல இருந்துச்சா. இன்னொரு படமும் புகைப்படமும் போட்டாச்சு.

பாலாஜி-பாரி

Saturday, May 08, 2004

புலி பாருங்கோ! புலி பாருங்கோ!!


புலி பாருங்கோ!! புலி பாருங்கோ!!!
பெங்களூரு புலி பாருங்கோ!!!!
'புலி' ந்னு சொன்னா பயப்படாதீங்கோ!!
தேசியம் சம்பந்தப் பட்டதுங்கோ!!!
அதாவது இந்திய தேசிய விலங்குங்கோவ் :) !!!
(நாங்கள் வன உலா சென்ற போது, இந்த புலியை நண்பர் 'யென்ஸ்' படம் பிடித்தார்!!)

"என் ஜாய் மாடி!!"
-பாரி

Tuesday, May 04, 2004

துருவலாய் மழை பொழியும் ஓர் காலை நேரத்தில்.....

முன்னிரவில் ஓய்வின்றி பொழிந்த மழை
மந்தமான வெளிச்சத்தை
பாரிலே பரப்பிவிட்டு
தன் ஓய்வை அறிவிக்க முயல்கிறது!!
நீர்க்குச்சிகள் துருவலாய் மாறி
தான் உதிர்த்த பல வண்ண மலர்களின் இதழ்களுக்கு
இதமாக இதழ் கொடுக்கின்றது!!
மந்தகாசம் மனதை நிறைத்த காலை
சிறு சோம்பலுடன் அலுவலகம் அடைந்து
இருக்கையின் பின்னிருக்கும்
ஜன்னலை திறந்தேன்.
மழைத் துருவலில் சிலிர்த்து
கம்பிகள் ஊடே அறையில் நுழைந்து சிலிர்க்கச் செய்தது
நட்சத்திரங்கள் கொண்ட பெயர் தெரியா அச்சிகப்பு மலர்!!


அன்புடன்
பாரி

Thursday, April 29, 2004

மார்ச் வரிகள்....

அந்த மார்ச் மாத இறுதி நாட்கள், அழகான பல இயற்கை நிகழ்வுகளோடு, நிகழ்வுகளின் மணத்தை நினைவுகளாகவும் பொதித்து கொண்டிருந்தன.

பூக்கள் மட்டுமே நிறைந்த மரங்களுக்கு கீழே இருந்த தேநீர் மேசைக்கு மேல் சந்தோஷங்களாக விரவி கிடந்தன ஊதா நிற மலர்கள். மண்ணில் உதிர்த்த மரத்தின் மேல் அவை கொண்ட பிணக்கு, மேசைக்கு அருகில் உட்கார்ந்து தங்களை நோக்கிய அச்சிறுமியின் புன்னகை கண்டு பூரிப்பாக மாற்றம் கொண்டது. அந்த காட்சி எனக்கு உவகை அளித்தது.

மாலை நேரம். சூரியன் தன்னை ஒளித்துக் கொள்ள இரு மணிதியாலங்கள் இருந்தது. கோடையின் வெப்பம் சற்று தணிய ஆரம்பித்தது. சட்டென்று, விண்ணில் கொண்டல்கள் தோன்றின. எங்கிருந்தோ திசையில்லாமல் குளிர்ந்தக் காற்று வீசியது.

அன்றைய பணியின் நிறைவை நினைத்துக் கொண்டே இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களுக்கிடையே அந்த சாலையில் நடந்து செல்கின்றேன். சூழலின் குளிர்ச்சி உள்ளத்தை நனைக்கின்றது. என்னை போலவே களிப்புற்று மஞ்சள் பூக்கள் நிறைந்த மரங்கள் அங்கு இங்கும் அசைந்து பூ மாரிப் பொழிந்தன. காதலி தன் கையால் காதலன் முகத்தில் நீரை சிதறச் செய்யும் போது அவன் சிணுங்குவதைப் போல் சிணுங்கச் செய்தன என்னை அம்மலர்கள், என் முகத்தில் படும் போது.

இப்போது எங்கோ இடி முழக்கம். கோடையின் சிறப்பு அதன் மழை. முரணாக இருந்தாலும் அழகுணர்ச்சிக்கு அது அரண். சட்..சட்....பெரிய பெரிய முத்துக்களாய் ஆரம்ப மழைத்துளிகள். கற்பிக்கப்பட்ட மனம் மழையிலிருந்து ஒதுங்க எண்ண, புதிர் காணும் மனம் நீர்க் குச்சிக்கு கீழே நிற்க அழைப்பு வைத்தது. ஏற்றேன். மண் வாசனை என் நினைவுகளை, பல கோடை மழைகளோடு பொருத்திப் பார்க்கின்றது.

நான் அம்மழையில் நடக்க, வசந்தத்தை உலகுக்கு அறிவித்த அந்த மஞ்சள் மலர்கள் தற்காலிக சிற்றோடைகளில் என்னைக் கடந்து சென்றன, புன்சிரிப்புடனே!! இத்தருணத்தில் இயற்கை தன்னை குதூகலமாக வைத்துக்கொண்டதாகப் பட்டது எனக்கு.

மின்னல் கீற்றுக்கள் மேகங்களை பிளக்க, மேகங்கள் உரத்த குரலோடு மழையினை உகுக்க, நிலைமை தீவிரம் அடைந்தது. புள்ளினத்தின் கூடுகள் அதிர மரங்கள் பேயாட்டத்துடன் ஓலம் இடுகின்றது. சூழலில் சற்றே இருள் கவிகின்றது. மரங்களிலிருந்து, சுள்ளிகள் கிளைகளின் மோதல்களில் பாதையில் வீழ்கின்றன. மேலும் பல அடிகள் நடந்தேன். இதற்குள் ஓடையில் நீர் பிரவாகம் அதிகரிக்க புரண்டு ஓடும் பூக்கள் என்னைக் காப்பாற்று எனக் கை நீட்ட, முகத்தில் வேகத்துடன் அறையும் மழை என் கண்களை மூடச் செய்தது. மூடனானேன் - செய்வதறியா.

தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் நீரை வடித்துவிட்டு பின்பு கண்களை திறக்கும் போது மழையின் வேகம் குறைந்ததாக தோன்றியது. மேகங்களின் அடர்த்தி ஒரு சில இடங்களில் குறைந்து அதனுள் விரவிய கதிரவனின் ஒளி சிதறி, ஒரு புதிய ஒளியைத் தந்தது அச்சூழலுக்கு. இப்போது பாதை ஓரம் ஒதுங்கிய மலர்கள், மீண்டும் என்னுடன் நட்புறவாடியது. அதைக் கண்டு நான் வெட்டகமுற்றாலும், ஆசுவாசமானேன். மழை நின்றது.

பாதையை கடக்க, பாலம் ஏறி இறங்கினால் அங்கு மலரும் காலத்திற்கு முன்பே மலர்ந்துவிட்ட குல்மோகர் பூவின் இதழ்கள் சிவப்புத் தீயாய் சிதறி கிடந்தன. இயற்கை இப்போதும் தன்னை குதூகலமாகவே வைத்துக் கொண்டுள்ளது.

மழையில் நடப்போம். மலர்கள் அப்போதும் நமக்கு ஏதாவது சொல்லும்.
நன்றிகளுடன்
-பாரி



புதுமைப் பெண்கள் - 1 - கோமதி டீச்சர்

கி.பி.1950-களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
அந்த கல்வி பயிற்சியினூடே, ஹிந்தி கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அவர் ஹிந்தி ஆசிரியை ஆகின்றார். பழனியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நெய்க்காரப்பட்டி பள்ளியில் அவருக்கு பணி. அவரது கணவர், சிற்றுண்டிகள் செய்யும் வேலை செய்து வந்தார். அக்காலத்தில் குழந்தை பிறப்பு என்பது தாய்க்கும் சேய்க்கும் ஒரு வாழ்வா? சாவா? என்ற போராட்டமாகவே இருந்துள்ளது. இந்த போராட்டத்தில் அவருடைய சில வெற்றிகளாக இருப்பது, (எங்களது [மாணவர்களது] அன்பிற்கும் உரிய) இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும்தான். பிரசவித்த வேளையிலேயே இறந்து போன குழந்தைகள் அந்த இளம் ஆசிரியயை மிகவும் வாட்டியது. அவர் சில சமயம் கூறும் ஒரு சம்பவம்.
அவர் பள்ளிக்கு பெரும்பாலும் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதையில்தான் சண்முகநதியும் இருக்கின்றது. அதன் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் இடுகாடு அமைந்திருந்தது. அந்நதியை கடக்க உதவும் பாலத்தின் மேல் இருந்து பார்த்தால் அது நன்றாக கண்களுக்கு தெரியும். ஒரு சமயம் பிரசவம் ஆகி பின்னர் சில நாட்களில் பிறந்த குழந்தையின் உயிர் பிரிந்தது. அக்குழந்தையின் ஈமக்கிரியையிலிருந்து நான்காம் நாள், அவர் பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம் உருவானது. பள்ளிக்கு செல்லும் வழியில் பாலத்தை கடக்கும்போது ஏதோ ஒரு சிறு மண் மேட்டின் மீது அரைகுறையாக காய்ந்த மலர் மாலைகளை காண நேர்ந்தது. அப்போது, அங்கே புதைக்கப்பட்டு இருக்கும் அவரது குழந்தையின் நினைவு அவரை ஆட்கொண்டு, ஆறுதல் அளிக்க யாரும் இன்றி, தனியாக அங்கேயே உடைந்தார். கண்ணீர் ஆர்ப்பரிக்கும் வேளையில் துணை இல்லாத கொடுமையும், பிரிவின் சோகமும் அவரை கரைத்தது அப்போது. தன்நிலை மறந்து அவர் கரைந்த சம்பவம், ஒரு பெண் தாய்மை உணர்வை எவ்வளவு குரூரமாக எதிர் கொள்ள நேர்ந்தது என்பதை காட்டியது எனக்கு.
அவருக்கு அத்தகைய இழப்புகள் இருந்தாலும், அவரது மனம் தனது மூன்று குழந்தைகளின் நல்வாழ்விற்கும், தான் கற்றுக் கொடுக்கும் குழந்தைகளின் நல்வாழ்விற்கும் உழைக்க முனைந்தது. காலம் ஒரு ஓடை நீராக வழிந்தோடியது. இதனிடையே தனது ஆர்வத்தின் மூலமாக, ஹிந்தியில் பல நூல்களைப் பயின்றார். தக்ஷிண பாரத் கிந்தி ப்ரசார் சபாவின் பிரச்சாகராகவும் செயல்பட்டார். மாலை வேளைகளில் ஹிந்தி கற்றுக் கொடுக்க தனி வகுப்புகள் நடத்தினார். தாயைப் போல பிள்ளைகளும், ஹிந்தி கற்றனர் அன்னையிடமிருந்து. இதனிடையே அரசின் நிலைப்பாடுகளால் பள்ளியில் ஹிந்தி ஆசிரியை பணியை தொடர இயலாமல் போய்விட்டது. அச்சமயம் அவருக்கு உண்டான மன அழுத்தம், ஒரு வைராக்கியத்தையும் அவருள் உண்டாக்கியது.

1970களில் தமிழ் நாட்டில் ஆங்காங்கே ஆங்கில வழி சிறுவர் பள்ளிகன் இருந்தன. ஆனால் அத்தகைய ஒரு பள்ளி பழனியில் இல்லாததை அவர் உணர்ந்தார். அத்தகைய பள்ளியை உருவாக்கினால் என்ன? என்ற எண்ணம் வலுப்பெற்றது. பள்ளிக்கு தேவையான இடத்திற்க்காக தனது வீட்டை சற்று மாற்றி அமைத்தார். பின்பு அவர் தனது அருமைத்தம்பி திரு. நாகராஜன் அவர்களின் உதவியோடு சிறுவர்கள் பள்ளியை ஆரம்பித்தார். வெறும் பள்ளி இறுதி வரை மட்டும் பயின்று விட்டு, கட்டுப்பட்டியான சமுதாயத்தில் ஓர் ஆசிரியப் பணி ஏற்று, பின்னர் அதுவும் பறிக்கப்பட்ட நிலையில், சற்றும் துவண்டு விடாமல், முன்னேற்ற பாதையில் சிந்தித்து வீறு நடைப் போட்டார். "பால முருகன் ஆங்கிலப் பள்ளி" ஆரம்பம் ஆனது. இதுதான் பழனி நகரின் முதல் ஆங்கில வழிப் பள்ளி. முதல் வருடம் மக்களுக்கு தயக்கங்கள் இருந்தாலும், மறு வருடம் முதல்நிறைய மாணக்கர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இவரது உழைப்பிற்கு நல்ல பலன் இருந்தது. இவரை தமிழ்நாடு சிறுவர் பள்ளிகள் நடத்துவோர் சங்கத்தில் முக்கிய உறுப்பினர் ஆக்குகின்றனர். இவர் கூச்சமும் பெருமிதமும் ஒரு சேர அந்த உறுப்பினர் நிலையை ஏற்கிறார்.( சில வருடங்களுக்கு முன்பாக அவரது சேவையை பாராட்டி அவருக்கு சிறந்த நிர்வாகிக்கான பரிசும், கௌரவமும் அச்சங்கத்திடமிருந்து கிடைத்தது). தனது கூரிய அறிவுத்திறன் மூலமும், தணியாத ஆர்வம் காரணமாகவும், அப்பள்ளி இன்று வரை வெற்றிகரமாக நடந்து வருகின்றது.

அப்பள்ளியை பற்றி சில வரிகள்: அப்பள்ளியில் நன்கொடை கிடையாது. கீழ் நடுத்தர மக்களும் பயில வாய்ப்பு தரும் வகையில் கட்டண அமைப்பு. நல்ல அன்பான, தகுதி வாய்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான ஆசிரியைகள் நியமிப்பு. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பள்ளியை நடத்தி வந்தாலும், அவரின் இல்லம் ஓர் நடுத்தர வர்க்கத்தாரின் வீடு போல்தான் இருக்கும். அப்பள்ளியை நடத்த அவருக்கு பல சிக்கல்கள். ஆனால் அவரது நம்பிக்கையும் நேர்மையும் மட்டுமே அனைத்திலிருந்தும் அவரை காத்துள்ளது. இப்பொழுது அவரது பள்ளி ஓர் புதிய இடத்தில் அமைந்துள்ளது. அதை நிர்வகிக்க அவரின் மகனும், மருமகளும் அவருக்கு உதவுகின்றனர்.

இதை தவிர மாலை வகுப்புகளில் ஹிந்தி கற்கும் மாணவ மாணவியரின் கூட்டம். நான் அவரிடம்தான் ஹிந்தி கற்றேன். இது எனக்கு பின்னாட்களில் நல்ல பயன் தருகிறது. TIFR பயிற்சி பள்ளியின் போதும், ஆய்வுப் பணி நிமித்தமாக வட இந்தியா செல்லும் போதும், நான் கற்ற ஹிந்தி எனக்கு பல நட்புகளை பெற்றுத் தந்தது. அவரிடம் ஹிந்தி கற்ற பலர் இன்று ஹிந்தி ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

அவரிடம் எனக்கு பிடித்த பல விஷயங்களில் சில: 1. எப்போதும் சிரித்த முகமாக இருப்பது. 2. மற்றவரிடம் பேசும் போது எதிராளி சொல்வதில் முழு கவனம் செலுத்துவது. 3. நம்பிக்கை உண்டாக்குவது. எனக்கு அவர் வாழ்வில் ஓர் முன்மாதிரி. அவருக்கு என் நன்றிகள்.

-அன்புடன்
பாலாஜி-பாரி
(நான் நீண்ட இடைவெளி விட்டதற்கு மன்னிக்கவும்: தொடர்ச்சிக்காக அனைத்தையும் தொகுத்து இட்டுள்ளேன்)

Friday, April 02, 2004

கோடை மழை

நேற்று கனத்த கோடை மழை. அத்தருணத்தில் சாலையின் இரு புறங்களில் இருக்கும் செம்மண்ணுடன் எனது இதயமும் கரைந்தது. அப்போது தோன்றிய மிகச்சிறிய தற்காலிக ஓடைகளில், வசந்த காலத்தை அறிவித்த மலர்கள் பயணித்து கொண்டிருந்தன, சில இலைகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு. இக்காட்சியை இயற்கை அவ்வப்போது படம் பிடித்து கொண்டிருந்தது வெட்டும் மின்னலின் துணை கொண்டு. மழையின் நீண்ட கால்கள் வீசிய திசை சார்பற்ற குளிர்ந்த காற்றுக்கு ஏற்றவாறு அழகிய நடனம் புரிந்தது.


அன்புடன்
பாரி

Friday, March 26, 2004

ஓர் நட்சத்திரம் பிறந்தது

ஆயிரத்து ஐநூறு ஒளி ஆண்டுகளுக்கப்பால் ஒர் நட்சத்திரம் பிறந்துள்ளது. இதை ஜே மெக்நெய்ல் என்ற ஓர் அமெச்சூர் விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். அவர் தனது எளிமையான 3 இன்ச் தொலை நோக்கியை கொண்டு, தனது வீட்டின் கொல்லையில் இருந்து ஆகாயத்தை அலசியுள்ளார். அப்போது வேட்டைக்காரன் என்ற நட்சத்திர கூட்டத்தில் புதிய ஒளி தெரிவதை பதிவு செய்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக, ஓர் ஒளி தெரிவதை சரியாக அடையாளம் கண்டு இணையத்தின் மூலம் புரஃபோஷனல்ஸை தொடர்பு கொண்டு இச்செய்தியை தெரிவித்துள்ளார்.

அதன் பின் உலகின் தலைசிறந்த வானவியல் மையங்கள் அவரது கண்டுபிடிப்பை பாராட்டி உள்ளன. அந்த நட்சத்திரத்திற்கு, மெக்னேய்ல் நெபுலா என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு சுட்டவும்

Tuesday, March 23, 2004

பாரதி கண்ட புதுமைப் பெண்கள்: கோமதி டீச்சர் - 1

கி.பி.1940-50 களில் பெண்கள் பள்ளிக்கு செல்வது என்பது ஒரு பெரிய புரட்சி. அதுவும் திருமணமான ஒரு சிறுமி பள்ளிக்கு செல்வது என்பது அதிசயம்.
அந்த அதிசயம் நடந்தது 14, தெற்கு ரத வீதியில். மணமாகி பழநிக்கு வந்த பின்னும் படிப்பதில் ஆர்வம் காட்டினாள் அந்த சிறுமி. காலத்தை மீறிய சிந்தனை கொண்ட ஒரு மாமனார் அந்த பொறியை கண்டு கொண்டார். பின்பு அச்சிறுமிக்கு, பள்ளியில் சென்று பயில்வதில் உள்ள அனுகூலங்களையும், உலகத்தை அதன் உண்மையான உருவத்தில் பார்க்கும் வாய்ப்பையும் எடுத்துக் கூறி ஓர் தகப்பனாக மாறி அச்சிறுமியை பள்ளியில் சேர்த்தார். அச்சிறுமி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். அது ஒரு மிகப் பெரிய சகாப்தத்தின் முதல் சம்பவம்.
குடும்ப வாழ்க்கையும் அதனூடே கல்வி பயிலும் வாய்ப்பும் அவரை எவ்வாறு அலைக்கழித்தது?
(-தொடரும்)

Monday, March 08, 2004

பெண்கள் தின வாழ்த்துக்கள்!!!

இன்று பெண்கள் தினம். இந்த தினத்தை ஒட்டி என்னைக் கவர்ந்த பெண்கள் என்ற தொடர் எழுத முடிவு செய்துள்ளேன். ஆணாதிக்க சமுதாயத்திலும் திறம் பட சாதனைகள் பல செய்த நான் சந்தித்த பெண்மணிகள் பற்றி இங்கே எழுத உள்ளேன். முதலில் நமக்கு அறிமுகமாவது, எனக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்த கோமதி டீச்சர் அவர்கள்.

இத்தொடர் சற்று கால இடைவெளியுடன் வரும்...... பணி அழுத்தம் காரணம்.

அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!!

அன்புடன்
-பாரி

Wednesday, March 03, 2004

தமிழ் பற்றி UNESCO அறிக்கை

திரு சுரேஷ் அவர்கள் மரத்தடியில் இட்டுள்ள அறிக்கையின் சுட்டி.
யுனஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்த திரு. மணவை முஸ்தாபா அவர்களின் பேட்டியின் ஒரு பகுதி சுட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் பற்றி UN என்ன கூறி உள்ளது என்ற விபரம் உள்ளது.

Saturday, February 28, 2004

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்....-2)

அவர் ஒரு நிதானத்துடன் ஒரு மரத்தை அண்ணாந்து பார்ப்பார். பின்பு ஒரு கையை அதன் மேல் வைத்து, அழகான லாவகத்துடன் தனது கால்களில் நாரால் ஆன பெல்ட்டை மாட்டி கொள்வார். அதன் பின் அவர் வலது கையை மரத்தை அணைத்தவாறு பிடித்துக் கொண்டு, இடது கையை மரத்தில் அழுத்தி, நாரால் ஆன பிணைப்பின் உதவியோடு கால்களால் மரத்தை கவ்விக் கொண்டு ஏறுவார். அது ஓர் பெரிய நேர்த்தியான செயல். அவர் அதை அனாயசமாக செய்வார். மர உச்சியை அடைந்தவுடன், கைகளால் காய்ந்த மட்டைகளை பிய்த்து போடுவார். வீட்டில் இருக்கும் தட்டி வழியாக அண்ணாந்து பார்க்க அவ்வளவு பரபரப்பாக இருக்கும். அதன் பின், தேங்காய வெட்டி மேலே இருந்து போடுவார். அப்ப கீழே நிற்கும் அவரது மகனோ அல்லது மனைவியோ அந்த வழி செல்பவர்களை உஷார் செய்வர். இவ்வாறு கவனித்து செய்யும் பொழுது கூட எங்களது காம்பௌண்ட் அருகில் உள்ள (ஜெயந்தி அக்கா) வீட்டில் தேங்காய் விழுந்து அவரது தாயாரின் மலையாளம் கலந்த தமிழ் வசை சொற்கள் அசரீரியாக வரும். இதனிடையே, கொஞ்சம் பச்சை மட்டைகளையும் மேலேயிருந்து தள்ளுவார். இவ்வாறு அனைத்து மரங்களையும் ஒரு ரவுண்ட் வந்த பிறகு பறித்த தேங்காய்களை மூட்டையிலிட்டு எடுத்து செல்வார்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில், மேலேயிருந்து சிதறி இருக்கும் தென்னங் குரும்பைகள், தென்னம் மட்டைகள் ஆகியன வாண்டுகளின் உற்சாகத்தை கூட்டும். தென்னங்குரும்பைகளை நாங்கள் குரும்பைக்காய் என்போம். அது பல சமயங்களில் எங்களுக்கு Ball -ஆக மாறி கிரிக்கெட் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் குரும்பைக்காயை கொண்டு கிலுகிலுப்பை செய்யலாம். குரும்பக்காயின் தொப்பி பகுதியை நீக்கி மென்மையான முன் பகுதியை தரையில் தேய்த்து தட்டை ஆக்கி கொள்ள வேண்டும். ஈர்க்குச்சி ஒன்று எடுத்து அதை வளைத்து தட்டை பகுதியில் U வடிவத்தில் அமைத்து செருகி கொள்ள வேண்டும். மேலும் ஓர்க் குச்சியை மையத்தில் செருகிக் கொள்ள வேண்டும். இப்போது அது நாமம் மாதிரி தோன்றும். அதற்கு செங்குத்தாக இரு குச்சிகளை செருகி சுழற்றும் போது, நடுவில் இருக்கும் குச்சி முன்னும் பின்னும் அசைந்து கடக், கடக் என்று சீராய் ஒலி எழுப்பும். கிலுகிலுப்பை தயார். தென்னம் மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டி, சிறிது செதுக்கி Bat-ஆக மாற்றும் ஓர் கலையும் நாங்கள் கற்றோம். மட்டையின் மேல் இருவர் உட்கார மேலும் இருவர் அதை இழுத்து செல்லும் வண்டி விளையாட்டும் மிக்க களிப்பை தரும். பச்சை தென்னம் மட்டைகளிலிருந்து ஓலைகளை பறித்து அதில் குச்சிக்கு அருகில் நுனியில் இருந்து அடி வரை கீறி விட்டு கடைசியில் தொங்குமாறு செய்து, அதை பின்னி ஒரு பாம்பு போல் செய்வோம். தென்னை ஓலைகளில் இருந்து ஊது குழல் செய்வதும் எளிது. ராக்கெட் மாதிரி அந்த ஓலைகளை பறக்க விடவும் செய்யலாம். எங்களுக்குள் இருக்கும் குரங்கு விழித்து எழுந்து விட்டால், தென்னை மரத்தில் ஒரு கால் பங்கு உயரம் ஏறுவோம்.

இவ்வாறு தென்னை மரத்தின் பயன்கள் பல. (தென்னை மரத்தின் பயன்கள் என்ன? என்ற பரிட்சை கேள்விக்கு நியாயமான பதில் இதுதான் என்பது அடியேனின் அக்கால எண்ணம்).

காம்பௌண்டை பிரித்து விற்க வேண்டிய ஓர் சூழ்நிலையில், அம்மரத்துக்காரர் வந்தார். அவருடன் மேலும் சில நபர்கள் வந்தனர். அவர் ஒரு சில மரங்களை கைகாட்டி அவர்களுடன் விவாதித்து கொண்டிருந்தார். ஒரு வாரம் கழித்து நாங்கள் பார்த்தது அம்மரங்களின் வீழ்ச்சியை. நான்கு மரங்களும் ஓரிரு நாட்களில் சாய்ந்தன. அப்போது நான் ஒரு துயரமும் இன்றி அதை வேடிக்கை பார்க்க அசாத்திய தைரியம் அடைந்தவனானேன். அந்த தென்னை மரத்துக்காரரும் அவ்வாறே எண்ணியிருக்க கூடும்.
(தென்னை மரத்துக்காரர் - முற்றும்)

- பாரி

Thursday, February 26, 2004

என் வேதனைக் கால குறிப்புகள் - 2

முகில்கள் தோற்குமோ
கவின் மிகு பிம்பங்களில்....

மலைகள் தோற்குமோ
அழுத்தமான இருப்புகளில்...

மலர்கள் தோற்குமோ
பரவச ரசனைகளில்....

ஒளிகற்றை தோற்குமோ
தேடல்களின் ஆழத்தில்...

உணர்வுகள் தோற்குமோ
உயிர் துடிக்கும் பிரிவின் அக்கணத்தில்...

(காற்றிலே கலந்து இருந்தது
பெண்டத்தால் வாசனை குளிர்ச்சியாய்)


- பாரி

Thursday, February 19, 2004

அறிவுக் களஞ்சியம் www.thamizham.net

இன்று ஒரு இணைய தளத்தை நண்பர் தங்கமணி சுட்டிக்காட்ட நான் பார்த்தேன். அதில் ஓர் ஆசிரியரின் சீரிய பணியை கண்டு வியந்தேன். இவர் தற்கால தமிழ் இலக்கியத்தின் ஓர் கருவூலம். இவரை பற்றி நம் வலைபதிவர்களுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை. ஆகையால் இந்த உடனடி செய்தி.
திரு. நடேசன் அவர்கள், பொள்ளாச்சியில் இருந்து கொண்டு இந்த அருமையான தமிழ்த் தொண்டாற்றி வருகிறார். அவரது நூலகத்தில் இருக்கும் சிற்றிதழ்-களின் எண்ணிக்கை வியக்கத்தக்கது மேலும் போற்றத் தக்கது. அவருடன் இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு இளைஞர்களிடமும், ஓர் தீவிரம். அனைவரையும் நாம் போற்றுவோமாக.
இவர்களின் பணி ஓர் கூட்டு முயற்சியாய் நடை பெறுகின்றது. பல அரிய புத்தகங்களும், தமிழ் சார்ந்த பல தகவல்களும் சுவாரசியம் கொள்ள செய்கின்றன. இவர்கள் இதை மின் ஊடகத்தில் மாற்றவும் முயற்சி செய்கின்றனர். இவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

அன்புடன்
-பாரி

நம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 5 (தென்னை மரத்துக்காரர்)

கடந்த பல வாரங்களாக மற்ற விஷயங்களில் சென்ற கவனம், இன்று தான் இந்த தொடருக்கு திரும்பியது.

எங்க காம்பௌண்ட்ல பதினோரு வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையிலோ என்னவோ, பதினொரு தென்னை மரங்கள் இருந்தன. ஒரு அடர்த்தியில்லா தென்னந்தோப்பு. இதை தவிர ஒரு பெரிய அடுக்கு - செம்பருத்தி செடி (புதர்?), அழகிய மஞ்சள் பூக்கள் தரும் மந்தாரைச் செடி, குட்டியா ஒரு செம்பருத்தி செடி, கிணற்றடி அருகிலே வசந்தி அக்காவின் முயற்சியில் தோன்றிய சில வாழை மரங்கள், என்று கலகலப்பாக இருக்கும். நான் மூன்றாவது படிக்கும் போது, எனது பெரியம்மாவின் கடைசி மகன் (என்னையும் சேர்த்துக் கொண்டு), சோமு என்ற நண்பரின் வீட்டில் இருந்து, ஜீன்யா செடியை கொண்டு வந்தான். இந்த பூக்கள் பல வண்ணங்களில் பிரகாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். நான் இதுவரை பல பூக்களை (பெயர் தெரியாவிட்டாலும்) கண்டு மகிழ்ந்துள்ளேன். ஆனால் ஜீன்யா பூ எனக்கு சொல்ல முடியாத அளவு பெரு மகிழ்ச்சி தரும். இப்போது பார்த்தாலும்.... (JNC-விடுதிக்கு அருகில் இதை நான் காலையில் தினமும் பார்க்கின்றேன்). இதை தவிர, சேனைக் கிழங்கு எனது தந்தையின் முயற்சியால் அவ்வப்போது இடப்படும். (சேனைக் கிழங்கு செடி பார்ப்பதற்கு அழகாக இருக்கும்: வெளிர் பச்சையில் ...)

சரி. விசயத்திற்கு வருவோம். இந்த தென்னை மரங்களில், இரண்டு "செவ்வெளநீ" தரும். இந்த இரண்டில் ஒன்று பாலா மாமியின் வீட்டினுள் வளர்ந்து கூரை வழியாக வெளி வரும். கூரை சீமை ஓடால் வேயப்பட்டிருக்கும். அந்த மரத்தில் தென்னம் மட்டைகள் காய்ந்து போனால், பாலா மாமிக்கு டென்ஷன் அதிகமாகிவிடும். "இப்படியே இருந்தாக்க, காத்தடிச்சு மட்டை விழுந்து ஓடுகள பொறுக்கணும். இந்த விஷயத்தை ராஜாமணி காதில போட்டுடணும்" என்பார். (ராஜாமணி என்பவர், எங்க house ownerin ரின் மூத்த புதல்வர்). இவரை தவிர மற்றவர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் எப்போதாவது அகஸ்மத்தாக விழும் ஒரு தென்னம் மட்டை, ஒரு தேங்காய் இவைகள் வாண்டுகளுக்கு ஒரு களிப்பை உண்டாக்கும். விழும் தேங்காய்களை கைப்பற்ற ஒரு பெரிய கலாட்டாவே நடக்கும். இவ்வாறு நடக்கும் கலாட்டாவில் பெற்ற சில வெற்றிகள் எனக்கு, "தேங்காய்" என்ற ஓர் சிறப்பு பட்டத்தை (!) எனது வீட்டாரிடம் பெற்று தந்தது.

பாலாமாமியின் வார்த்தைகள் சிறிது நாட்களில் வேலை செய்யும். நாரால் (என்ன நார்?) ஆன ஒரு V-பெல்-டை தோளில் எடுத்துக்கொண்டு, இடுப்பில் ஒரு அரிவாளை செருகி, திறந்த மேலுடம்புடன் அவர் வருவார். அதாங்க நம்ம தென்ன மரத்துக்காரர். எப்பயாவது விழும் தென்னை மட்டைக்கே குதியாட்டம் போடும் நாங்க, அவரக் கண்டதும் பயங்கர ஜாலி ஆயிடுவோம். ஆனா வழக்கம் போல பெரியவங்க பிரச்சனை. "வீட்டை விட்டு வெளியே வராதீங்க! அவன் போனப்புறமா வந்து விளையாடலாம்".
(தென்னை மரத்துக்காரர் - தொடரும்)

Wednesday, February 18, 2004

கல்லுக்குள் ஈரம்

ஐந்து நாரைகள்....
புற்களின் மேல் குட்டி குட்டி
வெண் மேகங்களாய்.......
உள்ளங்கைகளின் செந்நிறத்தில்
அதன் அலகுகள் மின்ன....
ஒடிந்து விடுமோ அதன் கால்கள்
என அஞ்ச வைத்து
ஒய்யாரமாய் அது நகர்வதென்ன...
வட்ட விழி கிட்டே பார்த்து
வான் வழி அவை பறக்க,
சுட்டதென்னவோ அவந்தான்.
ஆனாலும் மகிழ்ச்சி அவனுள்
நம்மால் நான்கு தப்பியதே......

-பாரி

Friday, February 13, 2004

என் வேதனைக் கால குறிப்புகள்...

என் நண்பா!!
நமக்கு மிகுந்த துக்கம்
தரக்கூடிய
ஓர் செய்தியை அறிவிக்கிறேன்.
தெளிவோடும்,
முரட்டு தைரியத்தோடும்.

"நம்மால் இனி அன்றைய
+2 மாணாக்கர்களாய்
மாறவே இயலாது".


அறிவின் தெளிவை நோக்கி
உள்ளொளியுடன் எரியும் சக்தியுடன்
வானத்தின் கீழ் அனைத்தும்
புதிதாய் புத்துணர்ச்சியாய்
இருந்தகாலம் இனி
இறந்த காலம்....

புகுத்தப்பட்ட கல்வியால்,
அறிந்த மற்றவைகளால்,
இது இப்படித்தான் என
பாழாய்ப்போன பயனற்ற "அறிவு"
நமக்கு உறுத்தி....
புதிர் காணும் சக்தியென்னும்
ஆக்கையை தொலைவில் நிறுத்தி
நம்மை அண்டத்தின்
அணைப்பில் அண்டவிடாமல்......

அறிவே நீயும் அழிவுதான்.......

-பாரி

Saturday, February 07, 2004

பிளாட் ஃபாரம்

"அங்கனே பாரு புள்ள....
மெயின் ரோட்டுக்கு மத்தியில...
வரிசையா நட்ட மரம் அழகு தாம்லே?"
அப்பா சொல்ல
அதை பார்த்தாள் அச்சிறுமி.
"அட..இதா...ரோட்ல இறங்காத புள்ள..
பிளாட்ஃபாரம்லயே நட..."
"அதெனங்கையா பிளாட்ஃபாரம்?"
"நாம நடக்குதோம் இல்ல? அத்யான்"
"மக்கா... நடக்க என்னாமா
கட்டிருக்காக! பட்டணம்னா சும்மாவா?"
அடிச்ச மழையில் பிஞ்ச கூரை
ஒதுக்கியிருந்தது வேறு சிலரை
பிளாட்ஃபார பாலித்தீன் கூடாரத்தில்.
அதையும் கண்டாள் அச்சிறுமி!
அகலமான கண்கள் மேலும் அகல கேட்டாள்
"அய்யா! இவுகளை யாரு இங்கே நட்டது?"

-பாரி