Saturday, September 11, 2004

அமிக்டாலா மூளையர்கள்!!

இதயம் சுமப்போர் போல் அல்லாது, தலையில் கபாலம் பிரித்து உள்ளிருக்கும் அமிக்டாலா பகுதியை மறு ஈடு செய்து, முன்,பின் மூளையை களைந்து அதை கையிலெடுத்து, ஈட்டி போன்ற அமைப்பின் முன் செருகிக் கொண்டு அவன் "ததிங்கிணத்தோம், தத்தரிகிடதித்தோம், தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிடதித்தோம்... தட்டாவது வீச்சாவது... அனைத்தும் வெறும் பேச்சு..என் நடை என் உள்ளப்பாடு ஐயா!!" என எதிரே உள்ளவன் உணரும் வகையில் குதித்து களித்தும், களித்து குதித்தும் சென்றான். மரங்கள் அசைந்தன. மலர்கள் சிரித்தன. ஒரே ஆரவார எக்காளம் அவனுக்கு... "ஹே.... " என்று கூக்குரலிட்டவாறே ஓடித்திரிந்தான். அவனும் பாதையில் முன்னேறியவாறே இருந்தான்.

மலைகள் நிறைந்த பகுதியிலிருந்து தருவிக்கப்பட்ட ஒருவித கிறக்கம் தரும் தேனை நீங்கள் பருகியதுண்டா?. அதன் சுவை இனிப்பு. ஆனால் அதன் நறுமணம் தன்னைச் சுரந்த மலர்களின் நினைவினை பொதித்துக் கொண்டிருக்கும். (NT,Jens,balu,srika Thanks guys!!)

இதன் கிறக்கத்தையும் உள்வாங்கி "ஆடினா நான் ஆடினா அது ஆட்டம் மக்கா" என்று கைகொண்ட வாத்தியத்தை தனது சீராக மற்றவருக்கு மாறாக முழங்கி கொண்டே அவளும் இறங்கினாள். வந்தான் என் காதலன், வாழ்வில் அவனில்லை எனில் சாதலின் என ஒலித்தவாறே வந்தாள் அவளும் ஒய்யாரமாக. அவளது வழியில் காட்டு மலர்களும், கானக்குயில்களும் அவளுடன் அன்பு மொழி பேசின; ஓயாமல் அவளும் அவைகளிடம்.

இதை நன்றாக உணர்ந்து, எந்த ஒரு திட்டமும் இன்றி, போகும் வழியில் இறைந்த மலர்களை சுமந்தவாறே அந்த ஓடையும் அவள் துணையாக சென்றது.

-தொடரும்

பாரி
(குறிப்பு: அமிக்டாலா- உணர்வுகள் உருவாக காரணமாக இருக்கும் மூளையின் ஒரு பகுதி)

Sunday, September 05, 2004

இதயச் சுமையாளிகளின் சந்திப்பு



அப்பள்ளத்தாக்கில் இருந்த ஒரு மரத்தின் மீதமர்திருந்த சிறுவனின் கையில் ஒரு பொட்டலம். அதில் அவனது இதயம். அவன் தொணாத்திக் கொண்டு இருந்தான். அப்போது அம்மரத்தின் அருகிலே நின்று கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன், ஒரு சிறிய பென்சிலை கொண்டு பல எண்களை எழுதி அழித்துக் கொண்டே,அச்சிறுவனின் தொணத்தலை கேட்டான். சிறுவன் " நான் ஆசையுடன் சென்றேன் பல விசயங்களை கற்றுக் கொள்ள வகுப்பிற்கு. எனது மாமா பயிற்றுவித்த படிக்கும் முறைகளால், நான் மேலும் படித்த விசயங்களை மற்றவர்களிடம் குறிப்பாக ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டபோது கிடைத்தவை பிரம்படிகள். அதுவும் உள்பாதத்தில். இதயம் நொறுங்கியது. ஆசை அழிந்தது. இதோ! என் கையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ள என் இதயம்." கவனமாக தனது இதயத்தை கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்த மற்றொரு இதயம் சுமப்பவன் எக்காளமாக கூறினான் "போ! போ!! இனி உன் அகராதியில் ஆசையும் இல்லை! இதயமும் இல்லை!!" பின்பு அலுத்துக் கொண்டு மேலும் மெதுவாக " என்னிடமும்தான்" எனக் கூறிக் கொண்டே, எண்களை கூட்டிக் கழித்து பெருக்கி தனது வாழ்க்கையை வாழ தன்னை தயாரித்துக் கொண்டான்.

அங்கே ஒரு பாறையின் மீதமர்ந்த மற்றொருவன், தன் துணையுடன் புணர்ந்த கொண்டிருந்த சமயத்தில் எவ்வாறு தன் துணை, படைகளின் குண்டுகளுக்கு பலியானாள் என்றும், இனி எப்போதுமே நிரப்பப்பட இயலாத ஒரு வெற்றிடத்தில் தன் ஸ்கலிதம் பாதியில் முடிந்து போனதை கூறி தன் இதயத்தை அவனது பொதியில் இருந்து வெளியில் காட்டினான். அதைக் கேட்ட அருகிலிருந்தவன், "சரி இப்போ என்ன?. என் விறைத்த குறியை சிதறச் செய்யவும் அவர்களால் ஆனது. இனி நம் குறிகள் நம் தலையில் தான்", என கூறிவிட்டு அமைதிகாத்தான் சற்றே படபடத்த தன் கையில் இருந்த இதயத்தை தாலாட்டிக் கொண்டே.

சிறிதும் கவலையின்றி, தனக்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டதையும், மற்றவர்கள் சூழ்ந்து தன்னையே அவர்கள் மறக்கடித்ததையும், இவைகளையே சித்தாந்தங்களாக கொண்டு அவர்கள் வாழ்ந்ததையும் அவள் கூறினாலும் பள்ளத்தாக்கை அடைய மேற்கொண்ட பெருமுயற்சிகள் வியர்வையை தந்து அவளது நிலையைக் காட்டியது. அவள் தான் சுமந்த இதயத்தின் சுமையை பொருட்படுத்தவில்லை.

இத்தகைய நிலையில் தங்கள் இதயத்தின் கைப்பிடியில் இருந்து விலகி வாழ்வது வாழ்க்கை என்று அவர்கள் நம்பச் செய்யப்பட்டார்கள். அத்தகையோர் அங்கே குழுமி இருந்தனர். அவர்கள் குழுமியதன் நோக்கம் என்னவென்று அவர்கள் அப்போது உணரவில்லை. அது ஓர் கூட்டம் என்று மட்டுமே உணர்ந்தனர்.

இருள்கறுப்புக் குதிரையில், தனது முடி அலை போல பரவ, காற்றை போல் அப்பள்ளத்தாக்கை அவள் அடைந்தாள். அவள் நம்மைப் போன்ற சாதாரன மனுசி. இதயத்தை தன் உடலின் ஒரு பாகமாக கொண்டவள். அங்கே அவள் கண்ட கூட்டம் அவளை நிலை குலையச் செய்தது. அவளுக்கு இதயத்தை சுமந்தபடி மக்கள் வாழ இயலுமா? என்ற கேள்வியும், அவர்கள் பேச்சை கேட்டு இவர்கள் அதைச் சுமந்தால் வாழ இயலாது என்பதையும் அறிந்து, தன்னில் ஓர் பிளவாக அவள் அங்கிருந்து சென்றாள். ஆனாலும் அவள் பட்ட அதிர்ச்சி அவளது உயிர் நிலை ஆட்டி வைத்தது.

அவள் தனது பாதையில் செல்ல யத்தனிக்கும் போது ஒரு பேரிரைச்சல் சில காத தூரங்களுக்கு அப்பாலிருந்து வருவதை கேட்டாள்.

-தொடரும்.