Monday, August 06, 2007

வண்ண மலரும், வண்ணத்துப் பூச்சியும்

Image hosted by Photobucket.com

நதிக்கரையில் பூத்திருந்த அந்த மலர் கூறியது, "நான் மிகவும் பொதிவாகவும், பாதுகாப்பாகவும், என்னில் என் ஆடைகள் இறுக்கமாகவும், தேவைக்கு சற்றும் மிகாமல் உள் வெப்பமும், குறுகுறுத்த உணர்வுகள் ஆழமான உள்ளில் புடம் போட்டுக் கொண்டும், உறைகளின் உள்ளே ஓர் அதிசய அனுபவத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தேன்".

"வெளிப்புற சலனம் அறியா அவ்வேளையில் நான் இனமறியா ஏங்குதலின் பிரதிநிதியாக இருந்தேன்."

"சட்டென்று என் மீது, ஒரு கணத்தில் தண்மை நிறைந்த காற்று உறவாடியது. எனது ஆடைகள் மிக சௌகரியமாக பறந்து விரிந்தது. அக்கணம் என் ஆழ் மனதில் சிறிய பயம் கவ்வினாலும், ஆகா! இதுவே சுகானுபவ நிகழ்வு!! என்ற அடையாளம் அறிந்து பரந்து விரிந்த விளைவால் பாந்தமான அணிகலனுடன் நான் மலர்ந்ததும், அக்காற்றில் கலந்து கிடந்த தண்மையினால் நான் சிலிர்ப்புடன் திக்குமுக்காடினேன். ஆனந்தக் கூத்தாடிக் களித்தேன்".

"சுற்றி இருந்த சூழ்நிலை, இருளின் கருமையை உணர்த்தியது. அந்த சூழ்நிலை மாறும் போது, பல மாறுதல்கள். மஞ்சள் வெய்யிலின் மூலம் கண்டபோது, ஆ! இஃதா அந்த சூழ்நிலை மாற்றும் வித்தையைப் புரிவது! என்று புரிந்து தெளிந்தேன். நான் அமைந்த ஒரு கரம் போல, அருகிலே பல கரங்கள். அவற்றின் மீது இதன்முன் பார்த்தறியா வண்ணச் செறிவு கொண்ட நேர்த்தியான வடிவங்கள். உள்ளத்தின் உணர்வுகளைக் கரைக்கின்றன. நெகிழ்கின்றேன்".

"சற்று தொலைவில் நான் பார்த்த போது, ஓங்கி உயர்ந்திருந்து அந்தப் பச்சை நிற வண்ணத்தை தன்னில் திப்பிதிப்பியாய் கொண்டு மிக நீண்ட பருமனான கரங்களை அங்குமிங்கும் அசைத்துக் கொண்டிருந்தது ஒரு பிரம்மாண்டம். என்னை எழுப்பிய அக்காற்று அதை அசைக்கின்றதா அல்லது அந்த உயிர் தழுவிய காற்றை எனக்கு அந்தப் பச்சைகள் அளிக்கின்றதா? முயங்குகின்றேன் !!."

"வெளிர் நிற வெய்யிலின் நிறம் கொண்ட சிறிய நுனியையும் தோன்றிய வேளையில் நான் கண்ட அந்த சூழலின் நிறத்தை மற்ற இடங்களிலும் கொண்டு அடி வயிற்றில் இருந்து, அதன் நீண்ட பின் பகுதிகள் சற்றே தாழ அது எழுப்பும் அந்த ஒலி என்னை ஏனோ மிகவும் கவருவதுடன் என்னைச் சலனமடையச் செய்கின்றது. ஆனந்த சலனம். ஆனால் அதற்கோர் விந்தை இயல்பு. ஒரிடத்தில் இல்லாமல் இங்கும் அங்கும் அலை பாய்கின்றது. துள்ளித்திரிகின்றது. சந்தோஷிக்கின்றது."

மலரின் மழலையை கேட்ட வான் தோட்டத்தில் உலவும் அந்த வண்ணத்துப் பூச்சி "ஓ! அன்பு நிறைந்த மலரே!! அந்த ஓசைக்கு உரியவள் பெயர் குயில்!. அவ்வாறு அதை மாந்தர் அழைப்பர். எங்களைக் கூட வண்ணத்துப் பூச்சி என்றும், பட்டாம்பூச்சி என்றும் கூறுவர். "தென்றலில் மிதந்து வரும் வண்ண மலரே!!" என்று கூட எங்களை வருணிப்பர்!" எனக் கூறி அந்த அழகிய, பூரணமான, திண்ணமான வடிவம் கொண்ட அந்த மலரிலிருந்து சற்று மேலெழும்பி பின்பு வசதியாக அதன் மேல் மீண்டும் அமர்ந்தது.

"ஆகா! சரியாக சொன்னார்கள்!! இதை கேட்டவுடன் உன் மேல் அன்பு அதிகரிக்கின்றது....ஆனால் நீயோ மிகவும் அழகாக இருக்கின்றாய். பின் ஏன் உன்னை மலர் என்று கூற வேண்டும்?" என்றது தன்னறிதல் தேவையற்ற அம்மலர்.

"ஓ...! அன்பு மலரே!! உன் குழந்தை இயல்பு என்னை குதூகலிக்கச் செய்கின்றது. இவ்வாறே நீ இருப்பாயாக....என்றும்!!" என வாழ்த்தி, "நீ உன்னை அறிய முயலும் போது உன் போல் இருக்கும், அருகில் நின்று அசைந்தாடும் அந்த மலரைப் பார்க்க நேரிடும்," எனக் கூறிவிட்டு படபட-வென்று அந்த மற்றொரு மலரை நோக்கிச் சென்றது, எண்ணங்கவர் வண்ணத்துப் பூச்சி.

"இப்பொழுது அந்த மலரிடம் உன்னை அறிமுகம் செய்து வைத்தேன். தூரம் இருந்தாலும், அறிமுகம் ஆகிவிட்டால் மலர்ந்த பயன் எய்துவீர். இது போல பல மலர்களைச் சந்திக்கச் செய்வதுதான் என் உயிரின் விளைவு" என்று கூறியது, திரும்பி வந்து உல்லாசமாய் அம்மலரின் மீது அமர்ந்த அந்த வண்ணத்துப் பூச்சி.

"எவ்வளவு ஆச்சர்யமான, மிகவும் உவக்கத்தக்க, அற்புதமான பணி!! ஓ... என் மித்ர!! நீ என்னிடம் இருந்து சிறிது மது பருகுவாயாக" என்று நயந்து நட்பு பாராட்டியது அந்த மலர்.

"உனக்கு மிகவும் நன்றி!. என் அன்பு மஞ்சள் மலரே, கேள்!! நீ மற்றவைகளிடமிருந்து மாறுபட்டவள். இன்று நீ கழித்த இத்தருணம் குறித்து பின்னாட்களில் ஒரு சமயம் உனக்கு யோசிக்க நேரும். என்னை நன்றியுடன் நினைக்கும் அக்கணத்திற்காக, இக்கணம் நான் கூறிய நன்றி உரித்தாகட்டும்", என்றவாறே வாடைக் காற்றின் வழியோடியது அந்த வண்ணமிகு பறக்கும் மலர்.

வண்ணத்துப் பூச்சியை வழியனுப்ப தன் மணம் பரவும் எல்லை வரை உடன் சென்று மகிழ்ந்தது அந்த மலர்.

நாட்கள் சில கழிந்தன. பூவிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கும் காய் இருந்த அத் தாவரத்தின் கீழ் இருந்தது வண்ணத்துப் பூச்சியின் உதிர்ந்த ஒற்றை இறக்கை.

(நன்றி: மரத்தடி.காம்- பல மாதங்களுக்கு முன் மரத்தடியில் இட்டது. இங்கு மீண்டும் இற்றை படுத்துவதற்காக மீண்டும்)

No comments: