Wednesday, June 23, 2004

நிழல் கூத்து: மலையாளம் -கலர்- பாட்டு பைட்டு- கிடையாது!! - 2

இத்திரைப் படம் "அண்ணாச்சியின்" குற்ற உணர்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது என புரிந்து கொள்கின்றேன். முந்தைய பதிவில் கூறியபடி, எப்பொழுதும் அவர் முகத்தில் தனது பணி நிமித்த சோகம் இழையாக ஓடும்.

இப்படம் பல மனித உணர்வுகளை சிக்கல் இல்லாமல் காட்டுகின்றது.
"அண்ணாச்சியின்" கடைக்குட்டி மல்லிகா பருவம் அடைவது, அதற்கான விழா எடுப்பது, அவ்விழா முடிவில், மூத்த மகளின் கணவன் சொல்லிக் கொண்டு செல்லும் போது, மல்லிகாவை ஒரு கணம் பார்ப்பது, அந்த நிகழ்வை மல்லிகாவின் பெற்றோர் கவனித்து விடுவது இவை அனைத்தும் ஓர் சரம் போல் தொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாச்சியின் மகன், சுதந்திரத்திற்காக பாடுபடுவதை ஓரிரு வசனங்கள் மூலமும், ராட்டையில் நூல் நூற்பதன் மூலமும் காட்டுகின்றார் இயக்குநர். அண்ணாச்சியின் மகன், தூக்கிலிடுவதை எதிர்த்து நாகர்கோவிலில் பிரச்சாரம் செய்வதையும் கள்ளுக்கடை காரர் மூலம் காட்டுகின்றார்.

அண்ணாச்சியிடம் நிறைய நோயாளிகள் வருவதை அறிந்து, மூத்த மகள் நிலம் வாங்க பணம் கேட்டு வருவதும், அது தொடர்பான வசனங்களும், அவள் மீது அண்ணாச்சியின் பரிவை காட்டுகின்றது.

அண்ணாச்சியின் உடல் நலம் குன்றி, அவரால் "ஆரச்சார்" தொழிலை தொடர முயலாத நிலையில், திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வரும் டவாலி, அவரது மகனை உதவிக்கு வைத்து கொள்ளுமாறு பணிக்கிறார். தந்தையின் உடல் நலம் கருதி தானும் அவருடன் செல்கிறார் மகன், கொள்கையை சற்றே ஓரமாக வைத்துவிட்டு.

அங்கு சென்ற பின், தூக்கின் திறனை சோதித்து, ஓர் வீட்டில் உட்காருகின்றனர். தூக்கிலிடுபவர், அன்றைய இரவு உறங்காமல் இருக்க வேண்டும். அதற்காக, அங்கு அவருடன் இருக்கும் மூன்று காவலர்கள் அவருக்கு கதை சொல்ல முயல்கின்றனர். முதலில் ஒருவர், அவருக்கு நந்தனார் கதையை கூறுகின்றார். பின்பு மற்றொருவர், அரிச்சந்திரன் கதையை கூற முற்படும் போது, அக்கதையில் நாட்டம் இன்றி தூக்கம் வருவதாக கூறுகின்றார் அண்ணாச்சி. உடனே, மூன்றாவது நபர் சுவாரசியமான ஓர் கதையை கூறுகின்றார்.

அந்தக் கதை:
ஓர் சிறுமி. 13 வயது. ஆடு மேய்க்க செல்லும் போது புல்லாங்குழல் வாசிப்பவனிடம் பழக்கம் ஏற்படுகின்றது.
அவள் தனது காதலனின் புல்லாங்குழலின் இசையில் மயங்குகிறாள். ஒரு நாள், அவனிடம் அவள் புல்லாங்குழல் வாசிக்க கற்று தரும் படி கேட்க, அவனும் கற்று தருகின்றான். அவள் ஆடு மேய்த்து கொண்டே அவனது புல்லாங்குழலை வாசிக்கின்றாள். அச்சிறுமியின் அக்காள் கணவன், அப்போது அங்கு வந்து அச்சிறுமியை கெடுத்து கொன்று விடுகின்றான். ஆனால், அச்சமயம் அங்கு வரும் அவள் காதலன் மீது பழியாகி தூக்கு தண்டனை பெறுகின்றான்.

இக்கதை அண்ணாச்சியின் மனக் கண்ணில் எவ்வாறு விரிகின்றது என்பது இப்படத்தின் திருப்பம், முடிவு. அவர் அச்சிறுமியை மல்லிகாவாக எண்ணிக்கொள்கின்றார். தனது மாப்பிள்ளையை அவளது அக்காவின் கணவனாக பாவித்து அதனால் அவர் மிக துயருற்று, கதையை நிறுத்தும் படி சொல்கின்றார். அப்போது, கதையாளி, "அண்ணாச்சி, எப்படி கதைய நிறுத்தறது? நீங்க தூக்கில போடப்போவது அந்தப் பையனதான" என்கின்றார். அதற்கு அவர் "நான் மாட்டேன், நான் மாட்டேன்" என்றபடியே சரிகின்றார். மாரடைப்பால் இறந்து விடுகின்றார். இச்சம்பவம் மூலம் இயக்குநர், பார்வையாளர்களின் எண்ணத்தை கவ்வுகின்றார்.

இச்சூழ்நிலையில், தண்டனையை நிறைவேற்ற சட்ட சிக்கல் வந்து விடுகின்றது. அப்போது அவரது மகன் பற்றிய எண்ணம் அவர்களுக்கு வருகின்றது. அவனை அப்பணி செய்ய அழைத்து செல்கின்றனர். கடைசிக் காட்சி நிழலாக காண்பிக்க படுகின்றது.

இப்போது பார்வையாளர் மனதில் ஓர் பாரம்.

இப்படத்தின் இசை இளையராஜா. படத்தில் பல இடங்களில் அவரது மேன்மை தெரிகின்றது. இசையே இல்லாத இடங்களிலும், படத்தினுள் இருக்கும் அக் குட்டிக் கதை துவங்கும் போதும், புல்லாங்குழல் இசையிலும் நம்மை கவர்ந்து விடுகின்றார். சில இடங்களில் அவரது இசை ஓர் அமானுஷ்ய தன்மையை கொடுக்கின்றது. இவரும் படத்தின் முதுகெலும்பு.

நன்றாக இருந்தது இப்படத்தின் ஒளிப்பதிவு. காடுகளும், தாமரைக் குளங்களும், மலைகளும், கண்ணுக்கு குளுமை.

சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கட்டாயம் பாருங்கள்.


No comments: